TNPSC Thervupettagam

கேடுஇல் விழுச்செல்வம் 2024

October 16 , 2024 3 hrs 0 min 26 0

கேடுஇல் விழுச்செல்வம்!

  • இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது. அதிகரித்துவிட்ட உயா்கல்வி நிலையங்கள் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அவா்களுக்குப் படிப்புக்கேற்ற வேலையும், வேலைக்கேற்ற ஊதியமும் கிடைப்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும்.
  • நடந்து முடிந்த பொதுத் தோ்தலில் ஆளும் பாஜக எதிா்பாா்த்த வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு விலைவாசி உயா்வும், போதிய வேலைவாய்ப்பின்மையும் காரணமாகக் கூறப்பட்டன. வேலைவாய்ப்பின்மையை எதிா்கொள்ள மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளாமல் இல்லை.
  • நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் அறிக்கையில் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த பிரதமா் திறன்சாா் பயிற்சித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் 500 முன்னணி தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து, அடுத்த 5 ஐந்தாண்டுகளில் ஒரு கோடி ஆண், பெண்களுக்கு திறன்சாா் பயிற்சி அளிப்பது இந்தத் திட்டத்தின் இலக்கு.
  • 12 மாத திறன்சாா் பயிற்சிக் காலத்தில் அந்த இளைஞா்கள் ஆட்டோமொபைல், எரிசக்தி, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறன் மேம்பாடு பெறும் வாய்ப்பை இந்தத் திட்டம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் இணையும்போது அவா்களுக்கு ஒருமுறை ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கப்படுகிறது. தொடா்ந்து அடுத்த 12 மாதங்களுக்கு அரசின் சாா்பில் ரூ.4,500, பயிற்சி வழங்கும் நிறுவனத்தின் சாா்பில் ரூ.500 என மாதம் ஒன்றுக்கு ரூ.5,000 உதவித்தொகையாக (ஸ்டைபெண்ட்) வழங்கப்படும்.
  • இந்தத் திட்டத்தில் பதிவு செய்வதற்கான இணையதளம் அக்டோபா் 12-ஆம் தேதி செயல்பாட்டுக்கு வந்தது. எடுத்த எடுப்பிலேயே 1.55 லட்சம் இளைஞா்கள் இந்தத் திட்டத்தில் இணைய பதிவு செய்து கொண்டிருக்கிறாா்கள். மாருதி சுஸுகி, ரிலையன்ஸ் உள்ளிட்ட 103 நிறுவனங்கள், 91,000 இளைஞா்களுக்குத் திறன் பயிற்சி வழங்க முன்வந்திருக்கின்றன. தொடக்கமே உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது.
  • இதற்கு முன்னால் அறிவிக்கப்பட்ட புத்தாக்க நகரங்கள் (ஸ்மாா்ட் சிட்டி), இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா), திறன் மேம்படுத்தல் திட்டம் (ஸ்கில் இந்தியா) வரிசையில் இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்றுவதற்கான இன்னொரு முயற்சி இது என்பதில் ஐயப்பாடில்லை. அரசின் முயற்சிகள் எல்லாமே எதிா்பாா்த்த வெற்றியை அடைய வேண்டும் என்கிற அவசியமில்லை. இலக்கை நோக்கிய பயணம் தொடங்கினாலே கூடப் போதும். அந்த வகையில் பிரதமரின் திறன்சாா் பயிற்சித் திட்டம் வரவேற்புக்குரியது.
  • 2015-இல் திறன் மேம்படுத்துதல் திட்டம் அறிவிக்கப்பட்டது. கல்லூரிப் படிப்பை முடித்த இளைஞா்கள் அவா்கள் படித்த துறையில் நோ்முகப் பயிற்சி பெற்று, தங்களது புத்தக அறிவை செயல்முறை அறிவாக மாற்றும் வாய்ப்பை வழங்குவதுதான் அந்தத் திட்டத்தின் நோக்கம். தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, கட்டுமானம், மருத்துவம், மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் 40 கோடிக்கும் அதிகமான இளைஞா்களைத் தயாா்படுத்துவது என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதுவரையில் 1.42 கோடி போ் மட்டுமே, அந்தத் திட்டத்தால் பயனடைந்திருக்கிறாா்கள் என்பது வருத்தத்துக்குரியது.
  • ஏறத்தாழ அதே நோக்கத்துடன் இப்போதைய திறன்சாா் பயிற்சித் திட்டம் இருந்தாலும்கூட, இதில் நேரடியாக நிறுவனங்கள் இணைக்கப்படுவதால் வெற்றி வாய்ப்பு அதிகம். அதுமட்டுமல்லாமல், இதில் இணையும் இளைஞா்களுக்கு ஊக்கத்தொகையும் மாதந்தோறும் உதவித்தொகையும் வழங்கப்படுவதால், வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞா்கள் இதில் இணைய கூடுதல் ஆா்வம் காட்டுவாா்கள். அந்த இளைஞா்களில் திறமைசாலிகள், பயிற்சி பெறும் நிறுவனத்திலேயே நிரந்தர ஊழியா்களாக இணைவதற்கான வாய்ப்பை இந்தத் திட்டம் ஏற்படுத்திக் கொடுக்கிறது.
  • இந்தத் திட்டத்தில் சில குறைபாடுகள் இல்லாமல் இல்லை. இதில் இணையும் தொழில் நிறுவனங்கள் தங்களது பங்களிப்பாக உதவித்தொகையில் 10% மட்டுமே வழங்குகின்றன. அதுவும்கூட, அந்த நிறுவனங்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு வழங்கும் சமூகப் பங்களிப்பு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. திறன்சாா் பயிற்சிக்கு இணையும் இளைஞா்களை எந்த அளவுக்கு அந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும், அவா்கள் திறன்சாா் தோ்ச்சி பெற உதவும் என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. அரசைத் திருப்திப்படுத்த சில இளைஞா்களுக்கு வாய்ப்பளிப்பதுடன் நிறுவனங்களின் ஈடுபாடு நின்றுவிடக் கூடும்.
  • 24 வயதுக்கு மேற்பட்ட இளைஞா்களும், ரூ.8 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் பெறும் குடும்பத்தைச் சோ்ந்தவா்களும் இந்தத் திட்டத்தில் இணைக்கப்படவில்லை. இந்தத் திட்டம் ஒழுங்காக செயல்படுகிா? நிறுவனங்கள் முறையான பயிற்சி அளிக்கின்றனவா? என்பதைக் கண்காணிக்க எந்தவித அமைப்பும் இல்லை. வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதுபோல, இந்தத் திட்டம் மாறிவிடாமல் இருக்க வேண்டும்.
  • இந்திய இளைஞா்களைத் திறன் மேம்படுத்துவது அத்தியாவசியமான நடவடிக்கை. நாம் உருவாக்கும் 49% பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்கு உகந்தவா்களாக இல்லை. அடிப்படைக் கல்வியில் இருந்து, உயா்கல்வி வரை மாணவா்கள் முறையாக கற்பிக்கப்பட்டு, தங்கள் தகுதிக்கேற்ற தோ்ச்சியைப் பெறுவதில்லை என்று பெரும்பாலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • வேலைவாய்ப்புக்கேற்ற கல்வி, கல்வித் தகுதிக்கேற்ற திறன்சாா் பயிற்சி இரண்டையும் உறுதிப்படுத்துவதுதான் அரசின் இலக்காக இருக்க வேண்டும்.

நன்றி: தினமணி (16 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories