TNPSC Thervupettagam

கருப்பை மீதான ஆதிக்கம்

August 21 , 2024 10 hrs 0 min 26 0

கருப்பை மீதான ஆதிக்கம்

  • சமீபத்தில் பிரேசிலில் அறிமுகப்​படுத்​தப்பட்ட கருக்​கலைப்பு தொடர்பான மசோதா அந்நாட்டில் பெரும் புயலைக் கிளப்​பி​யிருக்​கிறது. இதற்கு எதிராகப் பெண்கள் வலுவான போராட்​டத்தை முன்னெடுத்​துள்ளனர். கருவுற்று 22 வாரங்கள் கழித்து கருவைக் கலைத்​தால், அது குற்ற​மாகக் கருதப்​பட்டு, 20 வருடச் சிறைத் தண்டனை வழங்கப்​படும் என்று மசோதா கூறுகிறது.
  • இந்த மசோதாவில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு எந்த விலக்கும் கொடுக்​கப்​பட​வில்லை. மசோதாவை ஆளுங்​கட்சியே ஆதரிக்க​வில்லை. இந்த மசோதா பைத்தி​யக்​காரத்​தன​மானது என்று அதிபர் லூலா டி சில்வா குறிப்​பிட்​டுள்​ளார். ஆனால், கூட்டணிக் கட்சிகள் எப்படி​யாவது மசோதாவை நிறைவேற்ற முயல்​வதுதான் இதில் பெரும் முரண்.

உலக நாடுகளின் நிலவரம்...

  • ஏற்கெனவே பல நாடுகளில் கருக்​கலைப்பு சட்டவிரோதக் குற்ற​மாகக் கருதப்​படு​கிறது. மடகாஸ்கர், நிகராகுவா போன்ற நாடுகளில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்​கப்பட்ட பெண்கள், கருவுறு​வதில் உயிருக்கு ஆபத்து நேரக்​கூடிய பெண்கள் உள்பட அனைவருக்கும் கருக்​கலைப்பு குற்ற​மாக்​கப்​பட்​டுள்ளது.
  • எகிப்தில் கருக்​கலைப்பு செய்வதா என்பதைச் சம்பந்​தப்பட்ட பெண்ணோ, குடும்பமோ முடிவெடுக்க முடியாது. உயிருக்கு ஆபத்தான வேளையில் மருத்​துவக் குழுதான் முடிவெடுக்க முடியும். ஜமைக்​காவில் கருக்​கலைப்பு செய்யும் பெண்ணுக்கு ஆயுள் தண்டனையும் அதற்கு ஆலோசனை வழங்குபவருக்கு 3 வருடச் சிறைத் தண்டனையும் வழங்கப்​படு​கிறது.
  • கருக்​கலைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை இந்தியா முற்போக்கான நாடு என்பது கவனிக்​கத்​தக்கது. சிசுவின் பாலினத்தை வைத்து - பாகுபாட்டின் அடிப்​படையில் கருக்​கலைப்பு செய்யக் கூடாது என்பதைத் தவிர, ஆரோக்​கி​யத்​துக்குப் பாதிப்பு இல்லை​யென்றால் ஒரு பெண் தன் விருப்​பப்படி கருவைச் சட்டப்படி கலைத்​துக்​கொள்​ளலாம்.
  • அதேவேளை​யில், கருக்​கலைப்பை இந்தியக் குடும்ப அமைப்பும், சமூகமும் பெரும்​பாலும் அனுமதிப்​ப​தில்லை. கருக்​கலைப்பு, கருத்தடை போன்ற மருத்துவ அறிவியலின் வளர்ச்சியை நுகர முடியாத பெண்கள் இந்தியாவில் அதிகம்.

பிள்ளை பெறும் கருவியா பெண்கள்?

  • பத்து மாதங்கள் குழந்​தையைச் சுமப்​ப​தற்குப் பெண் மனதளவிலும் உடலளவிலும் பக்கு​வப்பட வேண்டும். இவ்விரண்டும் பக்கு​வ​மடைவதற்கு முன் பெண்ணின் கவனத்​துக்கு வராமல் கரு உருவாகும்போது அதைக் கலைப்பதா, குழந்தை பெற்றுக்​கொள்வதா என்ற முடிவைப் பெண்தான் எடுக்க வேண்டும். மாறாக, அரசு முடிவெடுப்பது பெண்ணுக்கு எதிராக நிகழ்த்​தப்​படும் அநீதியே.
  • அதுவும் உயிராபத்து இருந்​தாலும் பரவாயில்லை, வல்லுற​வினால் குழந்தை உருவானாலும் பரவாயில்லை, குழந்தை பெற்றுத்தான் ஆக வேண்டும் என்பதெல்லாம் ஏற்றுக்​கொள்ள முடியாதவை. பெண் என்பவள் பிள்ளை பெறும் கருவி என்னும் கருத்தைச் சர்வதேச அரசுகள் நிலைநிறுத்த முயல்வது ஆபத்தானது. மனிதாபி​மானமற்றது!

சாதி - பொருளாதார ஆதிக்கம்:

  • பெண்கள் ஆரோக்​கியமாக இருந்​தா​லும், இல்லை​யென்​றாலும் குழந்தை பெற்றுக்​கொண்டே ஆக வேண்டும் என்று கட்டாயப்​படுத்​தப்​படுவது ஒரு புறமிருக்க, ஒரு பெண் யார் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதைக்​கூடச் சமூகமே முடிவுசெய்​கிறது.
  • சமூகத்தைப் பொறுத்தவரை கருப்​பை​யானது சாதியத்​தை​யும், பொருளாதார ஏற்றத்​தாழ்​வையும் பாதுகாக்கும் கருவி. தன்னுடைய உயிரணு​விலிருந்து உருவாகும் குழந்தை​களுக்கு மட்டுமே தனது சொத்துக்​களும் உடைமை​களும் சொந்தம் என்ற ஆண் மனதின் நிலைப்​பாட்டின் தொடக்கமே பெண்ணின் கருப்பை மீதான ஆண்மையச் சமூகத்தின் ஆதிக்​கத்​துக்கு அடித்​தளம்.
  • சமூகத்தில் நிகழும் எண்ணற்ற ஆணவப் படுகொலைகளில் கொலைசெய்​யப்​படும் தம்பதி​களைக் கவனித்​திருப்​பீர்கள். பெரும்​பாலும் ஆண் ஒடுக்​கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்​தவ​ராக​வும், பெண் ஆதிக்கம் செலுத்தும் சாதியைச் சேர்ந்​தவ​ராகவும் இருப்​பதைப் பார்க்​கலாம். தங்கள் சாதிப் பெண்ணுடைய கருப்​பையில் ஒடுக்​கப்பட்ட சாதி ஆணின் உயிர் வளர அனுமதிப்பதா என்கிற ஆணவமே சாதியப் படுகொலைக்குப் பலர் துணிவதற்குக் காரணம்.
  • சாதி கடந்த காதலினால் உருவான சமத்துவ உயிர் அனைத்துப் பெண்களின் கருப்​பைகளில் வளர்ந்​து​விட்​டால், இச்சமூகத்தில் நிலவும் சாதியக் கட்டமைப்பைப் பாதுகாக்க முடியாது. அதனால்தான் இந்தியாவில் பெண்களுக்குக் கருப்​பையைச் சுற்றிப் பல ஒழுங்குக் கட்டுப்பாடுகள் வரையறுக்​கப்​பட்டுள்ளன.

தொழில் நிறுவனங்​களின் ஆதிக்கம்:

  • சமூகத்தில் பெண்களின் உழைப்பு பரவலாகக் காணப்​படு​கிறது. அமைப்பு​சாராத் தொழிலா​ளர்​களில் 90% பேர் பெண்கள். பெரும்​பாலான இடங்களில் அவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்​கப்​படு​கின்றன. குறிப்பாக, திருமணமான பெண்களுக்கு!
  • 1. சமீபத்தில் சென்னையை அடுத்​துள்ள ஸ்ரீபெரும்​புதூரில் இயங்கிவரும் ஃபாக்ஸ்கான் தொழிற்​சாலை​யில், திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்​ப​தில்லை என்னும் செய்தி சர்ச்சையை ஏற்படுத்​தியது. இக்குற்​றச்​சாட்டை ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்தது. ஆனால், அங்கு பணிபுரிந்த முன்னாள் தொழிலாளி, திருமணமான பெண்கள் மெட்டி, தாலி அணிவது உற்பத்​தியைப் பாதிக்கும் என்று அந்நிறுவன நிர்வாகம் கருது​வ​தாகவும் திருமணமான பெண்களுக்கு அதிகக் குடும்பச் சுமை இருப்​ப​தால், அவர்களை அந்நிறுவனம் வேலைக்கு எடுப்ப​தில்லை என்றும் கூறியுள்​ளார்.
  • பெண்கள் திடீரென்று கருவுற்​றாலோ, குழந்தை​களுக்காக அதிக விடுப்பு எடுத்​துக்​கொண்டாலோ உற்பத்தி பாதித்து​விடும் என்ற நிர்வாகத்தின் அச்சமே திருமணமான பெண்களை வேலைக்கு எடுக்​காததற்குக் காரணம். ஒரு பெண் கருவுறு​வதும், அவளுக்குக் குழந்தைகள் இருப்​பதும் அவளது தனிப்பட்ட உரிமை. அதற்கேற்​றாற்போல் பணியிடம் தகவமைத்​துக்​கொள்ள வேண்டுமே தவிர, தனிப்பட்ட விவகாரங்​களுக்​காகப் பணியிடத்​திலிருந்து புறந்​தள்​ளுவது எப்படி முறையாகும்?
  • திண்டுக்கல் மாவட்​டத்தில் உள்ள ஒரு பஞ்சாலை​யில், மாதம் மூன்று நாள்கள் வலியுடன் வேலை செய்ய முடியாத பெண்கள் விடுப்பு எடுப்பதை விரும்பாத நிர்வாகம், மாதவிடாயைத் தள்ளிப்​போடும் மாத்திரைகளைப் பெண் தொழிலா​ளர்​களுக்கு வழங்கு​வ​தாகத் தகவல்கள் வெளியாகின்றன.
  • மாதவிடாய் மாதம் தவறாமல் வரவில்லை என்றால் பெண்களுக்கு உடல் பிரச்​சினைகள் ஏற்படும். பெண்ணின் கருப்பை ஆரோக்​கியமாக இருப்​ப​தற்கு அடையாளமே மாதவிடாய்​தான். உற்பத்தி குறையக் கூடாது என்பதற்காகத் தொழிலா​ளியின் மாதவிடாயை நிர்வாகம் தள்ளிப்​போடு​வதற்கு உரிமை கொடுத்தது யார்? தொழிலா​ளர்​களின் ஆரோக்​கி​யத்​தைவிட லாபத்தை மட்டுமே முக்கிய​மாகக் கருதும் சமூகம் ஆரோக்​கியமாக எப்படி இருக்க முடியும்? இதனால் பணியாளர்​களின் உடல் ஆரோக்​கியம் மட்டுமல்ல, உற்பத்தி சார்ந்த அறமும் பாதிப்புக்குள்ளாகிறது.

வாடகைத் தாய்:

  • பெண்கள் கருவுறு​வதால் அவர்களின் பணியில் முன்னேற்​றமடைய முடியாமல் போகிறது. ஒரு பெண் திருமண​மாகிக் குழந்தை பிறப்​ப​தற்கு முன்னர் வரை தன்னுடைய வேலையில் சிறப்​பாகப் பணியாற்றினாலும், குழந்தை உருவாகும்போது பெண்களுக்கே உரிய சிக்கல்களை எதிர்​கொள்ள நேர்கிறது. ஆனால், அந்த நேரத்தில் அவர்களுக்குத் துணை நிற்க வேண்டிய நிறுவனங்கள் அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பது நியாயமற்றது.
  • அதேபோல் பல வருடங்கள் குழந்தை இல்லாத​தால், பிரபலங்​களும் பணக்காரர்​களும், ஏன் சில வெளிநாட்​டினர்கூட வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகிறார்கள். இச்செயல்​முறை​யினால் உயர்ந்த பொறுப்பு​களில் இருக்கும் பெண்களின் வளர்ச்​சியில் எந்தப் பாதிப்பும் இல்லை. குழந்தை இல்லாதவர்​களுக்குக் குழந்தை கிடைப்​ப​தால், இதை ஆரோக்​கியமான விஷயமாகப் பார்க்​கிறார்கள். ஆனால் நடைமுறையில் அப்படி​யில்லை. இங்கு வாடகைத் தாயாக இருப்​பவர்கள் பெரும்​பாலும் பொருளா​தா​ரத்தில் நலிவுற்ற பெண்களே.
  • வருமானம் ஈட்டவே வேறு வழியில்​லாமல் இந்தத் தொழிலுக்குத் தள்ளப்​படு​கிறார்கள். சட்டம் வாடகைத் தாய்முறைக்குப் பல நெறிமுறைகள் வைத்திருந்​தாலும் சமூகம் சட்டத்தைப் புறந்​தள்​ளுகிறது. குழந்​தையைச் சுமப்​பதும் பெண்தான், வாடகைத் தாய் மூலம் பெறும் குழந்தைக்கு உரிமை கொண்டாடு​வதும் பெண்தான். இதில் விவாதிப்​ப​தற்கு ஒன்றுமில்லை என்று சொல்ல முடியுமா?
  • இதில், பொருளாதார ஏற்றத்​தாழ்வு வெளிப்​படை​யாகத் தெரிகிறது. பொருளா​தா​ரத்தில் வலிமையாக இருப்​ப​தால், பெண்ணாகவே இருந்​தாலும் பொருளா​தா​ரத்தில் நலிவுற்ற மற்ற பெண்களின் கருப்​பைக்கு உரிமை கொண்டாடுவது நியாயம்தானா என்னும் கேள்வியும் எழுகிறது.
  • வாடகைத் தாய் முறை வணிகமயமாகும் சூழலில் அப்பெண்​களின் உடலும் கருப்​பையும் ஆரோக்​கியம் இழந்துள்ளன. இன்னும் சொல்லப்​போனால் சிலர் லாபம் பார்க்கும் தொழில் முதலீடாகவே கருப்பை மாறியுள்ளது. இவையெல்லாம் தனிமனித இனப்பெருக்க உரிமை மீறல்.
  • எந்தச் சாதியைச் சேர்ந்த பெண்ணாக இருந்​தா​லும், ஏழைப் பெண்ணாக இருந்​தா​லும், பணக்காரப் பெண்ணாக இருந்​தா​லும், எந்த நாட்டைச் சேர்ந்த பெண்ணாக இருந்​தாலும் தன்னுடைய கருப்பை மீதான உரிமை, கருப்​பையைச் சுமக்கும் அப்பெண்ணுக்கே சொந்தம். அவ்வுரிமையை உறுதிசெய்வதே குடும்பம், சமூகம், அரசின் அடிப்​படைக் கடமை.

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories