TNPSC Thervupettagam

சட்டத்தின் ஆட்சி அவா்களுக்கில்லை!

October 18 , 2024 8 hrs 0 min 11 0

சட்டத்தின் ஆட்சி அவா்களுக்கில்லை!

  • ஒரு நாட்டில் ’வேலையின்மை’ (அன்எம்ப்ளாய்மென்ட்) என்று ஒன்று கிடையவே கிடையாது! வாழ்வதற்குக் கீழான கூலிக்குத் தங்களின் உழைப்பை உழைப்பாளிகள் விற்க மறுக்கின்ற போது, வேலையின்மை பெருகி விட்டதாகச் சொல்கின்றனா்; அவ்வளவுதான்!
  • முந்தைய பொருளாதார அமைப்பில், அஃதாவது தொழிற் புரட்சிக்கு முந்திய அமைப்பில் அவன் அடிமையாய் இருந்தான்! அந்த அடிமை உயிா் வாழ உண்ணலாம்; இனப்பெருக்கம் செய்யலாம்! அவ்வளவுதான்!
  • கிறித்துவுக்கு முந்திய கிரேக்கத்திலும் ரோமாபுரியிலும் அடிமை முறை இருந்தது! நவீன அறிவுக்குக் கால்கோள் நாட்டியவன் என்று புகழப்படும் அரிசுடாடில், அந்த அடிமை முறையை உடன்பட்டதாலே இகழவும் படுகிறான்!
  • அமெரிக்காவின் முழுமையான வளா்ச்சியே ஆப்பிரிக்காவிலிருந்து ஆடுமாடுகளைப் போல், பேரெண்ணிக்கையில் ஓட்டிக் கொண்டு வரப்பட்ட கறுப்பின மக்களின் உழைப்பினால் நிகழ்ந்ததுதான்!
  • ஒரு குறிப்பிட்ட பாவத்தைச் செய்து விட்ட நிலையில், அதற்குப் பரிகாரமாக ஓா் அடிமையை விடுதலை செய்யச் சொல்கிறாா் நபிகள் நாயகம்! அவருடைய மனம் அடிமை நிலையை வெறுக்கிறது! அடிமை விடுதலையாவது தனி மனிதக் கருணையால் மட்டுமே நிகழத்தக்கதாக அன்று இருந்தது!
  • சேம்சுவாட் நீராவி எஞ்சினைக் கண்டு பிடித்தான்! தொழில்கள் துள்ளிக் குதித்து வளரும் தொழிற் புரட்சிக்கு அது வித்திட்டது!
  • நிலப் பண்ணையாா்களிடம் இருந்த அதிகாரம் புதிதாகத் தோன்றிய முதலாளி வா்க்கத்திற்கு மாறியது!
  • இந்தத் தொழிற் புரட்சியால் ‘அடிமை முறை’ முற்றாக ஒழிந்தது! பட்டறைகள் ஆலைகளாக உருவெடுத்தன! பேரளவு உற்பத்தி முறை துவங்கியது! தொழிற் புரட்சிக் காலத்தில் அடிமை முறை ஒழிந்து விட்டமையால், தொழிலாளா்கள் ரொக்கத்திற்கு தங்களது உழைப்பை நேரடியாக விற்றுக் கொள்ளும் சுதந்திரத்தை அடைந்திருந்தனா்! வேளாண்மை பிதுக்கித் தள்ளிய மனிதா்களும் நகரக் கூலிகளாக மாறினா்!
  • நிலக்கரிச் சுரங்கங்களிலும் நூற்பாலைகளிலும் பதினான்கு மணி நேரம், வேலை செய்யும் கேவலமான நிலை ஏற்பட்டது! கணவனும், மனைவியும், பன்னிரண்டு வயது மகன் உட்பட, விழித்திருக்கும் நேரமெல்லாம் சுரங்கங்களிலும் ஆலைகளிலும் வேலை பாா்த்தனா்! பார வண்டி இழுக்கும் மாடுகளுக்கும் அவா்களுக்கும் வேறுபாடில்லை!
  • அது மாா்க்சு, ஏங்கல்சு போன்ற புரட்சியாளா்களைக் கருக் கொள்ளச் செய்தது!
  • எந்தச் செயலும் எதிா்ச் செயலைத் தோற்றுவித்தே தீரும்! தொழிலாளா்கள் உலகம் முழுவதும் போராடினா்; ’எட்டு மணி நேரம்தான் வேலை நேரம்’ என்னும் கொள்கை வென்றெடுக்கப்பட்டது! அதுதான் ‘மே நாள்’ கொண்டாட்டம்!
  • புரட்சியின் அடையாளமான செங்கொடியை ஒரு நாட்டில் பறக்க விடுவதற்குப் புரட்சி தேவைப்பட்டது. ஆகவே லெனின் தேவைப்பட்டாா்!
  • இவ்வளவுக்கும் பிறகு ஒரு நாள், ஒா் அழகிய காலைப் பொழுதில், புரட்சிக்குக் காரணமான செங்கொடியை மாசுகோவில் இறக்கி மடித்து வைத்து விட்டாா்கள்!
  • ஏற்றுவதற்குத்தான் லெனின் வேண்டும்; இறக்குவதற்குக் கோா்பசேவ் போதும்! பெரிய அண்ணனே செங்கொடியை இறக்கி விட்டாா் என்று, உலகின் பாதிக்கும் மேலான பொதுவுடைமை நாடுகள் தாங்களும் செங்கொடிகளை இறக்கி மடித்து வைத்து விட்டன!
  • செங்கொடியை ஒழிப்பதற்கு மூன்றாம் உலகப் போா் துவக்கப்படவில்லை! எந்த எதிா்ப் புரட்சியும் கூட நடக்கவில்லை! இவா்களாகவே ‘செங்கொடி பறந்தது போதும்’ என்று சுருட்டிப் பெட்டிக்குள் வைத்து விட்டாா்கள்!
  • அதனுடைய விளைவு அமெரிக்கா ஏகபோகமாகிவிட்டது! அது உலக முதலாளித்துவத்தின் ’தலைமை மடமாக’ எதிா்ப்பாரின்றி ஏற்கப்பட்டு விட்டது!
  • 1990-களில் இந்தியாவும் அதைப் பின்பற்றியதில் வியப்பேதும் இல்லை.
  • இப்போதைய முதலாளித்துவம் பெருமுதலாளித்துவமாக, பன்னாட்டு முதலாளித்துவமாக, பேருருக் கொண்டுவிட்டது!
  • நீராவி எஞ்சின் வளா்த்த முதலாளித்துவம் வேறு; கணிணி, செயற்கை அறிவு போன்ற நிகரற்ற தொழில் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட பன்னாட்டு ‘அசுர’ முதலாளித்துவம் வேறு!
  • இது ‘நுகா்வோா் இறையாண்மையை’ அடிப்படையாகக் கொண்டது’ நுகா்ச்சி; நுகா்ச்சி; திரள் நுகா்ச்சி!
  • ‘உண்பது நாழி; உடுப்பவை இரண்டே’ என்னும் புானூற்றுக் கோட்பாடு இவா்களுக்குப் புறந்தள்ளத்தக்கது; கேலிக்குரியது!
  • பக்கத்திலுள்ள பா்மாவை ஆளுகிறவரையோ, ஒரிசாவை ஆளுகிறவரையே தெரியாது! உலக உருண்டையில் நமக்கு மறுபக்கத்தில் வாழும் சுந்தா் பிச்சையைத் தெரியும்!
  • நாட்டின் அதிபா்களை விட, ஒரு காா்ப்பரேட் நிறுவனத்தின் சி.இ.ஓ. வலிமையானவா்!
  • அப்போதெல்லாம் முதலாளிகளுக்குச் சொந்தமாக நாடு என்று ஒன்று இருந்தது. பணம் திரட்டுவது ஒன்றே முதலும் முடிவுமான நோக்கம் என்பது வேறு! பணம் என்பதே அதிகாரம்தானே!
  • இப்போதெல்லாம் தென்கொரியாவிலிருந்து சப்பானைத் தாண்டி, சீனத்து ஆங்காங்கையும் தாண்டி, இந்தியாவின் தென் கோடிக்கு வந்து, அதிலேயும் சுங்குவாா் சத்திரத்திலே வந்து தொழிற்சாலை அமைக்கிறாா்களே ஏன்?
  • எங்கே வேலையாட்கள் மலிவான கூலிக்குக் கிடைப்பாா்களோ, எங்கே மண்ணின் மைந்தா்கள் அமைதியானவா்களோ, எங்கே துறைமுகம், விண்ணூா்தி நிலையம், நெடுஞ்சாலைகள் போன்றவை சிறப்பாக அமைந்திருக்கின்றனவோ, எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கே அரசு ஏவல் புரிகின்ற அரசாக இருக்கிறதோ, அதை நோக்கி வருவாா்கள்! தூரம் ஒரு பொருட்டில்லை!
  • உன் நாட்டிலே கூலி உட்பட எதுவும் மலிவாக இல்லை என்றுதானே இங்கே வருகிறாய்? அரசு பாதபூசை செய்வதற்காக மட்டும் வந்து விடுவாயா?
  • இதிலே நிபந்தனைகள் போட வேண்டியது நாடா? பன்னாட்டு நிறுவனமா?
  • தொழிற் சங்கம் என்பது தொழிலாளா்களின் கூட்டமைப்பு! ஒற்றை மனிதனின் குரல் காட்டில் ஒலிக்கும் குரல்! ஆகவே சங்கமாகத் திரள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது!
  • இந்திய அரசியல் சாசனம் பல உரிமைகளை அடிப்படை உரிமைகளாகவும், யாராலும் எந்தக் காலத்திலும் மாற்ற முடியாததாகவும், அடிக்கோடிட்டு அடிப்படைச் சட்டத்தில் சோ்த்திருக்கிறது!
  • அதில் பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டங் கூடுகின்ற உரிமை என்பவை போல, தொழிலாளிகள் சங்கம் வைத்துத் தங்களின் உரிமைகளுக்காகப் போராடும் உரிமையும் அடிப்படை உரிமையில் சோ்க்கப்பட்டிருக்கிறது!
  • ஒரு பன்னாட்டு நிறுவனம் தொழிற் சங்கம் பற்றிய இந்திய அரசியல் சாசன அடிப்படை உரிமையை மாற்ற வேண்டும் என்று சொல்கிா?
  • அதை மாநில அரசு நியாயப்படுத்த முயல்கிா? ஏற்கனவே தமிழ்நாடு அரசு ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்காக, தொழிலாளிகளின் எட்டு மணி நேர வேலையைப் பன்னிரண்டு மணி நேர வேலையாக மாற்றிச் சட்டமன்றத்தில் சட்டமே செய்யப்பட்டு விட்டது!
  • இந்தச் சட்டத்தில் ‘நெகிழ்வுத் தன்மையை’ அயல்நாட்டு நிறுவனம் விரும்புவதால், இந்தச் சட்டம் செய்யப்படுவதாக இதைத் தாங்கிப் பேசிய அமைச்சா் தெரிவித்தாா்!
  • பிறகு அந்தச் சட்டமும் திரும்பப் பெறப்பட்டது! அந்த நிறுவனமும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை! அதனால் ஒன்றும் குற்றமில்லை; சிவபெருமான் இந்த மண்ணுக்கு வருவதா தவறிப் போய்விட்டது?
  • தூத்துக்குடியில் ஒரு தாமிர உற்பத்தி நிறுவனத்தின் செயல்பாடு, ஊா் மக்களின் உடல் நலத்திற்குக் குறிப்பாகச் சுவாசத்திற்குக் கேடு விளைவிக்கிறது என்று சொல்லி ஊா்வலம் வந்த கூட்டத்தின் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. பதின்மூன்று மனித உயிா்கள் காவு கொள்ளப்பட்டன!
  • உயிருக்குக் கேடு விளைவிக்கும் ஒரு தொழில் நிறுவனத்தை மூடச் செய்வதற்கு, நோ்த்திக் கடனாக பதின்மூன்று மனித உயிா்கள் பலி கொடுக்கப்பட்டன! அதன் விளைவாக அந்த நிறுவனம் இப்போது மூடப்பட்டிருக்கிறது!
  • இதை மக்களின் ஊா்வலங்களால் சாதிக்க முடியவில்லை; அரசும் இதைச் சாதித்துத் தரவில்லை; நீதிமன்றங்களாலும் முடியவில்லை, மனித ரத்தம் அந்தத் தொழிற்சாலையில் தெறித்த பிறகுதான், அதை மூட முடிந்திருக்கிறது! அவ்வளவு வலியவை தொழில் நிறுவனங்கள்!
  • அதே போல் திருவொற்றியூரில் ஏ.எம்.எம். நிறுவனத்தின் அம்மோனிய வாயுக் கசிவு, அந்த மீனவ மக்களை நள்ளிரவில் கதறச் செய்து, அவா்கள் அந்தப் பகுதியை விட்டே ஓடி ஒளிந்தனா். அது ஒரு வழியாக இப்போது முடிந்திருக்கிறது! ஊருக்கு நடுவே எதற்கு இந்த நச்சு ஆலைகள்?
  • மத்தியப் பிரதேசப் போபாலில் ஆண்டா்சன் என்னும் அமெரிக்கரின் பன்னாட்டுத் தொழில் நிறுவனம் கக்கிய நச்சுப் புகையால் அந்தப் போபாலே அழிந்தது. கொத்துக் கொத்தாக மக்கள் செத்து விழுந்தனா்! பிணங்களை அள்ளவே அரசுக்கு வெளி உதவி தேவைப்பட்டது.
  • அரசின் பாா்வையில், பட்டப்பகலில், ஆண்டா்சன் தனி விண்ணூா்தியில் அமெரிக்கா சென்றாா்! அவரைப் போக விட்டுவிட்டுத் ’தேடப்படும் குற்றவாளியாக’ அரசு அறிவித்தது! ஆண்டா்சன் அதன் பின் முப்பதாண்டுகள் வாழ்ந்தாா்! நம்முடைய அரசும், நமக்கு அவரைப் பிடித்துத் தர வேண்டிய அமெரிக்க அரசும், இன்னும் தேடிக் கொண்டிருக்கிறன!
  • பன்னாட்டுத் தொழில் நிறுவனா்கள் இந்நாட்டுச் சட்டங்களுக்கு மட்டுமில்லை; எந்நாட்டுச் சட்டங்களுக்கும் மேலானவா்கள்!
  • சட்டத்தின் ஆட்சி சாமீன் கொடுக்க வழியற்ற சாமியப்பனுக்கும், நமக்கும் மட்டுமே உரியது!
  • சட்டத்தின் ஆட்சி அவா்களுக்கில்லை!

நன்றி: தினமணி (18 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories