TNPSC Thervupettagam

கடமை தவறுவது அழகா அதிகாரிகளே?

August 19 , 2024 2 hrs 0 min 23 0

கடமை தவறுவது அழகா அதிகாரிகளே?

  • “மக்கள் கொடுக்கும் மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல. சமுதா​யத்தில் பின்தங்கிய மக்களின் தேவைகளை அறிந்து கடமையாற்ற வேண்டும்” என அரசு அதிகாரி​களுக்கு அறிவுரை வழங்கி​யிருக்​கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லின். பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய வார்த்​தைகள் இவை. ஆனால், அவரது வார்த்​தைகளுக்கும் உண்மை நிலவரத்​துக்கும் நிறைய இடைவெளி இருப்​பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.
  • 2023 ஏப்ரல் மாதம் 17 இல், மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொடுக்​கப்பட்ட ஒரு மனுவுக்கு, 2024 ஜூலை 1இல் பெருநகர சென்னை மாநகராட்சிக் கூடுதல் தலைமைச் செயலர்​/ஆணை​யரிட​மிருந்து தட்டச்சு செய்யப்பட்ட பதில் கடிதம் தபால் மூலம் கிடைக்​கப்​பெற்றது.

அது என்ன மனு?

  • புளியந்தோப்பு சமுதாய நல மருத்துவ​மனையில் 2023 ஏப்ரல் 6ஆம் தேதி பிரசவத்​துக்காக அனுமதிக்​கப்​பட்​டிருந்த தலித் பெண் ஜனகவள்ளி உடனடியாக உரிய மருத்துவ உதவி கிடைக்​காததால் மருத்து​வ​மனையில் உயிரிழந்​தார். நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனகவள்​ளியின் கணவர் தனது முதல் குழந்​தையைத் தோளில் ஏந்திக் கண்ணீர்க் கதறலோடு வேண்டுகோள் விடுத்​தார்.
  • அத்துடன், அதிகாரிகள் அவர்களின் கடமையைச் செய்ய வைப்ப​தற்​காகப் பலமுறை ரிப்பன் மாளிகையின் படிக்​கட்​டுகள் ஏறி, ஆணையரைச் சந்தித்து, மனு கொடுத்து மன்றாட வேண்டி இருந்தது. குறிப்​பிடத்தக்க எந்த நடவடிக்கையும் முன்னெடுக்​கப்படாத நிலையில், இறந்த பெண்ணின் தாய், கணவர் உள்ளிட்ட குடும்பத்​தாரும் மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகை​யிட்டுப் போராடி​னார்கள்.
  • அவர்கள் ஒரு நாள் கைதுசெய்து மண்டபத்தில் அடைத்து​வைக்​கப்​பட்​டனர். அதன் பின்பே விசாரணை துரிதப்​படுத்​தப்​பட்டது. விசாரணையின் முடிவில், ‘ஜனகவள்ளி மருத்து​வ​மனையில் உயிரிழக்க​வில்லை; உடல்நிலை பாதிக்​கப்​பட்​டதால் புளியந்​தோப்​பிலிருந்து எழும்பூர் பிரசவ மருத்து​வ​மனைக்கு மாற்றம் செய்யும்​போது, போக்கு​வரத்து சமயத்தில் உயிர் பிரிந்தது’ என அரசுத் தரப்பு தெரிவித்தது.
  • அரசு மருத்து​வ​மனையில் உரிய சிகிச்சை கிடைக்​காததால் இறந்த ஜனகவள்ளி குடும்பத்​துக்கு அரசு உரிய இழப்பீடு தர வேண்டும், அவரது கணவருக்குக் கருணை அடிப்​படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று முறையிட்டு, மனுக்கள் கொடுத்து, போராடிய பின்பு, பெருநகர சென்னை மாநகராட்சி அக்குடும்பத்​துக்கு முதலமைச்​சரின் பொது நிவாரண நிதியி​லிருந்து நிவாரணத் தொகை வழங்கு​வதற்கு ஆணை கோரியது.
  • தமிழ்நாடு அரசு இதற்கு அளித்​துள்ள பதில் கொடுமை​யிலும் கொடுமை. ‘பாம்பு கடித்து இறத்தல், நீரில் மூழ்கி இறத்தல், வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் இறத்தல் மற்றும் கட்டிட இடிபாடு​களில் சிக்கி இறத்தல் போன்ற நிகழ்வு​களுக்கு மட்டுமே முதலமைச்​சரின் பொது நிவாரண நிதியி​லிருந்து ரூபாய் ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்​பட்டு வருகிறது.
  • மேற்குறிப்​பிட்ட நிதி உதவி பெறுவதற்குக் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூபாய் 48,000 என நிர்ண​யிக்​கப்​பட்​டுள்ளது. வருமானச் சான்றிதழில் உயிரிழந்த திருமதி ஜனகவள்ளி என்பவரின் கணவர் திரு. ம.கோடீஸ்வரன் என்பவரின் ஆண்டு வருமானம் ரூபாய் 96 ஆயிரம் எனக் குறிப்​பிடப்​பட்​டுள்ள​தால், முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் பொதுவான வழிகாட்டு நெறிமுறை​களுக்கு உள்பட்டு, ஜனகவள்ளி என்பவரின் குடும்பத்​தினருக்கு முதலமைச்​சரின் பொது நிவாரண நிதியி​லிருந்து நிவாரணத் தொகை வழங்க வழிவகை​யில்லை எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்ளது’ எனத் தட்டச்சு செய்து கடிதம் அனுப்​பப்​பட்​டுள்ளது.
  • கடமையைத் தட்டிக் கழிக்கும் அதிகாரிகள்: கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெருநகர சென்னை மாநகராட்​சியின் மழைநீர்க் கால்வாய்ப் பணியில் ஈடுபட்ட ஒப்பந்தப் பணியாளர் கனகராஜ் உடலில் மின்சாரம் பாய்ந்​ததால் பணியிடத்​திலேயே மரணம் அடைந்​தார். இதுதொடர்​பாகப் பலமுறை மாநகராட்சி ஆணையர்​களைச் சந்தித்து மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்​பட​வில்லை.
  • காரணம், இறந்தவர் ஒப்பந்தப் பணியாளர் என்பதால், பணியிடத்தில் உயிர் போனதற்கு மாநகராட்சி பொறுப்பு ஏற்க முடியாது எனச் சொல்லப்பட்டது. ஆனால், ஒப்பந்தப் பணியாளர் சட்டப்படி முதன்மை முதலா​ளிக்கு (Principal Employer) பொறுப்பு இருக்​கிறது. இதை எழுத்துபூர்வமாக எழுதிக் கோரிக்கை விடுத்த பின்பும் மாநகராட்சி நிர்வாகம் ஏற்கவில்லை.

இன்னும் ஒரு நிகழ்வு:

  • தீவிரக் குடிப் பழக்கத்​துக்கு உள்ளான இளைஞர் வசந்தகுமாரை அவரது குடும்பத்​தினர் ஒரு தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்​தனர். அதன் ஊழியர்கள் மருத்துவ வழிகாட்டுதல்கள் எவற்றையும் கடைப்​பிடிக்​காமல், பலவந்தமாக வசந்தகுமாரை வாகனத்தில் ஏற்றி மையத்​துக்கு அழைத்துச் சென்றுள்​ளனர்.
  • அடுத்த பத்தே நாளில் ரத்தக் காயங்​களோடு சடலமாக வசந்தகு​மாரை கீழ்ப்​பாக்கம் அரசு மருத்து​வ​மனைக்குக் கொண்டு​வந்​தனர். காவல் துறை வழக்குப் பதிவுசெய்தது. தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்படும் இத்தகைய மரணங்கள் குறித்து இயல்பாகவே விசாரித்து நடவடிக்கை எடுக்​கவேண்டிய மாநில மனநல இயக்குநரகம் எதுவும் செய்ய​வில்லை.
  • ஜூன் 12ஆம் தேதி நேரடியாக இயக்குநரைச் சந்தித்து மனு அளித்​த​போது, மூன்று நாளில் ஆய்வு நடத்திப் பதிலளிப்​ப​தாகத் தெரிவித்​தார். ஜூலை 8இல் நேரடி​யாகச் சந்தித்துக் கேட்ட​போது, இன்னும் ஆய்வு செய்ய​வில்லை எனப் பதிலளித்​தார். மீண்டும் 12இல் சந்தித்துக் கேட்ட​போது, “ஆய்வு நடத்தி​விட்​டோம்; அறிக்கையை இன்னும் சில தினங்​களில் அனுப்​பிவைப்​போம்” என்றார். இன்னும் அறிக்கை வந்து சேரவில்லை.
  • இதுதான் நமது அரசு நிர்வாகத்தின் நிலை. அதிகார வர்க்​கத்தைச் சட்டத்​தின்படி செயல்பட வைப்ப​தற்கு ஆட்சி​யாளர்​களுக்கு அரசியல் உறுதி​யும், பொறுப்பைத் தட்டிக் கழிப்​பவர்கள் - தவறிழைப்​பவர்கள் மீது உடனடி நடவடிக்கையும் தேவை. இல்லை​யெனில், மனித உயிர்கள் அநியாய​மாகப் பலியாவது நிகழ்ந்​து​கொண்​டேதான் இருக்​கும்.

இது நியாயமா?

  • ஜனநாயகக் கட்டமைப்பில் அரசு நிர்வாக அமைப்புகள் இயல்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் நடைபெறு​வதற்கே அதிகாரி​களைப் பலமுறை சந்தித்து, மனு கொடுத்து, போராட்டம் நடத்தி, போலீஸின் அடக்கு​முறையையும் எதிர்​கொண்டு செயலாற்ற வேண்டிய சூழல் இருப்பது நியாயம்​தானா? இதைச் சரி செய்வதற்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன?
  • பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டியது மக்களால் தேர்ந்​தெடுக்​கப்பட்ட மக்கள் பிரதி​நி​தி​களின் பொறுப்​பல்லவா? அவ்வாறு செயல்​படாமல் இருப்​ப​தற்குக் காரணம் அவர்கள் மட்டும்​தானா? அவர்களைத் தேர்ந்​தெடுக்கச் சொல்லி மக்கள் முன்னால் அறிமுகப்​படுத்தும் கட்சிக்கு, ஆட்சிக்குப் பொறுப்​பில்​லையா?
  • கொத்துக் கொத்தாக உயிரிழந்​தால், அது ஊடகங்​களின் பரபரப்புச் செய்தியாக மாறினால், அதற்கு ஏற்ப நிவாரண நிதி அளிக்க இந்த அரசு தயாராக உள்ளது. ஆனால், அரசு மருத்து​வ​மனையில் ஓர் உயிர் போனால், அதுவும் ஊடக வெளிச்​சத்​துக்கு அப்பால் என்றால், 18 மாதங்கள் கழித்துச் சாவகாசமாக எதுவும் செய்ய முடியாது என உறுதி​யாகத் தட்டச்சு செய்து கடிதம் அனுப்ப முடிகிறது.
  • அதிகார வர்க்​கத்தின் அலட்சி​யத்தால் இப்படியான அப்பாவி உயிர்கள் மடிந்​து​கொண்​டிருக்கும் செய்திகள், ஊடகங்​களில் வந்து​கொண்​டேதான் இருக்​கின்றன. அவற்றில் ஒரு சில நியாயம் கேட்டு நீதிக்காக அரசு அலுவல​கங்களை நாடினால், பதில் அளிக்க வேண்டிய அரசு அமைப்புகள் உயிரற்ற நிர்வாக இயந்திரங்களாக உள்ளன.
  • அதன் ​கொடும்​பற்​களில் சிக்​கிச் சின்​னாபின்ன​மாகிக் ​கொண்​டிருப்​பவர்கள்​ ஏழை எளிய மக்களே. “ஏழை​யின் சிரிப்​பில் இறைவனைக் ​காண்​போம்” எனச் சொன்ன அறிஞர் அண்​ணா​வின் அரசாக, தமிழக அரசின் நிர்வாக அமைப்பு செயல்​படுவது உண்மை என்​றால்​, இந்​த அவலங்​கள்​ இனி​யும்​ தொடர அனும​திக்​கலா​மா?

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories