TNPSC Thervupettagam

எல்லை மீறும் வேலை நேரம்

September 27 , 2024 6 hrs 0 min 12 0

எல்லை மீறும் வேலை நேரம்

  • அன்னா செபாஸ்​டினுக்குத் தெரியாது, தன் வாழ்வு இப்படி முடிந்து போகும் என்று. 26 என்பது சாகும் வயதில்லை. அன்னா​வுக்குச் சில கனவுகள் இருந்தன. பட்டயக் கணக்காளராக (chartered accountant) வேண்டும். அவரால் ஆக முடிந்தது. அதற்கான தேர்வு​களில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். மதிப்பு​மிக்க வேலை ஒன்றில் சேர வேண்டும்.
  • சேர்ந்​தார். பேர் பெற்ற கணக்காய்வு நிறுவனமான ‘ஏர்ன்ஸ்ட் & யங்’கில் வேலை கிடைத்தது. பட்டயம் பெறும் விழாவில் பெற்றோர் பங்கேற்க வேண்டும் என்று விரும்​பினார். அதுவும் நடந்தது. அதற்காகத் தனது பெற்றோரைக் கொச்சியி​லிருந்து புணே நகருக்கு வரவழைத்​தார். அந்த விழா ஜூலை 7 இல் நடந்தது. அது விடுமுறை நாள், ஞாயிற்றுக்​கிழமை. ஆனாலும் அரங்குக்கு அன்னாவும் பெற்றோரும் தாமதமாகத்தான் போயினர். ஏன்?
  • அன்னா தொடர்ந்து தனது மடிக்​கணினி​யிலும் திறன்​பேசி​யிலும் அலுவலக வேலைகளை மேற்கொண்டபடி இருந்​தார். தங்கள் மகளுடன் கழித்த கடைசி நாள்கள் அவை என அந்தப் பெற்றோருக்கு அப்போது தெரியாது. உண்ணா​மலும் உறங்காமலும் பகலிரவாகப் பணியாற்றினார் அன்னா.
  • அதீத வேலைப்பளு அவரை உடலாலும் மனத்தாலும் உணர்வாலும் பிழிந்​தெடுத்தது. ‘இந்த வேலை வேண்டாம் மகளே’ என்றனர் பெற்றோர். அன்னா கேட்க​வில்லை. நம் சமூகத்தில் கடும் உழைப்பு மகிமைக்​குரியது. கார்ப்​பரேட் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்​களிடம் அந்த மகிமையை இன்னும் ஊதிப் பெரிதாக்கு​கின்றன. அதில் பலியான ஒருவர்தான் அன்னா.
  • சால மிகுத்துப் பெய்ததால் கடந்த ஜூலை 20 அன்று அந்த இளம் பெண்ணின் அச்சு முறிந்தது. மனமொடிந்த அன்னாவின் தாயார் நிறுவனத்தின் தலைவருக்குக் கடிதம் எழுதினார். அது செப்டம்பர் மத்தியில் சமூக வலைதளங்​களில் வெளியானது. கார்ப்​பரேட் நிறுவன ஊழியர்களை அழுத்தும் வேலை நுகத்தடி பேசுபொருளானது.

வீட்டை விழுங்​கியது வேலை:

  • வீட்டில் இருந்​த​படியே வேலை என்பது கரோனா காலத்​தில்தான் ஆரம்ப​மானது. தகவல் தொழில்​நுட்பத் துறைகளி​லும், பொறியியல், சட்டம், நிதி, மேலாண்மை சார்ந்த தொழில்​ துறை​களி​லும், அறிவியல், ஊடகம், கணக்காய்வு சார்ந்த துறைகளிலும் பணியாற்று​வோருக்கு இது வரமாக அமைந்தது.
  • இது பின்னாளில் சாபமாக மாறும் என்பதை அவர்கள் அறிந்​திருக்க​வில்லை. பெருந்​தொற்று விலகிய பிறகும் வீட்டிலிருந்து பணியாற்றுவது தொடர்ந்தது. சில நிறுவனங்கள் எல்லா நாள்களிலும் வீட்டிலிருந்து பணியாற்ற ஊழியர்களை அனுமதித்தன.
  • சில நிறுவனங்கள் வாரத்தில் இரண்டோ மூன்றோ நாள்கள் அலுவலகம் வந்தால் போதுமென்றன. இதனால் அலுவலகம் அளவில் சிறிதானது. வாடகையும் பராமரிப்புச் செலவினங்​களும் குறைந்தன. கூட்டங்​களும் உரையாடல்​களும் இணைய வழியில் நடைபெற்றன. ஊழியர்​களுக்குப் போக்கும் வரவும் மிச்ச​மாகின. இது இரு சாராருக்கும் வெற்றி என்றனர் நிறுவனத் தலைவர்கள். இல்லை, இது ஊழியர்​களுக்கு வெற்றியாக அமையவில்லை. அன்னாவின் கதை சொல்வது அதைத்​தான்.
  • இந்த நிறுவனங்கள் கர்ணனின் கவச குண்டலங்​களைப் போல ஊழியர்​களுக்கு மடிக்​கணினியும் திறன்​பேசியும் வழங்கின. இப்போது அகாலத்தில் மட்டுமில்லை, நல்ல பகல் வெளிச்​சத்​தில்கூட எந்த மேலாளரும் தம் ஊழியரைத் தொலைபேசியில் அழைப்​ப​தில்லை. மாறாக, மின்னஞ்​சல்​களும் குறுஞ்​செய்தி​களும் கால நேரமின்றி அனுப்​பப்​படும்.
  • படுக்கை​யில், சாப்பாட்டு மேசையில், கழிப்பறை​யில், பயணத்தில் அவை ஊழியர்​களைத் துரத்​தும். முடிக்க வேண்டிய அறிக்கைகளையும் கணக்கீடு​களையும் நிரல்​களையும் அவை நினைவூட்​டிக்​கொண்டே இருக்​கும். இவை ஊழியர்​களின் உள் மனதில் புகுந்து அச்சுறுத்​தும். அவர்களைக் குற்ற உணர்வுக்கு உள்ளாக்​கும். சிந்தையும் செயலும் வேலையைச் சுற்றியே சுழலும்.

நீண்ட நேரம் உழைப்​பதால் என்ன நடக்கும்?

  • சுரப்​பிகள் பாதிக்​கப்​படும். ரத்த அழுத்தம் மிகும். ரத்தச் சர்க்​கரை யின் அளவு மாறும். நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். அடிக்கொரு தரம் தலை வலிக்​கும். அடுத்த கட்டமாக இதயத்தின் ரத்த நாளங்கள் குறுகும். இதனால் இதயத்​துக்குச் செல்லும் ரத்தமும் குறையும்.
  • அடுத்து ரத்தம் குறைந்த பகுதியின் திசுக்கள் செயலிழக்​கும். சிலருக்கு இது மாரடைப்பு வரை போகக்​கூடும் என்கிறார்கள் மருத்​துவர்கள். இதுதான் அன்னா​வுக்கு நேர்ந்​திருக்கும் என்று கருதப்​படு​கிறது.நீண்ட நேரம் வேலை பார்ப்​பதால் உடற்ப​யிற்சி இல்லாமல் போகும். உறக்கம் கெடும். உணவு நேரம் பிறழும். துரித உணவு பழக்க​மாகும். காபியும் தேநீரும் அதிகமாகும். உடல் பருமன் கூடும். சிலரிடத்தில் மதுவும் புகையும் வந்துசேரும். சோர்வு, கவலை, அழுத்தம், சினம், படபடப்பு எல்லாம் அதிகமாகும். இது குடும்ப உறவுகளையும் பாதிக்​கும்.

எட்டு மணி நேர வேலை:

  • தொழிற் புரட்சி (1760-1840) இயந்திரங்​களைக் கொண்டு​வந்தது. உற்பத்தி பெருகியது. ஆனால், ஒவ்வொரு நாளும் 10 முதல் 16 மணி நேரம் வரை வேலை பார்க்​குமாறு தொழிலா​ளர்கள் நிர்ப்​பந்​திக்​கப்​பட்​டனர். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பெரும் போராட்​டங்​களைத் தொடர்ந்து 8 மணி நேர வேலை பல மேற்கு நாடுகளில் நடப்புக்கு வந்தது. மே முதல் நாள் தொழிலாளர் நாள் கொண்டாட்டம் இந்த வெற்றியைத்தான் குறிக்​கிறது. 1919இல் ஐ.நா.வின் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) இதை உறுப்பு நாடுகள் அனைத்​துக்​குமான பொதுத் தீர்மான​மாக்​கியது.
  • 2021இல் அதே ஐ.எல்.ஓ. உலகெங்கும் 48.8 கோடி மக்கள் ஒவ்வொரு வாரமும் 55 மணி நேரத்​துக்கும் கூடுதலாக உழைக்​கிறார்கள் என்றது. அதாவது, இவர்கள் ஒரு வாரத்தில் பணியாற்றுவது ஐந்து நாள்கள் எனில், நாளொன்​றுக்கு 11 மணி நேரத்​துக்குக் கூடுதலாக​வும், ஆறு நாள்கள் எனில், 9 மணி நேரத்​துக்குக் கூடுதலாகவும் பணியாற்றுகிறார்கள்.
  • 2016இல் மட்டும் கூடுதல் நேரம் பணியாற்றியதால் 7,45,000 பேர் இதய நோயால் உயிரிழந்​திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்​கிறது. இந்தியாவில் சரி பாதிக்கும் அதிகமான ஊழியர்கள் 55 மணி நேரத்​துக்கும் அதிகமாகப் பணியாற்று​வ​தாகச் சொல்கிறது இன்னொரு தரவு.

என்ன செய்ய​லாம்?

  • இந்தப் பிரச்​சினையை மூன்று தளங்களில் எதிர்​கொள்ள வேண்டும். முதலா​வதாக, ஊழியர்கள் தங்கள் உரிமை​களைக் கோரிக்கை​விடுத்துப் பெற வேண்டும். தொழிற்​சங்​கங்கள் என்பவை கைகளில் அழுக்கேற உழைப்​பவர்​களுக்கும் அரசு அலுவலர்​களுக்கும் மட்டு​மானவையல்ல. தனியார் நிறுவனங்​களின் வெள்ளை காலர் ஊழியர்​களும் தங்களுக்கான சங்கங்​களைக் கட்ட வேண்டும். அப்போதுதான் நியாயமற்ற வேலைகள் சுமத்​தப்​படும்போது ‘இல்லை’ என்று மறுக்கிற துணிவு வரும்.
  • அன்னாவின் மேலாளர் முதல் நாள் மாலை ஒரு வேலையைக் கொடுத்து​விட்டு, அதை அடுத்த நாள் காலையில் முடித்​துத்தர வேண்டும் என்று கேட்பாராம். இடையில் இருக்கிற இரவில் அந்த வேலையைச் செய்தாக வேண்டும்.
  • இரண்டாவதாக, கார்ப்​பரேட் நிறுவனங்கள் விதிக்​கப்பட்ட நேரத்​துக்கு மேல் வேலை வாங்கக் கூடாது. இது குறித்து வெளிப்​படையான உரையாடல் நடப்ப​தற்கான சூழல் நிறுவனத்தில் இருக்க வேண்டும்.
  • இது மயிலிடம் இறகை யாசிப்​பதைப் போன்றது​தான். ஆனால், சமூகத்தில் இதைப் பற்றிய விழிப்பு​ணர்வு இருந்​தால், லட்சுமணக் கோட்டைத் தாண்டுவது நிறுவனங்​களுக்கு விதியாக அல்ல, விதிவிலக்காக மாறும். மூன்றாவதாக, ஊழியர் நலன்கள் மீறப்​படும்போது அரசு சட்டங்​களைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும். அன்னாவின் தாயார் எழுதிய கடிதம் பரவலானதைத் தொடர்ந்து, தேசிய மனிதவள ஆணையம் இதை ஒரு வழக்காக எடுத்​துக்​கொண்​டிருக்​கிறது.
  • மராட்டிய தொழில் துறை அமைச்சகம் இது குறித்த விசாரணையைத் தொடங்​கி​யுள்ளது. மத்தியத் தொழில் துறை அமைச்​சகமும் விசாரிக்​கப்​போவ​தாகச் சொல்லி​யிருக்​கின்றது. எதிர்க்​கட்சித் தலைவர் ராகுல் காந்தி அன்னாவின் பெற்றோரோடு பேசியிருக்​கிறார். சில எதிர்க்​கட்​சிகள் நாடாளு​மன்​றத்தில் ஒரு விவாதத்தை முன்னெடுக்கப் போகின்றன. இந்தச் சமூக கவனம் நல்லது.
  • அன்னாவின் ஈமச்சடங்​குக்கு அவர் ‘உயிரைக் கொடுத்து’ பணியாற்றிய நிறுவனத்​திலிருந்து ஒருவர்கூட வரவில்லை. இந்நேரம் அன்னாவின் இடத்தில் அந்த நிறுவனம் இன்னொரு ‘மனித இயந்திரத்தை’ நியமித்​திருக்​கக்​கூடும். ஆனால், அன்னாவின் குடும்பத்​துக்கு அவரது இழப்பு நிரந்​தர​மானது. இன்னொரு​வரால் இட்டு நிரப்ப முடியாதது.
  • ‘நாங்கள் அனுபவிக்கும் துக்கமும் அதிர்ச்​சியும் இன்னொரு குடும்பத்​துக்கு நேராதிருக்​கட்டும்’ என்று தனது கடிதத்தை முடித்​திருந்தார் அன்னாவின் ​தாயார். அதற்கு சிவில் சமூகமும், அரசியல் கட்சிகளும் தொழிற்​சங்​கங்​களும், முக்​கியமாக ஊழியர்​களும் ஒன்றுசேர்ந்து குரல் எழுப்ப வேண்டும். அப்போது வேலை நேரம் கட்டுக்குள் வரும். கார்ப்​பரேட் நிறுவனங்​களில் அன்னாக்களின் துயரங்கள் முடிவுக்கு வரும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories