TNPSC Thervupettagam

கருப்பசாமி பாடல் யாருக்கு இழப்பு?

September 18 , 2024 5 hrs 0 min 15 0

கருப்பசாமி பாடல் யாருக்கு இழப்பு?

  • மதுரைப் புத்தகக் காட்சியின் தொடக்க விழா கலை நிகழ்ச்​சியில் கருப்​பசாமி குறித்த பாடல் இடம்பெற்​றதும் அதற்கு மாணவிகள் சாமி ஆடியதும் கடும் விமர்​சனங்​களுக்கு உள்ளாகின. அரசு விழாக்​களில் ஆன்மிக நோக்கிலும் மூடநம்​பிக்கையைப் பரப்பும் வகையிலும் நிகழ்ச்சி நடத்தியது தவறு எனச் சமூக வலைதளங்​களில் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி அடங்கி​விட்​டாலும், அது வேறு சில முக்கியமான கேள்விகளை எழுப்​பி​விட்டுச் சென்றுள்ளது. அவற்றுக்குச் சரியான பதில் தேடுவது, இதுபோல மீண்டும் ஒரு சர்ச்சை எழுவதையும் தவிர்க்​கும்.

நடந்தது என்ன?

  • புத்தகக் காட்சியின் தொடக்க விழா மாலையில் நடைபெற்றது. அமைச்சர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்​பினர், மேயர், அதிகாரிகள் போன்றோர் பேசி முடித்த பின், கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அரசு விழாக்​களில் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்​சிகள் நடப்பது வழக்கம். இவ்விழா​விலும் பறையிசை, மயிலாட்டம், மாடு ஆட்டம், மரக்கால் ஆட்டம் போன்றவை நிகழ்த்​தப்​பட்டன. தொழில்​முறைக் கலைஞர்​களும் மதுரை பசுமலை அரசு இசைக் கல்லூரி மாணவர்​களும் இணைந்த குழுவினர் இவற்றை நிகழ்த்​தினர்.
  • புத்தகக் காட்சிகளுக்குப் பள்ளி மாணவர்கள் வருவதை அரசு ஊக்கு​விக்​கிறது. எனவே, பார்வை​யாளர்​களில் அரசுப் பள்ளி மாணவ - மாணவிகள் கணிசமான எண்ணிக்கையில் இருந்​தனர். பறையிசையின் பின்னணியில் அனைத்து ஆட்டங்​களையும் பார்வை​யாளர்கள் கைதட்டி ரசித்தனர்.
  • நிறைவாக, சாமியாட்டம் ஓரிரு நிமிடங்​களுக்கு நடந்தது. மறைந்த நாட்டுப்புறப் பாடகரான தேக்கம்​பட்டி சுந்தரராஜன் பாடிய ‘அங்கே இடி முழங்​குது, கருப்​பசாமி தங்கக் கலசம் மின்னுது’ பாடல் தென் மாவட்​டங்​களில் நன்கு பரிச்​சய​மானது. அந்தப் பாடலுக்கு கருப்​பசாமி வேடமணிந்து பார்வை​யாளர்கள் மத்தியில் ஒரு கலைஞர் ஆடினார். அவர் பசுமலைக் கல்லூரி மாணவர். அவரது வேடமும் முகபாவமும் பாடலின் தாளகதியும் பார்வை​யாளர்களை மேலும் உற்சாகப்​படுத்தின.
  • ஆண், பெண் வேறுபாடு இன்றிப் பல மாணவர்கள் ஆடினர். சில மாணவிகள் சாமியாட்​டத்தை வெளிப்​படுத்​தினர். கோயில் திருவிழாக்​களில் சாமி வந்து ஆடுவதுபோல ஆவேசமாக ஆடினர். சிலர் மயக்கமடைந்​ததும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு இருந்​தவர்கள் தண்ணீர் தெளித்து எழுப்​பியதும், அம்மாணவிகள் இயல்புநிலைக்கு வந்து​விட்​டனர். எனினும், அந்தப் பரபரப்பு மறையவில்லை. அதுவரை நடந்த அத்தனை நிகழ்ச்​சிகளையும் பின்னுக்குத் தள்ளி​விட்டு, மாணவிகள் மயக்கமடைந்​ததும் அதற்குக் கருப்​பசாமி பாடல் காரணமானதுமே முதன்மையாகப் பேசப்​பட்டன.

கருப்​பசாமி பாடல்:

  • மதச்சார்பற்ற கொள்கையைக் கடைப்​பிடிக்கும் ஒரு நாட்டில், அரசு விழாக்​களிலோ, பள்ளி விழாக்​களிலோ குறிப்​பிட்ட சமயத்தை மட்டும் பிரதிபலிக்கும் வகையில் பாடல்கள் இடம்பெறக் கூடாது. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், இதை அப்படியே ஒற்றைப் பரிமாணத்தில் பின்பற்ற முடியுமா என்கிற கேள்வியும் எழுகிறது. நெடிய பண்பாட்டுத் தொடர்ச்சி கொண்ட தமிழ்​நாட்டில் நாட்டார் தெய்வங்களை நாம் எந்த அளவுக்கு உள்வாங்​கிக்​கொண்​டிருக்​கிறோம்?
  • பண்டைத் தமிழ் இலக்கி​யங்​களில் ‘வேலன் வெறியாட்டு’ என்று சாமியாடுதல் குறிப்​பிடப்​படு​கிறது. கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் தேவராளன் ஆட்டம் என்கிற ஆட்டம் குறிப்​பிடப்​பட்​டிருக்​கிறது. கோயில் சடங்கு​களில் கோமரத்​தாடி, சுடலை கொண்டாடி, அம்மன் கொண்டாடி, சாமியாடி என்றெல்லாம் அழைக்​கப்​படும், சாமியாடிகள் இருப்​பார்கள். இவர்களைத் தவிர, கோயில் திருவிழா, கொடை நிகழ்ச்​சிகளில் பக்தர்கள் சிலரே சாமியாடு​வதையும் காணலாம்.
  • மதுரைப் பகுதி மக்களின் பண்பாட்டில் இரண்டறக் கலந்து​விட்ட நாட்டார் தெய்வம் கருப்​பசாமி. அழகர் கோயில் பண்பாட்டு நிகழ்வு​களில் கருப்​பசாமி வழிபாடு ஒரு முக்கியமான அங்கம். கருப்​பசாமிக்கு, இதுபோலப் பல பாடல்கள் பாடப்​பட்​டுள்ளன. கேட்போரைத் தன்வயப்​படுத்தி எழுந்து ஆடச் செய்வது அவற்றின் இயல்பு. துக்க வீடுகளில்கூட கருப்​பசாமியை வணங்கிச் சாமியாட்டம் ஆடுவது வழக்கம். இப்படி மதுரை வட்டார நாட்டார் வழக்காறுகளில் தவிர்க்க இயலாத ஒரு முகமாக கருப்​பசாமி இருக்​கிறார்.
  • பொதுவாக, இவ்வட்​டாரத்தில் நடைபெறும் நாட்டுப்புற நிகழ்ச்​சிகள், குரு வணக்கத்தில் தொடங்கி கருப்​பசாமி பாடலில் நிறைவடைவ​தாகவே உள்ளன. பத்ம விருதுபெற்ற விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், கலைமாமணி துறையூர் முத்துக்​கு​மார், கோட்டைச்​சாமி, ஆறுமுக மாரியம்மாள் போன்றோர் கருப்​பசாமி பாடல்​களுக்​காகவும் அறியப்​படும் கலைஞர்களே. மாணவிகள் சாமியாடிய​தாலேயே, கருப்​பசாமி பாடல் கண்டனத்​துக்​குரிய ஒன்றாக ஆகிவிடாது.

சாமியாடுதல்:

  • சாமியாடுவதன் உளவியல் பின்னணி குறித்த செய்திகள் அறிவுச் சமூகத்​துக்குப் புதிதல்ல. கோயில் கொடைகளில் இரு பாலரும் சாமியாடி​னாலும், ஆண்கள் தெய்வத்தின் பிரதி​நி​தியாக ஆடுவர். அது கோயிலை மையமாகக் கொண்ட சமூகம், அவர்களுக்கு வழங்கும் அதிகாரத்தின் வெளிப்​பாடாகவும் உள்ளது. அதே விழாக்​களில் பெண்கள் ஆடுவது அதிகாரத்​துக்கு வெளியே நிகழ்​வ​தாகவே உள்ளது. தெய்வத்தை வணங்க வந்தவர்களே திடீரென தெய்வ​மாகத் தங்களை உணரும் நிலையை இதில் காண்கிறோம்.
  • சாமியாடுவது, அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்​சிகளின் வெளிப்பாடு எனவும் பெண்களுக்கு அதற்கான தேவைகள் அதிகம் உள்ளன எனவும் உளவியல் நோக்கில் கூறப்​படு​கிறது. நாட்டார் தெய்வக் கோயில்​களில் வழிபடு​பவர்கள், அதிலும் பெண் பக்தர்கள் ஏன் அதிகமாகச் சாமியாடு​கிறார்கள் என்கிற கேள்வி முக்கிய​மானது. கருப்​பசாமி பாடலுக்கு மாணவர்கள் இரு பாலரும் ஆடியதில் கொண்டாட்ட மனநிலை வெளிப்​பட்டது.
  • அவர்களுக்கும் கருப்​பசாமிக்​குமான மன நெருக்​கத்​தையும் இதிலிருந்து புரிந்​து​கொள்​ளலாம். மாணவிகள் அதிகமாகச் சாமியாடிய​தில், கூடுதலாகச் சில உளவியல் தேவைகளும் உள்ளன என்கிற புரிதலுக்கு வர முடியும். படிப்பு, தேர்வு, குடும்ப நிலை, பொருளா​தாரம் போன்றவை தொடர்பான மன அழுத்தம் அவர்களுக்கு உள்ளதா என்கிற கேள்விக்கு, அவர்கள் மீது அக்கறை உள்ள சமூகம் பதில் தேட வேண்டும்.
  • மாணவர்கள் தொழில்​முறைக் கலைஞர்கள் அல்ல. திடீரென உணர்வுநிலைக்கு ஆட்பட்டு, சில நிமிடங்கள் ஆடுவது அவர்களுக்கு முற்றிலும் புதியது. அப்படி ஆடும்போது அவர்கள் மயக்கம் அடைவதும் இயல்பு​தான். திருவிழாக்​களில் பெண்களுக்கு வரும் சாமியாட்​டங்​களும் பெரும்​பாலும் மயக்கத்​தில்தான் முடிகிறது. சுற்றி​யிருப்​பவர்​களின் ஒத்தாசை​யுடன் அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்​புவர்.
  • இதேதான் அந்த மாணவி​களுக்கும் நடைபெற்றது. பள்ளிக்​கூடத்தில் காலை அணிவகுப்பில் மாணவர்கள் மயக்கமடைந்து விழுவதை அவ்வப்போது கேள்விப்​படு​கிறோம். மாணவரின் உடல்நிலை, அவர் காலை உணவு எடுத்​துக்​கொள்ளும் வாய்ப்பு, அது கோடைக்​காலம் எனில் தட்பவெப்​பநிலையின் பங்களிப்பு போன்ற​வைதான் இத்தகைய நிகழ்வு​களில் கருத்தில் எடுத்துக் ​கொள்​ளப்​படு​கின்றன.
  • எதன் மீதும் வெறுப்பு முத்திரை குத்திப் புறக்​கணிப்பது மிக எளிது. ஆனால், அப்படிச் செய்யும்போது சமூகத்தின் யதார்த்த நிலையைப் புரிந்துகொண்டதாகவும் அது இருக்க வேண்டும். மாற்றுத்​திறனாளி குறித்துப் பிற்போக்​குத்​தனமாக மஹாவிஷ்ணு பேசிய நிகழ்​வையும் கருப்​பசாமி பாடலுக்கு மாணவிகள் சாமியாடியதையும் ஒன்றாகக் கருதிவிட முடியாது.

இழப்பு யாருக்கு?

  • இறுதி​யில், சரமாரியான விமர்​சனங்​களுக்கான விலையைக் கொடுத்​தவர்கள் - சம்பந்​தப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்​கள்​தான். இனி அரசு விழாக்​களில் இத்தகைய நாட்டுப்புறக் கலைகள் தவிர்க்​கப்​படும் நிலை உருவாகும். இது தேவையற்ற ஊகமோ, மிகையான அச்சமோ அல்ல. ஏற்கெனவே நாட்டுப்புறக் கலைகளின் சமூக, பொருளாதார நிலை வருந்​தத்தக்க நிலையில்தான் உள்ளது.
  • கலைஞர்கள் கூடுதலாகச் சந்திக்​க​வுள்ள இழப்பை அரசு நிர்வாக நடைமுறை​களைப் புரிந்​து​கொண்​ட​வர்கள் உணர முடியும். விமர்​சனங்களை மீறி, நிகழ்ச்​சிகளில் இந்தக் கலைஞர்​களுக்கு இடம் அளிக்க அரசு அதிகாரிகள் இனித் துணிய மாட்டார்கள். இந்த நிகழ்வை ஒட்டிப் பள்ளிக் கல்வித் துறை விமர்​சனத்​துக்கு உள்ளானதையும் மதுரை மாவட்டத் தலைமைக் கல்வி அதிகாரி கார்த்திகா, கள்ளக்​குறிச்சி மாவட்​டத்​துக்கு மாற்றப்​பட்​டுள்​ளதையும் தனித்தனி நிகழ்வு​களாகப் பார்க்க முடியாது. மாணவிகள் சாமியாடிய நிகழ்வுதான் திடீர் இடமாறு​தலுக்குக் காரணம் எனக் கூறப்​படு​கிறது. அதிகாரியே நடவடிக்கைக்கு உள்ளாகும்​போது, நாட்டுப்புறக் கலைஞர்கள் எம்மாத்​திரம்?
  • கருப்​பசாமி வேடமணிந்து ஆடுவது சாமியாட்டம் என்பதன் ஒரு பகுதியே. அம்மன் கூத்திலிருந்து ஜிம்ப்ளா மேளம் வரை இசைக் கல்லூரிக்கான பாடத்​திட்​டத்தில் ஏராளமான நாட்டுப்புறக் கலைகள் உள்ளன. இவற்றில் பல கலைகள் தெய்வத்​துடன் தொடர்​புடைய​வை​தான். எனினும் ஆன்மிக வட்டத்​துக்குள் அவை அடைபட்டு​விடு​வ​தில்லை. அவற்றில் சாமியாட்​டமும் ஒன்று. பாடமாகவே ஏற்றுக்​கொள்​ளப்பட்ட ஒரு கலைதான் விமர்​சனங்​களில் இழிவானதாகச் சித்திரிக்​கப்​பட்​டுள்ளது.
  • மதுரை நிகழ்ச்​சியில் ஆடிய மாணவர், சாமியாட்​டத்தில் நான்கு ஆண்டுகளாக ஈடுபட்டு​வருபவர். அவருக்கு அது தொழிலாகவும் உள்ளது. இத்தகைய கலைஞர்​களுக்குச் சோறு போடும் ஒரு நாட்டுப்புறக் கலையை அவர்களே வெறுத்து ஒதுக்க வைக்கும்படி செய்வதுதான் பிரச்​சினைக்குத் தீர்வா எனச் சமூக அக்கறை உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories