TNPSC Thervupettagam

சிக்கலை எதிர்கொண்டிருக்கும் சித்த மருத்துவம்

February 18 , 2025 3 days 36 0

சிக்கலை எதிர்கொண்டிருக்கும் சித்த மருத்துவம்

  • மத்திய ஆயுஷ் அமைச்சகம் பிப்ரவரி 7, 2025 அன்று அரசு இதழில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் 427 பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளின் மருத்துவ நூல் பட்டியல் இடம்பெற்றிருக்கிறது. 88 சித்த, 227 ஆயுர்வேத, 112 யுனானி மருத்துவத்தின் மூல நூல்களைத் தொகுத்து, அந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
  • அவற்றை இந்திய மருந்து - அழகு சாதனச் சட்டத்தின்கீழ் (The Drugs and Cosmetics Act, 1940) அங்கீகரிக்க உள்ளதாகவும், அதில் ஏதேனும் எதிர்க்கருத்து இருந்தால் மூன்று மாதங்களுக்குள் முறையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
  • இது வரவேற்​கப்பட வேண்டியதே. சித்த மருத்​துவச் சமூகத்தின் 12 ஆண்டு கோரிக்கையை மத்திய அமைச்சகம் இப்போது பகுதி அளவேனும் ஏற்றுக்​கொண்​டதில் மகிழ்ச்சி. இதன் மூலம் வருங்​காலத்தில் சித்த மருந்து ஆய்வுத் துறையில் பெரிய முன்னேற்​ற​மும், சித்த மருந்து உற்பத்தி நிறுவனங்​களின் வளர்ச்​சியும் சாத்தி​ய​மாகும். ஆய்வு செய்யப்​பட்டு, நிரூபிக்​கப்பட்ட புதிய பாரம்பரிய மருந்​துகள் வணிகச் சந்தையில் மக்களுக்குக் கிடைக்​கும்.

மாற்றப்​பட்​டிருக்கும் வரையறை:

  • அதேவேளை​யில், ஆயுஷ் அமைச்​சகத்​திடம் முன்பு வழங்கப்பட்ட 250க்கு மேல் உள்ள அரிதான சித்த மூல நூல் பட்டியல் நீக்கப்​பட்டு, வெறுமனே 88 நூல்கள் மட்டுமே தற்போது அங்கீகரிக்​கப்​பட்​டிருக்​கின்றன. இந்தப் புத்தகங்​களைத் தேர்வுசெய்​வதில் என்ன வரையறை பின்பற்​றப்​பட்​டிருக்​கிறது என்றும் தெரிய​வில்லை.
  • ஆயுர்வேத நூல்களின் எண்ணிக்கை​யுடன் ஒப்பிடு​கையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே சித்த மருத்துவ நூல்கள் அங்கீகரிக்​கப்​பட்​டுள்ளன. அந்த எண்ணிக்கை மிகாமல் கவனமாகப் பார்த்​துக்​கொள்​ளப்​படுவது வெளிப்​படை​யாகத் தெரிகிறது. 1975இல் வெளியிடப்பட்ட பழைய அட்டவணை​யில், பின்பற்​றப்பட்ட விதிகளை நினைவு​கூர்வது அவசியம். சம்ஸ்​கிருதத்தில் எழுதப்பட்ட மருத்துவ நூல்கள், ஆயுர்வேத முனிவர்​களின் பெயரில் உள்ள மருத்துவ நூல்கள் ஆயுர்வேத நூல்களாக அங்கீகரிக்​கப்​பட்டன.
  • தமிழில் எழுதப்​பட்ட, சித்தர்​களின் பெயரில் எழுதப்பட்ட நூல்கள், செய்யுள் வடிவில் உள்ள நூல்கள் ஆகியவை சித்த மருத்துவ நூல்களுக்கான வரையறையாக இருந்தன. இந்நிலை​யில், அறிவிக்​கப்படாத புதிய விதியானது ஆயுர்​வேதத்​துக்குக் கடைப்​பிடிக்​கப்​படு​கிறது. இதன்படி சம்ஸ்​கிருதம் மட்டுமல்​லாது, இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் உள்ள தொன்மையான மருத்துவ நூல்கள் ‘ஆயுர்​வேதம்’ பட்டியலில் சேர்க்​கப்​படு​கின்றன.
  • இதனால் தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழியில் உள்ள சித்த மருத்துவ நூல்கள் ஆயுர்வேத அட்டவணையில் சேர்க்​கப்​பட்​டுள்ளன. தற்போது தெலுங்கு (26), மலையாளம் (12), இந்தி (5), மராத்தி (5), அவதி (1) ஆகிய மொழிகளில் உள்ள நூல்கள் சேர்க்​கப்​பட்​டுள்ளன.
  • தெலுங்கு மொழியில் உள்ள ‘புலிப்பாணி வைத்தியம்’ என்கிற சித்த மருத்துவ நூல் அதே பெயரில் ஆயுர்வேத அட்டவணையில் சேர்க்​கப்​பட்​டுள்ளது. தாம்பரம் சானடோரி​யத்தில் எச்.ஐ.வி. நோயாளி​களுக்குக் கொடுத்து ஆய்வு செய்யப்​பட்டு, பன்னாட்டு ஆய்வு அரங்கு​களில் நிரூபிக்​கப்பட்ட ‘ரசகந்தி மெழுகு’ என்கிற சிறப்பு​வாய்ந்த சித்த மருத்​துவச் செய்முறைக் குறிப்பு அதில் உள்ளது. டாக்டர் செ.நெ.தெய்​வ​நாயகத்தால் முன்னெடுக்​கப்பட்ட அந்தச் செய்முறை, இப்போது தெலுங்கு மொழியின் வழியாக ஆயுர்​வேதத்தில் சேர்க்​கப்​பட்​டுள்ளது.
  • தென் தமிழகத்தின் புகழ்​பெற்ற ‘காயத்​திருமேனி எண்ணெய்’, ‘வெட்டு மாறன் குளிகை’ போன்ற ‘சித்த வர்ம’ மருந்​துகள் மலையாள மொழி சித்த நூல்களின் வாயிலாக ஆயுர்​வேதத்தில் சேர்க்​கப்​பட்​டிருக்​கின்றன. ஆயுர்வேத அட்டவணையில் இணைக்​கப்​பட்​டுள்ள பல நூல்களின் பெயர்கள் அகத்தியர், சித்தா என்றே தொடங்​கு​கின்றன. ஆனால், அதே நேரத்தில் சித்த மருத்துவ நூல்களுக்கான அறிவிக்​கப்படாத விதியின்படி - சித்த மருத்துவ நூல்கள் என்றால், அவை தமிழ் மொழியில் மட்டும் இருக்க வேண்டும்.
  • பிற மொழியில் உள்ள சித்த மருத்துவ நூல்கள் ஏற்றுக்​கொள்​ளப்​படு​வ​தில்லை. சித்த மருத்துவ நூல்கள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று கடினமான விதியை முன்பே எழுதி​விடு​கின்​றனர். இதனால், தமிழ்​நாட்டுக்குள் மட்டுமே சித்த மருத்​துவம் என்கிற எல்லையை உருவாக்கிக் கட்டுப்​படுத்து​கின்​றனர்.
  • இதனால், தமிழ்​நாட்டுக்கு வெளியே உள்ள பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்​கப்​படும் சித்த மருத்துவ நூல்கள் மறுக்​கப்​படு​கின்றன. அவை ஆயுர்வேத மருத்துவ நூல்களாக முன்மொழியப்​படு​கின்றன. ஒருகாலத்தில் - தென்னிந்தியாவின் மைசூர், திருவனந்​த​புரம், தஞ்சை சமஸ்தானங்கள் இருந்த காலக்​கட்​டத்தில் மருத்​துவர்​களும், மருந்​துகளும், மருந்து நூல்களும் பரிமாறிக்​கொள்​ளப்​பட்​டனர். அதன் ஊடாக, மொழிமாற்றம் செய்யப்​பட்டுப் பயன்படுத்​தப்பட்ட சித்த மருத்துவ நூல்கள் இன்று மலையாள, தெலுங்கு ஆயுர்வேத நூல்களாக அங்கீகரிக்​கப்​பட்​டிருப்பது கடுமையான கண்டனத்​துக்கு உரியது.
  • அது மட்டுமல்ல, புதிதாக ஓலைச்​சுவடியில் இருந்து கண்டெடுக்​கப்பட்ட புதிய மருத்துவ நூல்கள் ஏற்றுக்​கொள்​ளப்​பட​வில்லை. தென் தமிழகத்தில் பல தலைமுறை​யாகப் பாதுகாக்​கப்​பட்டுவந்த சித்த, வர்ம மருத்துவ ஓலைச்​சுவடிகள் இன்று பதிப்​பிக்​கப்​படு​கின்றன. அவற்றைச் சித்த மருத்துவ நூல்களாக அங்கீகரிக்க மறுக்​கப்​படு​கிறது. அயல் நாட்டுத் தமிழ் ஆய்வாளர்கள், கிறிஸ்துவ மிஷனரிகள் இங்கு தொகுத்து வெளியிட்ட சித்த மருத்துவ ஏடுகளையும் நூல்களையும் ஏற்றுக்​ கொள்​வ​தில்லை.
  • வீரமா​முனிவர் இயற்றிய ‘வீரமா​முனிவர் வாகடத் திரட்டு’ நூலையும் சித்த மருத்துவ அட்டவணையில் சேர்த்​துக்​கொள்​வ​தில்லை. அதில் உள்ள மிக முக்கியமான மருந்து இன்றளவும் சித்த மருத்​துவத்தில் பயன்படுத்​தப்​படும் புற்று​நோய்க்கான, ‘சித்திர மூலக் குளிகை’ என்பது கவனிக்​கத்​தக்கது. அதேபோல கிறிஸ்துவ, இஸ்லாமிய ஞானிகள், புகழ்​பெற்ற மருத்​துவர்கள் பெயரில் உள்ள நூல்கள், அப்துல்லா சாகிப் இயற்றிய சித்த மருத்துவ நூல்கள் ஏற்றுக்​கொள்​ளப்​பட​வில்லை.

என்ன பாதிப்புகள் ஏற்படும்?

  • இத்தகைய போக்கால், இந்தியா முழுவதும் இருப்பது ஆயுர்வேத மருத்துவ அறிவு மட்டுமே; சித்த மருத்​துவத்​துக்கு என்று தனித்துவம் எதுவும் இல்லை என்று இனி நிறுவப்​படலாம். தமிழர்​களின் மருத்துவ அறிவு என்பது வெறும் கதையாடலே; அவை சம்ஸ்​கிருத மருத்துவ நூல்களில் இருந்து எடுக்​கப்​பட்டவை என்று கட்டமைக்​கப்​படலாம்.
  • ‘கரோனா’ போன்ற பேரிடர் காலங்​களில், தமிழக அரசு ‘டாம் கால்’ (TAMCOL) போன்ற அரசு நிறுவனங்கள் வழியாக, சித்த மருந்​துகளைச் சுயமாக உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்கியது. அரசு மருத்​துவ​மனை​களுக்கு இன்றும் அங்கிருந்து மருந்​துகள் தயாரிக்​கப்​பட்டு அனுப்​பிவைக்​கப்​படு​கின்றன. எதிர்​காலத்தில் இந்த சித்த நூல்களில் உள்ள ‘மருந்​துகளின் செய்முறைகள்’ பன்னாட்டு, இந்திய ஆயுர்வேத நிறுவனங்​களிடம் கொடுக்​கப்​பட்டு, அவற்றைப் பல மடங்கு விலை கொடுத்து நாம் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

தீர்வு என்ன?

  • தமிழக அரசு காலம் தாழ்த்​தாமல் உடனடியாக சித்த மருத்துவ அறிஞர் குழுவை நியமித்து, ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அட்டவணையில் உள்ள அனைத்து நூல்களையும் ஆய்வுசெய்து, அவற்றில் பிற மொழிகளில் உள்ள சித்த மருத்துவ நூல்களை மீட்டெடுத்துச் சித்த மருத்துவ அட்டவணையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்​நாட்டுக்கு என்று சித்த மருத்துவ நூல் அட்டவணையை வெளியிட வேண்டும்.
  • தமிழ்​நாட்​டிலும், தமிழ்​நாட்டுக்கு வெளியிலும், அயலகத்​திலும் உள்ள தமிழ், பிற மொழிகளில் உள்ள சித்த மருத்துவ நூல்களை ஆய்வுசெய்து பட்டியலிட்டு, அவற்றை ‘தமிழர்​களின் பண்டைய மருத்​துவக் கருவூலம்’ என்று தமிழக சட்டசபையில் சட்டம் இயற்றிச் சட்ட அங்கீ​காரமும் பாதுகாப்பும் வழங்க வேண்டும். ‘சித்த மருத்​துவம் தமிழர்கள் உலகுக்கு அளித்த மருத்​துவக் கொடை’ என்பார் பண்பாட்டு ஆய்​வாளரும் எழுத்​தாள​ருமான தொ.பரமசிவன். அதை ​நாம் அனைவரும் ஒன்​றிணைந்து ​காக்க வேண்​டும்​!

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories