TNPSC Thervupettagam

அணு ஆயுதப் போரின் கதிரியக்க மூடுபனி

October 20 , 2024 6 hrs 0 min 47 0

அணு ஆயுதப் போரின் கதிரியக்க மூடுபனி

  • அணு ஆயுதப் போர் நோக்கி நகர்கிறதா தற்போதைய உலக அரசியல் சூழல்? இந்தக் கேள்விக்கு விடை காண்ப​தற்கு முன்பு அணு ஆயுதப் போர் என்ன விளைவுகளை உண்டாக்கும் என்பதை நாம் புரிந்​து​கொள்ள வேண்டும். இந்தப் பூவுலகை 7 முறை முற்றி​லுமாக அழிக்கும் அளவிற்கு வல்லமை படைத்த அணு ஆயுதங்கள் தற்போது உலகளவில் உள்ளன எனச் சொல்லப்​படு​கிறது.
  • குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, ஃபிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்​தான், இஸ்ரேல், வட கொரியா ஆகிய நாடுகள் மொத்தமாக 12,121 அணு ஆயுதங்களை வைத்திருக்​கின்றன. இந்த அணு ஆயுதங்களை வைத்துள்ள இந்த நாடுகளுக்கு இடையிலான உறவு முரண்​களுடன் இருப்​ப​தால், உலக அளவில் அணு ஆயுதப் போர் மேகங்கள் சூழ்ந்​திருப்​ப​தாகச் சொல்லப்​படு​கிறது. அப்படி ஓர் அணு ஆயுத உலகப் போர் நிகழ்ந்​தால், அது அணுக் கதிரியக்க மூடுபனிக் காலத்தை (Nuclear Winter) உருவாக்​கும்.
  • இவ்வாறு அமெரிக்கா, ரஷ்யா இடையே அணு ஆயுதப் போர் நிகழ்ந்தால் என்ன விளைவுகள் உண்டாகும் என்பதை ‘Nuclear War’ என்ற புத்தகத்தில் விளக்கு​கிறார் யான்னி ஜாக்கப்சன் (Annie Jacobsen). அணு ஆயுதப் போரின் முதல் நொடி முதல் மாதங்கள் வரையிலான காலக்​கட்​டத்தை அமெரிக்கப் பார்வையில் இருந்து விளக்கு​கிறது இந்தப் புத்தகம். அணு ஆயுதத் தாக்குதல் அமெரிக்கா மீது நிகழ்த்​தப்​பட்​டால், அதிபர் எப்படிக் காப்பாற்​றப்​படுவார் என்பதில் தொடங்கி, எதிர்த் தாக்குதல் எப்படி நடைபெறும் என்பது வரை இந்தப் புத்தகத்தில் சுவாரசியமாக விவரிக்கப்​பட்​டுள்ளது.
  • இந்த நாடுகளுக்கு இடையே போர் உருவானால், 1 மெகா டன் திறன் கொண்ட 1,000 அணு ஆயுதங்கள் இரண்டு நாடுகளி​லிருந்தும் வீசப்​படலாம் என்று கூறுகிறார் யான்னி. அதன் பின்பு பூமி என்னவாக மாறும் என்பதை இறுதி அத்தி​யா​யத்தில் விவரிக்​கிறார்.
  • அணு ஆயுத வெடிப்பு நிகழ்ந்த சில விநாடிக்குள் பல லட்சம் டிகிரி அளவிலான வெப்பம் வெளியாகும். கற்பாறை முதற்​கொண்டு, இரும்பு, மரம் என எல்லாப் பொருட்​களும் கரைந்து ஆவியாக மாறும். அடுத்த சில வினாடிகளில், புகைமண்டலம் ‘காளான்’ வடிவில் வெளி நோக்கி உயரும். வான் மண்டலம் எங்கும் புகையும், கதிரியக்​கமும் நீக்கமெனப் பரவியிருக்​கும். இவை சூரியக் கதிர்கள் பூமியின் வான் மண்டல எல்லையில் நுழைவதைத் தடுக்​கும். பூமியின் தட்பவெப்ப நிலையில் 27ஂF அளவிற்கு மாறுதல் உண்டாகும். பூமியின் வடதுருவப் பகுதி குளிர் மிகுந்த பகுதியாக மாறும். வேனில்​காலம் கூடக் குளிர்​காலமாக மாறும். இதைத்தான் ‘கதிரியக்க மூடுபனிக் காலம்’ என்று விஞ்ஞானிகள் கூறுகின்​றனர். மேலும், 10 ஆண்டுகள் வரை நீடிக்​கக்​கூடிய குறுகிய உறைபனிக் காலத்தை உருவாக்கும் என்றும் கூறுகின்​றனர்.
  • ஓசோன் படலம் மறைந்​து​போகும். இதனைத் தொடர்ந்து ஊதாக் கதிர்கள் மக்களைக் கொல்லும். கண்ணாடி மற்றும் பிற எரிந்த பொருள்​களின் சாம்பலில் இருந்து பலவித கொடிய நச்சுப் புகை பரவும். உயிர்ச்​சூழல் தன் இயல்பை இழக்கும். உயிர்ப்​பன்மை அழிந்​து​போகும்.
  • குண்டு​வெடிப்பு காரணமாக உடனடி​யாகப் பல கோடி மக்கள் இறந்து​போவார்கள். அதன் பின்பு, தொடர்ந்து வெளியாகும் அணுக் கதிரியக்​கத்தால் தப்பிப் பிழைத்த உயிரினங்​களும், மனிதர்​களும் படிப்​படியாக மரணிக்கத் தொடங்​கு​வார்கள். அணு ஆயுதத் தாக்குதலில் நேரடியாக இறக்காதவர்கள் மரணத்தை நோக்கி இருப்​பவர்களாக மாறுவர். மேலும், பயிர்கள் விளையும் சூழல் அழிந்​திருக்​கும். வேளாண்மையே இல்லாமல் போகும்.
  • அணு ஆயுதங்கள் குறைப்பு குறித்தோ, அழிப்பு குறித்தோ இந்தப் புத்தகம் பேசவில்லை. இரண்டாம் உலகப் போர் தொடங்கி அணு ஆயுத ஒழிப்பு குறித்துப் பேசப்​பட்டு வருகிறது. குறிப்பாக, ரஸ்ஸல் ஐன்ஸ்டைன் வெளியிட்ட கூட்டறிக்கையைத் தொடர்ந்து இன்று அணு ஆயுத ஒழிப்​பிற்கான செயல்​பாடுகள் தொடர்​கின்றன. இதன் பயனாகத்தான் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம், அணு ஆயுதச் சோதனைத் தடுப்பு ஒப்பந்தம் போன்றவை உருவாயின.
  • உக்ரைன்​-ரஷ்யப் போர் காரணமாக இந்த ஒப்பந்​தங்​களில் இருந்து பின்வாங்​குவதாக ரஷ்யா கூறியுள்ளது. ஈரானின் அணுஉலை மையங்​களில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்ட​மிடு​கிறது. இப்படிப் போர்ச் சூழலை நோக்கி நகரும் நிகழ்வுகளே உலகில் நடந்து வருகின்றன. அமெரிக்கச் செயல்​பாடு​களின் காரணமாகவே இப்படிப் போர்ச் சூழல் உருவாகிவரு​கிறது. வியட்நாம் மீதான போரை எப்படி அமெரிக்க மக்கள் இயக்கம் முடிவிற்குக் கொண்டு வந்ததோ, அதுபோலான மக்கள் இயக்கம் மூலம் மட்டுமே போர்ச் சூழலைத் தணிக்க முடியும்.
  • அதனையும் மீறி மூன்றாம் உலகப் போர் நிகழ்ந்​தால், கரப்பான்​பூச்​சிகள் போன்ற கதிரியக்​கத்தை எதிர்​கொள்ளும் ஆற்றல் படைத்த பூச்சிகள் மட்டுமே தப்பிப் பிழைக்​கும். பூமி அவர்களின் வீடாக மாறும். பூவுலகு அடுத்த உயிரினங்​களின் பரிணா​மத்தைக் காணப் பல லட்ச வருடங்கள் காத்திருக்க வேண்டி​யிருக்​கும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories