TNPSC Thervupettagam

ஏ.ஜி.நூரானி அதிகாரத்​துக்கு எதிரான துணிச்சல் குரல்

September 4 , 2024 6 hrs 0 min 11 0

ஏ.ஜி.நூரானி அதிகாரத்​துக்கு எதிரான துணிச்சல் குரல்

  • ‘நல்ல நூல்களைப் படிப்பது என்பது கடந்த நூற்றாண்​டு​களின் மிகவும் பண்படுத்​தப்பட்ட சிந்தனை​யாளர்​களுடன் உரையாடு​வதைப் போன்றது’ - பிரெஞ்சுத் தத்து​வ​விய​லாளர் ரெனே டெகார்ட் சொன்ன இந்த வார்த்​தைகள் நிதர்​சன​மானவை. சிறந்த சிந்தனை​யாளர்​களின் நூல்களைப் படிப்பதே ஓர் உரையாடல்​தான்.
  • அதிலும் அத்தகைய சிந்தனை​யாளர்​களுடன் நேரடியாக உரையாடுவது ஒரு மாபெரும் அறிவுச் சுரங்​கத்​துக்குள் பயணிப்​ப​தற்கு நிகரானது. ஆகஸ்ட் 29 இல் மறைந்த அரசமைப்புச் சட்ட வல்லுநர், அரசியல் விமர்​சகர், ஆங்கிலப் புலமை மிக்க எழுத்​தாளர் எனப் பல பரிமாணங்​களைக் கொண்ட அறிஞர் ஏ.ஜி.நூரானி அப்படியான ஓர் அறிஞர்; என்னைச் செதுக்கிய ஆசான்​களில் முதன்​மை​யானவர்!

உணவில் தொடங்கிய உறவு:

  • ஏ.ஜி.நூரானி​யுடன் எனக்குத் தொழில்​ரீ​தியாக மிக நீண்ட கால நட்பு இருந்தது. இந்த அசாதாரண உறவு, உணவைப் பற்றிய ஒரு சாதாரணமான உரையாடலில்தான் தொடங்​கியது. சுமார் 30 ஆண்டு​களுக்கு முன் சென்னையி​லிருக்கும் ‘தி இந்து’ அலுவலக வளாகத்தில் ‘ஃபிரண்ட்​லைன்’ இதழின் அலுவல​கத்​துக்குள் செய்தி ஆசிரியரைக் காண நூரானி வந்தார். நான் அப்போது பத்திரி​கையின் துணை ஆசிரியர். செய்தி ஆசிரியர் அன்று விடுப்பில் இருந்தார் என்று கூறியவுடன், “நான் இன்று மும்பை (அவர் குடியிருந்த ஊர்) செல்கிறேன்.
  • சென்னையில் ஒரு நல்ல அசைவ உணவகம் எதுவென்று கூற முடியுமா?” என்று என்னிடம் கேட்க, நான் அப்போது செட்டிநாட்டு உணவுக்குப் பெயர் போன ஓர் உணவகத்தின் பெயரைச் சொன்னேன். நன்றி தெரிவித்து​விட்டுச் சென்ற அவர், சுமார் ஒரு மாதத்​துக்குப் பின் எங்கள் அலுவல​கத்தைத் தொலைபேசி மூலம் தொடர்​பு​கொண்​டார். நான்தான் அழைப்பை எடுத்​தேன். என் பெயரைக் கூறியதும், “நீங்​கள்தானே எனக்கு சென்னையி​லிருக்கும் அருமையான உணவகத்தை அடையாளம் காட்டியவர்? நன்றி! நான் ரூ.1,000 மதிப்புள்ள உணவு வகைகளை அங்கிருந்து பார்சல் கட்டி மும்பைக்கு எடுத்துச் சென்றேன்” என்றார்.
  • நான் 2003ஆம் ஆண்டில் மாதம் இருமுறை வெளிவரும் ‘ஃபிரண்ட்​லைன்’ இதழின் பொறுப்​பாசிரியராக​வும், பின்னர் 2011இல் ஆசிரியராகவும் ஆன பின்னர், அப்படித் தொடங்கிய எங்கள் நட்பு மேலும் வலுப்​பெற்று வளர்ந்தது. ஏனெனில், அன்றி​லிருந்து வெளிவந்த ஒவ்வொரு இதழிலும் அவர் கட்டுரை எழுதினார். ஒவ்வொரு இதழின் பணி தொடங்​கு​வதற்கும் முன்பே என்னை அழைத்து அடுத்த மூன்று இதழ்களில் அவர் எழுதத் திட்ட​மிட்​டிருக்கும் தலைப்புகளை என்னிடம் கூறி, ஒவ்வொரு முறையும் என் அனுமதியைக் கேட்பார்.
  • “நீங்கள் அனுமதி கேட்கவே தேவையில்லை” என்று கூறினாலும், “இல்லை நண்பரே, நான் யாராக இருந்​தாலும் நீங்கள்தான் இதழின் ஆசிரியர். அது ஒரு பெரிய பொறுப்பு. கட்டுரையை ஒட்டி எந்தப் பிரச்சினை வந்தா​லும் நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்பதால், அனுமதி கேட்பது ஒரு முக்கியக் கடமை, பொறுப்பு” என்பார்.
  • அவரது தன்னடக்​கமும் பொறுப்பு​ணர்வும் திட்ட​மிட்டு வேலை செய்யும் முறையும் ஒவ்வொரு முறையும் என்னை வியக்​க வைக்​கும். நான் பொறுப்​பேற்றுப் பணி ஓய்வு​பெறு​வதற்கு முந்தைய ஆண்டு வரை அவருடைய கட்டுரை இடம்பெறாத இதழே இல்லை எனலாம். ஒரு தோராயமான கணக்கினை எடுத்தால் ஓர் ஆண்டுக்கு 25 இதழ்கள் என்கிற வீதத்தில் நான் தயாரித்த சுமார் 500 இதழ்களிலும் கட்டுரை எழுதி 20 ஆண்டு​களில் சாதனை படைத்தவர் அவர்.

அசைக்க முடியாத ஆதாரங்கள்:

  • ‘ஃபிரண்ட்​லைன்’ இதழில் அவர் முதல் முதலாக எழுதிய கட்டுரையின் தலைப்பு ‘Taming the RAW’. அது உளவுத் துறையின் வெளிநாட்டு அங்கமாகிய ரா அமைப்பினை ‘அடக்குவது’ குறித்ததாயிருந்தது. கடைசியாக எழுதிய கட்டுரையின் தலைப்பு ‘Judges and their bogus collegium’ (‘நீதிப​தி​களும் அவர்களின் போலியான கொலீஜியம் அமைப்பும்’). அவரது எழுத்துகள் எப்படி அதிகார மையங்களை அம்பலப்​படுத்தின, எதிர்த்துக் கேள்வி எழுப்பின என்பதற்கு இந்தத் தலைப்புகளே சான்று.
  • நூரானி எழுதிய கட்டுரைகளின் உக்கிரத்​திலிருந்து பிரதமர்கள், அமைச்​சர்கள், முதலமைச்​சர்கள், உயரதி​காரிகள், நீதிப​திகள், வெளிநாட்டு ஆட்சி​யாளர்கள் என யாருமே தப்பிய​தில்லை. ஆயினும், அவர்கள் யாருமே அவருக்கு எதிராக எந்த நடவடிக்கை​யையும் எடுக்கத் துணியாததற்குக் காரணம், அவரது கட்டுரைகளின் ஒவ்வொரு வரியும் அசைக்க முடியாத ஆதாரங்​களின் அடிப்​படையி​லானவை. அந்த ஆதாரங்கள் அவர் தன் இரண்டு அறைகளே கொண்டிருந்த எளிய வீட்டின் உள்ளே குவித்து வைத்திருந்த நூல்கள், வரலாற்று ஆவணங்கள், நீதிமன்றத் தீர்ப்பு​களுக்​குள்​ளிருந்து எடுக்​கப்​பட்டவை.
  • அவற்றையெல்​லாம்விட அவர் வைத்திருந்த ஒரு பொக்கிஷம், 1950களி​லிருந்தே அவர் பத்திரி​கை​களி​லிருந்து கத்தரித்து எடுத்துத் தேதிவாரியாக கோப்பு​களுக்குள் இட்டு வைத்திருந்த செய்தி​களின் தொகுப்பு. அவர் எழுதிய ஒரு கட்டுரையி​லிருந்த ஒரு விவரம் அதிகாரபூர்வ ரகசியங்கள் சட்டத்​தின்படி வெளியே வரக் கூடாத ஒன்று.
  • அது எப்படி அவருக்குக் கிடைத்தது எனக் கேட்டு மத்திய உளவுத் துறை அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்றனர். அவர் சற்றும் தாமதிக்​காமல் அந்த விவரத்தைத் தாங்கி வந்திருந்த பத்திரிகைச் செய்தியைத் தனது கோப்பிலிருந்து உருவி எடுத்து அவர்களிடம் காட்டி​னார். அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்றனர்.

அபாரமான நினைவாற்றல்:

  • நூரானியின் அற்புதமான இந்தப் பொக்கிஷங்கள், அவற்றில் எங்கே எந்தத் தகவல் இருக்குமென அவருக்​கிருந்த நினைவாற்றல் எல்லாம் வியக்​கவைப்பவை. இவற்றைத் தவிர, நாம் கவனித்துக் கற்றுக்​கொள்ள வேண்டியது அவர் கணினி, கூகுள், திறன்பேசி என்கிற நவீனத் தொழில்​நுட்ப வசதிகள் இல்லாத காலத்​தில்தான் காலத்தால் அழிக்க முடியாத கட்டுரைகளை​யும், நூல்களையும் படைத்தார் என்பது​தான்.
  • இதில் சுவாரசியம் என்னவென்​றால், 1930 செப்டம்பர் 6இல் பிறந்த இந்த நவீனச் சிந்தனை​யாளர், தன் 80ஆவது வயதுக்குப் பிறகுதான் கைபேசியைப் பயன்படுத்தத் தொடங்​கினார். அதுவரை தரைவழித் தொலைபேசி மூலம்தான் பிரதமர்கள், அதிகாரிகள், ராஜதந்​திரிகள், பத்திரி​கை​யாளர்கள் என ஒரு பெரிய வலைப்​பின்னலை உருவாக்கி வைத்திருந்​தார். கடைசிவரை அவர் கைப்படத்தான் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதினார்.
  • அவரது எழுத்து​களில் 90 சதவீதம் தட்டச்சு செய்யப்​பட்​ட​வை​தான். தட்டச்சு செய்யப்​பட்டு, தொலைநகல் மூலம் ‘ஃபிரண்ட்​லைன்’ அலுவல​கத்​துக்கு வந்த கட்டுரைகளைக் கணினிக்கு மாற்றி வெளியிடுவது பெரும் சுமையாக இருந்தது. ஆனால், அவரது அறிவொளி பாய்ச்​சும், ஆங்கிலப் புலமை புரண்​டோடும் கட்டுரைகளை மெய்ப்புத் திருத்தம் செய்யும்போது சுமைகளெல்லாம் சுகமாகி​விடும். அவருக்கு நீண்ட காலம் உதவியாக இருந்த தட்டச்சர் கணினிக்கு மாறியது 2010களில்​தான்.

தகவல்​களில் துல்லியம்:

  • காஷ்மீர், ஆர்.எஸ்​.எஸ். பாபர் மசூதி இடிப்பு, அரசமைப்புச் சட்டம், மனித உரிமைகள், இந்தியா​வுக்கும் சீனா, பாகிஸ்​தான், இலங்கை, நேபாளம் ஆகிய அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து 25க்கும் மேற்பட்ட நூல்களையும் தன் பழைய பாணியிலேயே நூரானி படைத்​தார். அவை யாவும் கொள்கை-சட்​டங்களை வகுக்கும் இடத்தில் இருப்​பவர்​களுக்கு என்றென்றும் வழிகாட்​டிகளாக இருக்​கக்​கூடியவை.
  • நூல்களில் ஆணித்​தரமான வாதங்களை முன்வைத்த அவர், ஏராளமான ஆவணங்களை ஆதாரமாக இணைத்​திருக்​கிறார். சான்றாக, காஷ்மீர் பிரச்சினை குறித்து அவர் எழுதிய நூலின் முதல் பாகத்தில் 150 பக்கங்கள் கருத்து​களுக்​கும், அதே அளவிலான பக்கங்கள் வரலாற்று - சமகால ஆவணங்​களுக்கும் கொடுக்​கப்​பட்​டிருக்​கின்றன. கலாச்சார தேசிய​வாதம் என்கிற பெயரில் வரும் ஆர்.எஸ்​.எஸ். அமைப்பைக் குறித்த அவரது நூலில் சுமார் 100 பக்கங்​களில் 16 பின் இணைப்புகள் இருக்​கின்றன.
  • எங்களுடைய உரையாடல்​களில் உணவிடங்​களைப் பற்றிய பேச்சு அதிகம் இருக்​கும். சாப்பாட்டுப் பிரியரான அவர் தனக்கு மிகவும் பிடித்த மும்பை ஜிம்கானா கிளப்பில் எனக்கு விருந்​தளிப்பதாக ஒவ்வொரு முறையும் உறுதி​கூறு​வார். நான்கு ஆண்டு​களுக்கு முன் தன் வாக்கினைக் காப்பாற்றினார்.
  • செட்டிநாட்டு விருந்தில் தொடங்கிய எங்கள் நீண்ட உறவு மும்பை ஜிம்கானா கிளப்பில் அவர் எனக்காக ஸ்பெஷலாக வாங்கிக் கொடுத்த ஐஸ்கிரீமில் ஊறிய ஜிலேபி​யுடன் ஒரு முழு வட்டத்தை நிறைவுசெய்தது. அது எங்களது கடைசிச் சந்திப்பாக இருக்​குமென எனக்கு அப்போது தெரியாது!

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories