TNPSC Thervupettagam

தொழிற்​சங்கம் அமைப்பதைத் தடுப்பது அறமா?

October 4 , 2024 5 hrs 0 min 30 0

தொழிற்​சங்கம் அமைப்பதைத் தடுப்பது அறமா?

  • ஸ்ரீபெரும்​புதூரில் இயங்கிவரும் சாம்சங் இந்தியா நிறுவனத்தில் தொழிலா​ளர்கள் கடந்த மூன்று வாரங்களாக வேலைநிறுத்தம் செய்து​ வரு​கின்​றனர். 1,550 தொழிலா​ளர்கள் வெளியிலும், 300 தொழிலா​ளர்கள் உள்ளேயும் இருக்கும் சூழல் ஏற்பட்​டுள்ளது. தீபாவளி, ஆயுதபூஜை, கிறிஸ்​துமஸ், புத்தாண்டு, பொங்கல் என வரிசை​யாகத் திருவிழாக்கள் காத்திருக்​கின்றன. மக்கள் கையில் பணம் புரளும் காலம்.
  • சாம்சங் சாதனங்கள் அமோகமாகச் சந்தையில் விற்பனை ஆகும் வாய்ப்பு உள்ளது. இந்தச் சூழலில் உற்பத்தி பாதிக்​கப்​படும் நிலை உருவாகி​விட்டது. ஆனாலும் பிரச்​சினையைச் சுமுகமாக முடித்து, உற்பத்​தியில் கவனம் செலுத்த நிர்வாகம் தயாராக இல்லை. தொழிலாளர் துறை அமைச்சர் தலையிட்டு ஒருமுறை​யும், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைச் செயலாளர் முன்னிலையில் ஒருமுறையும் பேச்சு​வார்த்தை நடைபெற்ற பின்னரும் முன்னேற்றம் ஏதும் இல்லை.

பின்னணி என்ன?

  • சாம்சங் நிறுவனத் தொழிலா​ளர்கள் தொழிற்​சங்கம் அமைத்து மூன்று மாதங்​களாகப் பதிவு எண், சான்றிதழுக்​காகக் காத்திருக்கும் பின்னணியில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுவது கவனிக்​கத்​தக்கது. உண்மையில் இது புதிய அனுபவம்​தான். இந்தியத் தொழிற்​சங்கச் சட்டம் 1926இன்படி, ஒரு தொழிற்​சங்கம் அமைக்​கப்​பட்​டால், அதற்கு வேண்டிய ஆவணங்கள் சரியாக இருக்​கின்றனவா என்பதைச் சரிபார்த்து, 45 நாள்களில் பதிவு எண்ணையும் சான்றிதழையும் பதிவுசெய்யத் தேர்வு செய்யப்பட்ட தொழிலாளர் பிரதிநிதி 7 பேரிடம் ஒப்படைக்க வேண்டும்.
  • சில நேரம் தாமதமானாலும் நிச்சயம் கிடைத்து​விடும். ஆனால், ‘சாம்சங்’ என்கிற பெயர் தொழிற்​சங்​கத்​துடன் இருக்கக் கூடாது என நிர்வாகம் ஆட்சேபித்தது. இது சரியல்ல எனச் சொல்ல வேண்டிய தொழிலாளர் துறைப் பதிவாளர் மற்றும் இணை ஆணையர் (சமரசம் 2), சாம்சங் என்கிற பெயர் இருப்​பதைத் தவிர்த்து, வேறு பெயர் வைக்க முடியுமா எனத் தொழிற்​சங்​கத்​திடம் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
  • இதில் வேடிக்கை என்னவென்​றால், ‘தி நேஷனல் சாம்சங் எலெக்ட்​ரானிக்ஸ் யூனியன்’ என்பது கொரியாவில் உள்ள சாம்சங் தொழிற்​சங்​கத்தின் பெயர். கொரியாவைப் போல் தமிழ்​நாட்டில் சம்பளம் இல்லை, வீடு வசதி இல்லை, வேலைநேரம் இல்லை. இந்தப் பின்னணியில் கொரியத் தொழிலாளர் சங்கத்தில் நிறுவனத்தின் பெயரை அனுமதிக்கும் நிர்வாகம், இந்தியாவில் மறுப்பது முரணான செயல். தமிழ்நாடு அரசு சரியாகத் தலையீடு செய்ய​வில்லை என முன்வைக்​கப்​படும் விமர்​சனத்தில் உள்ள நியாயத்தை உணர வேண்டும்.
  • தொழிற்​சங்கம் அமைப்​ப​தற்கான பொதுக்​குழுக் கூட்டம் உள்ளிட்ட முறையான ஏற்பாடுகள் நடைபெற்று, சங்கம் அமைக்​கப்பட்ட செய்தி மட்டும் நிர்வாகத்​துக்கு அஞ்சல் மூலம் அனுப்​பிவைக்​கப்​பட்​டுள்ளது. அன்று முதல் நிறுவனம் உள்ளேயே ஒரு கமிட்டி அமைத்​திருப்​ப​தாக​வும், அதை ஏற்க வேண்டும் என்றும் தொழிலா​ளர்​களிடம் நிர்வாகம் கட்டாயம் செய்வது வாடிக்கை​யாகி​விட்டது. தொடர்ந்து தொழிலா​ளர்​களில் சிலரைப் பழிவாங்கும் வகையில், தனிமைப்​படுத்தி, நிறுவனத்​துக்குள் அமரவைப்​பதும் நடந்துள்ளது.
  • தொடர்ந்து நிர்வாகத்தில் உள்ள சிலர், தொழிலா​ளர்​களிடம் தனிப்பட்ட மிரட்​டலும் விடுத்​துள்ளனர். ஏதாவது அசம்பா​விதம் நடந்து​விடுமோ என்கிற அச்சத்​தில், தொழிற்​சங்கத் தலைவர் இ.முத்​துக்​கு​மாரிடம் முறையீடு செய்யப்​பட்டது. அதைத் தொடர்ந்​து​தான், தவிர்க்க முடியாமல் வேலை நிறுத்தம் என்கிற முடிவு மேற்கொள்​ளப்​பட்​டுள்ளது. இந்த நேரத்தில் வரலாற்றைச் சற்றே நினைவு​கூர்வது நல்லது.

தமிழகம் முன்னோடி:

  • 1918 ஏப்ரல் 27, இந்தியா​விலேயே பதிவு செய்யப்பட்ட முதல் தொழிற்​சங்கமாக ‘மெட்ராஸ் லேபர் யூனியன்’ இருந்தது. ‘பெருந்​தமிழர்’ வ.உ.சி. தலைமையில் நடைபெற்ற தூத்துக்குடி கோரல் பஞ்சாலை மட்டுமல்ல, சென்னை பி அண்டு சி மில் தொழிலா​ளர்கள் 14 ஆயிரம் பேர் கலந்து​கொண்ட வேலைநிறுத்தம் சட்டம் - ஒழுங்குப் பிரச்​சினையாக மாறுமோ என்கிற அச்சம் நிறைந்த நேரத்​தில், தலைமை வகித்த தலைவர்கள் கைது செய்யப்​பட்டு விசாரணைக்கு உள்ளாகினர்.
  • பி.பி.வாடியா தலைவராக​வும், ‘தமிழ்த் தென்றல்’ திரு.​வி.க. பொதுச் செயலா​ளராகவும் தேர்வு செய்யப்​பட்டுச் செயல்​பட்​டனர். அந்த வகையில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்தது. அதன் பின்னரே இந்தியத் தொழிற்​சங்கச் சட்டம் 1926 உருவாக்​கப்​பட்டது. ஏராளமான போராட்​டங்​களும், விரும்பத்தகாத நிகழ்வு​களும் நடந்த​போ​தி​லும்கூட, வரலாற்றுச் செய்திகள் நமக்குச் சுயமரி​யாதையை, நம் நாட்டின் மீதான பற்றை மேம்படுத்து​கின்றன. அடுத்​தடுத்த தலைமுறையினரின் உரிமைகளை ஓரளவு மேம்படுத்து​வ​தாகவும் உள்ளன.

தொழிற்​சங்கம் முதலீட்டுக்கு எதிரியல்ல:

  • தமிழ்​நாட்டில் 1960 காலக்​கட்​டத்​தில், 2008, 2010 காலத்தில் சில அடக்கு​முறை​களும், தேவையற்ற சர்ச்​சைகளும் உருவாகின. அதைத் தொடர்ந்து மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது தொழிற்சங்க அங்கீ​காரச் சட்டம் இயற்றுவது குறித்து கேரளம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்​களுக்கு அதிகாரிகளை அனுப்பி ஆய்வும் மேற்கொள்​ளப்​பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் உள்ளிட்ட காரணங்​களால், அது சாத்தி​யப்​பட​வில்லை.
  • தற்போது மத்திய அரசு முன்மொழிந்​துள்ள தொழில் உறவு சட்டத் தொகுப்பு 2020, தொழிலா​ளர்​களுக்குப் பாதகமான பல அம்சங்களை உள்ளடக்​கியதாக இருந்​தா​லும், தொழிற்சங்க அங்கீ​காரத்தை வலியுறுத்து​கிறது. இதற்கான விதிகள் உருவாக்கம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்​டுள்ள தமிழ்​நாட்டு அதிகாரிகள், தொழிற்​சங்கப் பதிவைத் திட்ட​மிட்டுத் தாமதம் செய்வதை எப்படி எடுத்​துக்​கொள்வது எனத் தெரிய​வில்லை.
  • கொரிய சொல்ல​க​ரா​தியில் ‘சாம்சங்’ என்றால் மூன்று நட்சத்​திரங்கள் எனப் பொருள். இந்நிறுவனம் 14 நாடுகளில் 32 ஆலைகளைக் கொண்டுள்ளது. அனைத்​திலும் சட்ட நடவடிக்கைகளை முழுமை​யாகப் பின்பற்​ற​வில்லை என்கிற குற்றச்​சாட்டுக்கும் ஆளாகி​யுள்ளது. 16 வயதுக்குக் கீழான வயதுடைய​வர்கள் வேலையில் ஈடுபடுத்​தப்​பட்டதாக எழுந்த குற்றச்​சாட்டின் அடிப்​படை​யில், இந்நிறுவனம் மீது நடவடிக்கையும் எடுக்​கப்​பட்​டுள்ளது.
  • இந்தியா​வில், மிகைப்பணி உள்ளிட்​ட​வற்றுக்கு நியாயமான பணப்பலன்கள் இல்லாதது, நியாயமற்ற நிர்வாக நடவடிக்கைகள் போன்றவை தொழிற்​சங்கம் அமைக்​கப்​பட்​டதற்குக் கூடுதல் காரணங்கள். இதில் அரசு முதலீடு​களை​யும், தொழிலா​ளர்​களின் அடிப்படை உரிமை​களையும் சமமாகக் கருத வேண்டும். முதலீட்டுக்காக உரிமைகளை விட்டுக்​கொடுப்பது சரியாக இருக்​காது. ஒட்டுமொத்த மனிதகுலமும் சில தசாப்​தங்கள் கடந்து பார்க்கை​யில், ஒட்டுமொத்தமாக முன்னேறியதாக இருக்க வேண்டும். அதையே தொழிற்​சங்​கங்​களும், அதன் கீழ் போராடும் தொழிலாளர்​களும் வலியுறுத்​துகிறார்​கள்​.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories