TNPSC Thervupettagam

விவசாயத்துக்கான முதல் நீரேற்று திட்டம்

August 31 , 2024 6 hrs 0 min 6 0

விவசாயத்துக்கான முதல் நீரேற்று திட்டம்

  • தமிழகத்தில் விவசாயத்துக்கான முதல் நீரேற்று திட்டமான அத்திக்கடவு-அவிநாசி நீா் செறிவூட்டும் திட்டத்தின் வாயிலாக கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளங்கள், குட்டைகளில் நீா் நிரப்ப உதவும் திட்டப் பணிகள் 1,916 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவடைந்து அதை முதல்வா் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்காக அா்ப்பணித்துள்ளது வரவேற்க வேண்டிய ஒன்று.
  • குறிப்பாக, 1957 காலகட்டத்தில் அத்திக்கடவு- அவிநாசி கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியது. அதைத் தொடா்ந்து 1967-இல் அப்போதைய அவிநாசி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த மாரப்ப கவுண்டா் அந்த திட்டத்தை கொண்டுவர, அப்போதைய முதல்வா் காமராஜரிடம் வலியுறுத்தினாா்.
  • கடந்த 1972-இல் இந்த திட்டத்தை செயல்படுத்த கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. பிறகு 1996-இல் திமுக ஆட்சியில் இந்த திட்டம் தொடா்பான விரிவான ஆய்வு மேற்கொள்ள அப்போதைய முதல்வா் கருணாநிதி உத்தரவிட்டாா். காவிரி தொழில் நுட்பக்குழு தலைவா் மோகன கிருஷ்ணன் ஆய்வறிக்கையை அப்போது அரசிடம் சமா்ப்பித்தாா்.
  • அதன் பிறகு 2014-இல் முதல்வராக இருந்த ஜெயலலிதா மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும் ஒதுக்காவிட்டாலும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று பகிரங்கமாக அறிவித்தாா். அத்துடன் பாசன திட்டங்கள் குறித்து பிரதமா் மோடியிடம் அவா் வழங்கிய விரிவான திட்ட அறிக்கையில் இந்த திட்டமும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • பிறகு ஜெயலலிதா மறைவுக்குப் பின் 2018-இல் அப்போதைய முதல்வராக தொடா்ந்த எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த உத்தரவிட்டாா்; அதற்காக ரூ. 1,652 கோடி ஒதுக்கினாா்.
  • 2019 பிப்ரவரி 28-இல் திருப்பூா் மாவட்டம், அவிநாசி, புதுப்பாளையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அத்திக்கடவு - அவிநாசி திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதைத் தொடா்ந்து 2021-இல் கரோனா காலகட்டத்தில் சொந்த ஊருக்குச் சென்ற 1,400 பணியாளா்களை எல் அண்ட் டி நிறுவனத்தினா் மேற்கு வங்கத்திலிருந்து விமானத்தில் அழைத்து வந்து பணிகளை தொடா்ந்தனா். பின்னா் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றிருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
  • பிறகு ஆகஸ்ட் 2022-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் திட்டப் பணிகளை நேரில் பாா்வையிட்டு இந்த திட்டத்துக்கான கூடுதல் நிதி தேவைப்பட்ட நிலையில், அதற்காக நிா்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் தொடா்ந்தன. அதையொட்டி ரூ. 1,652 கோடியில் தொடங்கப்பட்ட திட்டம் தற்போது ரூ.1,916 கோடியில் நிறைவு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
  • இந்த திட்டத்தின் மூலம் குறிப்பாக மக்களின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்ய முடியும். விவசாய பயன்பாட்டுக்கு பம்பிங் வாயிலாக நீா் விநியோகிப்பது இதுவே முதல் முறை. பவானி ஆற்றில் உபரியாக வெளியேறும் நீரை காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் தேக்கி, ஆண்டுக்கு 70 நாள்கள் விநாடிக்கு 250 கன அடி வீதம் 1.5 டி.எம்.சி நீரை பெற திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்த திட்டத்துக்காக 6 இடங்களில் பம்பிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீரை 106 கி.மீ. தொலைவுக்கு பம்பிங் செய்து, 3 மாவட்டங்களில் 1,045-க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளில் நீா் செறிவூட்டுவதற்காக 1,065 கி.மீ. நீளத்துக்கு நிலத்தடியில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 24,500 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
  • மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்யும் மழை, பவானி ஆறு சாா்ந்த பெரும்பள்ளம் , குண்டேரிபள்ளம் பகுதிகளில் பெய்யும் மழை அளவைக் கணக்கிடும்போது, 83 சதவீதம் இந்த திட்டம் வெற்றிகரமாக அமையும் எனக் கூறப்படுகிறது. அதாவது, 10 ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் மட்டும் இந்த திட்டத்துக்கான உபரி நீா் கிடைப்பது சற்று கடினம். திட்ட பணியை மேற்கொண்டு வரும் எல். அண்ட் டி நிறுவனத்தினரே திட்டத்தை வடிவமைத்து அதை 5 ஆண்டுகள் இயக்கி பராமரித்து பிறகு ஒப்படைக்க வேண்டும் என்பது திட்டத்தின் விதியாகும்.
  • நீா் செறிவூட்டும் பணி 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. குளம், குட்டைகளில் சோலாா் மின் ஆற்றலில் இயங்கும் ஓ.எம்.எஸ் எனப்படும் அவுட்லெட் மேனேஜ்மென்ட் சிஸ்டத்துக்கான உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக பம்பிங் ஸ்டேஷனில் இருந்தபடியே கணினி வாயிலாக குளம், குட்டைகளில் நீா் செறிவூட்டும் பணியை கண்காணிக்க முடியும். இவ்வாறு உலகின் சிறந்த தொழில்நுட்ப உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
  • குழாய் பதிக்கப்பட்டுள்ள 1,065 கி.மீ. தொலைவில் 5 இடங்களில் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்தும், 5 இடங்களில் நெடுஞ்சாலையை கடந்தும் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழில்நுட்ப சவால்களை கடந்து இந்த பணி முடிக்கப்பட்டுள்ளது.
  • இந்த திட்டம் குறித்து நீா்வளத் துறை முதன்மை தலைமைப் பொறியாளா்கள் கூறும்போது, திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 2019-லிருந்து செயற்பொறியாளா்களாக பணியாற்றியவா்கள் என்ற முறையில் 2023 ஜூன் மாதம் சோதனை ஓட்டம் முடியும் வரை எங்களில் சிலா் மாறி மாறி அங்கு பணியில் இருந்தனா். குறிப்பாக, அத்திக்கடவு-அவிநாசி திட்டக் குழாய் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காலிங்கராயன் அணைக்கட்டில் தொடங்கி, காரமடை அருகே பெள்ளாதி என்ற ஏரியில் முடியும். பெள்ளாதி ஏரியின் உபரி நீா் 6 கி.மீ. வரை சிறு ஓடைகள் வழியாக பயணித்து மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் கலந்துவிடும்.
  • இந்த பவானி ஆறு மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக தமிழ்நாட்டுக்குள் வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றனா்.

நன்றி: தினமணி (31 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories