TNPSC Thervupettagam

அஞ்சலி: சி.டி.குரியன் | பொருளியல் சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கான இந்திய வழிகாட்டி

July 30 , 2024 9 hrs 0 min 35 0
  • ‘எதை உற்பத்தி செய்​வது? எப்படி உற்பத்தி செய்​வது? யாருக்காக உற்பத்தி செய்​வது?’ பொருளாதாரத்து​க்கு ஆணிவேராக விளங்கும் இந்த மூன்று கேள்​விகளில் இருந்து பிறப்​பவையே கோட்​பாடுகள். இந்தக் கோட்​பாடுகளை முற்றிலுமாக அலசி ஆராய்ந்து, ‘யாருக்கு எது சொந்​தம்? யார் என்ன செய்​கிறார்​கள்? யாருக்கு என்ன கிடைக்​கிறது?’ என்று அதற்கு மாற்றான மூன்று கேள்​விகளை உருவாக்கி, சமூகத்​தைச் சிந்​திக்கத் தூண்​டியவர்; இக்கேள்​விகளுக்கு விடை தேடும்படி தன் மாணவர்களை ஊக்குவித்​தவர் கிறிஸ்டோபர் தாமஸ் குரியன் என்கிற சி.டி.குரியன்.
  • அப்படி விடைகளைத் தேடிய அவரது மாணவர்கள் பலர் இன்றைக்கு அரசியல் தலைவர்களாகவும் பொருளாதார நிபுணர்​களாகவும் வளர்ந்து நாட்டுக்​குப் பங்களிப்பு செய்​துவருகின்​றனர். அவர்​களது பொருளியல் ஆசானாகிய சி.டி.குரியன் கடந்த 23.7.2024 அன்று தனது 93ஆம் வயதில் மறைந்​தார்.

பொருளாதாரச் சுதந்​திரம்:

  • நாட்டுக்​குச் சுதந்​திரம் கிடைத்​தபோது பள்ளிப் பருவத்​தைக் கடக்​கும் நிலையை குரியன் எட்டியிருந்தார். நம் நாட்டுக்​குக் கிடைத்​திருப்பது அரசியல் சுதந்​திரமே என்கிற புரிதல் அந்த இளம் வயதிலேயே குரியனுக்கு இருந்​திருக்​கிறது. சுதந்​திரப் போராட்ட வீரர்​களின் அடுத்த கனவு, பொருளாதார சுதந்​திரம் என்பதை நேருவின் சுதந்திர தின உரையின் வழியாக குரியன் உணர்ந்​தார்.
  • இதனால், பொருளாதாரம் படிக்க வேண்​டும் என்கிற முடிவை எடுத்​திருக்​கிறார். பொருளாதாரச் சுதந்​திரம் என்பதில், வறுமையில் இருந்து விடுதலை அல்லது வறுமையைப் போக்​குவது என்பதைத் தனது லட்சியமாகக் கொள்​கிறார். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் சேர்ந்து, முதுகலைப் பொருளாதாரம் கற்றுத் தேறினார் குரியன்.
  • 1958ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் ஸ்டான்​போர்டு பல்கலைக்​கழகத்​தில் முனைவர் பட்ட ஆய்வுக்காகச் சேர்ந்​தார். அந்தப் பல்கலைக்​கழகம், நோபல் பரிசு பெற்ற கென்னத் ஏரோ போன்ற நவசெவ்​வியல் பொருளியல் அறிஞர்கள் நிரம்​பிய, பொருளாதாரப் பள்ளியைக் கொண்​டதாகத் திகழ்ந்​தது. கோட்​பாடுகளின் போதாமை
  • உபரி அளிப்பை (surplus supply) நவசெவ்​வியல் கோட்​பாடுகள் பூஜ்ஜியமாகக் கருதின. எந்த ஒரு பொருளும் தேவைக்கு மேல் உபரியாக இருந்​தால், அதன் மதிப்பு பூஜ்ஜியம் என நவசெவ்​வியல் கோட்​பாடுகள் வரையறுத்தன. இதனை குரியனால் ஏற்றுக்​கொள்ள முடியவில்லை. அதேபோல் உழைப்​பின் பாத்​திரத்​தைக் கணக்​கிடுவதில் நவசெவ்​வியல், செவ்​வியல் கோட்​பாடுகள் பற்றாக்​குறையாக இருப்​பதாக முடிவுக்​கு வந்​தார்.
  • குறைந்​தபட்ச வாழ்​வாதாரக் கூலி, இருத்​தலுக்கான கூலி, உழைப்​பின் சந்தை விலை போன்ற உழைப்பு சார்ந்த பல்வேறு கோட்​பாடுகளை அவர் ஏற்கவில்லை. உபரி உழைப்பு என்பதை இந்தியப் பாணியில் எப்படி அணுகுவது என்பதே அவரது முனைவர் பட்ட ஆய்வின் உள்ளடக்கமாக இருந்​தது.
  • 1963ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து, தான் படித்த சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் ஆசிரியர் பணியைத் தொடங்​கினார். அப்போது ‘வளர்ச்சி குன்றிய பொருளாதாரங்​களில் உற்பத்​திக் காரணிகளின் ஒதுக்​கீட்டில் சில சிக்​கல்​கள்’ என்ற ஆராய்ச்​சிக் கட்டுரையை அண்ணாமலைப் பல்கலைக்​கழகத்​தில் குரியன் சமர்ப்​பித்​தார்.
  • அதன் வழியாக, நவசெவ்​வியல் கோட்​பாடுகளில், வளங்​களின் ஒதுக்​கீட்டுக்கான போதாமையைச் சுட்டிக்கா​ட்டினார். இதனையே தனக்கு ஆசிரியராக இருந்த நோபல் பரிசுபெற்ற கென்னத் ஏரோவுக்கு ஒரு கடிதமாக எழுதினார். இந்தக் கடித உரையாடல்​களின் முடிவில், கென்னத் ஏரோ ‘கூலி பற்றிக் கறாராகப் பேசினால், சமநிலைக் கூலி என்ற ஒன்று இல்லை என்பதை ஏற்றுக்​கொள்​கிறேன்’ என்று ஒப்பு​க்​கொண்​டார்.
  • முதன்​மைப் பொருளாதாரக் கோட்​பாடுகளை நன்கு கற்றுத் தேறிய குரியன், அது இந்தியப் பொருளாதாரப் பிரச்​சினைகளுக்கு ஏற்ற தீர்​வைத் தர இயலாது என்ற முடிவுக்கு வருகிறார். அது மட்டுமல்ல, பொருளியலின் முதன்​மைக் கோட்​பாடுகள், வறுமைக்கான தீர்​வுகளை முன்​வைக்கப் போதுமானதாக இல்லை என்பதையும் கற்றுத் தெளிகிறார். நுண்​ணியல், பேரியல் உள்ளிட்ட பல கோட்​பாடுகளில், ஓர் இணக்​கமின்மை இருப்​பதையும் அவர் கண்டுணர்​கிறார்.

புதிய இணைப்பு:

  • தான் கற்றுத் தேறியதையும், தனது ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்​ததையும், தனது மாணவர்​களிடம் கொண்​டுசேர்த்​தார். அதற்​குப் பாடத்​திட்டத்​தில் ஒரு புதிய இணைப்பை உருவாக்​கினார். இந்தியப் பொருளாதாரச் சிக்​கல்கள் என்ற தலைப்​பில் ஒரு புதிய பாடத்தை உருவாக்​கினார்.
  • அதன் வழியாக, இந்தியப் பொருளாதாரச் சிக்​கல்​களைத் தீர்க்க, பொருளாதாரக் கோட்​பாடுகள் திறனற்று இருப்பதை மாணவர்கள் உணரும்படி செய்​தார். இதே காலக்​கட்டத்​தில், இந்தியப் பொருளாதாரத்​தின் திட்டமிட்ட வளர்ச்​சியும் வளர்ச்​சிப் பணிகளும் தொடங்​கியிருந்தன. அப்போது இந்தியப் பொருளாதாரச் சிக்​கல்​களைத் தீர்க்க, இந்திய உழைப்​பின் உபரியைப் புரிந்துகொள்ள, கூடுதல் பயிற்​சியும் பார்​வையும் வேண்​டும் என்பதை குரியன் சுட்டிக்காட்டினார்.
  • அப்படியான அவரது பார்​வையின் அடிப்​படையில், இந்தியக் கிராமப்புற உழைப்​பாளி மக்களுக்கு வேலை உத்தரவாதச் சட்டம் ஒன்றின் தேவையை 1974ஆம் ஆண்டிலேயே பரிந்துரை செய்​தவர் குரியன். இன்றைய நூறு நாள் வேலைத் திட்டத்​தின் முதல் குரல் அல்லது முதல் சிந்தனை குரியனுடையது என்று கூறலாம்.

வளர்ச்​சியும் வறுமையும்:

  • ஐந்தாவது ஐந்தாண்​டுத் திட்டமிடுதல், வறுமை ஒழிப்புக்​குக் கூடுதல் முக்​கியத்​துவம் கொடுத்​தது. பொருளாதார வளர்ச்​சியை அதிகரித்து, வறுமையை ஒழிக்க முடியும் என்று மதிப்​பீடு செய்​யப்​பட்டது. எது வளர்ச்சி என்பதைப் பற்றிய குரியனின் மதிப்​பீடு மிகுந்த முக்​கியத்​துவம் வாய்ந்தது.
  • பொருளாதார வளர்ச்சி என்பது, சொத்​துடைமைக்கு ஏற்றாற்​போலவே அதிகரிக்​கும். வளர்ச்​சியின் பயன்கள் சமமாகச் சென்று சேராது. இதன் காரணமாகச் சிலரது வளர்ச்சி பன்மடங்கு அதிகரிக்​கும். பலரது வாழ்க்​கையில் வறுமை, பொருளாதார ஏற்றத்​தாழ்​வுகள் அதிகரிக்​கும் என்று கணித்​தார்.
  • குரியனின் மிகப்​பெரிய கண்டறிதல் என அவரே கருதுவது, ‘பெரிய பெரிய பொருளாதாரக் கோட்​பாடுகள் இன்றி, உற்பத்​தியின் பகிர்​வையும், வளங்​களின் பங்கீட்டையும் திறம்​படக் கட்டுப்​படுத்தி, சமனற்ற வளர்ச்​சியைக் குறைக்க முடியும்’ என்கிற முடிவுக்கு வந்தது.
  • நாட்டில் நிலவும் சந்தையில்​லாப் பரிவர்த்​தனை, பொருளியல் கோட்​பாடுகளைப் பயனற்​றுப் போகச் செய்​கிறது என்பதையும் அவர் சுட்டிக்கா​ட்டினார். இதன் காரணமாக, ‘உண்​மையான வாழ்க்கை சார்ந்த பொருளாதாரம்’ (Real life Economics) என்கிற மாற்று அணுகுமுறையைக் கையாள நேரிட்டதாக குரியன் கூறுகிறார்.
  • இவ்வாறு, மாற்று அணுகுமுறைகளைக் கையாண்டு, தனது ஆயுள்​காலம் முழுவதும், வறுமை, திட்டமிடல், சமூக மாற்​றம், தமிழ்​நாட்டின் கிராமப்புற மாறுதல்​கள், வளர்ச்சி தொடர்பான ஆய்வுகளை மேற்​கொண்​டு வந்​தார். மால்கம் ஆதிசேஷய்யா சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்​தைத் தொடங்​கியபோது, 1978ஆம் ஆண்டு முதல் அதன் இயக்​குநராகப் பொறுப்​பேற்​றார் குரியன்.
  • அதன் பின்னர், பல்கலைக்கழக மானியக் குழு, இந்திய சமூக அறிவியல் கழகம் ஆகியவற்றில் மதிப்​புறு பேராசிரியராக விளங்​கினார். தனது 72ஆவது வயதில் கல்விசார் பணிகளில் இருந்து விடைபெற்றார். அதன் பின்னர், நூல் மதிப்​புரைகள் எழுதுவதையும், புத்​தகங்கள் எழுதுவதையும் தனது கடமையாகச் செய்​துவந்​தார்.
  • பொருளியல் மாணவராகத் தனது வாழ்க்​கைப் பயணத்​தைத் தொடங்கி, மாற்​றுப் பொருளியல் சிந்​தனையுடன், பொருளியல் பிரச்​சினைகளைத் தீர்க்க மாற்று அணுகுமுறைகளை ஆராய்ந்து கண்டறிந்த சி.டி.குரியனின் வாழ்க்கை, மகத்தான ஒன்று. அவர் படைத்​தளித்த ஒவ்வொரு நூலும் முக்​கியத்​துவம் வாய்ந்​தவை. அவர் இறுதியாக 2018ஆம் ஆண்டில் கொண்​டுவந்த Economics of Real life: A New Exposition என்ற நூல் சமகால இந்தியப் பொருளாதாரத்தை எப்படிக் கற்றுக்​கொள்ள வேண்​டும், கற்பிக்க வேண்​டும் என்பதற்குச் சிறந்த ஒரு பங்களிப்பு.
  • அதைக் கல்லூரி, பல்கலைக்​கழகங்​களில் பாடமாக வைப்​பதன் மூலம் அவரது உழைப்​பின் சாரத்தை வருங்​காலத் தலைமுறை பயன்​படுத்​திக்​கொள்ள முடியும். அவரது நினைவாக இந்தப் பணியை தமிழ்​நாடு அரசின் உயர் கல்வித் துறை, தனது உயர் கல்வி நிறுவனங்​களுக்​குப் பரிந்துரை செய்​யலாம். மாணவர்​கள், ஆசிரியர்​கள், கோட்​பாட்டாளர்​கள், குடிமைச் சமூகம், கொள்கை வகுப்​பாளர்கள் என அனைவரும் அவரைத் தெரிந்து கொள்ள வேண்​டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories