வாழ்க்கை விளையாட்டுகள்
- எழுத்தாளர் புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’, குற்றவுணர்வால், கழிவிரக்கத்தால் மனித மனங்கள் படும்பாட்டை உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கும் நாவல். ‘ஒரு மரணத்தால் இங்கே ஒன்றும் மாறிவிடப்போவதில்லை’ என்கிற தத்துவ விசாரம் அடிக்கடிச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், ஒரு மரணத்தால், ஒரு இல்லாமையால் பலதும் நிகழத்தான் செய்கின்றன. ‘சிற்றன்னை’யில் ஒரு மரணம், ஒரு குடும்பத்தையே புரட்டிப்போடுகிறது; இரு பிஞ்சுக் குழந்தைகளை மன ஊனமாக்குகிறது. இன்னொரு மரணத்துக்கும் காரணமாகிறது. இவையெல்லாம் தொந்தரவு செய்யும் ரீதியில் இந்த நாவலில் சொல்லப்பட்டுள்ளது.
- சிங்காரவடிவேலு ஒரு ஆசிரியர், இயல்பான மனச் சஞ்சலங்கள், கோபதாபங்கள் உள்ளவர். அவரது ஒரு பெரிய வீடு கதையில் சொல்லப்படுகிறது. அந்த வீட்டுக்குள் ஒரு குட்டிப் பெண் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறாள். அவரது மகள்; பெயர் குஞ்சு. மரகதம் என்கிற இளம் பெண் இருக்கிறாள். அவள் யார், அவளுக்கும் சிங்காரவடிவேலுவுக்கும் என்ன உறவு, இந்தக் கேள்விகளுக்கெல்லாம் கதையோட்டத்தில்தான் பதில் கிடைக்கிறது. இது புதுமைப்பித்தன் கையாண்டிருக்கும் உத்தி. குஞ்சு, புத்திசாலித்தனமான குழந்தை. அதனால் துறுதுறுவென்று இருக்கிறது. களைப்புடன் இருக்கும் அப்பாவுக்கு சித்தியுடன் சேர்ந்து பலகாரத்தைத் தானே எடுத்துவந்து தருகிறது. ‘ஓடி வருகையிலே உள்ளம் குளிருதடி/ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவதடி’ என்கிற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப உச்சி நுகரத் தூண்டும் மழலை அது. சுந்தரவடிவேலுவும் மகளை கூடியமுட்டும் எடுத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார்.
- குஞ்சு கதாபாத்திர உருவாக்கம், இந்த நாவலில் எடுத்துச் சொல்ல வேண்டியது. மொத்த நாவலுக்குமான பாரத்தை அந்தப் பிஞ்சுக் கைகளில்தான் புதுமைப்பித்தன் ஒப்படைத்திருக்கிறார். விளையாடத் துணையற்ற அந்தக் குழந்தை கற்பனையாக ஒரு விளையாட்டுத் துணையை உருவாக்கிக் கொள்கிறது. அந்தக் கற்பனைக்கும் சேர்த்து அதுவே நொண்டி விளையாடுகிறது. நொண்டி அடிக்கக்கூட கெதி இல்லாத வயசு. அதனால் நொண்டிக் கட்டங்களை நடந்து தாண்டி, கடைசியில் ஒரு காலைத் தூக்கிக் கொள்கிறது. யாருக்கு வேண்டும் சட்டம்?
- ஒரு ரயில் எஞ்சின் பொம்மையும் அந்தக் குழந்தை வைத்திருக்கிறது. ஒட்டிப் பிறந்த இரட்டையர்போல் அதனுடன்தான் இருப்பும் நடப்பும். வாயால் ‘கூச்... குசு... குச்...’ எனச் சப்தம் எழுப்பி ரயில் ஓட்டியும் விளையாடும் அந்தக் குழந்தை. ரயில் எஞ்சினைக் குளிப்பாட்டி அதற்கு ஒரு உயர்திணை அந்தஸ்தையும் இந்தக் குழந்தை கொடுக்கிறது. அவள், காப்பி போடும் ஒரு காட்சி இந்த நாவலில் இருக்கிறது. வெள்ளந்தித்தனமும் புத்திசாலித்தனமும் கூடிய ஒரு செயல் அது. வாசகர்களை ரசிக்கவைக்கும் இந்தக் காட்சி, நாவலுக்கு உள்ளே மரகதத்துக்குக் கோபத்தை வரவழைத்துவிடுகிறது. அந்தக் குழந்தைக்குப் பூனை பயம். அதை வைத்து மரகதம் குழந்தையை பயமுறுத்திவிடுகிறாள். அவள் குழந்தையின் சிற்றன்னை. அன்னை இடத்தில் இருக்கிறாள்.
- அன்னையோ மாடி அறையில் ஒரு புகைப்படத்தில் இருக்கிறாள். பயந்த குழந்தை புகைப்பட அன்னையிடம் முறையிடுகிறது. இந்தச் சம்பவம், நாவலை இரண்டு துண்டாக்கிக் காட்டுகிறது. இந்தக் குழந்தை கதாபாத்திரச் சித்தரிப்புதான் இயக்குநர் மகேந்திரனைப் பாதித்திருக்க வேண்டும். இந்த நாவலின் பாதிப்பில் எடுக்கப்பட்ட ‘உதிரிப்பூக்கள்’ படத்தில் அதைக் காண முடியும். அந்தப் படத்தில் புகைப்பட அம்மாவுக்கு மகேந்திரன் உருவம் கொடுத்திருப்பார். அஸ்வினியும் இரு குழந்தைகளும் புதிரான எதிர்காலத்தைப் பார்த்தபடி இருக்கும் வேதனை தரும் படக் காட்சி, நாவலை அடுத்த கட்டத்துக்கு மகேந்திரன் நகர்த்தியதன் வெளிப்பாடு.
- சுந்தரவடிவேலுவின் பையன் ராஜா, நாவலின் தொடக்கத்திலேயே சொல்லப்படுகிறான். அவன் இறந்துவிட்டான். ஆனால், அவன் சுந்தரவடிவேலுவின், மரகதத்தின், குஞ்சுவின் நினைவுகள் வழி மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறான். நாவலும் அவனைத் தேடிப் பின்னே செல்கிறது. அது நாவலின் இரண்டாம் பாதி. ராஜா தன் அப்பாவின் திருமணத்தில் பையன்களுடன் நிற்கிறான். அவனுடைய தங்கையான குஞ்சு மாப்பிள்ளையான தன் அப்பாவின் மடியில் இருக்கிறாள். இந்தச் சின்ன பையன் ராஜா, குஞ்சுவின் விளையாட்டுத் தோழன். அவளது ரயில் விளையாட்டில் இவன்தான் சமிக்ஞை மரம்.
- தாயில்லாப் பிள்ளைகளுக்கு அன்னையாக மரகதம் வீட்டுக்குள் வருகிறாள். அவள் தனது சட்ட திட்டங்களுடன் இருக்கிறாள். அவள் கொடுமைக்காரி அல்ல. அவளது வீட்டின் வளர்ப்பில் கொஞ்சம் அப்படியாக இருக்கிறாள். அதற்கு உதாரணமாகச் சமையற்கட்டுக்குள் வேலைக்காரர்களை அனுமதிக்காமல் அவளே வேலைகளை எடுத்துப் போட்டுச் செய்கிறாள். அவளது கட்டுப்பாட்டால் ராஜா மழையோடு போய் மாடு துரத்தி, விழுந்து காய்ச்சல் வந்து அன்னந்தண்ணி இறங்காமல் செத்தும்போய்விடுகிறான். அம்மா மாதிரியா அண்ணன் செத்துப் போய்விட்டானா? எனக் கேட்கிறது குழந்தை. இந்த மரணம் பெருங்குற்றவுணர்வையும் தனக்கு மட்டும் ஏன் இப்படி நேர்கிறது என விதியை நொந்துகொள்ளும் கழிவிரக்கத்தையும் சித்திக்கும் அப்பாவுக்கும் ஏற்படுத்துகிறது.
- சுந்தரவடிவேலுவின் பணி பற்றிய விவரிப்புடன் இந்த நாவலை புதுமைப்பித்தன் தொடங்குகிறார். ஆனால், அது நாவலுக்கு எந்தவிதத்திலும் பலம் சேர்க்கவில்லை. ராஜாவின் மரணத்துக்குப் பிறகு குஞ்சுவைக் கையாள்வதில் ஒரு பயம் சுந்தரவடிவேலுவுக்கும் மரகதத்துக்கும் வந்துவிடுகிறது. அதனால் நாவலுக்குள் ஒரு தாத்தா வருகிறார்.
- அந்தக் குழந்தை அவருடன் செல்கிறது. ஆனால், நான்-லீனியராக முன்னும் பின்னுமாக நகர்ந்து இறந்த காலக் காட்சியில் முடிகிறது. இந்த இறுதிக் காட்சியின் மனக் குழப்பங்களைக் கடந்துதான் கதாபாத்திரங்கள் நிகழ்காலத்தில் படைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு குழப்பம். ‘உலகமே பைத்தியாரக் கும்பல், காரண காரியத் தொடர்பற்ற குழப்பம்’ என இறுதி வரியில் புதுமைப்பித்தனே கூறுகிறார்.
- மனித உணர்வுகளைச் சொல்லும் விதத்தில் இந்த நாவல் வெற்றிபெறுகிறது. இந்த நாவலில் ஒரு நாடோடி வருகிறார். குடும்ப பந்தங்களை அறுத்த ஒரு சந்நியாசி அவர். அவரது குறுக்கீடு நாவலின் உள்ளடுக்கு எனப் புரிந்துகொள்ளலாம். குழந்தையுடன் விளையாடி அவரும் குழந்தைமையால் ஈர்க்கப்பட்டுவிடுகிறார். சட்டெனத் தன்னிலை உணர்ந்து விலகிச் சென்றுவிடுகிறார். ஆனால், சுந்தரவடிவேலும் நாமும் விலக முடியாமல் அதில் உழன்றுவருகிறோம். இந்த நம் வேதனைக் கதையைத்தான் புதுமைப்பித்தன் இதில் சொல்லியிருக்கிறார்.
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 02 – 2025)