சிக்கலை எதிர்கொண்டிருக்கும் சித்த மருத்துவம்
- மத்திய ஆயுஷ் அமைச்சகம் பிப்ரவரி 7, 2025 அன்று அரசு இதழில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் 427 பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளின் மருத்துவ நூல் பட்டியல் இடம்பெற்றிருக்கிறது. 88 சித்த, 227 ஆயுர்வேத, 112 யுனானி மருத்துவத்தின் மூல நூல்களைத் தொகுத்து, அந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
- அவற்றை இந்திய மருந்து - அழகு சாதனச் சட்டத்தின்கீழ் (The Drugs and Cosmetics Act, 1940) அங்கீகரிக்க உள்ளதாகவும், அதில் ஏதேனும் எதிர்க்கருத்து இருந்தால் மூன்று மாதங்களுக்குள் முறையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- இது வரவேற்கப்பட வேண்டியதே. சித்த மருத்துவச் சமூகத்தின் 12 ஆண்டு கோரிக்கையை மத்திய அமைச்சகம் இப்போது பகுதி அளவேனும் ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. இதன் மூலம் வருங்காலத்தில் சித்த மருந்து ஆய்வுத் துறையில் பெரிய முன்னேற்றமும், சித்த மருந்து உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சியும் சாத்தியமாகும். ஆய்வு செய்யப்பட்டு, நிரூபிக்கப்பட்ட புதிய பாரம்பரிய மருந்துகள் வணிகச் சந்தையில் மக்களுக்குக் கிடைக்கும்.
மாற்றப்பட்டிருக்கும் வரையறை:
- அதேவேளையில், ஆயுஷ் அமைச்சகத்திடம் முன்பு வழங்கப்பட்ட 250க்கு மேல் உள்ள அரிதான சித்த மூல நூல் பட்டியல் நீக்கப்பட்டு, வெறுமனே 88 நூல்கள் மட்டுமே தற்போது அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் புத்தகங்களைத் தேர்வுசெய்வதில் என்ன வரையறை பின்பற்றப்பட்டிருக்கிறது என்றும் தெரியவில்லை.
- ஆயுர்வேத நூல்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே சித்த மருத்துவ நூல்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அந்த எண்ணிக்கை மிகாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளப்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது. 1975இல் வெளியிடப்பட்ட பழைய அட்டவணையில், பின்பற்றப்பட்ட விதிகளை நினைவுகூர்வது அவசியம். சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மருத்துவ நூல்கள், ஆயுர்வேத முனிவர்களின் பெயரில் உள்ள மருத்துவ நூல்கள் ஆயுர்வேத நூல்களாக அங்கீகரிக்கப்பட்டன.
- தமிழில் எழுதப்பட்ட, சித்தர்களின் பெயரில் எழுதப்பட்ட நூல்கள், செய்யுள் வடிவில் உள்ள நூல்கள் ஆகியவை சித்த மருத்துவ நூல்களுக்கான வரையறையாக இருந்தன. இந்நிலையில், அறிவிக்கப்படாத புதிய விதியானது ஆயுர்வேதத்துக்குக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி சம்ஸ்கிருதம் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் உள்ள தொன்மையான மருத்துவ நூல்கள் ‘ஆயுர்வேதம்’ பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.
- இதனால் தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழியில் உள்ள சித்த மருத்துவ நூல்கள் ஆயுர்வேத அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது தெலுங்கு (26), மலையாளம் (12), இந்தி (5), மராத்தி (5), அவதி (1) ஆகிய மொழிகளில் உள்ள நூல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
- தெலுங்கு மொழியில் உள்ள ‘புலிப்பாணி வைத்தியம்’ என்கிற சித்த மருத்துவ நூல் அதே பெயரில் ஆயுர்வேத அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. தாம்பரம் சானடோரியத்தில் எச்.ஐ.வி. நோயாளிகளுக்குக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டு, பன்னாட்டு ஆய்வு அரங்குகளில் நிரூபிக்கப்பட்ட ‘ரசகந்தி மெழுகு’ என்கிற சிறப்புவாய்ந்த சித்த மருத்துவச் செய்முறைக் குறிப்பு அதில் உள்ளது. டாக்டர் செ.நெ.தெய்வநாயகத்தால் முன்னெடுக்கப்பட்ட அந்தச் செய்முறை, இப்போது தெலுங்கு மொழியின் வழியாக ஆயுர்வேதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
- தென் தமிழகத்தின் புகழ்பெற்ற ‘காயத்திருமேனி எண்ணெய்’, ‘வெட்டு மாறன் குளிகை’ போன்ற ‘சித்த வர்ம’ மருந்துகள் மலையாள மொழி சித்த நூல்களின் வாயிலாக ஆயுர்வேதத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆயுர்வேத அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ள பல நூல்களின் பெயர்கள் அகத்தியர், சித்தா என்றே தொடங்குகின்றன. ஆனால், அதே நேரத்தில் சித்த மருத்துவ நூல்களுக்கான அறிவிக்கப்படாத விதியின்படி - சித்த மருத்துவ நூல்கள் என்றால், அவை தமிழ் மொழியில் மட்டும் இருக்க வேண்டும்.
- பிற மொழியில் உள்ள சித்த மருத்துவ நூல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சித்த மருத்துவ நூல்கள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று கடினமான விதியை முன்பே எழுதிவிடுகின்றனர். இதனால், தமிழ்நாட்டுக்குள் மட்டுமே சித்த மருத்துவம் என்கிற எல்லையை உருவாக்கிக் கட்டுப்படுத்துகின்றனர்.
- இதனால், தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும் சித்த மருத்துவ நூல்கள் மறுக்கப்படுகின்றன. அவை ஆயுர்வேத மருத்துவ நூல்களாக முன்மொழியப்படுகின்றன. ஒருகாலத்தில் - தென்னிந்தியாவின் மைசூர், திருவனந்தபுரம், தஞ்சை சமஸ்தானங்கள் இருந்த காலக்கட்டத்தில் மருத்துவர்களும், மருந்துகளும், மருந்து நூல்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டனர். அதன் ஊடாக, மொழிமாற்றம் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட சித்த மருத்துவ நூல்கள் இன்று மலையாள, தெலுங்கு ஆயுர்வேத நூல்களாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியது.
- அது மட்டுமல்ல, புதிதாக ஓலைச்சுவடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புதிய மருத்துவ நூல்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தென் தமிழகத்தில் பல தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டுவந்த சித்த, வர்ம மருத்துவ ஓலைச்சுவடிகள் இன்று பதிப்பிக்கப்படுகின்றன. அவற்றைச் சித்த மருத்துவ நூல்களாக அங்கீகரிக்க மறுக்கப்படுகிறது. அயல் நாட்டுத் தமிழ் ஆய்வாளர்கள், கிறிஸ்துவ மிஷனரிகள் இங்கு தொகுத்து வெளியிட்ட சித்த மருத்துவ ஏடுகளையும் நூல்களையும் ஏற்றுக் கொள்வதில்லை.
- வீரமாமுனிவர் இயற்றிய ‘வீரமாமுனிவர் வாகடத் திரட்டு’ நூலையும் சித்த மருத்துவ அட்டவணையில் சேர்த்துக்கொள்வதில்லை. அதில் உள்ள மிக முக்கியமான மருந்து இன்றளவும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் புற்றுநோய்க்கான, ‘சித்திர மூலக் குளிகை’ என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல கிறிஸ்துவ, இஸ்லாமிய ஞானிகள், புகழ்பெற்ற மருத்துவர்கள் பெயரில் உள்ள நூல்கள், அப்துல்லா சாகிப் இயற்றிய சித்த மருத்துவ நூல்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
என்ன பாதிப்புகள் ஏற்படும்?
- இத்தகைய போக்கால், இந்தியா முழுவதும் இருப்பது ஆயுர்வேத மருத்துவ அறிவு மட்டுமே; சித்த மருத்துவத்துக்கு என்று தனித்துவம் எதுவும் இல்லை என்று இனி நிறுவப்படலாம். தமிழர்களின் மருத்துவ அறிவு என்பது வெறும் கதையாடலே; அவை சம்ஸ்கிருத மருத்துவ நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்று கட்டமைக்கப்படலாம்.
- ‘கரோனா’ போன்ற பேரிடர் காலங்களில், தமிழக அரசு ‘டாம் கால்’ (TAMCOL) போன்ற அரசு நிறுவனங்கள் வழியாக, சித்த மருந்துகளைச் சுயமாக உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்கியது. அரசு மருத்துவமனைகளுக்கு இன்றும் அங்கிருந்து மருந்துகள் தயாரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் இந்த சித்த நூல்களில் உள்ள ‘மருந்துகளின் செய்முறைகள்’ பன்னாட்டு, இந்திய ஆயுர்வேத நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டு, அவற்றைப் பல மடங்கு விலை கொடுத்து நாம் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
தீர்வு என்ன?
- தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக சித்த மருத்துவ அறிஞர் குழுவை நியமித்து, ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அட்டவணையில் உள்ள அனைத்து நூல்களையும் ஆய்வுசெய்து, அவற்றில் பிற மொழிகளில் உள்ள சித்த மருத்துவ நூல்களை மீட்டெடுத்துச் சித்த மருத்துவ அட்டவணையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு என்று சித்த மருத்துவ நூல் அட்டவணையை வெளியிட வேண்டும்.
- தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டுக்கு வெளியிலும், அயலகத்திலும் உள்ள தமிழ், பிற மொழிகளில் உள்ள சித்த மருத்துவ நூல்களை ஆய்வுசெய்து பட்டியலிட்டு, அவற்றை ‘தமிழர்களின் பண்டைய மருத்துவக் கருவூலம்’ என்று தமிழக சட்டசபையில் சட்டம் இயற்றிச் சட்ட அங்கீகாரமும் பாதுகாப்பும் வழங்க வேண்டும். ‘சித்த மருத்துவம் தமிழர்கள் உலகுக்கு அளித்த மருத்துவக் கொடை’ என்பார் பண்பாட்டு ஆய்வாளரும் எழுத்தாளருமான தொ.பரமசிவன். அதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து காக்க வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 02 – 2025)