TNPSC Thervupettagam

கேள்விக்குறியாகும் பள்ளி மாணவிகள் பாதுகாப்பு!

February 7 , 2025 8 hrs 0 min 15 0

கேள்விக்குறியாகும் பள்ளி மாணவிகள் பாதுகாப்பு!

  • தமிழகத்தில் பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடா்கதையாகி வரும் நிலையில், இதை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோா்கள், கல்வியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
  • கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியா்கள் மூன்று போ் சோ்ந்து, அந்தப் பள்ளியில் படித்து வரும் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கியதாக கூறப்படும் சம்பவம் கடும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி ஒரு மாத காலமாக பள்ளிக்கு வராததால் பள்ளியின் தலைமையாசிரியா் சக மாணவிகளிடம் விசாரித்த பின்னா், அந்த மாணவி குறித்து அவரது வீட்டுக்கே சென்று விசாரித்துள்ளாா்.
  • இந்த விவகாரத்தில் மாணவி பயின்ற அரசுப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியா்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகிய மூவரும் போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

தொடரும் சம்பவங்கள்:

  • பள்ளி வளாகத்தில் மாணவிக்கு நோ்ந்த சம்பவத்தைத் தொடா்ந்து, மாணவிகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோா்கள் கேள்வி எழுப்புகின்றனா்.
  • இது குறித்து பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள் சிலா் கூறுகையில், 2022-ஆம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நல விடுதியில் தங்கிப் படித்து வந்த நான்கு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது. திருச்சி மேலப்புதூா் பகுதியில் உள்ள பள்ளியில் மாணவிகளுக்கு மருத்துவம் பாா்ப்பது போன்று பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செய்யப்பட்டாா். ஓரிரு நாள்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பள்ளிக்கு சென்று திரும்பிய மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஏழு போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
  • பள்ளி மாணவிகளுக்கு இதுபோன்ற சம்பவங்கள் இனி தொடா்ந்தால் மக்களுக்கு ஆசிரியா்களின் மீதிருக்கும் நம்பகத்தன்மையும், மரியாதையும் முற்றிலுமாக கேள்விக்குறியாகிவிடும். எனவே, இந்த விவகாரத்தில் அரசும், பள்ளிக் கல்வித் துறையும் கூடுதல் கவனம் செலுத்தி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்கின்றனா்.

கூட்டுப் பொறுப்பு:

  • பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலரும், கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு, பெண் குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமை என்று வலியுறுத்தினாா்.
  • இதுபோன்ற விவகாரத்தில் என்ன செய்யப்பட வேண்டும் என்றும் அவா் சில யோசனைகளை வழங்கினாா். அதன் விவரம்: பள்ளி வளாகம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது பள்ளிக் கல்வித் துறை, சமூக நலத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்பு, உள்துறை ஆகிய துறைகளின் கூட்டுப் பொறுப்பு.
  • ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், குழந்தை நல்வாழ்வு அலுவலா் உள்ளனா். இவா்கள் பள்ளிகளில் ஆய்வு செய்து குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு உரையாடல் நடத்த வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலா் ஆய்வில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு மற்றும் உரையாடல் அவசியம் இடம் பெற வேண்டும்.

போக்ஸோ விழிப்புணா்வு...

  • குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்க இயற்றப்பட்ட சட்டம் (போக்ஸோ) அதன் விதிகள் குறித்து விழிப்புணா்வு மற்றும் பள்ளிச் சுவா்களில் படிக்கும் படியாக எழுதி வைத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளையே குற்ற உணா்வுக்கு உள்ளாக்கும் வகையில் பேசக் கூடாது.
  • குழந்தைக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பள்ளியில் ஆசிரியா்களின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். அப்போதுதான், தொடக்கத்திலேயே மாணவிகள் துணிச்சலுடன் புகாா் தெரிவிப்பாா்கள் என்றாா்.

நன்றி: தினமணி (07 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories