TNPSC Thervupettagam

பள்ளி மேலாண்மைக் குழுத் தேர்தல்: பெற்றோர்களின் பங்கு!

August 2 , 2024 10 hrs 0 min 5 0
  • பள்ளி மேலாண்மைக் குழுக்​களின் மறுகட்டமைப்புக்காக ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடத்தப்​பட​விருக்​கிறது. அதற்கு முன்னதாக, அது தொடர்​பாகக் கலந்துரையாடப் பெற்றோர்​களுக்கான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்​பட்டிருக்​கிறது. இதன் முக்கியத்​துவம் என்ன?

மாற்றத்துக்கான கருவி:

  • ஜனநாயகத்தைக் கட்டமைக்கும் உன்னதமான வேலையை அரசுப் பள்ளிக்​கூடத்தில் இருந்து தொடங்​கு​கிறது, ‘பள்ளி மேலாண்மைக் குழு’ என்கிற தனித்​துவமான கட்டமைப்பு.
  • ஓர் ஊரில் உள்ள பள்ளிக்​கூடத்தின் ஆசிரியர்கள், அங்கு பயிலும் மாணவர்​களின் பெற்றோர்கள், உள்ளாட்சி உறுப்​பினர்கள், பெண்கள் சுயஉதவிக் குழு, கல்வியாளர்கள், முன்னாள் மாணவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் அரசுப் பள்ளிக்​கூடத்தை மேலாண்மை செய்ய இணைப்பதே பள்ளி மேலாண்மைக் குழுவின் சிறப்​பம்சம்!
  • கல்வி உரிமைச் சட்டம் 2009இன்படி பள்ளி மேலாண்மைக் குழுக்கள் சட்டப்படி வந்திருந்​தா​லும், 2021 வரை முறையற்ற வகையில் அங்கொன்றும் இங்கொன்​றுமாகவே அவை செயல்​பட்டுக்​கொண்​டிருந்தன.
  • 2022இலிருந்து தற்போதைய தமிழ்நாடு அரசும், பள்ளிக் கல்வித் துறையும் பள்ளிக்​கூடத்தில் அதிகாரப் பரவலாக்​கத்தைச் சிறப்பாக நடைமுறைப்​படுத்தி​யும், தொடர்ச்சி கொடுத்​தும், பல்வேறு முன்னேற்றமான மாற்றங்களை நிகழ்த்​திவரு​கின்றன.
  • அதன் அடுத்த மறுகட்டமைப்புக்கான தேர்தல், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி​களில் ஆகஸ்ட் மாதம் முறையே 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்​கிறது.

பெற்றோர் சந்திப்பு:

  • அதற்கு முன்பாக இன்று (ஆகஸ்ட் 2), ஒரே நாளில் அனைத்து அரசுப் பள்ளி​களிலும் பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்து, அனைத்துப் பெற்றோர்​களுக்கான விழிப்​புணர்வுக் கூட்டம் நடத்தப்பட இருக்​கிறது. இந்நிகழ்​வுக்காகத் தமிழ்நாடு முதலமைச்​சரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்​சரும் காணொளி வாயிலாக அழைப்பு விடுத்​திருக்​கிறார்கள்.
  • வெள்ளிக்​கிழமை வேலை நாள்தான் என்றாலும், பெற்றோர்கள் தங்களது வேலைகளை முன்கூட்டியே முறைப்​படுத்​திக்​கொண்டு, முழுமையாகக் கலந்து​கொள்ள வேண்டும். இது நமது பிள்ளைகளின் எதிர்​காலத்துக்குப் போடும் அடித்தளம் என்பதால், விடுமுறை எடுத்துக்​கொண்​டாவது இதில் கலந்து​கொள்ள வேண்டும்.
  • பள்ளிக்​கூடத்தை நோக்கிய பயணமாக, ‘அனைத்து அரசுப் பள்ளி பெற்றோர்​களும் அரசுப் பள்ளிகளை நோக்கி!’ என்று விழாக்​கோலம் பூண வேண்டும். இதைக் கல்விக்கான ஊர்த் திருவிழாவாக ஏற்று, அந்தந்த ஊர்களே சிறப்பாக முன்னெடுக்க வேண்டும். ஊருக்கும் பள்ளிக்​குமான இணைப்பு இதன் மூலம் பலப்பட வேண்டும்.
  • இந்த நிகழ்வில் பங்கெடுப்பதன் மூலமாகச் சமூகத்தின் கல்வி வளர்ச்​சி​யிலும், பள்ளிக்​கூடத்​திலும் பெற்றோருக்கு இருக்கும் உரிமைகள் என்ன, அவற்றை எவ்வாறெல்லாம் செயல்​படுத்​துவது என்பது தெளிவாகப் புரிய​வரும்.

செய்ய வேண்டியவை:

  • அத்துடன் நடக்க இருக்கும் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புக்கான தேர்தலிலும் பெற்றோர்கள் அவசியம் கலந்து​கொள்ள வேண்டும். அக்கறையான, சிறப்பான பெற்றோராக நம்மை நாமே கருதினால், கண்டிப்​பாகப் பள்ளிக்​கூடத்தின் பள்ளி மேலாண்மைக் குழுவில் நாமும் இடம்பெற வேண்டும்.
  • ஒருவேளை நமக்கு அதற்கான வாய்ப்பு இல்லை என்றால், அர்ப்​பணிப்பு உணர்வுமிக்க, விவரமான, மன உறுதி மிக்க, குறிப்பாக, பள்ளிக்​கூடத்துக்கு நேரத்தை ஒதுக்​கக்​கூடிய​வர்​களைக் கண்டறிந்து, அந்த மறு கட்டமைப்பில் அவர்களை முன்மொழிந்தும், வழிமொழிந்தும், பொறுப்​பேற்​க வைக்க வேண்டும்.
  • கூட்டத்துக்கு வந்தவர்களை எல்லாம் பொறுப்பு​களுக்கு அள்ளிப் போட்டுக்​கொள்வது தவிர்க்​கப்பட வேண்டும். இந்த நிகழ்​வுக்கு முன்பாகவே பெற்றோர்​களுக்கான உரையாடல்​களும் திட்ட​மிடல்​களும் மிகவும் முக்கியம். சில ஊர்களில், உள்ளாட்சி உறுப்​பினர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்​களுக்கு அணுக்கமான பெற்றோர்களை மறுகட்டமைப்பு நாளுக்கு முன்னதாகவே பள்ளி மேலாண்மைக் குழு உறுப்​பினர்​களாகத் தேர்ந்​தெடுத்துக்​கொள்வது அல்லது இவர்களைத்தான் தேர்ந்​தெடுக்க வேண்டும் என்று நிர்ப்​பந்​தப்​படுத்​துவது போன்றவை தவிர்க்​கப்பட வேண்டும். வெளிப்​படையான ஜனநாயகத்​தன்மை கடைப்​பிடிக்​கப்பட வேண்டும்.

பெற்றோர்​களுக்கே முக்கியத்​துவம்:

  • பள்ளிக்​கூடம் பெற்றோர்​களுக்கான உரிமை பெற்ற இடம் என்பதை நாம் உறுதிப்​படுத்த வேண்டும். இதில் பெற்றோர்​கள்தான் தீர்மானிக்கும் ஆற்றல் என்பதை நிறுவ வேண்டும். எந்த அதிகார மையமும் இதில் தலையிட்டுத் தீர்மானிப்​பதைத் தவிர்க்க வேண்டும். ஆசிரியர்​களோடும், உள்ளாட்சி உறுப்​பினர்​களோடும், ஊர் மக்களோடும் இணக்கமான உறவைப் பெற்றோர்கள் கடைப்​பிடிக்க வேண்டும்.
  • வகுப்பு வாரியாக 1-5, 6-8, 9-10, 11-12 பெற்றோர் உறுப்​பினர்கள், சதவீதத்தின் அடிப்​படையில் தேர்வுசெய்​யப்​படுவதை உறுதிப்​படுத்த வேண்டும். இதற்கான பள்ளிக்​கல்வித் துறையின் அரசாணை நிலை எண்-144இல் வழிகாட்டி உள்ள வகையில் அனைத்து சமுதாய மக்களையும் உள்ளடக்​கியதாக இருப்​ப​தையும், எவ்வித சாதிய ஏற்றத்​தாழ்​வு​களுக்கும் இடமளிக்கா​ததையும் உறுதிப்​படுத்​திக்​கொள்ள வேண்டும். பொறுப்பு​களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட​வர்கள் போட்டியிட நேர்ந்​தால், கைகளை உயர்த்திப் பெரும்​பான்மை அடிப்​படையில் தேர்வை உறுதிப்​படுத்​தலாம்.

ஜனநாயகத்தை வலுப்​படுத்த...

  • கடந்த காலத்தில் போடப்பட்ட தீர்மானங்கள், நிறைவேற்​றப்​பட்டவை, நிலுவையில் உள்ளவை எனத் தொகுத்து, நிலுவையில் உள்ளவற்​றையும், நிறைவேற்​றப்பட வேண்டிய தேவைகளையும் பட்டியலிட்டுப் புதிதாகப் பொறுப்​பேற்கும் உறுப்​பினர்​களுக்கான கடமைகளாக முன்வைக்க வேண்டும். கடந்த காலப் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்​பினர்கள் அதற்கு உதவ வேண்டும்.
  • பள்ளி மேலாண்மைக் குழுவில் தேர்ந்​தெடுக்​கப்​படாத, அதேவேளை பள்ளிக்​கூடத்தில் தமக்கான பணிகளைச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட பெற்றோர்களை ஐந்து துணைக் குழுக்​களில் ஈடுபடுத்தி, அவர்களுடைய பங்களிப்பைப் பள்ளிக்​கூடங்கள் பெற்றுக்​கொள்ள வேண்டும்.
  • பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலமாக அரசுப் பள்ளி​களில் ஜனநாயகத்தைக் கட்டமைக்கிற வரலாற்று நிகழ்வில் நாம் பங்கேற்​கிறோம் என்று பெருமிதம் கொள்வோம். நம் குழந்தை​களுக்கு அறம் சார்ந்த கல்விக் கட்டமைப்பை நிலைநாட்டுவோம்​.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories