TNPSC Thervupettagam

உண்மை கண்டறியும் சோதனை: குற்றவாளிகளைக் கண்டறியுமா?

August 30 , 2024 5 hrs 0 min 17 0

உண்மை கண்டறியும் சோதனை: குற்றவாளிகளைக் கண்டறியுமா?

  • கொல்கத்தா பெண் பயிற்சி மருத்​துவர் கொலை வழக்கில் கைது செய்​யப்​பட்​டுள்ள நபர், குற்றம் தொடர்பான உண்மை​களைச் சொல்ல மறுப்​ப​தால், விசாரணையை நிறைவுசெய்ய முடிய​வில்லை என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்​கின்றன. எனவே, குற்றம்​சாட்​டப்​பட்டவரை உண்மை கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.
  • இதையடுத்து அவரிடம் பரிசோதனையும் நடத்தப்​பட்​டிருக்​கிறது. உண்மை கண்டறியும் சோதனை என்பது குற்றவாளி பொய் சொல்கிறாரா என்பதைக் கண்டறிவதுடன், தவறான தகவல்​களைச் சொல்லி வழக்கைத் திசைதிருப்பு​கிறாரா என்பதையும் அறிய உதவும். இந்தியாவில் இப்படியான சோதனைகள் பெரும்​பாலும் நீதிமன்ற அனுமதியைப் பெற்றே செய்யப்​படு​கின்றன.

‘பாலிகிராப்’ பரிசோதனை:

  • ‘பாலிகிராப்​’ (Polygraph) பரிசோதனை​யில், விசாரணை செய்யப்​படும் நபரின் உடலில் பொருத்​தப்​பட்​டுள்ள கண்காணிப்புக் கருவிகள் மூலம், அவரது ரத்த அழுத்தம், நாடித்​துடிப்பு, மூச்சின் வேகம், தோலின் வெப்பநிலை போன்றவை கண்காணிக்​கப்​படும். விசாரணை​யின்போது அவர் பொய் சொன்னால் ஏற்படும் பதற்றத்​தினால் மேற்கூறிய உடலியக்க அளவுகளில் மாற்றம் ஏற்படுவதை வைத்து உண்மைத்​தன்மை பரிசோ​திக்​கப்​படு​கிறது.
  • குற்றம் செய்யாத நபர்கூட விசாரணை​யின்போது பதற்றமாக இருக்க வாய்ப்​பிருப்​ப​தால், இதன் நம்பகத்​தன்மை இன்னும் கேள்விக்​குறி​யாகவே உள்ளது. இருப்​பினும் எளிய பரிசோதனை என்கிற முறையில், இன்னும் இந்தியாவில் பயன்படுத்​தப்​பட்டு வருகிறது.

உளவியல் பிரேதப் பரிசோதனை:

  • பிரேதப் பரிசோதனை என்பது இறந்த நபரின் சாவுக்கான காரணத்தை உடற்கூறாய்வின் மூலம் கண்டறியும் முறையாகும். ஆனால், உளவியல் பிரேதப் பரிசோதனை (Psychological autopsy) என்பது இறந்தவரின் மனநிலை அவரது மரணத்​துக்கு முன்பு எப்படி இருந்​திருக்கும் என்று கூறாய்வு செய்யும் உளவியல் பரிசோதனை​யாகும்.
  • இதில் இறப்புக்கு முன்பும் முந்தைய சில நாள்களிலும் இறந்தவரின் மனநிலை, சிந்தனை ஓட்டம், நடவடிக்கைகள், உணர்வுகள் எப்படி இருந்தன என்று மனநல மருத்​துவர்கள், உளவியல் நிபுணர்கள், சட்டம் சார்ந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் ஆராயப்​படும். கொல்லப்பட்ட அல்லது தற்கொலை செய்து​கொண்ட நபரின் குடும்ப உறுப்​பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், அவரைச் சமீபத்தில் சந்திக்க நேர்ந்த மற்ற நபர்கள், நாள்குறிப்பு, கைபேசி, கடிதங்கள் ஆகியவற்றின் மூலம் சேகரிக்​கப்​படும் தகவல்​களின் அடிப்​படையில் இறந்தவர் கடைசி சில நாள்களில் என்ன மனநிலையில் இருந்தார் என்பதை அறிந்​து​கொள்​வதுதான் இதன் நோக்கம்.
  • இதை வைத்தே அந்த நபர் அவராகவே முடிவுசெய்து, தற்கொலை செய்து​கொண்​டாரா, தற்கொலை செய்யத் தூண்டப்பட்டுள்ளாரா அல்லது கொலை செய்யப்​பட்​டுள்ளாரா என்பதைக் குறிப்​பிட்ட அளவுவரை அறிந்​து​கொள்ள முடியும்.
  • மதுரையைச் சேர்ந்த மனநல மருத்​துவர் வெங்கோப ராவ், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்​துவர் பொன்னுதுரை போன்றோர் இதில் புகழ்​பெற்​றவர்கள். சில நேரம், கொலைக் குற்றம்சாட்டப்பட்ட நபர் அதை ஒப்புக்​கொள்ள மறுக்கும் வேளைகளில், கொலைக்கு முன்பு அவரின் மனநிலை, நடவடிக்கைகள் எப்படி இருந்தன என்பதை மேற்கூறியது போல் ஆராய்வதன் மூலமும் விசாரணைக்கு வலுச்சேர்க்க முடியும்.
  • குற்றவாளி​களின் சுயவிவரச் சோதனை (Offenders profile) என்கிற பெயரில் காவல் துறையில் இது பின்பற்​றப்​படு​கிறது. இன்றைக்குப் பெரும்​பாலான கொலைக் குற்றங்கள் / தற்கொலைகளுக்கான காரணங்கள் கைபேசி, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்வதன் மூலமாகவே கண்டறியப்​படு​வ​தால், ‘டிஜிட்டல் பிரேதப் பரிசோதனை’ (Digital autopsy) என்றும் அவற்றை அழைக்​கலாம்.

மூளை வரைபடம்:

  • ஒரு நபர் குற்றம் செய்ததற்கான சாட்சி​யங்கள் இருந்​தா​லும், அதை அவர் மறுக்​கும்போது மூளை வரைபடப் பரிசோதனை (Brain mapping) உதவியாக இருக்​கும். இதில் ஒருவர் என்ன பொய் சொல்கிறார் என்பதைக் கண்டறிய இயலாது; ஆனால், அவர் திரித்துச் சொல்கிறார் அல்லது பொய் சொல்கிறார் என்பதைக் கண்டறிய முடியும்.
  • இப்பரிசோதனை​யின்போது அந்நபர் அறிந்​திருக்க வாய்ப்​பிருப்​ப​தாகக் கருதப்​படும் - வழக்குக்குச் சம்பந்​தப்பட்ட - சொற்கள், சம்பவங்கள், பெயர்கள் போன்றவை காதொலிப்பான் (Headphones) மூலம் அவருக்கு ஒலிக்​கவைக்​கப்​படும். பின்பு அந்நபர் அறிந்​திருக்க வாய்ப்​பில்லாத - விசாரணையில் திரட்​டப்பட்ட சம்பவங்கள், சொற்கள் ஒலிக்​க வைக்​கப்​படும்.
  • இவ்விரண்​டின்​போதும் அவரது மூளையின் மின்னணுச் செயல்​பாடுகள், தலையின் வெளிப்புறத்தில் பொருத்​தி​யுள்ள மின்முனை​களின் (Electrodes) மூலம் கணினியில் அலைகளாக மாற்றப்​பட்டு ஆராயப்​படும். ஏற்கெனவே பரிச்​சயமான சம்பவங்​களைக் கேள்விப்​படும்போது மூளையின் மின்னணுச் செயல்​பாடு​களில் ஏற்படும் மாற்றங்களை, பரிச்​சயமில்லாத வார்த்​தைகளைக் கேட்கும்போது ஏற்படும் மாற்றங்​களுடன் ஒப்பிடும்போது வித்தி​யாசமாக இருக்​கும்.
  • குற்றம் சம்பந்​தப்பட்ட பரிச்​சயமான சம்பவங்களை அவர் வாய்வழியே மறுத்​தா​லும், மூளையின் செயல்​பாடுகள் அதை ஆமோதிக்​கும். இதன் அடிப்​படை​யில், அந்த நபர் குற்றத்தை மறைக்​கிறாரா இல்லையா என்பதைப் பிரித்தறிய முடியும்.

குரல் அடுக்குப் பகுப்​பாய்வு:

  • மனிதர்களின் குரலில் ஏற்படும் மிக நுட்பமான அதிர்வெண் மாற்றங்கள், ஒருவர் அதைப் பேசும்போது இருக்கும் அவரின் மனநிலை, உணர்ச்சி நிலை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் என்கிற கோட்பாட்டின் அடிப்​படையில் உருவாக்​கப்​பட்​டதுதான் குரல் அடுக்குப் பகுப்​பாய்வு (Layered Voice Analysis).
  • ஒருவர் பொய் சொல்லும்போது குரலில் நடுக்கம் ஏற்படுவது இயல்பாகக் காணப்​படும் ஒரு மாற்றம். இந்நவீனப் பரிசோதனை மனிதக் காதுகளால் பகுத்தறிய முடியாத குரலின் நுண் மாற்றங்​களைக்​கூடப் பகுத்​தறியும் வகையில் உருவாக்​கப்பட்ட மென்பொருள் செயலியின் மூலம் மேற்கொள்​ளப்​படு​கிறது.
  • விசாரணை​யின்​போது, குற்றம்​சாட்​டப்பட்ட நபரின் பதில்களை நேரடி​யாகவோ அல்லது பதிவுசெய்​யப்பட்ட குரலாகவோ கணினி செயலிக்குள் செலுத்​தினால், எந்த இடத்தில் அவர் சூழ்ச்​சித்திறத்​துடன் பேசுகிறார் அல்லது பொய் சொல்கிறார் என்பதை அவரது குரலின் நுண் மாற்றங்​களைப் பகுப்​பாய்வு செய்து செயலி காட்டிக்​கொடுத்து​விடும்​.

நார்கோ பகுப்​பாய்வு:

  • குற்றம்​ சாட்​டப்பட்ட நபர் முழு சுயநினை​வுடன் இருக்​கும்போது உண்மையை எளிதில் மறைக்க முடியும். இந்த நார்கோ பகுப்​பாய்வில் (Narcoanalysis) அறுவைசிகிச்​சை​யின்போது பயன்படுத்​தப்​படும் ‘பென்​டோ​தால்’ என்கிற மயக்கமருந்தை உட்செலுத்திச் செய்யப்​படு​வதால் ‘பென்டோதால் விசாரணை’ (Pentothal interview) என்றும் அழைக்​கப்​படு​கிறது.
  • இதில் சுயநினை​வுக்கும் முழு மயக்க நிலைக்கும் இடைப்பட்ட ‘ஹிப்​னாசிஸ்’ என்கிற மயக்க நிலையில் விசாரணை மேற்கொள்​ளப்​படும். இந்த அரைமயக்க நிலையில் பரிசோதனை செய்யப்​படும் நபரால் பேச முடியும், ஆனால் அவர் பேசுவதைத் தணிக்கை செய்து பேசும் திறன் குறைந்​து​விடு​வதால் உண்மையை மறைக்​காமல் சொல்லும் வாய்ப்பு அதிகம்.
  • இதை அனுபவம் மிக்க மனநல மருத்​துவர், மயக்க மருத்​துவர் கொண்ட குழுவால் மட்டுமே செய்ய முடியும். நார்கோ பகுப்​பாய்வு, சட்டம் சார்ந்த மனநலத் தேவைகளுக்காக மட்டுமல்​லாது, நனவிலி மனதின் பிரச்​சினை​களால் ஏற்படும் நரம்பியல் கோளாறுகளைச் சரிசெய்யும் சிகிச்சை முறையாகவும் பயன்படுத்​தப்​பட்டு வருகிறது.

சட்ட முக்கி​யத்து​வமும் நம்பகத்​தன்​மையும்:

  • மேற்கூறிய உண்மை கண்டறியும் பரிசோதனைகள் நூறு சதவீத நம்பகத்​தன்மை கொண்டவை அல்ல. இவற்றின் மூலம் குற்றம்​சாட்​டப்பட்ட நபர் பொய் சொல்வதாக ஆணித்​தரமாக நிரூபிக்க முடியாது. எனினும், வழக்கு விசாரணையின் மற்ற அம்சங்​களோடு இதை ஒப்பிட்டு, ஒரு வலுச்சேர்க்கும் முறையாகப் பயன்படுத்த முடியும். இந்திய அரசமைப்புக் கூறு 20(3) இன்படி விசாரிக்​கப்​படும் நபரின் ஒப்புதல் இதற்கு அவசியம்.
  • நீதிமன்ற ஆணையும் அவசியம். மற்ற எல்லாப் பரிசோதனை முறைகளை​யும்​விடக் குரல் அடுக்குப் பகுப்​பாய்வு முறை நம்பகத்​தன்மை கொண்ட​தாக​வும், அறிவியல்​பூர்வமாக நிரூபிக்​கப்​பட்​ட​தாகவும் உருவெடுத்து​வரு​கிறது. இதில் உடலை எந்த வகையிலும் தொடாமல், விசாரணைக்கு உள்பட்ட நபரின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்த முடியும். 2002இல் குஜராத்தில் நடந்த கலவரங்​களில் குற்றம்​சாட்​டப்பட்ட ஏழு பேர் வடோதரா மருத்​துவக் கல்லூரியில் நார்கோ பகுப்​பாய்​வுக்கு உட்படுத்​தப்​பட்டது முக்கியச் செய்தி​யாகப் பேசப்​பட்டது.
  • அதற்குப் பின்பு, தேசிய முக்கி​யத்துவம் வாய்ந்த வழக்குகளில் இம்முறையைப் பயன்படுத்துவது அதிகரித்​துள்ளது. நிரபரா​தி​களைக் குற்றவாளி​களாகக் காண்பிக்கும் தவறு ஒரு சதவீதம்கூட இல்லாமல், உண்மைக் குற்றவாளிகளை மிகத் துல்லிய​மாகக் கண்டறியும் அளவுக்கு மேம்படுத்​தப்பட்ட பரிசோதனைகள் கண்டு​பிடிக்​கப்​பட்டால் காவல் துறைக்கும் சட்டத் துறைக்கும் மிகப்​பெரிய வரப்பிரசாதமாக அமையும். குற்றச்​செயல்​களின் எண்ணிக்​கையும் கணிசமாகக் குறையும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories