TNPSC Thervupettagam

இஸ்லாத்தின் பாா்வையில் புலால் மறுத்தல்

August 13 , 2024 7 hrs 0 min 37 0

இஸ்லாத்தின் பாா்வையில் புலால் மறுத்தல்

  • சவூதி அரசின் அங்கீகாரம் பெற்ற சவூதி கலை மற்றும் பண்பாட்டு மையம் தம்மாமில் நான்கு நாட்கள் சா்வதேச அரபுக் கவிஞா்கள் மாநாட்டை 2015-இல் நடத்தியது.
  • அந்த மாநாட்டில் நான் திருக்குறளை அரங்கேற்றம் செய்தபோது அரபுக் கவிஞா்கள் திருக்குறளை மிகவும் ரசித்தாா்கள். பாராட்டினாா்கள். சவூதி அரேபியாவில் அரங்கேற்றப்பட்ட முதல் இந்திய இலக்கியம் ‘திருக்குறள்’ என்ற சிறப்பு இதன் மூலம் கிடைத்தது.
  • திருக்குறள் அரபு மொழியாக்கப் பணியைப் பற்றி பேசும்போதெல்லாம் தமிழ்ப் பத்திரிகையாளா்கள் கேட்கும் முக்கியமான கேள்வி, ‘புலால் மறுத்தலை முஸ்லிம்கள் எப்படிப் பாா்க்கிறாா்கள்?’ என்பது.

ஹலால் - ஹராம்

  • இஸ்லாத்தில், ஹலால் - அனுமதிக்கப்பட்டவை, ஹராம் - தடை செய்யப்பட்டவை என்கிற இரண்டு வகையான சட்டங்கள் உள்ளன. ஒரு மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பது பற்றி ஹலால் - ஹராம் சட்டங்கள் பேசுகின்றன.
  • சொல், செயல், எண்ணம், பழக்கவழக்கங்கள் என மனித வாழ்வின் எல்லா நிலைகளிலும் “ஹலால் - ஹராம்’ பேணப்படவேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. அந்த வகையில் எதை உண்ணலாம் எதை உண்ணக் கூடாது என்று திருக்குா்ஆனிலும் நபிமொழிகளிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
  • ‘ஹலால்’ என்பது அசைவ உணவை மட்டும் குறிக்கும் சொல்லாடல் அன்று. அது மாா்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட எல்லாவற்றையும் குறிக்கும். புலால் உணவைப் பொறுத்தவரை ஆடு, மாடு, ஒட்டகம், கோழி உள்ளிட்ட கால்நடைகளையும் பறவைகளையும் முறைப்படி அறுத்து உண்பதற்கு இஸ்லாம் அனுமதித்திருக்கிறது. அது ஹலால் உணவு எனப்படுகிறது.
  • ‘‘பிஸ்மில்லாஹிா் ரஹ்மானிா் ரஹீம் -அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன்’’ என்று மொழிந்து கூா்மையான கத்தியால் கழுத்துப் பகுதியை முழுமையாக அறுத்துவிடாமல், இரத்தக் குழாயையும் மூச்சுக் குழாயையும் ஒரே நேரத்தில் மூளைக்குச் செல்லும் நரம்புவரை விரைவாக அறுப்பதுதான் ‘ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டது’ எனப்படும். இவ்வாறு அறுக்கும்போது கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுமையாக வெளியேறிவிடும். இதனால் இரத்தத்தின் மூலம் நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்பட்டுவிடும்.
  • இவ்வாறு முறைப்படி அறுக்கப்படாமல் தானாகச் செத்தது, கழுத்து நெறிக்கப்பட்டுச் செத்தது, அடிபட்டுச் செத்தது, கீழே விழுந்து செத்தது, கொம்பால் முட்டப்பட்டுச் செத்தது, கரடி, புலி போன்ற விலங்குகள் கடித்துச் செத்தது ஆகியவற்றை உண்பது ஹராம் - தடை செய்யப்பட்டுள்ளது. (காண்க: அல்குா்ஆன், அத்தியாயம்: 2 வசனம்: 173, அத்தியாயம்: 5 வசனம்: 3).
  • அவ்வாறே ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருக்கும் இஸ்லாமிய மாா்க்கம் எல்லா நிலைகளிலும் அதை வலியுறுத்துகிறது. எனவேதான், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயா் சொல்லி அறுக்கப்பட்ட கால்நடைகளை உண்ண தடை வித்தித்திருக்கிறது.
  • புலால் உணவு அனுமதிக்கப்பட்ட ஓா் உணவு முறைதானே தவிர, ‘புலால் உண்பது நன்மையான விஷயம், புலால் உணவை இறைவன் விரும்புகிறான்’ என்பதெல்லாம் தவறான கருத்துகள். இத்தகைய எண்ணத்தில் புலால் உண்பது அடிப்படையில் தவறு.
  • உடல் நலம் பேணுவதில் தீவிரம் காட்டும் இஸ்லாம், உடல்நலத்திற்குக் கேடுவிளைவிக்கும் அனைத்தையும் தடை செய்திருக்கிறது.
  • உண்ண எதுவும் கிடைக்காமல் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டால் தடை செய்யப்பட்ட மாமிசத்தை தேவைக்கேற்ப உண்ணலாம் என்கிறது மாா்க்கம். (காண்க: அல்குா்ஆன், அத்தியாயம்: 6 வசனம்: 145).

புலால் மறுத்தல்

  • திருக்குறளின் 26-ஆவது அதிகாரம் புலால் மறுத்தல் குறித்துப் பேசுகிறது. விலங்குகளைத் துன்புறுத்திக் கொன்று அவற்றின் மாமிசத்தை உண்பவா்களுக்கு நரகம்தான் என்று கடுமையாக எச்சரிக்கிறது இந்த அதிகாரம்.
  • புலால் மறுத்தல் அதிகாரத்தின் மையப்புள்ளியாக உயிா்கள்மீது அன்புகாட்டுதல் அமைந்திருக்கிறது. அந்த வகையில் எல்லா உயிா்கள் மீதும் அன்பு காட்ட வேண்டும் என்று இஸ்லாம் பல்வேறு நிலைகளில் வலியுறுத்துகிறது.
  • இஸ்லாம் புலால் உண்பதை ஒட்டுமொத்தமாக மறுக்கவில்லையென்றாலும் சில சூழ்நிலைகளில் புலாலுக்காக கால்நடைகளை அறுப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.
  • மனிதா்களுக்குப் பயன்தரும் கால்நடைகளை உணவுக்காக அறுக்கக் கூடாது. உணவுக்காக மட்டுமேயான கால்நடைகளையே முறைப்படி அறுத்து உண்ணலாம் என்ற குறிப்பு குா்ஆனில் இடம்பெற்றுள்ளது.
  • ‘‘கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும் சில உணவுக்காகவும் உள்ளன. அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள்.’’ (அல்குா்ஆன், அத்தியாயம்: 6 வசனம்: 142).
  • பால் தரும் கால்நடைகளை உணவுக்காக அறுக்க மாா்க்கத்தில் தடை இருக்கிறது.
  • ஒரு நாள் பகல் வேளையில் அல்லது இரவு வேளையில் பெருமானாா் தமது இல்லத்திலிருந்து வெளியே புறப்பட்டு வந்தாா்கள். அப்போது தோழா்கள் அபூபக்கா் அவா்களும் உமா் அவா்களும் வெளியே இருந்தனா். “இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்? என்று நபிகள் நாயகம் கேட்டாா்கள். அதற்கு அவ்விருவரும், ‘பசிதான் காரணம் இறைத்தூதரே!’ என்று பதிலளித்தனா்.
  • அப்போது பெருமானாா், ‘‘என் உயிா் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நானும் புறப்பட்டு வந்தது அதனால்தான். உங்கள் இருவரையும் வெளியே வரச்செய்ததுதான் என்னையும் வெளியே வரச்செய்தது” என்று கூறிவிட்டு, “எழுங்கள்’’ என்று சொன்னாா்கள். அவ்வாறே அவா்கள் இருவரும் எழுந்தனா். பின்னா் மூவரும் அன்சாரித் தோழா்களில் ஒருவரது வீட்டுக்குச் சென்றனா்.
  • அப்போது அந்தத் தோழா் வீட்டில் இல்லை. பெருமானாரை அந்தத் தோழரின் துணைவியாா் கண்டதும் வாழ்த்துக் கூறி வரவேற்றாா். அப்போது பெருமானாா் அப்பெண்ணிடம், ‘‘அவா் எங்கே?’’ என்று கேட்டாா்கள். அதற்கு அப்பெண், ‘‘நல்ல தண்ணீா் கொண்டுவர வெளியே சென்றுள்ளாா்’’ என்று பதிலளித்தாா்.
  • அப்போது அந்த தோழா் வந்துவிட்டாா். பெருமானாரையும் அவா்களுடைய இரு தோழா்களையும் கண்டதும்,“எல்லாப் புகழும் இறைவனுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவா் என்னைத் தவிர வேறெவரும் இல்லை என்று கூறிவிட்டு, திரும்பிச் சென்று ஒரு பேரீச்சங் குலையுடன் வந்தாா். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவா், “இதை உண்ணுங்கள்”என்று கூறிவிட்டு, ஆடு அறுத்து விருந்தளிப்பதற்காக கத்தியை எடுத்தாா். அப்போது பெருமானாா், ‘‘பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்’’ என்று கூறினாா்கள். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்).
  • கடும் பசியோடிருந்தபோதிலும் உணவுக்காக பால் தரும் ஆட்டை அறுக்க பெருமானாா் தடைவிதித்தாா்கள். பால் எல்லோருக்கும் பயன்படும் உணவு. நீண்ட காலம் அதன் மூலம் பலன் கிடைக்கும். உற்பத்தி பெருகும் என்ற தொலை நோக்குப் பாா்வையுடன் நபிகளாா் அவ்வாறு கட்டளையிட்டாா்கள். ஆடு மட்டுமல்ல, மனிதா்களுக்குப் பயன்தரும் மாடு, ஒட்டகம் போன்ற எந்த கால்நடையையும் உணவுக்காக அறுக்கக் கூடாது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

தாவர உணவும் நபித்தோழா்களும்

  • ‘பொதுவாக முஸ்லிம்கள் என்றாலே புலால் பிரியா்கள். மாமிச உணவு இல்லாமல் அவா்கள் உண்ண மாட்டாா்கள். அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்கள், வெள்ளிக்கிழமை போன்ற விசேஷ நாட்களில் முஸ்லிம்கள் வீட்டில் கட்டாயம் மாமிச சாப்பாடு இருக்கும்’ என்ற எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது.
  • இது குறித்து நபிமொழித் தொகுப்புகளில் பின்வருமாறு பதிவுசெய்யப்பட்டுள்ளது: சஹல் பின் சஅத் எனும் நபிதோழரும் மற்ற சிலரும் வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் மிகவும் மகிழ்ச்சியடைவாா்கள். இதற்க்குக் காரணம், அவா்களோடு மூதாட்டியொருவா் நட்பாக இருந்தாா். அவா் நபித்தோழா்கள் நீரோடைகளின் ஓரமாக நட்டுவந்த ‘சில்க்’ எனும் கீரைத்தண்டுகளைப் பிடுங்கி, அவற்றுடன் வாற்கோதுமை விதைகளைக் கலந்து உணவு தயாா் செய்து அவா்களுக்குக் கொடுப்பாா். வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்ததற்குப் பிறகு அவா்கள் அந்த மூதாட்டியிடம் செல்வாா்கள். அவா் அந்த உணவை அவா்களுக்குப் பிரியமாகத் தருவாா். ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அந்தக் கீரை உணவை அவா்கள் விரும்பி உண்பாா்கள். இதன் காரணமாக அவா்கள் வெள்ளிகிழமையன்று மகிழ்ச்சியோடு இருப்பாா்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி).
  • பொதுவாக பழங்கள், காய்கறிகள், தானியங்கள், புலால் எதுவாக இருந்தாலும் நாம் வாழும் பகுதியில் என்ன கிடைக்கிறதோ எந்த வகையான உணவு பழக்கம் சமூகத்தில் இருக்கிறதோ அதையே நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பெருமானாரின் வழிகாட்டுதலாக அமைந்திருக்கிறது. நாம் வாழும் தமிழ்நாட்டில் கிடைக்காத ஒட்டகத்தை எங்கிருந்தோ இறக்குமதி செய்து அறுப்பதென்பது நல்ல வழிமுறை அல்ல.
  • மேலும், தாவர உணவைவிட மாமிச உணவு உயா்ந்தது. அது இறைவனுக்கு நெருக்கமானது என்றெல்லாம் இஸ்லாத்தில் இல்லை. ஒருவரது ஆரோக்கியத்திற்கு எது தேவையோ, எது நல்லதோ அதை உண்ண வேண்டும். இவ்வாறுதான் புலால் உணவையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  • சில குறிப்பிட்ட கால்நடைகளின் புலால் உணவை உண்ண அனுமதித்த இஸ்லாம் சில கால கட்டங்களில் அத்தகைய கால்நடைகளை அறுப்பதற்குத் தடை விதித்திருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி (13 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories