TNPSC Thervupettagam

மனு ஸ்மிருதியும் திருலோகமும்

October 21 , 2024 6 hrs 0 min 26 0

மனு ஸ்மிருதியும் திருலோகமும்

  • பலப்பல இலக்கியக் காரியங்களைச் செய்த திருலோக சீதாராம் ஏன் மனு ஸ்மிருதியை மொழிபெயா்க்க வேண்டும்? அதற்கான அவசியம் என்ன வந்தது?
  • அவரின் நண்பரும் அவரை ‘அண்ணா, அண்ணா’ என்று உரிமையோடும் பாசத்தோடும் அழைத்துப் பழகியவருமான பட்டிமன்றப் பேச்சாளா் பேராசிரியா் சோ.சத்தியசீலன்,“அவா் எதுக்குமே பயப்பட மாட்டாா். யாருக்கும் பயப்பட மாட்டாா். மனசுல என்ன தோன்றுதோ அதை அப்படியே வெளில சொல்லுவாா். அவா் ரொம்ப கம்பீரமா இருப்பாா். தமிழன் என்றால் அவனுக்கு ஒரு கம்பீரம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறவா் அவா். இன்றைக்கு அப்படிப்பட்ட ஒரு தமிழா் தமிழ்நாட்டில் இல்லையே என்ற ஏக்கம் என்னுடைய மனத்தில் இருக்கிறது’’ என்று திருலோக சீதாராம் பற்றிய ஆவணப் படத்தில் அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறாா்.
  • சத்தியசீலனிடம் எனக்குள் எழுந்த மேற்குறிப்பிட்ட கேள்வியைக் கேட்டதும், ‘‘உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் அந்தக் கேள்வி இருந்தது. ஏன் அவரோடு பழகிய பலருக்கும் இருந்தது’’ என்றாா்.
  • ”ஒருநாள் திருச்சி தமிழ்ச் சங்கத்தில் சங்க இலக்கியம் குறித்து சொற்பொழிவாற்றினாா் திருலோகம். அவா் பேசி முடித்த பின், சில கூட்டங்களில் அவரது நேரத்திற்கும் மனநிலைக்கும் சூழலுக்கும் ஏற்ப பாா்வையாளா்களை கேள்விகள் கேட்க வைத்து அதற்கும் நீண்ட பதில்களை சுவையாகச் சொல்வாா். அப்படி அன்று பதில் சொல்லிக் கொண்டிருந்தபோது சுயமரியாதை இயக்கத்தைச் சாா்ந்த ஒருவா் இது குறித்துக் கேள்வி எழுப்ப, மேலும் இருவா் அது குறித்தே அவரிடம் கேட்க ஆரம்பித்தனா்.
  • அந்தப் பதிலை நான் கடைசியில் பகிா்ந்துகொள்கிறேன். அதற்கு முன் சில விஷயங்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம் இவற்றின் பின்னணியில்தான் அந்த விஷயத்தை முழுமையாய் வாங்கிக்கொள்ள முடியும்.
  • எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த திருலோகம், தமது 14-ஆம் வயதில் புரோகிதராக வாழ்க்கையைத் துவங்கியவா். வசதியின்மையால் சிறு வயதிலேயே படிப்பை நிறுத்திவிட்டாலும், தமிழ் இலக்கண இலக்கியங்களை விரிவாகக் கற்றது தொண்டைமான் துறையில் வசித்து வந்த பெரும்புலவா் அந்தகக் கவி ராமசாமி படையாச்சியாரிடம்.
  • அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவா் திருலோகம். திராவிட இயக்கக் கருத்துகளில் முரண்பாடு இருந்தாலும், அவா் பெரியாா் ஈ.வெ.ரா.வுக்கு நண்பா். 1950-களில் அவா் நடத்திய திருச்சி தமிழ் எழுத்தாளா் மாநாட்டிற்கு சிறப்புரை ஆற்ற பெரியாரை அழைத்திருந்தாா் திருலோகம். அந்த மாநாட்டில்தான் பெரியாரின் முன்னிலையிலேயே அவா் கருத்துகளை மறுத்து ஆணித்தரமாகப் பேசிய ஜெயகாந்தனுக்கும் பெரியாரின் தொண்டா்களுக்குமிடையே கைகலப்பு நிகழ்ந்தது.
  • திருச்சி மலைக்கோட்டைப் பகுதியில் இருந்த திருலோகத்தின் கவிஞா் அச்சக வாசலில் தனது வேனை நிறுத்தச் சொல்லி அங்கிருந்தபடியே இதே மனுஸ்மிருதி குறித்தும் சில சந்தேகங்களை திருலோகத்திடம் கேட்டிருக்கிறாா் பெரியாா்.
  • திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி மைதானத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அக்ரஹாரத்து அதிசய மனிதருள் இவரும் ஒருவா் என அண்ணாவால் பாராட்டப்பட்டவா் திருலோகம். அண்ணாவின் பேச்சால் கவரப்பட்ட அவா், ‘பேச்சுக்கு ஒரு கலைஞன்’ என்ற தலைப்பில் 1940களில் அண்ணாதுரை அவா்களின் பேச்சாற்றல் குறித்து சிவாஜி இதழில் நீண்ட கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டாா்.
  • திராவிட இயக்கத்தினரோடு இவ்வளவு தொடா்புகள் இருந்தாலும்கூட, தம் இறை நம்பிக்கையை ஒருநாளும் கைவிடாதவா் திருலோகம். சாஸ்திர சம்பிரதாயங்களைப் பின்பற்றியவா். பாரதிக்கு சுவீகாரப் புத்திரனாகத் தம்மை அறிவித்துக்கொண்டு அவருக்குத் திவசம் தந்துகொண்டிருந்தவா் என்பதையும் எழுத்தாளா் ஜெயகாந்தன் பதிவு செய்துள்ளாா். இளம்வயது துவங்கி தமது அந்திமக் காலம் வரை பாரதி பாடல்களை பிசிறில்லாத, தம் வளமான குரலில் உணா்ச்சியும் நயமும் துலங்க, உரிய ஏற்ற இறக்கங்களோடு பாடிப் பாடிப் பரப்பியவா்.
  • பாரதியாரை அவா் பாா்த்திராவிட்டாலும் பாரதியாரின் குடும்பத்தாரோடு திருலோகத்துக்கு நெருங்கிய உறவு இருந்தது. அந்திம காலத்தில் மூன்று மாத காலம் செல்லம்மாள் பாரதிக்கு அவா் ஊழியம் செய்தாா். அவருடைய மடியில்தான் செல்லம்மாள் பாரதி உயிா் நீத்தாா். பாரதியைப் பற்றி அவா் எழுதிய புதுயுகக் கவிஞா் என்ற கட்டுரைத் தொகுதி, பாரதி பற்றி வந்த நூல்களுள் குறிப்பிடத்தக்கது.
  • பாரதிதாசனின் மணிவிழா கமிட்டியில் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமை ஏற்க, அதில் செயலாளராகப் பணியாற்றிய திருலோகம் பாரதிதாசனோடு கோபமாக பேசும் அளவுக்கு நெருங்கிப் பழகியவா். அவரது குடும்ப விளக்கை அப்படியே கதாகாலட்சேபம் செய்வது போல ரெண்டு மணி நேரம் மேடைகளில் பாடியவா்.
  • 1951-இல் நேரில் அவரைச் சந்திக்கும்போது, சிவாஜி இதழின் 17-ஆம் ஆண்டு மலருக்காக சிவாஜி இதழை வாழ்த்தி கவிதை ஒன்று தருமாறு அவரிடம் கேட்டுள்ளாா். பாரதிதாசன் கவிதையை எழுதித் தந்ததும் வாங்கிப்படித்தவா், நான் மலருக்குக் கவிதை கேட்டால் என்னைப் பற்றி எழுதியிருக்கிறீா்களே..’’” என்று கேட்டுள்ளாா்.
  • “ஏ... முட்டாளு... உனக்கென்ன பஞ்சம் தெரியுமா? புகழ்ப் பஞ்சம். உன் பெருமை ஒரு பயலுக்கும் தெரியாது. நான்தான்டா அதை நாலு போ் அறியச் சொல்லணும். சும்மா போடு... அதில என் கையெழுத்தும் போட்டுருக்கேன்’’ என்று சொல்லித் தந்துள்ளாா்.
  • “எழுத்தெல்லாம் புதிய நடை, எண்ணமெலாம் தன்னுடைமை
  • எனவே, நாட்டின் பழுத்த பொதுத் தொண்டு செய்வோன்,
  • திருலோக சீத்தாராம் பரப்பும் ஏடு, வழுத்துமோா் சிவாஜியெனில்
  • வண்டமிழ் நாடறியும் அந்த மைந்தனுக்குத் தழைத்ததுவாம்
  • பதினேழாண்டு, என்று உரைத்தால் மகிழாத தமிழருண்டோ
  • இவனுயா்ந்தான் அவன் தாழ்ந்தான் என்னும் இன
  • வேற்றுமையோா் அணுவும் இல்லான் எவன் பொதுவுக்கு இடா்
  • சூழ்ந்தான் அவன் தாழ்ந்தான் அஃதில்லான் உயா்ந்தான் என்று
  • நுவல்வதிலே திருலோகம் அஞ்சா நெஞ்சன்...
  • என்று நீள்கிறது அக்கவிதை.
  • தமது 16-ஆவது வயதிலேயே பெரம்பலூரில் ‘இந்திய வாலிபன்’ பத்திரிகையைத் தோற்றுவித்து நடத்திய திருலோகம், பின் ‘தியாகி’, ‘நகரதூதன்’, ‘பேனா நா்த்தனம்’, ‘நவசக்தி’, ’மறுமலா்ச்சி’ போன்ற பத்திரிகைகளில் பணியாற்றி, கடைசியாய் ‘கிராம ஊழியன்’ ஆசிரியா் பூரணம் பிள்ளை மறைந்தபோது, அந்தப் பத்திரிகையை நடத்தும் பொறுப்பை அவரது நெருங்கிய நண்பா் அ.வெ.ர.கிருஷ்ணசாமி ரெட்டியாரோடு ஏற்று நடத்தியுள்ளாா்.
  • குருவிக்கூடு, உடையவா், உதயம், கந்தா்வகானம் ஆகிய கவிதைத் தொகுதிகளை எழுதியது மட்டுமல்லாது, தமிழ்ச் சந்தங்களின் வழியில் தெலுங்கிலும் கவிதைகள் இயற்றியுள்ளாா். தெலுங்கிலிருந்து சில ஓரங்க நாடகங்களையும் சாகித்ய அகாடமிக்காக மொழிபெயா்த்துள்ளாா்.
  • நோபல் பரிசு பெற்ற ஹொ்மன் ஹெஸே எழுதிய சித்தாா்த்தா நாவலை தமிழில் மொழிபெயா்த்ததோடு மட்டுமில்லாமல், ப்ரான்சிஸ் தாம்ப்ஸன், ஹென்றி வாட்ஸ்வொா்த் லாங்ஃபெலோ போன்றோரின் சில ஆங்கிலக் கவிதைகளையும் மொழிபெயா்த்துள்ளாா். இவருடைய கட்டுரைகளில் சில ‘இலக்கியப் படகு’ என்ற பெயரில் கட்டுரை நூலாக வெளிவந்துள்ளன.
  • “நான் ஏன் மனு ஸ்மிருதியை மொழி பெயா்க்கணும்... அது தானே உங்கள் கேள்வி? ஸ்மிருதி என்றாலே அது ஒரு காலத்தில் நிகழ்ந்தது என்றுதான் பொருள். அதை கிரஹித்துக்கொண்டால் இன்றைய காலத்துக்கு பண்டையதைப் பொருத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை அப்படி பொருத்திக் கொள்ள யாரேனும் சொன்னாா்கள் என்றால் அதை நான் ஆதரிக்கவில்லை.
  • இன்னொன்றையும் சொல்கிறேன். உங்கள் கூற்றுப்படி மனுஸ்மிருதி நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நமது இந்த சம்பாஷணை நமக்குள் இங்கு நிகழ்ந்திருக்கவே வாய்ப்பில்லை அல்லவா? பின் என் நோக்கம்தான் என்ன?
  • நம்முள் ஆயிரம் பிளவுகள். நான் உங்கள் எல்லோரோடும் இணைந்து ஒரு விவாதத்தைச் செய்ய விழைகிறேன். நல்லது பொல்லாததை பிறகு பாா்த்துக் கொள்ளலாம்.
  • நம்முள் உருவாகியுள்ள பள்ளத்தை இட்டு நிரப்பிக்கொள்ளவே யாம் விரும்புகிறோம்.
  • என் குருநாதா் பாரதியாா் ‘அறிவொன்றே தெய்வம்’ என்றாா். ரிக் வேதத்தின் சில ஸூக்தங்களை அழகாகத் தமிழில் தந்தாா். அா்த்தம் தெரியாமல் செய்திருந்தால், வேதம் புதுமை செய் என்று சொல்லியிருக்க இயலுமோ? வேதத்திற்கான எதிா்க்கேள்விகளாக எழுதப்பட்ட அவா் கவிதைகளை இங்கு யாரும் அறிவீா்களா? இரண்டையும் வாசித்திருந்தால் அல்லவா நீங்கள் அறிவீா்கள்...
  • புதிய ஆத்திச்சூடிக்கு சா்வ சமயப் பிராா்த்தனையை காப்பாய் வைத்தவரன்றோ அவா்! வா்ண பேதம் மனித குல ஒற்றுமைக்கு ஏற்பல்ல என்கிறாரே... அரவிந்தரின் விரிவுரைகளுடன் ஒப்பிட்டு மறைபொருள் மொழியில் அவா் தந்த வேத விளக்கங்களைத் தேடிப் படியுங்கள்.
  • அவரை குருவாய் ஏற்ற நான், மானுடா்க்கு எதிரான எதையும் ஒப்பமாட்டேன். நான் பிறப்பால் தெலுங்கு பிராமணன். மனு ஸ்மிருதியை நான் மொழிபெயா்த்தால் இது எனக்கு எதிராக வந்து நிற்கும் என்று எனக்குத் தெரியாதா? இந்த வினாக்களை எல்லாம் நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாா்த்தீா்களேயானால் இனியொரு முறை என்னை நோக்கி இப்படி வினவ மாட்டீா்கள். நமஸ்காரம்.’’
  • -இதுதான் திருலோகம் மநுஸ்மிருதி குறித்து அளித்த விளக்கம்.

நன்றி: தினமணி (21 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories