காலநிலை நெருக்கடிக்குக் காரணம் தனி மனிதர்களா?
- காலநிலை நெருக்கடி நம் காலத்தின் மிக முக்கிய சவால்களில் ஒன்று. எனவே, இதன் தாக்கங்கள் அதிகரிப்பதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது பற்றிய ஆழமான விவாதம் அவசியமாகிறது. மனிதச் செயல்பாடுகள் ஆதிக்கம் செலுத்துவதாகக் கருதப்படும் இந்தக் காலக்கட்டத்துக்கு நிலவியல் (Geological) அடிப்படையில் ‘மனித ஆதிக்க யுகம்’ (Anthropocene) என்கிற பெயரை அறிவியலாளர்கள் முன்மொழிந்துள்ளனர். சுமார் 12,000 ஆண்டுகளாக நிலவி வந்த ‘ஹோலசீன்’ (Holocene) என்கிற வெப்பநிலை யுகத்தைக் கடந்து, மனித குலம் அடுத்த யுகத்தில் அடியெடுத்து வைப்பதை இது உணர்த்துகிறது.
- அறிவியலர்களின் கூற்றுப்படி மனித ஆதிக்க யுகம் என்ற வரையறை பெரும்பாலும் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டால் ஏற்படும் அதிகக் கரிம உமிழ்வை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்படுகிறது. ‘மனித ஆதிக்க யுகம்’ என்கிற சொல், நிலவியல் காலக்கட்டத்தைக் குறிக்கும் வகையில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், இந்தச் சொல் சுற்றுச்சூழல் சீரழிவைத் தூண்டும் முதலாளித்துவப் பொருளாதார அமைப்புகளைப் பொறுப்புக்கு உள்ளாக்குவதைத் தவிர்க்கிறது எனப் பல அறிஞர்கள் வாதிடுகின்றனர்.
- எனவே அதற்கு மாற்றாக, அவர்கள் ‘மூலதன ஆதிக்க யுகம்’ (Capitalocene) என்கிற சொல்லைப் பயன்படுத்தி, காலநிலை நெருக்கடியை உருவாக்குவதில் முதலாளித்துவத்தின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டுகிறார்கள். காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் குறித்த விவாதங்களைப் புரிந்துகொள்ள இந்த மாறுபட்ட கருத்தாக்கங்கள் அவசியமாகின்றன.
முதலாளித்துவத்தின் பங்கு:
- முதலாளித்துவம் ஒரு பொருளாதார அமைப்பு என்ற வகையில், தொடர்ச்சியான நுகர்வுக்கு நம்மைப் பழக்கப்படுத்தியிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் பெரும்பாலும், லாபத்தைப் பெருக்கும் நோக்கில் சுற்றுச்சூழல் அக்கறை இல்லாமல் இயற்கை வளங்களைத் தொழில் துறைகள் சுரண்டிக்கொள்ளப் பல நாடுகள் அனுமதிக்கின்றன.
- இது, தெற்குலக நாடுகளின் (Global South) வளத்தை, வடக்குலக நாடுகள் (Global North) பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்கிறது. இதனால், அதீதப் பொருளாதார மேம்பாடு அடைந்த வடக்குலக நாடுகள், உலக மக்கள்தொகையில் தோராயமாக 25% மட்டுமே கொண்டிருந்தாலும், 1850ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை 79% கரிம வெளியீட்டுக்குக் காரணமாகியுள்ளன. இந்தக் கரிம வெளியீட்டின் முக்கிய ஆதாரங்கள் புதைபடிவ எரிசக்திப் பயன்பாடே ஆகும்.
- தற்போது கடைப்பிடிக்கப்பட்டுவரும் பொருளாதாரக் கொள்கைகள் தொடரும்பட்சத்தில், 2100ஆம் ஆண்டுக்குள் புவியின் சராசரி வெப்பநிலை சுமார் 2.7ஂC அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இன்னும் தீவிரமான காலநிலை நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும். தொடர்ச்சியாக மறுசுழற்சி, நீர் சேமிப்பு, மின்சார சேமிப்பு போன்ற தனிமனித முன்னெடுப்புகள்தான் காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்த உதவும் என்ற எண்ணத்தை முதலாளித்துவ அமைப்புகள் மக்கள் மத்தியில் விதைத்துள்ளதாக ‘மூலதன ஆதிக்க யுகம்’ என்கிற கூற்றை முன்மொழியும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
வரலாற்றுப் பார்வை:
- வரலாற்றுரீதியாகப் பார்க்கும்போது, காலனிய ஆட்சி முறையும் அதன் பின் ஏற்பட்ட தொழில்மயமாதலும்தான் தற்போதைய காலநிலை நெருக்கடிகளுக்கான வேர்கள் என்பதை உணர முடியும். ஐரோப்பியர்கள் புதிய நிலப்பரப்புகளுக்குச் சென்றபோது, அங்குள்ள பூர்வகுடிகளை நாகரிகமற்றவர்கள் எனக் கூறினர். அவர்களை ‘நாகரிகப்படுத்துவதாகவும்’, அவர்களின் நிலங்களை ‘வளப்படுத்துவதாகவும்’ சொல்லி அடக்குமுறை மூலம் அவர்களின் நிலப்பரப்புகளைக் கைப்பற்றினார்கள்.
- முதலாளித்துவம் எப்போதும் மூலதனத்தைப் பெருக்கிக்கொள்ளவே முனைப்புக் காட்டும். முதலாளித்துவக் கோட்பாட்டால் மலிவானது என வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களையும் மனித உழைப்பையும் கட்டற்ற வகையில் பயன்படுத்தித் தன் மூலதனத்தைப் பன்மடங்காக அது அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது. இது ஏதோ 18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சியால் மட்டும் நிகழ்ந்ததாகத் தவறாக எண்ண வேண்டாம். 1492ஆம் ஆண்டு பஹாமஸ் எனத் தற்போது அறியப்படும் கரீபியன் நிலப்பரப்பை கிறிஸ்டோபர் கொலம்பஸ் வந்தடைந்ததில் இருந்துதான் ஐரோப்பியர்கள் இயற்கையைச் சுரண்டத் தொடங்கினார்கள் என்பது வரலாறு.
- இது பூர்வகுடிகளைத் தலைமுறைகளைத் தாண்டிய மனித அடிமைத்தனத்துக்குத் தள்ளியதுடன், இயற்கை வளங்களைத் தீவிரமாகப் பயன்படுத்தி லாபத்தைக் குவிக்கும் செயலாகவும் மாறியது. எனவே, தொழிற்புரட்சியை மட்டுமே காலநிலை மாற்றத்துக்குக் காரணமாகக் கொள்வது வரலாற்றைக் குறுகிய கண்கொண்டு பார்ப்பதற்குச் சமம். அப்படிக் குறுக்கப்பட்ட கண்ணோட்டம்தான் ‘மனித ஆதிக்க யுகம்’ என்கிற சொல்லாடல் உருவாவதற்கு அடிப்படை. புதைபடிவ எரிசக்தியால் தூண்டப்பட்ட தொழிற்புரட்சி புவியின் நிலையை மோசமாக்கினாலும், அதற்கு முந்தைய காலனிய மனப்பான்மையைக் கேள்விக்கு உள்படுத்த வேண்டும் என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் வலியுறுத்தல்.
ஆழமான விசாரணை:
- ‘மனித ஆதிக்க யுகம்’ அல்லது ‘மூலதன ஆதிக்க யுகம்’ என்கிற பார்வையே காலநிலை நெருக்கடியை நாம் எவ்வாறு கையாளப்போகிறோம் என்பதற்கு அடிப்படை. இது நம் பொருளாதாரக் கட்டமைப்பை விமர்சனப் பார்வையில் மறுபரிசீலனை செய்வதற்கு வழிவகுக்கிறது. காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கும், அது சார்ந்த தகவமைப்பு நடவடிக்கைகளில் தனிமனிதச் செயல்களைக் கடந்து, அமைப்புரீதியிலான மாற்றத்தை மேற்கொள்வதற்கும் இந்தக் கோட்பாட்டு விவாதம் இன்றியமையாததாகிறது.
- இவ்வாறான அமைப்புரீதியிலான மாற்றங்களுக்குப் பொருளாதார வல்லமை படைத்த வடக்குலக நாடுகள் காலம் தாழ்த்துவது வழக்கமாகிவிட்டது; ஒவ்வோர் ஆண்டும் நிகழும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டு நிகழ்வுகளின் தேய்ந்துபோன தன்மை இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அந்த வகையில் ‘மனித ஆதிக்க யுகம்’ என்பதைத் தவிர்த்து, ‘மூலதன ஆதிக்க யுகம்’ என்கிற பரிமாணத்தில் அணுகுவது காலநிலை நெருக்கடிக்கு யார் பொறுப்பு என்ற தெளிவான புரிதலுக்கு வழிவகுக்கிறது. இது சுற்றுச்சூழல் சீரழிவை நிகழ்த்தும் குறிப்பிட்ட பொருளாதார அமைப்புகளின் மீது உரிய கவனத்தைத் திருப்புகிறது!
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 02 – 2025)