ராமர் ஏன் அப்படிச் செய்தார்?
- ராவணன், சீதையை சிறையெடுத்துப்போய் தனது நகரத்தில் வைத்திருந்தான். அந்தச் சீதையுடன் ராமன் வாழ்க்கை நடத்துவது இழிவானதாகும் என்று மக்கள் பேசுவதாக ஒற்றர்கள் ராமனிடம் கூறுகின்றனர். ராமன் மிகுந்த மனவேதனை அடைகிறார். சீதை, தீயினுள் மூழ்கித் தன் கற்பை நிரூபித்தாள். என் மனத்துக்கும் தூய்மை உடையவளாகவே விளங்குகிறாள். ஆனாலும் உலகத்தார் சீதையைப் பழித்துரைக்கின்றனர். உலகத்தாரோடு இணங்கி நடப்பதே அரசனின் கடமை.எனவே, சீதையைக் காட்டிலுள்ள முனிவர்களின் இருப்பிடத்தில் விட்டுவர இலட்சுமணனைப் பணிக்கிறார் ராமன். சீதையைக் காட்டில்விட ராமன் உள்ளிட்ட யாருக்கும் உடன்பாடில்லை. ஆனாலும் ஊராரின் பழிக்கு அஞ்சியே ராமன் இதனைச் செய்யத் துணிகிறார். இந்த இடத்தில் ராமன் ஓர் அரசனாகவே இந்த முடிவை எடுக்கிறார். அசோகமித்திரன் இந்த நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு ‘உத்தர ராமாயணம்’ என்றொரு சிறுகதையை எழுதியிருக்கிறார்.
- இக்கதையில் தொன்மத்தை அவர் நேரடியாகப் பயன்படுத்தவில்லை. ஆனால் இக்கதையின் மையம் உத்தர காண்டத்தின் நவீன வடிவமாக இருக்கிறது. அசோகமித்திரன் வாழ்க்கையில் நிழலைப்போலப் பின்தொடரும் கசப்புகளை மெல்லிய பகடியாக மாற்றிப் புனைவுகளாக எழுதியவர். இவரது புனைவுகள் நவீனத்துவத்தின் அடையாளங்கள். அவரது சிறுவயது அனுபவமாகவே இக்கதை எழுதப்பட்டுள்ளது.
- ராம்லால், சோட்டு இருவரும் சகோதரர்கள். அம்மாவுடன் வசிக்கிறார்கள். ராம்லாலின் மனைவி ஜானகிபாய். சகோதரர்கள் இருவரும் பால் வியாபாரம் செய்கின்றனர்.
- இவர்களுக்கு வெற்றிலைப் பாக்குக் கடையும் உண்டு. கதைசொல்லியான சிறுவன் குழந்தையிலிருந்தே ஜானகிபாயின் அரவணைப்பில் வளர்ந்தவன். அவள் அழகாக இருப்பாள். எளிமையான புடவைதான் உடுத்தியிருப்பாள். ஆனால் சுத்தம் மணக்க இருக்கும். சகோதரர்கள் இருவருமே சுத்தத்திற்கு எதிரானவர்கள். ஜானகிபாய் அவ்வளவு அன்பானவள். மணி கோத்தல், எம்ப்ராய்டரி, தையல், சமையல் என எல்லாத் திறமைகளும் கொண்டவள். ஜானகிபாய் தன்னைச் சுற்றியுள்ள எல்லோருக்கும் உதவுகிறாள். அது அவள் குணம். அவளுக்குக் குழந்தை இல்லை. இதனை அவள் மாமியார் ஒரு குறையாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறாள். வீட்டிலும் அவ்வப்போது பிரச்சினை நடக்கிறது. எந்தச் சூழ்நிலையிலும் தூய்மையைப் பேணுவதைத் தன் சுபாவமாகவே மாற்றிக்கொள்கிறாள் ஜானகிபாய். சகோதரர்களுக்கு அது குறித்த எவ்விதப் புரிதலும் இல்லை.
- ஜானகிபாய் ஒருநாள் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறாள். சிறுவனின் அப்பா அவளைத் தேடச் சொல்கிறார். ‘நான் ராஜ்புத், தெரியுமா உங்களுக்கு? ஓடிப் போனவளை நான் மறுபடியும் வீட்டில் காலடி வைக்க விடமாட்டேன்! அவளை அப்படியே கண்டந்துண்டமாக வெட்டிப் போட்டுவிடுவேன்’ என்கிறான் ராம்லால். சில நாட்களுக்குப் பிறகு சிறுவன் தன் வீட்டு எருமைமாட்டைத் தேடிக்கொண்டு பக்கத்துக் கிராமத்திற்குச் செல்கிறான். ஜானகிபாயை அங்குப் பார்க்கிறான். அவள் வசிக்கும் வீடு மிகச்சிறியது. ஒரேயொரு அறை மட்டும். அதே ஒழுங்கு; அதே தூய்மை. ‘என்னைக் கோபித்துக்கொள்ள ஒன்றுமே கிடையாது, பாபு’ என்கிறாள் ஜானகிபாய். வரும் வழியில் சைக்கிளில் ராம்லால் அந்த ஊர் பக்கம் போவதைப் பார்க்கிறான். ‘என்ன விபரீதம் நிகழப் போகிறதோ?’ என்ற பதைபதைப்பில் ஓரமாக ஒதுங்கி நிற்கிறான். சிறிது நேரத்தில் ராம்லால் திரும்பி வருகிறான். அவன் கையில் ஜானகிபாய் வீட்டில் கவிழ்த்து வைத்திருந்த காலி பாத்திரங்கள் இருக்கின்றன.
- ‘உத்தர ராமாயணம்’ ராமன் குறித்த தொன்மக்கதையின்மீது புதிய வாசிப்பை நிகழ்த்தியிருக்கிறது. அசோகமித்திரன் எவ்வளவு சாதாரணமாக இதனைச் செய்திருக்கிறார். படைப்பாளியின் சார்பு அரசியலும் இக்கதைக்குள் தொழிற்பட்டிருக்கின்றன. இக்கதையின் ராம்லால் ராமன்; ஜானகிபாய் சீதை. சோட்டு இயல்பாகவே இலட்சுமணனுக்குரிய இடத்தைப் பெறுகிறான். எனவே, அசோகமித்திரன் திட்டமிட்டே இக்கதையை எழுதியிருக்கிறார். ராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்பியதற்குப் பின்னணியாகச் சமூக அழுத்தம் செயல்பட்டிருக்கிறது. இதனைத்தான் ராம்லால் கதாபாத்திரத்தின் மூலமாக அசோகமித்திரன் வெளிப்படுத்தியிருக்கிறார். சீதை எதிர்கொண்ட பிரச்சினையைத்தான் ஜானகிபாய் நிகழ்காலத்தில் எதிர்கொள்கிறாள். அங்கே கற்பு காரணமாகப் பேசப்பட்டது; இங்கே குழந்தையின்மை. இரண்டு பிரச்சினைகளுமே பெண்ணுடல் சார்ந்தது என்பதைக் கவனிக்க வேண்டும்.
- சீதையைக் காட்டுக்கு அனுப்புவதில் ராமனுக்கு விருப்பம் இல்லை; நாட்டு மக்களின் பழிச்சொல்லுக்கு அஞ்சியே அவளைப் பிரிந்தார் என உத்தர காண்டம் சொல்கிறது. இச்சிறுகதையிலும் அதுதான் நிகழ்கிறது. பொதுவெளியில் ராஜ்புத் சமூகத்தின் பெருமையை ராம்லால் பேசிக் கொண்டிருந்தாலும் ஜானகிபாயைப் பிரிவதில் அவனுக்கும் உடன்பாடில்லை என்பதை அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். இச்சிறுகதை ஜானகிபாய்க்கு ஏன் குழந்தை இல்லை என்பதை விவாதிக்கவில்லை. அது இந்தக் கதையின் நோக்கமும் இல்லை. எந்தப் பிரச்சினையின் பொருட்டும் ஒரு பெண் மட்டும் ஏன் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறாள் என்ற புள்ளியைத்தான் கதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்கிறது.
- அசோகமித்திரன், ஜானகிபாயின் குணத்தைச் சீதையின் புனிதத் தன்மையுடன் ஒப்பிட்டு தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறார். ஜானகிபாய் இருக்குமிடம் அவ்வளவு தூய்மையாக இருக்கிறது. எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும் அதில் ஒரு நிறைவைக் காண்கிறாள். பக்கத்துவீட்டில் வசித்த சிறுவனின் குடும்பத்தைத் தன் குடும்பம்போலக் கவனித்துக் கொள்கிறாள். அந்த வீட்டில் கடைசியில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கும் இவள் அம்மாவைப்போன்றே அன்பு காட்டுகிறாள். அக்குழந்தைகளைப் பார்க்குந்தோறும் வாரி அணைத்துக் கொள்கிறாள். இவளைத்தான் இச்சமூகம் அழுத்தம் கொடுத்து வெளியேற்றுகிறது. எளியவர்களின் அன்பை அசோகமித்திரன் தம் புனைவுகளில் தொடர்ந்து கவனப்படுத்திக்கொண்டே வந்திருக்கிறார். இந்தக் கதையிலும் அது தொடர்ந்திருக்கிறது.
- ஜானகிபாய் வீட்டைவிட்டு அவளாக வெளியேறினாளா? இல்லை ராம்லாலின் ஏற்பாடா என்பதெல்லாம் புனைவின் மறைபொருள். ஜானகிபாய்க்கு குழந்தை குறித்த ஏக்கம் இல்லாமல் இல்லை. அந்த ஏக்கத்தைத் தணித்துக்கொள்ளவே சிறுவனின் வீட்டிற்கு அடிக்கடி வருகிறாள். அதுவும் ஒரு கட்டத்தில் குறையத் தொடங்குகிறது. இதற்கிடையில் சோட்டுவுக்குத் திருமணம் நடந்து, அடுத்த வருடமே குழந்தையும் பிறந்து விடுகிறது. ஜானகிபாய்க்கு அழுத்தம் அதிகரிக்கிறது. எனவே, தன்னைக் காணாமல் ஆக்கிக்கொள்கிறாள்.
- இச்சிறுகதையில் ஜானகிபாயின் கதையுடன் ஓர் எருமைமாட்டின் கதையும் தொடர்ந்து வருகிறது. காணாமல்போன எருமையைத் தேடி அச்சிறுவன் அலைகிறான். ஆனால், அன்பு காட்டிய ஜானகிபாயை அக்குடும்பம் கைவிட்டுவிடுகிறது. ஜானகிபாயின் துயரத்தின்மீது வாசகர்களின் கவனம் குவிவதைக் கட்டுப்படுத்தவும் எருமைமாட்டின் கதை பிரதிக்குப் பயன்பட்டிருக்கிறது. சமூக அழுத்தத்தின் காரணமாகவே ராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்பினார் என்பதையே இக்கதை பிரதானமாகப் பகிர்ந்துகொள்கிறது. ராமனைக் குற்றவுணர்விலிருந்து விடுவித்திருக்கிறது. தன் படைப்பினூடாக ராமனின் செயலுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் அசோகமித்திரன்.
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 02 – 2025)