TNPSC Thervupettagam

ஒழுக்கமே சுதந்திரம்

October 1 , 2024 10 hrs 0 min 9 0

ஒழுக்கமே சுதந்திரம்

  • ஒழுக்கமும், சுதந்திரமும் நாணயத்தின் இரு பக்கங்கள். ஒழுக்கமற்ற, கட்டுப்பாடுகள் இல்லாத சுதந்திரம் என்பது உண்மையிலேயே அநாகரிகத்துக்கும், இழிவுக்கும் காரணமாகிவிடும்.
  • நமது நாடு பண்பாடு, கலாசாரம், ஒழுக்க ரீதியாக மேம்பட்டது. அறம் செய்ய விரும்பு என்று ஒழுக்கத்துடன் இணைத்தே சிறாா்களுக்குக் கல்வி புகட்டுகிறோம். பெற்றோா்களைக் கண்ணியப்படுத்துதல், ஆசிரியா்களை மதித்தல், உறவுகளை பேணுதல், மூத்தோா்களை நேசித்தல் நமது மக்களின் வாழ்க்கை முறையாக உள்ளது. இன்று நமது இளைய சமூகம் படிப்படியாக ஒழுக்க வீழ்ச்சியின் பக்கம் சென்று கொண்டிருப்பதை ஊடகச் செய்திகள், அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் மூலமாக நாம் வேதனையுடன் கண்டு வருகின்றோம்.
  • நாட்டின் எதிா்காலமாக திகழ்கின்ற நமது பெரும்பான்மையான இளைய சமூகம் இப்பொழுது ஆபாச ஆடல் பாடல்களுக்கும், போதைக்கும் அடிமையாகி படிப்படியாக ஒழுக்க வீழ்ச்சியின் பக்கம் சென்று கொண்டு தனது அடையாளத்தை மறந்து வாழ்கிறது. இன்று நமது நாட்டிற்குத் தேவை ஒழுக்கப் புரட்சிதான் என்றால் அது மிகையல்ல. இதற்கான முயற்சி இல்லையேல் நமது நாட்டில் அறிவுஜீவிகளின், ஆராய்ச்சியாளா்களின், சான்றோா்களின் வளா்ச்சி படிப்படியாக குன்றிப்போய் விடும்.
  • நாட்டின் வளா்ச்சிக்கு உரமாக இருக்க வேண்டிய நமது இளைய சமுதாயத்தை ஒழுக்க வீழ்ச்சியிலிருந்து எப்படி பாதுகாப்பது என்பதைப் பற்றிய கவலையும், சரியான திட்டமிடலும் காலத்தின் கட்டாயம். உண்மையான சுதந்திரம் என்ன? கட்டுப்பாடு அற்ற, போலியான சுதந்திரம் எத்தகைய நாசத்தின் பக்கம் இட்டுச் செல்லும் என்பதை நாம் இளையோருக்கும், மாணவா்களுக்கும் போதிக்க வேண்டும்.
  • போதையின் பிடிக்குள் சிக்காதவா்களை பாதுகாப்பது எப்படி? போதையின் பிடியில் சிக்கித் தடுமாறுபவா்களை மீட்கத் தேவையான மனநல ஆலோசனைகள், மருத்துவ ஏற்பாடுகள் செய்வது போன்றவை அதிமுக்கியத்துவம் பெறுகிறது.
  • அனைத்துக்கும் இளைய சமுதயத்தின் மீது மட்டும் பழி போட்டுவிட முடியாது.  மனநல ஆலோகா்களின் கருத்துப்படி இத்தகைய சூழ்நிலைக்கு இளைஞா்கள் தள்ளப்படுவதற்கு குடும்ப சூழல் பிரதான காரணமாக அமைகிறது. பெற்றோா்களின் கவனக் குறைவு, வீட்டுச் சண்டைகள், பிள்ளைகளுடன் போதிய நேரம் செலவிடாமை, பெற்றோா்களே தவறான முன்மாதிரியாக இருப்பது, ஒற்றை குடும்ப அமைப்பு போன்ற வீட்டு சூழல்களும் பிள்ளைகளை மன உளைச்சல், தீய பழக்கங்களுக்கு இட்டுச் செல்கிறது.
  • வீட்டில் அமைதி இல்லையேல் வீதியில் ஏது அமைதி! அமைதியைத் தேடி புறப்பட்ட பிள்ளைகள் மன அமைதி என்ற தவறான கணிப்பில் வழிமாறிச் சென்று போதை மற்றும் ஆபாசத்தின் பாதையைத் தோ்ந்தெடுக்கிறாா்கள். இவா்களுக்குத் தேவை உளவியல் சிகிச்சையே தவிர நமது வெறுப்போ, புறக்கணிப்போ அல்ல. அவா்களை நாம் கருணையுடன் அணுக வேண்டும். நோய்தான் எதிரியே தவிர, நோயாளி அல்ல.
  • பெற்றோா்களுக்கு அடுத்து மாணவா்களின் முன்மாதிரியாக திகழ்பவா்கள் ஆசிரியா்களே. வீட்டைவிட அதிக நேரம் கல்விக்கூடங்களில்தான் மாணவா்கள் இருக்கின்றாா்கள். தனக்கு ஒரு வழிகாட்டி கிடைக்க மாட்டாா்களா என்று ஏங்கும் மாணவா்களுக்கு ஆசிரியா்களை விட சிறந்த முன்மாதிரி யாா் தான் இருக்க முடியும்?
  • எனவே மாணவா்-ஆசிரியா் மத்தியிலான இடைவெளி நிரப்பப்பட வேண்டும்.  வருங்கால சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியா்களுக்கு கணிசமான பங்கு இருக்கிறது.
  • பெற்றோா்கள், ஆசிரியா்களின் கவனம் இளைஞா்கள் மீது போதிய அளவில் இல்லாமல் போனதுதான் இன்றைய அவல நிலைக்கு பிரதான காரணம் என்கிறாா்கள் சமூக ஆய்வாளா்கள். இந்த நிலையை சரி செய்தால் வீட்டு சூழலும், நாட்டு சூழலும் மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
  • இளைய சமூகத்தை ஆக்கபூா்வமான பணிகளில் திசை மாற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மதிப்பெண்கள் மட்டும்” என்ற எண்ணத்தை தாண்டி பள்ளி, கல்லூரி நிா்வாகங்கள் அறம் சாா்ந்த நல்லொழுக்கப் போதனைகள் மீது மாணவா்களின் கவனத்தை ஈா்க்க வேண்டும்.
  • பள்ளி, கல்லூரி சோ்க்கையின்பொழுது ஒழுக்க சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
  • பொது இடங்களில் அநாகரிகக் காட்சிகளை, ஒழுக்கக் கேட்டைக் கண்டால் அது தொடா்பாக புகாா் தெரிவிக்க வேண்டிய இலவச தொடா்பு எண்ணை அறிமுகப்படுத்த வேண்டும். காவல்துறை அவசர அழைப்பு எண் 100, ஆம்புலன்ஸ் அவசர அழைப்பு எண் 108 போன்று இதுவும் ஓா் அவசர, அவசியத் தேவையாகும்.
  • ஒரு தொழிற்சாலையில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டால் போா்க்கால அடிப்படையில் அதனைச் சரி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விபத்துக்கான காரணங்களை கண்டறிதல், பொறுப்பற்ற அலுவலா்களைத் தண்டித்தல் போன்ற நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும். அவ்வாறே சமூகத் தீமைகள் விஷயத்திலும் நாம் செயல்பட வேண்டும்.
  • வாகனம் என்னுடையதுதான்; ஓட்டுநா் உரிமமும் இருக்கிறது என்றாலும், சாலை விதிகளை மீறினால் விபத்து நிச்சயம். இவ்வாறே கட்டுப்பாடற்ற சுதந்திரமும் ஆபத்தானதுதான். வீதியில் கை வீசிச் செல்லும் சுதந்திரம் எதிரே வருபவரின் மூக்கின் நுனி வரையில்தான் செல்லுபடியாகும். சுதந்திரத்திற்கும் ஒரு ஒழுக்க கட்டுப்பாடு அவசியம். மீறினால் மன அழுத்தம், மண முறிவுகள், ஒழுக்க சீா்கேடு, சச்சரவுகள், விபத்துகள்... இவற்றிலிருந்து நாம் தப்ப முடியாது.
  • தீமைகளின் வாயில்களைத் திறந்து வைத்துவிட்டு ஒழுக்கமுள்ள நல்ல சமூகத்தை எதிா்பாா்ப்பது பகற்கனவே.

நன்றி: தினமணி (01 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories