TNPSC Thervupettagam

காஷ்மீர் மக்களின் கனவு என்ன?

September 25 , 2024 3 days 26 0

காஷ்மீர் மக்களின் கனவு என்ன?

  • ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இன்று (செப்​டம்பர் 25) நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்​பதிவு நாடு முழுவதும் கவனம் ஈர்த்திருக்​கிறது. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 ஆவது சட்டக்கூறு நீக்கப்​பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்​களாகப் பிரிக்​கப்பட்ட பின்னர் நிகழும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் மட்டுமல்ல, முதல் கட்டத் தேர்தலில் வாக்களிக்க காஷ்மீர் மக்கள் காட்டிய ஆர்வமும், காஷ்மீர் அரசியல் களத்தில் தென்படும் மாற்றங்​களும் இந்தக் கவன ஈர்ப்பின் முதன்மைக் காரணிகள். எப்படி இருக்​கிறது காஷ்மீர் தேர்தல் களம்?

களத்தில் மோதும் கட்சிகள்:

  • இந்தத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி​யிடு​கிறது. காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி (என்சி), மார்க்​சிஸ்ட் கட்சி, ஜம்மு - காஷ்மீர் தேசிய சிறுத்​தைகள் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்​திருக்​கின்றன. மெஹ்பூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தனித்துப் போட்டி​யிடு​கிறது (தேர்தல் முடிவைப் பொறுத்து காங்கிரஸ் கூட்ட​ணியில் இணையக்​கூடும் என்றும் பேசப்​படு​கிறது).
  • எல்லோரையும் தாண்டி, பாராமுல்லா மக்களவைத் தொகுதி உறுப்​பினரும் அவாமி இத்திஹாத் கட்சித் தலைவருமான இன்ஜினீயர் ரஷீத் இந்தத் தேர்தலில் மையப் புள்ளி​யாகப் பார்க்​கப்​படு​கிறார். மக்களவைத் தேர்தலில் ஓமர் அப்துல்​லாவைத் தோற்கடித்து ஆச்சரியப்​படுத்திய ரஷீத், இந்தத் தேர்தலில் ஜமாத்​-இ-இஸ்​லாமி, மக்கள் மாநாட்டுக் கட்சி, அப்னி கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்​திருக்​கிறார்.
  • ரஷீதின் பிரச்​சாரக் கூட்டங்​களுக்குக் கிடைக்கும் வரவேற்பு தேசிய மாநாட்டுக் கட்சிக்கு அதிர்ச்​சி​யளித்​திருக்​கிறது. மக்களவைத் தேர்தலில் சிறையி​லிருந்​த​படியே போட்டி​யிட்ட ரஷீதுக்கு இந்தத் தேர்தலில் பிரச்​சாரம் செய்ய இடைக்​காலப் பிணை அளிக்​கப்​பட்டது எப்படி என ஓமர் அப்துல்லா கேள்வி எழுப்​பி​யிருக்​கிறார். ரஷீத், பிரிவினைவாத நடவடிக்கை​களில் ஈடுபட்டதாக தேசிய பாதுகாப்புச் சட்டத்​தின்கீழ் கைதுசெய்​யப்​பட்டவர் என்பது கவனிக்​கத்​தக்கது.
  • கடந்த 30 ஆண்டு​களாகத் தேர்தல் புறக்​கணிப்பில் ஈடுபட்டுவந்த ஜமாத் - இ – இஸ்லாமி கட்சி இந்தத் தேர்தலில் தனது வேட்பாளர்​களைச் சுயேச்​சைகளாகக் களமிறக்கு​கிறது. காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்​தியில் கட்சியி​லிருந்து விலகித் தனிக்​கட்சி தொடங்கிய குலாம் நபி ஆசாத் இந்தத் தேர்தலில் தனித்துக் களம் காண்கிறார். சிறிய கட்சிகளான இவற்றின் நகர்வு​களின் பின்னணியில் பாஜக இருப்பதாக எதிர்க்​கட்​சிகள் குற்றம்​சாட்டு​கின்றன.
  • இவ்வளவுக்​கும், 2015இல் ரஷீத் சட்டமன்ற உறுப்​பினராக இருந்தபோது எம்எல்ஏ ஹாஸ்டலில் மாட்டுக்கறி விருந்து வைத்த​தாகக் குற்றம்சாட்டப்பட்டு சட்டமன்​றத்​துக்​குள்ளேயே பாஜகவினரால் தாக்கப்​பட்​டவர். 370ஆவது சட்டக்கூறு நீக்கப்​பட்​டதைக் கடுமையாக எதிர்த்து​வரும் ரஷீத் தான் மோடியை எதிர்க்கும் திறன் கொண்ட தலைவர் என்று அக்கட்​சி​யினர் வாதிடு​கிறார்கள். கூடவே, காஷ்மீரின் பாரம்​பரியக் கட்சிகளை​விடவும் ரஷீதின் கட்சிதான் காஷ்மீர் மக்களின் துயரங்களை நன்கு உணர்ந்​து​கொண்ட கட்சி; ரஷீதே நேரடி​யாகப் பாதிக்கப்பட்டவர்தான் என்றெல்லாம் வாதங்கள் முன்வைக்​கப்​படு​கின்றன.
  • பல்வேறு காரணங்​களால் தனது வெற்றிவாய்ப்பு குறித்த சந்தேகத்தில் இருக்கும் பாஜக, சிறிய கட்சிகளையும் சுயேச்​சைகளையும் மறைமுக​மாகப் பயன்படுத்​திக்​கொள்வதாக எதிர்க்​கட்​சிகள் குற்றம்​சாட்​டிவரு​கின்றன. யாருக்கும் பெரும்​பான்மை இல்லாத சட்டப்​பேரவை அமைந்​தால், குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் மீண்டும் காஷ்மீரைத் தங்கள் கைக்குள் வைத்துக்​கொள்ள மத்திய அரசு நினைப்பதாக ஓமர் அப்துல்லா குறிப்​பிட்​டிருக்​கிறார்; அப்படியான சூழல் உருவாவதைத் தடுக்கவே காங்கிரஸுடன் கூட்டணி அமைத்​திருப்​ப​தாகவும் அவர் சுட்டிக்​காட்​டி​யிருக்​கிறார்.
  • தேர்தலுக்கு முன்பே ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை வலியுறுத்​திவந்தன. எனினும், அதைச் செய்யாமல், மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்​கப்​படும் என்னும் வெற்று வாக்குறுதியை வைத்து தேர்தலை நடத்துவதாக பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றம்​சாட்டு​கிறது.
  • காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் ஒரு மன்னர்போல நடந்து​கொள்வதாக ராகுல் விமர்​சித்திருக்​கிறார். உள்ளூர் மக்களின் சொத்துக்கள், வணிக வாய்ப்புகள் வெளியாள்​களுக்கு வழங்கப்​படு​வ​தாகக் குற்றம்​சாட்​டி​யிருக்கும் காங்கிரஸ், காஷ்மீர் பண்டிட்களை வைத்து அரசியல் செய்த பாஜக அவர்களுக்கு உதவ முன்வர​வில்லை என்று குற்றம்​சாட்​டி​யிருக்​கிறது. இதன் மூலம் இந்துக்கள் அதிகம் வசிக்கும் ஜம்முவில் பாஜகவுக்கு அழுத்தம் கொடுக்க காங்கிரஸ் முயல்கிறது.
  • மக்களவைத் தேர்தல் பிரச்​சா​ரத்தைப் போலவே இந்தத் தேர்தலிலும் பாஜக, ஆர்எஸ்எஸ் மீதும் பிரதமர் மோடி மீதும் ராகுல் காந்தி கடும் விமர்​சனங்களை முன்வைத்து​வரு​கிறார். கூடவே, முன்பைவிட பலம் குறைந்த நிலையில் பிரதமர் மோடி இருப்​ப​தாக​வும், பாஜக அரசு கொண்டு​வரும் மசோதாக்​களைத் தடுத்​து​நிறுத்தும் வலிமை எதிர்க்​கட்​சிகளுக்கு இருப்​ப​தாகவும் சுட்டிக்​காட்டு​கிறார்.

வாத பிரதிவாதங்கள்:

  • ஆட்சிக்கு வந்தால், காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தைப் பெற்றுத்தர மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்​கப்​படும் என்று ராகுல் வாக்குறுதி அளித்​திருக்​கிறார். அது எந்த அளவுக்கு நடைமுறைச் சாத்தியம் என்பது வேறு விஷயம். மறுபுறம், 370ஆவது சட்டக்கூறை மீண்டும் கொண்டு​வருவது தொடர்​பாகக் காங்கிரஸ் வெளிப்​படையாக எதையும் பேசவில்லை. கட்சியின் தேர்தல் அறிக்கை​யிலும் அது இடம்பெற​வில்லை. ஆரம்பத்தில் இவ்விஷ​யத்தில் அமைதி காத்த ஓமர் அப்துல்லா இப்போது மீண்டும் அதை வலியுறுத்தத் தொடங்கி​யிருப்பது காங்கிரஸுக்குச் சற்றே சங்கடத்தைக் கொடுத்​திருக்​கிறது.
  • மறுபுறம், 370ஆவது - 35ஏ சட்டக்​கூறுகளை மீண்டும் கொண்டுவர காங்கிரஸும் தேசிய மாநாட்டுக் கட்சியும் விரும்​புவ​தாகப் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பேசியது பாஜகவின் புதிய அஸ்திர​மாகி​யிருக்​கிறது. இக்கட்​சிகள் பாகிஸ்​தானுக்கு ஆதரவானவை / பாகிஸ்​தானின் ஆதரவு பெற்றவை என்று பாஜக குற்றம்​சாட்​டி​யிருக்​கிறது. இவ்வளவுக்கும் கவாஜா ஆசிஃபின் கருத்​துக்கும் தங்களுக்கும் சம்பந்​தமில்லை என்று விளக்​கமளித்​திருக்கும் இரு கட்சிகளும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்​களில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது என்றும் எச்சரித்​திருக்​கின்றன. எனினும், பாஜக இந்த அஸ்திரத்தை விடுவதாக இல்லை.
  • இந்திய எல்லைக்குள் நுழைந்து ஆக்கிரமிப்பில் ஈடுபடும் சீனாவுடன் பேச்சு​வார்த்தை நடத்தத் தயாராக இருக்கும் மத்திய அரசு, பாகிஸ்​தானுடன் பேச்சு​வார்த்தை நடத்த மறுப்பது ஏன் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபாரூக் அப்துல்லா எழுப்​பி​யிருக்கும் கேள்வியும் பாஜகவுக்குச் சாதகமான அம்சமாகி​யிருக்​கிறது. காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய மூன்றும் குடும்பக் கட்சிகள் - ஊழல் கட்சிகள் என்று பாஜக விமர்​சித்து​வரும் நிலையில், அவற்றில் ஒன்றான மக்கள் ஜனநாயகக் கட்சியின் கூட்டணி அரசில் பாஜக பங்கேற்றது ஏன் என்று ஃபாரூக் அப்துல்லா கேள்வி எழுப்​பி​யிருக்​கிறார்.
  • காஷ்மீரில் 40,000 பேரைப் பலிவாங்கிய பயங்கர​வாதச் சம்பவங்​களுக்கு தேசிய மாநாட்டுக் கட்சிதான் காரணம் என்று அமித் ஷா குற்றம்​சாட்​டி​யிருக்கும் நிலையில், காந்தஹார் விமானக் கடத்தல் சம்பவத்​தில், ஜெய்ஷ்-இ-​முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை வாஜ்பாய் அரசு விடுவித்​ததை​யும், மசூத் அசார் இந்தியாவில் பல்வேறு பயங்கர​வாதச் செயல்​களில் ஈடுபட்​டதையும் சுட்டிக்​காட்டி பதிலடி கொடுத்​திருக்​கிறார் ஃபாரூக். கல்வீச்சு சம்பவங்​களில் கைதுசெய்​யப்​பட்டு சிறையில் அடைக்​கப்​பட்​டிருப்​பவர்களை விடுவிப்பது தொடர்​பாக​வும், பாஜக – காங்கிரஸ் / தேசிய மாநாடு கட்சிகளுக்கு இடையே வார்த்தைப் போர்கள் நடக்கின்றன.

அமைதி திரும்​புமா?

  • செப்டம்பர் 18இல் நடந்த முதல் கட்டத் தேர்தலில் 61.11% வாக்குகள் பதிவானது அனைத்துத் தரப்பினரிடமும் உற்சாகத்தை ஏற்படுத்​தி​யிருக்​கிறது. 35 ஆண்டு​களில் இல்லாத அளவுக்கு அதிகமான வாக்குப்​பதிவு இது. பயங்கர​வாதத் தாக்குதல்கள் அடிக்கடி நிகழும் புல்வாமா, அனந்த்​நாக், சோஃபியான் உள்ளிட்ட மாவட்​டங்​களிலும் கணிசமான வாக்குப்​பதிவு நிகழ்ந்​திருக்​கிறது. இந்தப் பகுதி மக்கள் பெரும்​பாலும் தேர்தல்​களைப் புறக்​கணித்துவந்த நிலையில் இத்தகைய மாற்றம் நிகழ்ந்​திருக்​கிறது.
  • காஷ்மீர் மக்கள் ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்திருப்​பதையே இது காட்டுவதாக அரசியல் பார்வை​யாளர்கள் சுட்டிக்​காட்டு​கிறார்கள். மாநில அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு - பாஜக சொல்லிக்​கொள்வது போல- பயங்கர​வாதச் சம்பவங்கள் முற்றுப்​பெற்று​விட​வில்லை. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்​பின்மை உள்ளிட்ட பிரச்​சினை​களும் முடிவுக்கு வந்து​விட​வில்லை.
  • குறிப்பாக, பல்வேறு பகுதி​களில் மிகக் கடுமையான மின்வெட்டுப் பிரச்சினை நிலவு​கிறது. பல தசாப்​தங்களாக நிலவிவந்த பதற்றத்தால் சோர்வடைந்​திருக்கும் காஷ்மீர் மக்கள், அமைதியான வாழ்க்கையை எதிர்​நோக்கி​யிருக்​கிறார்கள். மக்களிடம் நிலவும் மெளனத்தை அமைதி என்று தவறாகக் கருதிக்​கொள்ளக் கூடாது என்று பிரிவினைவாத ஹூரியத் தலைவர் மிர்வாயிஸ் உமர் ஃபாரூக் கூறியிருக்​கிறார். காஷ்மீர் மக்கள் மனதில் இருப்பது என்ன என்று அக்டோபர் 8இல் தெரிந்​து​விடும்.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories