TNPSC Thervupettagam

ஓய்வூதியம்: எது சிறந்த திட்டம்?

September 1 , 2024 5 hrs 0 min 47 0

ஓய்வூதியம்: எது சிறந்த திட்டம்?

  • அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க எந்த முறையிலான திட்டம் சரியாக இருக்கும் என்பதைத் தீர்மானிப்பதில் பெரிய தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசை ஆளும் பாஜக உள்பட எல்லா பெரிய அரசியல் கட்சிகளுக்கும் மாநில முதல்வர்களுக்கும் இது இப்போது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகிவிட்டது.
  • நாட்டில் வாழும் அனைத்து மக்களுமே குறிப்பிட்ட வயதை எட்டிய பிறகு முதுமையில் ஓய்வூதியம் பெறுவதில்லை. அனைத்து மக்களையும் அவர்களுடைய வயதான காலத்தில் கண்ணியமாக பராமரிக்க சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் நம் நாட்டில் கிடையாது. தனியார் துறையில் பணிபுரியும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கும், பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் கிடையாது.
  • இந்திய ராணுவத்தில் மிகக் குறுகிய காலத்துக்கு மட்டும் பணிபுரிய வேலையில் சேர்த்துக்கொள்ளப்படும் ராணுவ அதிகாரிகளுக்கும்கூட ஓய்வூதியம் தரப்படுவதில்லை.

ஓய்வூதியத்துக்கு வெற்றி

  • மக்களுடைய சராசரி ஆயுள்காலம் குறைவாக இருந்த வரையில் இந்த ஓய்வூதியம் பற்றிய அக்கறை பெரிதாக இருந்ததே இல்லை. மக்களில் மிகச் சிலருக்குத்தான் ஓய்வூதியம் கிடைத்தது, அப்படி ஓய்வூதியம் பெற்றவர்களும் சில ஆண்டுகளுக்குத்தான் வாழ்ந்தார்கள். 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியர்களின் சராசரி ஆயுள்காலம் 35 ஆண்டுகளாக இருந்தது. இப்போது 70 வயதுக்கும் அதிகமாகிவிட்டது. ஓய்வூதியம் என்பது பெரும்பாலும் ஒருவர் ஓய்வுபெற்ற பிறகு, 10 அல்லது 12 ஆண்டுகளுக்கு (வாழ்நாளில்) பெறப்படும்.
  • குடும்ப ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்த பிறகு, இறந்த ஊழியரின் வாழ்க்கைத் துணைக்கும் (மனைவி அல்லது கணவர்) அந்தத் தொகையில் குறிப்பிட்ட அளவு ஓய்வூதியமாகத் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இதனாலேயே ஓய்வூதியம் என்றாலே, ‘வேலை தருகிறவர்கள்’ (அதாவது அரசு) சற்றே விதிர்விதிர்த்துப் போகிறார்கள். ‘ஓய்வூதியம் என்பது தங்களுடைய நீண்ட கால – விசுவாசமான ஊழியத்துக்குத் தந்தாக வேண்டிய உரிமைத் தொகை’ என்கிறார்கள் ஊழியர்கள். இன்னும் சிலர், ‘காலம் தள்ளி தரப்படும் ஊதியம்’ என்று இதற்கு விளக்கம் அளிக்கிறார்கள். ‘பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு யார் தயவையும் நாடாமல், கண்ணியமாக வாழ்வதற்கான வாழ்வுரிமைத் தொகையே ஓய்வூதியம்’ என்ற கருத்தும் சரியே.
  • ‘ஓய்வூதியம் என்பது அரசு ஊழியர்களின் உரிமை’ என்ற வாதம் ஏற்கப்பட்டு, தீர்ப்பும் வெளியாகிவிட்டது. ‘நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களுக்கு இப்படி ஓய்வூதியம் என்ற பாதுகாப்பு இல்லையே?’ என்று சுட்டிக்காட்டியபோது, ‘அவர்களுக்கும் அது விரிவுபடுத்தப்பட வேண்டும்’ என்ற பதில் வந்தது. நாட்டு மக்கள் அனைவருக்குமே கிடைக்கும் வகையில் ஓய்வூதிய திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
  • அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தருவது என்ற கொள்கை உருவான பிறகு, அந்த ஊதியம் குறைந்தபட்சம் இவ்வளவாக இருக்க வேண்டும் என்ற நியதியும் உருவானது. அரசு ஊழியர் ஓய்வுபெறும் காலத்தில் இறுதியாக வாங்கிய ஊதியத்தின் அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி ஆகிய இரண்டிலும் குறைந்தபட்சம் 50% அவருடைய ஓய்வூதியமாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்து இறுதியாயிற்று.

மாறிய இயக்கவியல்

  • ஓய்வூதிய திட்டத்தால் அரசுக்கு நிதிச்சுமை அதிகமாகிக்கொண்டேவருவதை அடுத்து, அமலில் இருப்பதை ‘பழைய ஓய்வூதிய திட்டம்’ (ஓபிஎஸ்) என்று அழைத்து, அரசு ஊழியர்கள் தங்களுடைய எதிர்கால ஓய்வூதியத்துக்கு ஒரு பங்கு சந்தா செலுத்தும் விதத்தில் ‘புதிய ஓய்வூதிய திட்டம்’ (என்பிஎஸ்) 2004 ஜனவரியில் கொண்டுவரப்பட்டது. அந்த நடவடிக்கை, ஓய்வூதியம் தொடர்பான இரண்டு தூண்களைச் சாய்த்துவிட்டது.
  • முதலாவது, ‘அரசு ஊழியர்களுடைய ஓய்வூதியத்துக்கு அரசு பங்களிப்பு செய்தால் போதும் - அரசு ஊழியர்கள் ஏதும் தர வேண்டியதில்லை’ என்பது நீக்கப்பட்டது. இரண்டாவதாக, ‘குறைந்தபட்ச ஓய்வூதியம்’ என்ற கருத்தும் கைவிடப்பட்டது. உடனே புதிய திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் இடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
  • அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய், எதிர்ப்பாளர்களின் கோரிக்கைகளுக்கு மசியவில்லை. அடுத்து பிரதமராக வந்த மன்மோகன் சிங்கும் ஆட்சியிலிருந்த பத்தாண்டுக் காலமும் அதை ஏற்கவில்லை. நரேந்திர மோடியும் தனது முதல் பத்தாண்டுக் காலத்தில் இந்தக் கோரிக்கையை ஏற்கவேயில்லை. 2024 மக்களவை பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத வகையில் தேர்தலில் முடிவுகள் வந்த பிறகே, அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்சினையில் கவனம் செலுத்துகிறார்.
  • பத்திரிகைத் தகவல் வாரியம் 2022 ஆகஸ்ட் 3இல் வெளியிட்ட தகவல்படி, ஒன்றிய அரசில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுகிறவர்கள் எண்ணிக்கை 69,76,240. 2024 - 2025 நிதியாண்டின் வரவு - செலவு அறிக்கையில் (பட்ஜெட்) அவர்களுக்கான ஓய்வூதிய ஒதுக்கீடு ரூ.2,43,296 கோடி. பத்திரிகைகளின் தகவல்படி 2023 மார்ச்சில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் 23.8 லட்சம் ஒன்றிய அரசின் ஊழியர்களும், 60.7 லட்சம் மாநில அரசுகளின் ஊழியர்களும் இடம்பெற்றுள்ளனர். 2024இல் இந்த எண்ணிக்கை சற்றே அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கக்கூடும், ஆனால் தோராயமாக எவ்வளவு செலவு பிடிக்கும் என்பது தெரிகிறது. ஆனால், இவ்வளவு தொகையும் நாட்டு மக்களில் மிகக் குறைவான சதவீதம் உள்ளவர்களுக்குச் செலவாகிறது.
  • அரசு ஊழியர்களிடம் பங்களிப்புப் பெறாமல் முழு ஓய்வூதியத்தையும் அரசுகளே வழங்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், பொருளாதாரமே சீர்குலைந்துவிடும். ஓய்வுபெற்ற உடனேயே அரசின் வருவாயிலிருந்து ஓய்வூதியத்தை வழங்கிவிட முடியாது. புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்களிப்பு 14%, ஊழியர்களின் பங்களிப்பு 10%.
  • இப்போது அரசு அறிவித்துள்ள அனைவருக்குமான ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்), அரசின் பங்களிப்பை 18.5% ஆகவும் ஊழியரின் பங்களிப்பை 10% ஆகவும் கொண்டது. இதில், ஊழியர் பணிபுரிந்த காலத்தின் கடைசி 12 மாதங்களில் பெற்ற ஊதியத்தில் 50% குறைந்தபட்ச ஓய்வூதியமாக இருக்கும் என்ற கருத்து அமலாகிறது. இந்த ஓய்வூதியம் பெற அவர் 25 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதத்துக்கு ரூ.10,000 இருக்க வேண்டும் என்பதும் ஏற்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் தொடர்பான முழு விவரங்கள் அரசிடமிருந்து வெளியாக வேண்டும்.
  • இந்தக் கட்டுரை எழுதப்படும் நாள் வரையில், பெரும்பாலான மாநில அரசுகள் அனைவருக்குமான ஓய்வூதிய திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட பெரிய அரசியல் கட்சிகள் இந்தத் திட்டத்தைப் பரிசீலித்துவருகின்றன. ஆனால், ஒன்றிய அரசின் ஊழியர் சங்கங்களும் மையத் தொழிற்சங்கங்கள் சிலவும், அரசு ஊழியர்களிடம் ஓய்வூதியத்துக்குச் சந்தா பிடிக்கவே கூடாது என்று பலத்த எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன.

சந்தா – யார், எப்படி?

  • ஓய்வூதியம் தொடர்பாக எப்படி முடிவெடுப்பது, எதை ஆதரிப்பது, எதை ஏற்பது என்பதில் மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், ஊழியர்களுடைய சங்கங்களுக்குப் பெரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அரசின் நிதி வரவு, நாட்டின் நிதிநிலைமை ஆகியவற்றைப் பரிசீலிக்கும்போது ‘அனைவருக்கும் ஓய்வூதியம்’ என்ற புதிய அறிவிப்பை நிராகரித்துவிடக் கூடாது. ஆனாலும், சில கேள்விகளுக்கு விடை காணப்பட்டாக வேண்டும்:
  • அரசு ஊழியர்களின் பங்களிப்பு, அரசின் பங்களிப்பு ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு 8.5% ஆக இப்போது இருப்பது, எதிர்காலத்தில் மேலும் அதிகமாகுமா?
  • ‘இந்த இடைவெளியை அரசு இட்டு நிரப்பும்’ என்று நிதித் துறை மூத்த அதிகாரி டி.வி.சோமநாதன் தெரிவித்துள்ளார். அப்படியானால், ‘ஓய்வுபெறும்போதே ஓய்வூதியம்’ என்ற பழைய நிலைக்கு அண்மையில் செல்லுமா?
  • 10%+10% சந்தா, ஓய்வூதிய நிதி நிர்வாக அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டு, எஞ்சிய 8.5% அதிக வருவாய் தரும் இனங்களில் முதலீடு செய்யப்படுமா, அப்படியானால் முதலீடு செய்யப்போவது யார், எங்கே?
  • இந்த (யுபிஎஸ்) திட்டத்தை அமல்படுத்த முதலாண்டில் ரூ.6,250 கோடி செலவாகும் என்பது மிகவும் குறைந்த மதிப்பீடாகத் தெரிகிறது, இது உண்மைதானா?
  • அனைவருக்கும் ஓய்வூதியம் என்ற (யுபிஎஸ்) திட்டம் ஒன்றிய அமைச்சரவையால் இறுதிசெய்யப்பட்டபோது, மாநில அரசுகளிடம் அரசு ஆலோசனை கலந்ததா?
  • இந்தத் திட்டத்தை அமல்செய்யப்போகிறவர்கள், பயன்பெறப்போகிறவர்கள் தங்களுக்குள் இருக்கும் கேள்விகளுக்கு எப்படி விடை காணப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி: அருஞ்சொல் (01 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories