TNPSC Thervupettagam

அயல் உறவில் மோடிக்கு தோல்விகளே!

September 29 , 2024 6 hrs 0 min 20 0

அயல் உறவில் மோடிக்கு தோல்விகளே!

  • இந்தியாவுக்குப் பக்கத்திலேயே இருக்கும் நாடுகளுடன் உறவைப் பராமரிப்பதிலும் வளர்ப்பதிலும் மோடி அரசு தோல்வி கண்டுவிட்டது. சீனத்துடன் நமக்கு 3,488 கிலோ மீட்டர் நீள, நில எல்லை இருக்கிறது. ஆனால், எவருக்குமே ‘சீனம் நமது பக்கத்து நாடு’ என்ற உணர்வே ஏற்படுவதில்லை - ஏன் என்றே வியக்கிறேன்?
  • வெகு அருகிலேயே இருக்கும் பாகிஸ்தான் (3,310 கி.மீ.), வங்கதேசம் (4,096 கி.மீ.) ஆகியவற்றுடனான நில எல்லையைப் பெரும்பகுதி வேலியமைத்து காத்துவருகிறோம். நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் பொதுவான நில எல்லை இருந்தாலும் வேலியடைக்காமல் திறந்தே வைத்திருக்கிறோம்; அவ்வப்போது சிறுசிறு உரசல்கள் - மோதல்கள் ஏற்பட்டாலும், மனிதர்கள் போய்வரவும் சரக்குகள் போக்குவரத்துக்கும் திறந்த இந்த எல்லை மிகவும் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. பூடான் சிறிய நாடு, பொது நில எல்லையாக 578 கிலோ மீட்டர் நீளம் இருக்கிறது. அந்த நாட்டுடனான உறவு மிகவும் மதிப்புள்ளதாகவும் ராணுவ நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் திகழ்கிறது.
  • இலங்கையையும் நம்மையும் பாக் நீரிணைதான் பிரிக்கிறது. வரலாற்றின் அடிப்படையிலும் பண்பாட்டிலும் இலங்கை நமக்கு நெருங்கிய பக்கத்து நாடாகவும் - சில வகைகளில் பிரச்சினைக்குரியதாகவும் இருக்கிறது. மாலத்தீவு சிறிது தொலைவில் இருந்தாலும், நல்லுறவைப் பேணுகிறோம். சீனத்தின் செல்வாக்கு அந்நாட்டின் மீது அதிகம். 1988இல் அந்நாட்டைக் கைப்பற்ற ஆயுதமேந்திய சிறு கொள்ளை கும்பல் முயன்றபோது நாம்தான் அதை மீட்டோம், ‘ஆபரேஷன் காக்டஸ்’ என்ற அந்த நடவடிக்கை இப்போது எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது என்று தெரியாது.
  • ஆப்கானிஸ்தானுடனும் 106 கிலோ மீட்டருக்கு பொது நில எல்லை இருக்கிறது. அந்த நாட்டுக்குள் நிலவும் கொந்தளிப்பான உள்நாட்டு அரசியல் காரணமாக, நம்முடனான உறவு திடீரென்று ‘கனிந்தும்’ சில வேளைகளில் ‘கசந்தும்’ இருக்கிறது. இந்தப் பக்கத்து நாடுகளில் சீனத்தைத் தவிர ஏனைய அனைத்தும் ‘தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்க’ (சார்க்) உறுப்பு நாடுகள்.

உதிர்கிறதா ‘சார்க்’?

  • இன்றைய இந்திய அரசின் அயலுறவுக் கொள்கையில் பக்கத்து நாடுகளுக்கு எந்த இடம் தரப்பட்டிருக்கிறது?
  • வெளியுறவு அமைச்சராகவும் பிறகு சிறிது காலத்துக்குப் பிரதமராகவும் இருந்த இந்தர் குமார் குஜ்ரால், ‘கிழக்கே பார்’ என்ற கொள்கையை அரசுக்கு வழிகாட்டியாக அளித்தார். அடல் பிஹாரி வாஜ்பாய் அதையே கூர்மதியுடன், ‘கிழக்கில் (உறவை வலுப்படுத்த) செயல்படுத்து’ என்று மாற்றினார். நரேந்திர மோடியோ, டாம்பீகமான தனது பாணியில் ‘பக்கத்து நாடுகளுக்குத்தான் உறவில் முன்னுரிமை’ என்று அறிவித்தார்.
  • பிரதமர் மோடிக்கு உண்மையிலேயே பக்கத்து நாடுகளுடன் உறவை வளர்ப்பதில் தனிப்பட்ட அக்கறை இருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன். அப்படியானால் ‘சார்க்’ அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பக்கத்து நாடு ஒவ்வொன்றுக்கும் அவர் கடைசியாகச் சென்றது எப்போது என்று அறிய விரும்புகிறேன். பிரதமருக்கான தனி இணையதளம் தரும் தகவல் இதோ:
  • மாதம்    நாடு             ஆண்டு
  • மார்ச்   பூடான்               2024
  • மே        நேபாளம்           2022
  • மார்ச்   வங்கதேசம்      2021
  • ஜூன்   மாலத்தீவுகள் 2019
  • ஜூன்   இலங்கை          2019
  • ஜூன்   ஆப்கனிஸ்தான்            2016
  • டிசம்பர்             பாகிஸ்தான்    2015
  • கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் மோடி நேபாளத்துக்கு ஐந்து முறையும், பூடானுக்கு மூன்று முறையும், இலங்கைக்கு மூன்று முறையும், வங்கதேசத்துக்கு இரண்டு முறையும், மாலத்தீவுக்கு இரண்டு முறையும், ஆப்கானிஸ்தானுக்கு இரண்டு முறையும், பாகிஸ்தானுக்கு ஒருமுறையும் சென்றிருக்கிறார்.
  • மோடி தனது பதவிக்காலத்தில் மேற்கொண்ட மொத்த வெளிநாட்டுப் பயணம் 82இல் பக்கத்து நாடுகளில் மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை 18. இந்த ஆண்டு மார்ச் மாதம் பூடானுக்கு, ஒரேயொரு நாள் சென்றுவந்த பிறகு அவர் வேறெந்த பக்கத்து நாட்டுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்லவே இல்லை என்பதை அறிந்து ஏமாற்றம் அடைகிறேன்.
  • ‘சார்க்’ அமைப்பின் 18வது உச்சி மாநாடு நேபாளத் தலைநகர் காத்மாண்டில் 2014 நவம்பர் மாதம் நடந்தது. 19வது உச்சி மாநாடு 2016 நவம்பரில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நடப்பதாக இருந்தது. இந்தியாவும் வேறு நான்கு நாடுகளும் அதைப் புறக்கணித்தன. அதற்குப் பிறகு உச்சி மாநாடே நடக்கவில்லை. வாஜ்பாய் அரசில் வெளியுறவு அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங், ‘சார்க் அமைப்பு முழுத் தோல்வி’ என்று கருத்து தெரிவித்தார். அது உண்மைதான் – ‘சார்க்’ அமைப்பு முடிவுக்கு வந்துவிட்டது என்று மோடி அரசும் முழுமனதாக ஏற்றுக்கொண்டுவிட்டதைப் போலத் தெரிகிறது.

சீன டிராகனும் இந்திய யானையும்

  • பத்தாண்டுகளில் பிரதமர் மோடி 2015 முதல் 2018 ஜூன் வரையில் ஐந்து முறை சீனத்துக்குச் சென்றுவந்தார். அதற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கெட ஆரம்பித்தது. மியான்மர் (பர்மா) நாட்டுக்கு இரண்டு முறையும், மோரிஷஸ் நாட்டுக்கு ஒருமுறையும் இந்தப் பத்தாண்டுகளில் சென்றிருக்கிறார் மோடி.
  • இந்திய எல்லையை ஆக்கிரமித்து மோடிக்கு சினமூட்டியது சீனம். அவரால் பதிலுக்கு எதையும் செய்ய முடியவில்லை; இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று சீனம் கட்டளையிட இடம்கொடுத்துவிட்டார் மோடி. இந்திய எல்லையிலிருந்து சீனத் துருப்புகளை விலக்குவது தொடர்பாகப் பேசுகிறார்கள் என்றார்கள், சீனம்தான் செயல்திட்டத்தை வகுக்கிறது, இந்தப் பேச்சுகள் முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகின்றன; தீர்வு எதுவும் கண்ணுக்குப் புலப்படவில்லை. ‘உண்மையான கட்டுப்பாட்டு எல்லைக்கோடு’ (எல்ஏசி) பகுதியில் சீனம் துருப்புகளைக் குவிக்கிறது, சாலைகளையும் பாலங்களையும் குடியிருப்புகளையும் தொடர்ந்து அமைக்கிறது.
  • முகாம்கள் அமைக்கப்படுகின்றன, பூமிக்கு அடியிலும் பாசறைகளும் ஆயுதக் கிடங்குகளும் நிறுவப்படுகின்றன. சீனத்துடனான வெளிவர்த்தகப் பற்றாக்குறை 2013 - 2014இல் 3,700 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது, 2023 – 2024இல் 8,500 கோடி அமெரிக்க டாலர்களாக பெருகிவிட்டது.
  • கறுப்புப் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய, மோரிஷஸ் நாடு பாதுகாப்பான திரையாகப் பயன்படுகிறது. ரோங்கியா அகதிகளை மியான்மர் அரசு, எவரும் கவனிக்காத நேரத்தில் இந்திய எல்லைக்குள் விரட்டிக்கொண்டிருக்கிறது. இந்த நிலைமைகளையெல்லாம் மாற்ற இந்திய அரசு என்ன நடவடிக்கையை எடுத்திருக்கிறது? இதுவரையில் அப்படி எதையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

இழப்புகள் ஏராளம்

  • பக்கத்து நாடுகளைப் புறக்கணித்ததன் விளைவாக ஏராளமாக இழந்துகொண்டிருக்கிறோம். நேபாளத்தில் திடீரென்று அரசியல் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. கே.பி.சர்மா ஒலி மீண்டும் பிரதமராகிவிட்டரா. வங்கதேசத்திலிருந்து பிரதமர் ஷேக் ஹசீனா விரட்டப்படுவார் என்றும் எதிர்பார்க்கவே இல்லை. இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கவுக்குச் செல்லம் கொடுத்து கொஞ்சினோம், அனுரா திஸ்ஸநாயகவைக் கண்டுகொள்ளவே இல்லை. இப்போது அவர்தான் மக்களில் 42.3% பேரின் ஆதரவுடன் அதிபராகிவிட்டார்.
  • மாலத்தீவில் அதிபரான முகம்மது முய்சு செய்த முதல் வேலை அங்கிருந்த இந்திய ராணுவ ஆலோசகர்களை வெளியேற்றியதுதான்.
  • பாகிஸ்தானைப் பொருத்தவரை மோடி அரசின் கொள்கை, அதன் உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப இருப்பதாகவே சந்தேகிக்கிறேன், அங்கே யார் ஆட்சிசெய்கிறார்கள், யாருக்கு மக்களுடைய ஆதரவு என்றெல்லாம் இந்தியா கவலைப்படவில்லை.

சுயமாக ஏற்படுத்திக் கொண்ட காயம்

  • தெற்காசிய நாடுகளில் நமக்கு செல்வாக்கில் ஏற்பட்டிருக்கும் சரிவுக்குக் காரணம், நாம் சுயமாக ஏற்படுத்திக்கொண்ட காயம்தான். உலக அரங்கில் இந்தியாவை பெரிய சமாதானத் தூதுவராக காட்ட மோடியின் வெளியுறவுத் துறை கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதனால்தான் ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு மோடி சமீபத்தில் சென்றார். அது மட்டுமின்றி ‘ஜி-20’, ஐக்கிய நாடுகள் சபை உச்சி மாநாடு, ‘குவாட்’ அமைப்பின் உயர்நிலைக் கூட்டம் ஆகியவற்றுக்கும் நேரிலேயே சென்றுவந்தார்.
  • மோடி தன்னுடைய சமாதான முயற்சிகளில் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்தும் அதேவேளையில், பக்கத்து நாடுகளுடன் உறவை மேம்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் ‘கடைசியானவை’ (Last) என்றும், ‘காணாமல் போனவை’ (Lost) என்றும் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

நன்றி: அருஞ்சொல் (29 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories