நட்சத்திரங்களின் துகள்களா நாம்?
- உலகப் புகழ்பெற்ற வானியல் அறிஞர் கார்ல் சாகன், ‘நாம் எல்லாரும் நட்சத்திரங்களின் துகள்களே’ என்று குறிப்பிடுவார். அவருடைய கூற்றை நிரூபிக்கும் வகையில், அண்மையில் அறிவியல்பூர்வத் தரவுகள் கிடைத்திருக்கின்றன. பூமியைத் தவிர வேறு கோள்களில் உயிரினங்கள் உண்டா என்பதை அறிய, முதலில் அதற்குத் தேவையான அடிப்படை அம்சங்கள் அங்கே இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவது அவசியம். தற்போது கிடைத்திருக்கும் தரவுகள் பூமியில் மட்டும்தான் உயிர்கள் உண்டு என்கிற கருத்தை மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கின்றன.
உயிர்களின் இருப்பிடம்:
- பூமியில் மட்டும்தான் மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள் என உயிர்கள் தழைத்து வாழ்கின்றன என்று கருதிவருகிறோம். சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற ஏழு கோள்களில் உயிர்கள் வாழ்ந்து வருவதற்கான சான்றுகள் தற்போது வரை இல்லை என்று கருதப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இந்தியா, ஜப்பான், சீனா என விண்வெளி ஆய்வில் முன்னணி வகிக்கும் நாடுகள் விண்வெளி குறித்து மேற்கொண்டுவரும் தொடர் ஆய்வுகள் இதைத்தான் உணர்த்துகின்றன.
- பூமியில் மட்டும் உயிர் வாழ்வதற்கான சூழல் நிலவுகிறது. குறிப்பாக, நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன், அருந்தும் நீர் போன்றவை வேறு கோள்களில் இல்லை. பூமியின் துணைக்கோளான நிலவில் நீர் ஆதாரங்கள் இருப்பதாக ‘சந்திரயான்-1’ ஆய்வு மூலம் கண்டறிந்திருக்கிறோம். பூமியிலிருந்து 14 கோடி கி.மீ. தொலைவில் உள்ள செவ்வாய்க் கோளில் ஒரு காலத்தில் நீர் இருந்ததற்கான தடம் மட்டும் காணப்படுகிறது. செவ்வாய்க் கோள், பூமியைவிட அளவில் சிறியது. அங்கு உயிர்கள் வாழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளதா என்பது பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பென்னு சொல்லும் செய்தி:
- நமது சூரிய மண்டலத்தின் ஆரம்பக் கட்டங்களில் உயிர் எவ்வாறு உருவானது என்பதைப் புரிந்துகொள்வதற்கு, விண்கற்கள், சிறுகோள்கள் நமக்கு முக்கியமான தடயங்களை வழங்குகின்றன. இந்நிலையில், ‘ஒசைரஸ்-ரெக்ஸ்’ (OSIRIS-REx) என்னும் விண்கலம் மூலம் ‘பென்னு’ (Bennu) என்கிற சிறுகோளின் (Asteroid) மேற்பரப்பிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து, சிறிய விண்சிமிழ் (Capsule) மூலம் பூமிக்குக் கொண்டுவருவதற்காகத் திட்டமிடப்பட்டது. இதற்காக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2016 செப்டம்பர் 8 அன்று ‘அட்லஸ் 54 11 ஏ.வி.067’ என்கிற ஏவூர்தி மூலம் விண்கலனை அனுப்பியது.
- பூமியிலிருந்து சுமார் 6.1 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பென்னு சிறுகோளிலிருந்து மண் மாதிரிகளை எடுத்துவருவதுதான் இதன் திட்டம். விண்கலத்தில் இருந்த ரோபாட் கரம் மண் மாதிரிகளைச் சேகரித்து விண்சிமிழில் பத்திரப்படுத்தியது. 2023 செப்டம்பர் 24 அன்று பூமிக்கு அருகில் அந்த விண்கலம் பறந்தபோது, அதில் சேகரித்துவைக்கப்பட்டிருந்த 120 கிராம் எடையுள்ள மண் மாதிரியைப் பூமிக்கு எடுத்துச் செல்லும் விண்சிமிழைப் புவிக்கு அனுப்பி வைத்தது.
- இந்தக் கலம் பூமிக்குள் நுழைந்தபோது தனது வான்குடையை (Parachute) விரித்துத் தரையில் பத்திரமாக இறங்கியது. இந்த மாதிரிகளை வைத்து நாசா விஞ்ஞானிகள் மாதக்கணக்கில் ஆய்வு செய்தனர். இந்தத் திட்டமானது சூரியக் குடும்பத்தின் தோற்றம், பரிணாம வளர்ச்சி, அதன் ஆரம்பக் கட்டக் கோள்களின் உருவாக்கம், பூமியில் உயிர்களின் தோற்றத்தை நிர்ணயிக்கும் கரிமச் சேர்மங்களுக்கான ஆதாரம் ஆகியவற்றைக் கண்டறியும் முயற்சியாக இருந்தது. இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. பென்னு மாதிரிகளில் உயிரின் தோற்றத்துக்கான அடிப்படை அடையாளங்கள் இருந்ததுதான் இதில் குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கையின் அடையாளம்:
- பூமியில் வாழும் உயிரினங்களின் கட்டுமானத்துக்கான அடிப்படை புரதங்களே (Protiens). புரதங்களின் உருவாக்கத்துக்கு அமினோ அமிலங்கள் அவசியம் தேவை. பூமியில் பல கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன, அவற்றின் அடிப்படையே புரதங்களும் அவற்றை உருவாக்கிய அமினோ அமிலங்களும்தான். பென்னுவின் மாதிரியில் அமினோ அமிலங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- மேலும், இந்த மாதிரிகளில் கார்பன், நைட்ரஜன், அமோனியா போன்றவை நிறைந்திருப்பதும் கண்டறியப்பட்டது. புரதங்கள் உயிரினங்களில் மட்டுமே காணப்படும் வேதிப்பொருள்கள் என்பதால், அவை ‘வாழ்க்கையின் அடையாளம்’ என்று அழைக்கப்படுகின்றன. பூமியில் இருக்கும் அனைத்து உயிரினங்களில் உள்ள அனைத்துப் புரதங்களிலும் காணப்படுவை 20 அமினோ அமிலங்களே. இவற்றில் 14 அமினோ அமிலங்கள் பென்னு மாதிரியில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
- பூமியில் உயிரினம் எவ்வாறு தோன்றியது என்பது குறித்துப் பல கோட்பாடுகள் உள்ளன. ‘விண்வெளியில் இருந்து வந்த விண்கற்கள் மூலமாகவே உயிரினம் தோன்றியிருக்க வேண்டும்’ என்பது அவற்றில் ஒன்று. இதை ‘பான்ஸ்பெர்மியா’ (Panspermia) கோட்பாடு என்று அழைக்கின்றனர். பென்னு மண் மாதிரிகள் இதைத் தற்போது உறுதிப்படுத்துகின்றன.
பான்ஸ்பெர்மியா என்ன சொல்கிறது?
- கிரேக்கத் தத்துவவியலாளர் அனாக்சகரஸ் முதன்முதலில் பான்ஸ்பெர்மியா கோட்பாட்டை முன்மொழிந்தார். பூமியில் உள்ள உயிர்கள் விண்வெளியில் இருக்கும் நுண்ணுயிரிகளிலிருந்து தோன்றியதாக பான்ஸ்பெர்மியா கோட்பாடு கூறுகிறது. லித்தோபன்ஸ்பெர்மியா, பாலிஸ்டிக் பான்ஸ் பெர்மியா, இயக்கப்பட்ட பான்ஸ்பெர்மியா ஆகியவை பான்ஸ்பெர்மியா கோட்பாட்டின் வகைகள். இதன்படி பூமிக்கு வந்த விண்கற்களிலிருந்து நுண்ணுயிர்கள், அமினோ அமிலங்கள் தோன்றியதாகக் கருதப்படுகிறது.
- ‘புறஊதாக் கதிர்வீச்சு, புரோட்டான் குண்டுவீச்சு, குளிர் போன்ற விண்வெளியின் கடுமையான சூழலில் பாக்டீரியாக்கள் வாழ முடியும்; பாக்டீரியா உயிர்ப்புடன் நெடுந்தூக்க நிலையில் நீண்ட காலம் வாழலாம்; விண்கற்களில் அமினோ அமிலங்கள் உள்ளன, பாக்டீரியா, கார்பன் பாறைகளுக்குள் பாதுகாக்கப்படுகின்றன’ - இவை பான்ஸ்பெர்மியாவின் கோட்பாட்டுக்கான சான்றுகளாக முன்வைக்கப்படுகின்றன.
- உயிர் மூலக்கூறுகளின் மரபணுத் தடங்களைச் சேகரித்து அனுப்புவது நியூக்கிளியோபேஸ்கள் ஆகும். அதாவது அடினைன், சைட்டோஸின், குவானைன், தயமின், யுராசில் என்கிற நைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட ஐந்து பொருள்களாகும். அமினோ அமிலங்களை டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. புரதங்களாக மாற்றும் அம்சங்கள் பென்னு மாதிரியில் கண்டறியப்பட்டுள்ளன.
- கூடுதலாக, இந்த மாதிரியிலிருந்து நைட்ரஜனைக் கொண்ட சுமார் 10,000 வேதிப்பொருள்கள் பிரித்தறியப்பட்டுள்ளன. பென்னு விண்கற்களில் இருந்து கிடைத்துள்ள இந்த உறுதியான தரவுகள், நமது பிரபஞ்சத்தில் வேறு இடங்களில் உயிர் இருப்பதற்கான தேடல்கள் குறித்த ஆய்வை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 02 – 2025)