அதிகரித்த நிலத்தடி நீர் மாசு
- இந்தியாவின் நிலத்தடி நீர் நிலைமை குறித்து, மத்திய நிலத்தடி நீர் வாரியம் (CGWB - Central Ground Water Board) ஆய்வு ஒன்றை நடத்தியது. நைட்ரேட், யுரேனியம் மாசுபாடு பிரச்சினையால் நாட்டின் பல மாநிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது அந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
- அமெரிக்காவின், யேல் பல்கலைக்கழகம் 2022இல் ‘பாதுகாப்பற்ற குடிநீர்’ தொடர்பாக நடத்திய ஆய்வில், உலகின் 180 நாடுகளில் இந்தியா 141ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. தற்போதைய சூழல் நீடித்தால், 2030க்குள் இந்தியாவில், 70% தண்ணீர் மாசடையும் எனவும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
நைட்ரேட் பரிசோதனை:
- நைட்ரேட், யுரேனியம் கலந்துள்ள குடிநீரைத் தொடர்ச்சியாகப் பருகும்போது சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வாளர்கள் கூறியுள்ள நிலையில், நிலத்தடி நீர்ப் பாதுகாப்பு தொடர்பான பரிசோதனைகளை அதிகரிப்பது அவசியமாகிறது. 2017இல், நாடு முழுவதும் 13,028 தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டன. இதில் 21.6% என்கிற அளவில் நிலத்தடி நீரில் நைட்ரேட் கலந்திருந்தது தெரியவந்தது.
- அப்பரிசோதனையில், நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிகரித்துள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 2017இல் 359ஆக இருந்த நிலையில், 2023இல் அது 440ஆக அதிகரித்திருந்தது. இதன் மூலம் 56% மாவட்டங்களின் நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது. ஒரு லிட்டரில் 50 மில்லி கிராமுக்கு மிகாமல் நைட்ரேட்டும், 30 மைக்ரோ கிராமுக்கு மிகாமல் யுரேனியமும் கலந்திருப்பது பாதுகாப்பான குடிநீர் என உலக சுகாதார அமைப்பு வரையறுக்கிறது.
- இந்த அளவீடுகளுக்கு மேல், நைட்ரேட்டும், யுரேனியமும் கலந்திருந்தால் அது பாதுகாப்பற்ற குடிநீர் ஆகும். தண்ணீரில் அதிகப்படியான நைட்ரேட் கலந்திருப்பது இரண்டு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. ஒன்று, உடலுக்குள் ஆக்சிஜனை எடுத்துச்செல்லும் ரத்த அணுக்களின் திறனைக் குறைக்கிறது; இரண்டாவது, தண்ணீரில் நைட்ரேட் அளவு கூடுதலாகும்போது குளம், ஏரி போன்ற நீராதாரங்களில் நைட்ரேட்டும் ஓர் அங்கமாக மாறி நீர்வாழ் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு ஏற்படுத்துகிறது.
எந்தெந்த மாநிலங்களில் பாதிப்பு?
- ராஜஸ்தான், குஜராத், ஹரியாணா, பஞ்சாப், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலங்களில் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில், ராஜஸ்தான்(49%), கர்நாடகம் (48%), தமிழ்நாடு (37%), மகாராஷ்டிரம்(35.74%), தெலங்கானா (27.48%), ஆந்திரப் பிரதேசம்(23.5%) மத்தியப் பிரதேசம் (22.58%) ஆகிய மாநிலங்களில் நிலத்தடி நீரில் நைட்ரேட் உள்ளது. 2017 முதலே, இந்தியாவின் நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு கணிசமாக அதிகரித்துவருகிறது. குறிப்பாக, மத்திய இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் நிலைமை கவலையளிக்கும் வகையில் இருப்பதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
யுரேனியம் மாசு:
- மத்திய நிலத்தடி நீர் வாரியத்தால் வெளியிடப்பட்ட நிலத்தடி நீர் நிலை குறித்த சமீபத்திய அறிக்கையில், 12 மாநிலங்களின் நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட யுரேனியம் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது. ஜனவரி 2023இல் வெளியிடப்பட்ட நிலத்தடி நீர் குறித்த ஆவணத்தில், நாட்டின் நிலத்தடி நீரில் யுரேனியம் அளவு ஒரு பில்லியனுக்கு 0 முதல் 532 பாகங்கள் (parts per billion) வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
- அந்த ஆய்வில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நிலத்தடி நீரில் யுரேனியத்தின் இருப்பு அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பஞ்சாபில் உள்ள கிணறுகளில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 10இல் மூன்று கிணறுகளில் யுரேனியம் மாசு இருப்பது கண்டறியப்பட்டது.
காரணம் என்ன?
- நிலத்தடி நீரின் மாசுபாட்டுக்குப் புவிசார் செயல்முறைகள் (Geogenic processes) முதன்மைக் காரணமாக இருந்தாலும், நிலத்தடி நீர் சுரண்டப்படுவதும் மாசுக்குக் காரணமாகிறது. ஆக்சிஜனேற்றம், நிலத்தடியில் நிகழும் வேதியியல் மாற்றங்கள் காரணமாக நிலத்தடி நீரில் யுரேனியம் அதிக அளவு இருப்பதாக அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
- நிலத்தடி நீரில் யுரேனியம் கூடுதலாகக் காணப்படுவதற்கு அதிக பைகார்பனேட் (bicarbonate) அளவும் ஒரு காரணமாக உள்ளது; அதிகப்படியான பைகார்பனேட்டால் பாறையிலிருந்து யுரேனியம் வெளியேறி நிலத்தடி நீரில் கலப்பதாக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ரேச்சல் கோய்ட் தெரிவிக்கிறார்.
- இந்தியாவின் அனைத்து வகையான நீர்நிலைகளிலும் நிலத்தடி நீர் அதிகம் சுரண்டப்படுகிறது என பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC), ஹோமி பாபா தேசிய நிறுவனம் நடத்திய ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் அதிகமாக மாசடைவதற்கு யுரேனியம், ஆர்சனிக், ஃபுளூரைடு உள்ளிட்டவை முக்கியக் காரணிகளாக இருக்கலாம் என பாபா அணு ஆராய்ச்சி மையம் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. நிலத்தடி நீரைத் தூய்மைப்படுத்த எதிர் சவ்வூடுபரவல் (Reverse osmosis) தொழில்நுட்பம், இந்தியாவின் சில மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2024இல் நிலத்தடி நீர் அளவு:
- நிலத்தடி நீரின் தரத்தை வெளியிட்ட மத்திய நிலத்தடி நீர் வாரியம், நிலத்தடி நீரின் அளவு குறித்த அறிக்கையையும் தயாரித்துள்ளது. அதில், 2009ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நிலத்தடி நீர் அதே அளவில் உள்ளதாகவும், 73% வட்டாரங்களில் நிலத்தடி நீர் பாதுகாப்பான அளவில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது. வெளியேற்றப்பட்ட தண்ணீருக்கு ஈடுசெய்யும் அளவில் நிலத்தடி நீர் மீண்டும் நிரம்புவதாக அந்த அறிக்கை கூறுகிறது.
நடவடிக்கைகள் தேவை:
- இந்தியா முழுவதும் நைட்ரேட், யுரேனியத்தால் நிலத்தடி நீர் மாசுபடுவதை மதிப்பிடுவது, அவற்றை நீக்க அவசர கால நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றின் அவசியத்தை ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. இந்தியாவின் நீர் மாசுபாட்டுக்குத் தொழில் துறை, விவசாயக் கழிவு ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தியாவில் உருவாகும் கழிவுநீரில் 70% சுத்திகரிக்கப்படுவதில்லை.
- சுத்திகரிக்கப்படாத தொழில் துறைக் கழிவு நீர்நிலைகளில் வெளியேற்றப்படுவதால், நிலத்தடி நீர் தொடர்ந்து மாசுபடுத்தப்பட்டு வருகிறது; இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு மாசைக் குறைப்பதற்கு மேம்பட்ட தொழில்நுட்பங்களின் பயன்பாட்டையும், கண்காணிப்பையும் மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (12 – 02 – 2025)