இந்திய அறிவியலில் பன்மைத்துவம் இருக்கிறதா?
- மத்திய அரசின் அறிவியல் - தொழில்நுட்ப அமைச்சகம் 2025ஆம் ஆண்டின் தேசிய அறிவியல் தின மையக் கருத்தாக ‘இந்திய இளைய சமுதாயம் அறிவியல் - புதுமைத் திறன்களில் உலகத் தலைமையேற்கும் அளவுக்கு வளர்ந்த இந்தியாவை மேம்படுத்தல்’ என்கிற இலக்கை அறிவித்துள்ளது. அறிவியலின் வளர்ச்சிக்குப் புதுமைச் சிந்தனை மிகமிக அவசியம். அதை இந்த அறிவிப்பு சரியாகவே வெளிப்படுத்துகிறது.
- இன்று மனித குலம் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துவருகிறது. இதற்கான அறிவியல்பூர்வமான தீர்வுகளைத் தேடிப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் தீவிரமாக ஆராய்ச்சி செய்துவருகிறார்கள். ஒரு பிரச்சினைக்கான தீர்வை இரண்டு பேர் சேர்ந்து யோசிப்பதைவிட, பத்துப் பேர் சேர்ந்து யோசித்தால் மிக விரைவாகவும் மிகப் புதுமையாகவும் தீர்வுகள் கிடைக்கும்.
- இதேபோல் அறிவியல் ஆராய்ச்சியில் ஒரே தன்மை கொண்ட அறிவியல் அறிஞர்கள் ஈடுபடுவதைவிட வெவ்வேறு இனம், வெவ்வேறு மொழி, வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலம் கொண்ட அறிஞர்கள் ஒன்றாக அமர்ந்து சிந்திக்கும்போது, அறிவியல் ஆராய்ச்சியில் புதுமைச் சிந்தனை விரைவாக உருவாகும். ஒரே பிரச்சினைக்கு வெவ்வேறு கோணத்தில் அணுகும் முறைகள் உருவாகும். இதன் மூலம் புதியபுதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். அறிவியலில் இப்படி அனைத்து விதமான பின்புலம் கொண்டவர்களுக்கான பிரதிநிதித்துவம் இருப்பதை ‘அறிவியலில் பன்மைத்துவம் (Diversity in Science)’ என்கிறோம்.
- பன்மைத்துவத்தின் அவசியம்:
- இன்று உலகம் முழுவதும் இருக்கிற புகழ்பெற்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் பேசப்படுகிற ஒரு முக்கிய கருத்தாக்கம் ‘அறிவியலில் பன்மைத்துவம்’. அறிவியல் துறைகளில் நோபல் பரிசு பெற்ற பல்வேறு அறிவியலாளர்கள் ‘அறிவியலில் பன்மைத்துவம்’ என்பது அறிவியல் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும், தங்களுடைய ஆய்வகங்களில் இப்பன்மைத்துவத்தை எட்டுவதற்காக எடுக்கும் முயற்சியைப் பற்றியும் பேசும் காணொளிகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
- மத்திய அரசின் அறிவியல் - தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்த 2025ஆம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் நாள் கருத்தாக்கமான அறிவியலில் புதுச் சிந்தனைக்கு ‘அறிவியலில் பன்மைத்துவம்’ மிக முக்கியம். இந்திய நாட்டில் இருக்கும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் இந்தப் பன்மைத்துவம் இருக்கிறதா என்று கேட்டால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. நாடு விடுதலை பெற்று 78 ஆண்டுகள் ஆகியும் நமது நாட்டின் வெவ்வேறு தரப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் எட்டப்படவில்லை என்பது கசப்பான உண்மை.
- இது ஏதோ பத்து இருபது வருடங்களில் ஏற்பட்ட பிரச்சினை என்று சொல்லிவிட முடியாது. சுதந்திர இந்தியா அறிவியல் தொடர்பான ஆராய்சிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்த காலத்திலிருந்தே, கவனித்து சரிசெய்யப்படாமல் விட்ட குறைபாடு. இது குறித்து 2023ஆம் ஆண்டு ‘நேச்சர்’ இதழில் ‘இந்திய அறிவியலின் பன்மைத்துவம்-சாதித் தடைகள்’ என்கிற தலைப்பில் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியானது. இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள தரவுகள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்டவை (2019-2020).
யாருக்குப் பிரதிநிதித்துவம்?
- ஐஐடி போன்ற அறிவியல் உயர் ஆராய்ச்சி நிறுவனங்களில், அனைத்துச் சாதியினரின் பிரதிநிதித்துவம் எப்படி இருக்கிறது? முனைவர் படிப்பில் கிட்டத்தட்ட 2 சதவீதமும், உதவிப் பேராசிரியர்களில் 0.8 சதவீதமும், இணைப் பேராசிரியர்களில் 0.5 சதவீதத்துக்குக் குறைவாகவும் பழங்குடியினர் இருக்கிறார்கள். பேராசிரியர்களில் ஒருவர்கூடப் பழங்குடியினர் இல்லை. ஆனால், அனைத்துப் பிரிவுகளிலும் இந்திய அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையின்படி பழங்குடியினர் 7.5 சதவீதம் இருக்க வேண்டும்.
- அதேபோல், இந்த உயர் ஆராய்ச்சி நிறுவனங்களில் முனைவர் ஆராய்ச்சிப் படிப்பில் 10 சதவீதம் பேர்தான் பட்டியல் சாதியினர். உதவிப் பேராசிரியர்களில் 2.5 சதவீதமும், இணைப் பேராசிரியர்களில் 2 சதவீதமும், பேராசிரியர்களில் 0.5 சதவீதத்துக்குக் கீழேயும் பட்டியல் சாதியினர் இருக்கிறார்கள். ஆனால், பட்டியல் சாதி மாணவர்கள் மேற்கண்ட அனைத்துப் பிரிவுகளிலும் 15% இருக்க வேண்டும்.
- அதேபோல், அனைத்துப் பிரிவிலும் இடஒதுக்கீட்டின்படி இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 27.5% இருக்க வேண்டும். ஆனால், ஆராய்ச்சிப் படிப்பில் 25 சதவீதம், உதவிப் பேராசிரியர்களில் 6 சதவீதம், இணைப் பேராசிரியர்களில் 4 சதவீதம்தான் இதர பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதித்துவம் இருக்கிறது.
- குறிப்பாக, பேராசிரியர்களில் 1 சதவீதத்துக்கும் குறைவு. இதர பிற்படுத்தப்பட்டோர் முனைவர் படிப்பில் ஓரளவு இடஒதுக்கீட்டு சதவீதத்துக்கு அருகில் வந்தாலும், இணைப் பேராசிரியர், பேராசிரியர் பணியில் மிக மோசமான பின்னடைவு இருக்கிறது.
- ஐஐடி-யில் ஒரு பழங்குடியின, பட்டியல் சாதி அல்லது இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர் முனைவர் பட்டம் முடித்தாலும், அதே உயர் கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களாகப் பணியில் சேர்வதில் சிக்கல் இருக்கிறது என்பதையே இந்தத் தரவுகள் காட்டுகின்றன. ஆனால், பொதுப் பிரிவினரைப் பொறுத்தவரையில், முனைவர் பட்டப் படிப்பில் 63 சதவீதம், உதவிப் பேராசிரியர்களில் 90.7 சதவீதம், இணைப் பேராசிரியர்களில் 93.5 சதவீதம், பேராசிரியர்களில் கிட்டத்தட்ட 98.5 சதவீதமும் இருக்கிறார்கள்.
தொடரும் பின்னடைவு:
- இந்திய அளவில் புகழ்பெற்ற டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியர்கள் அனைவரும் 100% பொதுப் பிரிவினர். இந்த நிறுவனத்துக்கு ‘சிறப்பு ஆராய்ச்சி நிறுவனம்’ என்கிற அந்தஸ்து அரசால் வழங்கப்பட்டு, இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி-யில் உதவிப் பேராசிரியர்கள் - இணைப் பேராசிரியர் பணிகளில் 90 சதவீதத்துக்கு மேல் பொதுப் பிரிவினரும், மீதமுள்ள குறைந்த சதவீதத்தில்தான் மற்ற பிரிவினர் இருக்கின்றனர். பேராசிரியர் பணியில் 96%-க்கு மேல் பொதுப் பிரிவினர் இருக்கின்றனர்.
- ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உதவி / இணை / பேராசிரியர் பணியிடங்களில் ஓரளவு பிரதிநிதித்துவம் இருக்கிறது. அதேபோல் நாடு முழுக்க இருக்கும் முதல் தர ஐஐடி-க்களில் 90 சதவீதத்துக்கும் மேல் பொதுப் பிரிவினர்தான் அனைத்துப் பணிகளிலும் இருக்கின்றனர். மத்திய தர ஐ.ஐ.டி-க்களில் ஓரளவு அனைத்து வகுப்பினரின் பிரதிநிதித்துவம் இருக்கிறது. அதுவும் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட இடஒதுக்கீட்டு அளவில் அல்ல.
- இந்தியத் தொழில்நுட்ப அமைச்சகத்தால் 2016-2020 இடைப்பட்ட ஆண்டுகளில் வழங்கப்பட்ட முதுமுனைவர் இன்ஸ்பயர் ஆராய்ச்சித் தொகையைப் பெற்றவர்களில் 80% பேருக்கு மேல் பொதுப் பிரிவினர், 12% இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், 6% பட்டியல் சாதியினர், 0.7% பேர் பழங்குடியின மாணவர்கள். அதேபோல் சிறுபான்மைப் பிரிவினரின் பிரதிநிதித்துவமும் மிக மோசமான நிலையில் இருக்கிறது. மேலும், நாடு முழுக்க இருக்கும் முக்கியப் பல்கலைக்கழகங்களில் கலைப் பாடங்களைவிட, அடிப்படை அறிவியல் பாடங்களில் மிகக் குறைவான பட்டியல் சாதி / பழங்குடி மாணவர்கள் படிக்கிறார்கள் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
- இந்திய அறிவியல் ஆராய்ச்சியில் பன்மைத்துவம் எந்தளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது என்பதையே இந்தத் தரவுகள் காட்டுகின்றன. நாடாளுமன்றத்திலும், பொதுவெளியிலும் இப்பிரச்சினை குறித்து வலுவான குரல்கள் ஒலித்துவருகின்றன. மத்திய அரசு, அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த, அவ்வப்போது சில சுற்றறிக்கைகளை மட்டும் இந்த அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அனுப்புகிறது. இது போதாது.
- உலக அளவில் அறிவியல் - தொழில்நுட்பத்தில் தலைமைத்துவத் திறனை இந்தியா அடைய விரும்பினால், முதலில் அறிவியலில் ஒருமைத்துவத்தை உடைத்துப் பன்மைத்துவத்தை அடைய வேண்டும். அப்போதுதான் அறிவியல் துறையில் கடைக்கோடி இந்தியரின் பங்களிப்பும் இருக்கும். இயற்கையின் பல்வேறு கேள்விகளுக்குப் பல்வேறு கோணங்களில் பதில்களைத் தேட முடியும்!
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 02 – 2025)