TNPSC Thervupettagam

சென்னப்பட்டணம் பற்றி ஒரு சிறிய நூல்!

August 22 , 2024 5 hrs 0 min 8 0

சென்னப்பட்டணம் பற்றி ஒரு சிறிய நூல்!

  • சென்னப்​பட்டணம் பற்றிய பதிவு​களில், ‘மதராஸ் டைம்ஸ்’ நாளிதழின் ஆசிரியர் க்ளைன் பார்லோ (Glyn Barlow) எழுதிய ‘தி ஸ்டோரி ஆஃப் மெட்ராஸ்’ முற்றிலும் வித்தி​யாச​மானதொரு புத்தகம். 1921இல் ஆக்ஸ்ஃ​போர்டு யுனிவர்​சிட்டி பிரஸ்ஸின் ஹம்ப்ரி மில்ஃ​போர்டு நிறுவனம் பதிப்​பித்​திருந்தது.
  • இந்தச் சின்னஞ்சிறு புத்தகம் மதராஸ் வரலாறு பற்றி நிறையவே தகவல்​களைக் கொண்டிருப்​பினும், இது மதராஸின் வரலாறல்ல. மதராஸ் ஒரு வியப்​பூட்டும் நகரம் என்பதை வாசகன் உணர வேண்டும் என்கிற நோக்கத்தை நிறைவேற்று​வ​தாகவே இந்தப் புத்தகத்தை பார்லோ எழுதி​யிருக்​கிறார். பதினைந்தே அத்தி​யா​யங்​களில் சென்னையின் கதையைக் கோவையாக விவரித்​துள்ளார்.
  • மதராஸ் புராதன நகரல்ல. அதேவேளையில் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் விதத்​தில், கிளர்ச்​சி​யூட்டும் ஆவணங்​களைக் கொண்டிருக்கும் விதத்தில் மதராஸ் பழமை வாய்ந்​தது​தான். வியத்தகு உண்மை​களைக் கொண்டிருக்கும் அளவில் இளமைத் துடிப்பு​டனும் அது விளங்குகிறது. இந்தப் புத்தகத்தில் அதை உயிரோட்​டத்​துடன் பதிவுசெய்திருக்​கிறார் பார்லோ.
  • செயின்ட் ஜார்ஜ் கோட்டை உருவான​திலிருந்தே கம்பெனி நிர்வாகமும் பின்னர் பிரித்​தானிய அரசும் பராமரித்துவந்த முக்கி​யத்துவம் வாய்ந்த ஆவணங்​களை​யும், கர்னல் லவ் எழுதிய ‘வெஸ்​டிஜஸ் ஆஃப் மதராஸ்’ எனும் புத்தகத்​தையும் தகவல் சுரங்​கங்​களாகக் கருதும் பார்லோ, அவற்றையே தனது நூலுக்கான ஆதார​மாகக் கொண்டுள்ளதாக எழுதி​யிருக்​கிறார்.
  • பெரும்​பாலான வரலாற்​றாசிரியர்கள் மதராஸின் வரலாற்றைத் தொடங்​கு​கையில் பல்வேறு கிராமங்​களின் இணைப்பில் பட்டணம் உருவானதையே தோற்று​வா​யாகக் கொண்டு​வரு​கின்​றனர். இக்கடற்கரை கிராமம் பல்வேறு குறுநில மன்னர்​களின் ஆட்சிப் பொறுப்பில் இருந்​து ​வந்​ததை​யும், பட்டணத்தில் உள்ள பல்வேறு கிராமங்கள் அவற்றின் கோட்டங்களாக விளங்கியதையும் விவரிப்​ப​தில்லை. கிழக்​கிந்​திய கம்பெனியின் வர்த்தக நடவடிக்கை​களின் தொடக்கமே மதராஸ் பட்டணத்தின் தொடக்​க​மாகச் சித்தரிக்​கப்​பட்டு வருகிறது. பார்லோவும் இதில் விதி​விலக்காக இல்லை.

கிராமங்​களின் கூட்டம்:

  • முந்நூறு ஆண்டு​களுக்கு முன்னதாக, சோழ மண்டலக் கடற்கரையில் மதராஸ் பட்டணம் என்பது ஒரு சின்னஞ்​சிறிய கிராமமென்​றும், எழும்​பூர், வேப்பேரி மற்றும் திருவல்​லிக்கேணி போன்ற கிராமங்​களால் சூழப்​பட்​டிருந்​ததென்றும் சென்னையின் கதையை பார்லோ ஆரம்பிக்கிறார்.
  • 1600இல் கிழக்​கிந்திய நிறுவனத்தின் உருவாக்கம் முதல் 1861இல் மதராஸில் உயர் நீதிமன்றம் அமைக்​கப்​பட்டது வரையிலான நிகழ்வு​களின் ஆண்டு வரிசைப் பட்டியலுடன் கூடிய இப்புத்தகம் பார்லோவே வரைந்த நேர்த்தியான இருபதுக்கும் மேற்பட்ட படங்களைக் கொண்டுள்ளது.
  • மூன்றாவது அத்தி​யா​யத்​தில், 1686இல் சென்னைக்கு வந்து குடியேறிய இத்தாலிய மருத்​துவர் மனுச்​சியின் குறிப்புகள் சுவாரசி​யத்தை அளிக்​கின்றன. கடலுக்கு அருகில் தற்போதைய சட்டக் கல்லூரியை​யும், பாப்ஹாம்ஸ் பிராட்​வேயையும் ஒட்டிய பகுதியில் அவரது தோட்டம் இருந்​த​தாகவும் பிராட்வே பகுதியி​லிருந்து அதற்கு நீர்பாய்ச்​சப்​பட்​ட​தாகவும் பார்லோ எழுதி​யுள்​ளார்.
  • சென்னை மணற்பாங்கான கடற்கரையைக் கொண்டது என்றும் ஆங்கிலேயர்கள் கோரைப் புற்களாலான குடிசை வீடுகளை அமைத்​துக்​கொண்டனர் என்றும் மனுச்சி தனது நினைவுக் குறிப்பு​களில் எழுதி​யிருப்பதாக பார்லோ கூறுகிறார்.
  • 108 கெஜம் நீளம் 100 கெஜம் அகலம் என்ற அளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உருவான​தாக​வும், நாளாவட்​டத்தில் கோட்டை அதே வடிவத்தில் இருப்​பினும் தற்காப்பு என்ற அடிப்​படையில் சுற்றுச்​சுவர் மட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்​ளப்​பட்டன என்பதையும் அறிய முடிகிறது. ஒவ்வொரு கட்டத்​திலும் எதிர்​கொண்ட தாக்குதல்கள், மாற்றங்கள், வளர்ச்சிப் போக்குகள் போன்ற​வற்றை பார்லோ சுருக்​க​மாகவே கூறிச் செல்கிறார்.

மக்களும் வணிகமும்:

  • சென்னை நகரம் கைப்பற்​றப்​பட்டு பத்தாண்​டு​களுக்குப் பின்னர் நகரின் மக்கள் தொகை பதினைந்​தா​யிரம் என்கிற அளவில் இருந்​ததை​யும், கோட்டையை ஒட்டி அமைந்​துள்ள பகுதி ஆங்கிலேயர்​களின் இருப்​பிடமாக வெள்ளை நகரம் அல்லது கிறித்துவர் நகரம் என்று அறியப்​பட்​டதை​யும், அதற்கப்பால் இருந்த பகுதி ஜெண்டூக்கள் என்றழைக்​கப்​படும் தெலுங்கர், தமிழர் ஆகியோர் வாழ்விடமான கறுப்பர் நகரமாக இருந்​ததும் தெரிய​வரு​கிறது.
  • ஆர்மீனியர்​களுக்கான இடுகாட்டின் உருவாக்​கத்​துக்குப் பின்னரே அவர்கள் பெயரிலான தெருவொன்று பட்டணத்தில் உருவாகி​யிருக்​கிறது. ஆங்கிலேயேர் வருகைக்கு முன்னரே பார்சி, ஆர்மீனிய வியாபாரிகள் இத்தெருவில் தங்கள் வணிகத்தைத் தொடங்கி​யிருக்​கின்​றனர். பீட்டர் உஸ்கான் எனும் புகழ்​பெற்ற ஆர்மீனிய வர்த்தகரே சைதையில் அடையாற்றைக் கடக்கும் வகையில் மர்மலாங் பாலத்தைத் தனது சொந்த செலவில் கட்டி​யிருக்​கிறார்.
  • கிழக்​கிந்திய கம்பெனியின் ஆவணப் பதிவு​களின் வாயிலாகச் சென்னையில் உள்ள யூத வர்த்​தகர்கள் செல்வந்​தர்களாக இருந்தது தெரிய​வரு​கிறது. ஆங்கில யூதர்கள் இங்கிலாந்​துக்கு வைரத்தை ஏற்றுமதி செய்து, வெள்ளியையும் முத்துக்​களையும் இறக்குமதி செய்தனர். இதன்பேரில்தான் பவழக்​காரத் தெருவும் உருவாகி​யிருக்​கிறது.
  • கோல்கொண்டா வைரச் சுரங்​கங்​களில் உற்பத்தி முடிவுக்கு வந்தபின்னர் யூத வைர வியாபாரிகள் தங்கள் வர்த்​தகத்தை நிறுத்​தி​யதோடு, காணாமல் போயினர் என்றும் பார்லோ எழுதி​யுள்​ளார். கொடுக்கல் வாங்கலில் யூதர்கள் உலகெங்​கிலும் மோசமான பெயரினைக் கொண்ட​வர்கள் என்றாலும், பவழக்​காரத் தெருவில் குடியேறி நாணயத் தொழிலில் ஈடுபட்ட நாட்டுக்​கோட்டை செட்டி​யார்​களுடன் போட்டி போட முடியாமல் கடையைக் கட்டினர் என்ற தகவல் முக்கி​யத்துவம் வாய்ந்​த​தாகும்.

உருவெடுத்த பட்டணம்:

  • மக்கள் குடியேற்​றங்​களுக்குப் பின்னர் அப்பகு​தி​களுக்குப் பொலிவேற்​பட்​டிருப்​பதைச் சற்று விரிவாக இப்புத்தகத்தின் வாயிலாக அறிய முடிகிறது. நகரின் எல்லைச் சுவராக உருவாகி, பின்னர் வால்டாக்ஸ் சாலையான நிகழ்வுக்குப் பின்னாலும் ஏராளமான தகவல்​களும் சர்ச்சைகளும் உள்ளடங்கி​யிருக்​கின்றன. ஒவ்வொரு கட்டத்​திலும் பல்வேறு ஆட்சி​யாளர்கள் பிரித்​தானிய அதிகாரத்​துக்குக் கட்டுப்​பட்டு வெவ்வேறு கிராமங்களை இனாமாகவும் குத்தகையின் பேரிலும் அளித்ததன் அடிப்​படை​யில்தான் பட்டணம் பெரும் பட்டணமாக மாறியது என்கிறார் பார்லோ.
  • பேரரசர் ஔரங்சீப்​புக்கு கவர்னர் யேல் அளித்த மனுவின் அடிப்​படையில் தண்டோர், பெர்சவாக்கா, எக்மோர் ஆகிய கிராமங்​களையும் பின்னர் ஒளரங்​கசீப்பின் குமாரன் மூலம் லுங்கம்​பாக்கா கிராமத்​தையும் ஆங்கிலேயே நிர்வாகம் பெற்றது என்று பார்லோ ஆவணங்​களின் அடிப்​படையில் இடமாற்​றத்தை நிறுவு​கிறார்.
  • கோட்டையில் சிப்பாய்​களும் அதிகாரி​களும் கவர்னர்​களும் ஒன்றாகவே இருந்​து​வந்​ததை​யும், பின்னரே தகுதிக்​கேற்ப வாழ்நிலையில் மாற்றம் பிறந்​ததையும் அவர் விளக்கு​கிறார். கோட்டைக்கு அருகில் உருவான கவர்மென்ட் ஹவுஸ் பல்வேறு காலக்கட்​டங்​களின் இடப்பெயர்ச்​சிக்கு உள்ளாகிப் பின்னர் பாங்கவட்டிங் அரங்காக (தற்போதைய ராஜாஜி ஹால்) மாறியிருக்​கிறது.
  • இப்புத்​தகத்​திலேயே முக்கியமான பகுதி பட்டணத்தில் கல்விக்​கூடங்​களின் உருவாக்கம் பற்றிய விவரங்​களாகும். ஒரு நகரத்​தின் பண்​பாட்​டில் மகத்தான ​மாற்​றத்தை இது ஏற்​படுத்​தி​யிருக்​கிறது. இந்த ​மாற்​றம்​தான் பல்வேறு கிராமங்​களின் ஒருங்​கிணைப்​பில் உருவான நிலப்​பரப்பை மகத்தான பட்​ட​ணமாக ​மாற்றி​யுள்ளது. இத்தகைய ​மாற்​றத்தையே சென்னைப்​ பட்டணத்​தின்​ ​முகமென பார்​லோ ​முன்​வைத்​துள்​ளார்​.

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories