TNPSC Thervupettagam

சமூகத்தில் குற்றங்களும் சீர்திருத்தங்களும்

February 6 , 2025 8 hrs 0 min 10 0

சமூகத்தில் குற்றங்களும் சீர்திருத்தங்களும்

  • படிநிலைச் சாதிய சமூகக் கட்டமைப்பின் சிக்கல்களில் பழையன நீடிப்பதும் புதியன உருவாவதும் அமைதியற்ற சூழல் நீடித்திருக்க வழிவகுக்கின்றன. இவற்றைக் கருத்தில் கொண்டு, அரசமைப்புச் சட்டத்திலும் அதன் பின்னரும் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள், சமூகத்தில் ஒவ்வொரு நபரும் சுயமரியாதையுடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்குத் தேவையான உரிமைகளை உத்தரவாதம் செய்துள்ளன.
  • இருப்​பினும், சட்ட உரிமைகள் அபகரிக்​கப்​படுவது தொடர்ந்து நீடிக்​கிறது. தனி நபர்களோ, சமூகங்களோ, கும்பல்களோ ஒருவரது சுயமரி​யாதையை வெவ்வேறு வடிவங்​களில் அத்து​மீறுகிறபோது அரசாங்​கத்​துக்கு எதிராக எதிர்க்​கட்​சிகளும் அமைப்பு​களும் கடுமையான குற்றச்​சாட்டு​களைச் சுமத்து​கின்றன.
  • இதிலும் வாக்கு அரசியலுக்காக விமர்​சனத்​துக்குப் பதில் குற்றச்​சாட்டுகளே மேலோங்​கு​கின்றன. இதன்வழி சட்டத்​துக்கு எதிராக நிகழ்த்​தப்​படும் சமூகக் கேடான செயல்​களுக்கும் சமூகக் கட்டமைப்​புக்​கும், எதிர்க்​கட்​சிகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பது போன்ற தோற்றம் உருவாக்​கப்​படு​கிறது.
  • குற்றச்​சாட்டு​களைக் கூறுவோர் தங்களை நியாய​வா​தி​களாக​வும், சுத்த​மானவர்​களாகவும் சொல்லிக்​கொள்​கிறார்கள். குற்றச்​சாட்டு அரசியலால் குற்றங்​களுக்கான சூழல் ஒழிவதற்கான சாத்தியம் இல்லை. ஆளும் கட்சிகள் மாறிக்​கொண்​டிருந்​தாலும் குற்றங்கள் தொடர்​கின்றன.
  • குற்றங்கள் உருவாவதற்குச் சமூகக் கட்டமைப்பும் அதன் நிலை மாறாமல் இருப்​பதும் காரணமாக இருப்பது புறக்​கணிக்​கப்​படு​கிறது. வர்க்​கத்​துடன் பிணைந்​துள்ள சாதியா​திக்க, ஆணாதிக்க மனநிலை​யானது மாற்றங்களை ஏற்க இயலாமல் குற்றங்​களைச் செய்கிறது. மாற மறுக்கும் மனங்களைச் சீர்திருத்தும் இயக்கமற்ற போக்கே சமூகக் கேடுகள் பரவலா​வதற்கு வித்திடு​கிறது.

மாற்றமும் மனமாற்​றமும்:

  • காலனிய காலத்தில் பாரம்​பரியமான பொருளியல் உற்பத்தி நவீன நிலைக்கு மாற்றப்​பட்​ட​போது, பண்டைய பண்பாடுகளான தீண்டாமை, குழந்தை மணம், கைம்பெண், சதி போன்றவை சமூகக் கேடுகள் என்று உணரப்​பட்டன. இவற்றை ஒழிப்​ப​தற்​கும், பெண் கல்வி, விதவை மறுமணம், விவாகரத்து, வகுப்பு​வாரிப் பிரதி​நி​தித்துவம் போன்ற நேர்மறையான மாற்றங்​களுக்கும் வித்திடப்​பட்டது.
  • இவற்றுக்குச் சட்ட அங்கீ​காரம் கோரப்பட்ட அதேவேளை, இந்த மாற்றங்களை ஏற்கும் நிலைக்குச் சமூகத்தின் மனநிலையை மாற்றவும் சாதி, சமூக, மகளிர், ஆன்மிக, அரசியல் இயக்கங்​களும் அச்சு ஊடகங்​களும் சீர்திருத்​தங்களை முன்னெடுத்தன. இவை குறித்த கூர்மையான விவாதங்கள் சமூகமய​மாயின. அரசியலில் முரண்பட்ட கொள்கைகளைக் கொண்டிருந்த இயக்கங்​கள்கூட சமூகக் கேடுகளை ஒழிப்​பதில் ஒருமித்த கருத்து​களைக் கொண்டிருந்தன.
  • முரண்பட்ட அரசியல் கருத்து​களைக் கொண்டிருந்த ஆளுமைகளான அம்பேத்​கரும் காந்தி​யும், பெரியாரும் ராஜாஜியும் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்கிற எண்ணத்தைக் கொண்டிருந்​தனர். இவற்றைச் செய்வதற்கான பாதைகள் வேறுபட்​டிருந்தன. அக்காலத்தில் நடத்தப்பட்ட மாநாடு​களில் நிறைவேற்​றப்பட்ட தீர்மானங்​களும் ஆளுமை​களின் உரைகளும் இதற்குச் சாட்சிகள். ஆதிக்கச் சாதியினரும் ஆண்களும் வெளியிட்ட கலை இலக்கியப் படைப்பு​களும் ஆதிக்​கர்​களின் மனநிலையைச் சீர்திருத்து​வ​தாகவே முடிவடைந்தன.
  • அதேவேளை, சமூகக் கேடுகளால் பாதிக்​கப்​பட்​ட​வர்களை முன்னேற்று​வதற்கான செயல்​களும் நிறைவேற்​றப்​பட்டன. இவை ஏக காலத்தில் செயல்​படுத்​தப்​பட்டன. சமூகக் கட்டமைப்பின் துணை விளைவுதான் சமூகக் கேடுகள் என உணரப்​பட்​ட​தால், அக்கட்​டமைப்பை எதிர்ப்​போருக்கும் அதைப் பாதுகாக்க விரும்​பியோ​ருக்கும் கருத்​தியல் முரண்பாடு கூர்மை பெற்றது. இதில் தனிநபர் தாக்குதல் இல்லை. சமூகச் சிக்கல்​களைக் களைவதில் சமூகமும் அரசும் பங்கேற்றது மிகவும் கவனத்​துக்​குரியது.
  • சுதந்திர இந்தியாவின் தேசியமய அரசியல் பொருளாதார ஆண்டுகளான 1950-1980களின் இறுதி வரையிலும், 1990கள் முதல் தனியார்மயப் பொருளா​தாரச் சூழலிலும் முன்னெடுக்​கப்​படு​கின்ற அரசியல் பொருளாதார நடவடிக்கைகளால் ஒவ்வொரு சாதிக்​குள்ளும் முன்னெப்​போதும் இல்லாத அளவுக்கு வர்க்க வேறுபாடு​களும் புதிய சமூகச் சிக்கல்​களும் பெருமளவில் உருவாகி​யுள்ளன. சுதந்திர இந்தியாவில் காலனிய கால மாற்றங்கள் கூடுதலாகப் பரவலாகியதும் நவீன வளர்ச்​சியும் புதிய வகைக் குற்றங்​களுக்குக் காரணமாகி​யுள்ளன.
  • காவல் துறையின் ஒரு நூற்றாண்டு கால ஆண்டு அறிக்கைகளை நோக்கினால் காலனிய காலத்தில் இல்லாத குற்றங்கள் பின்காலனியக் காலத்தில் புதிதாக ஏற்பட்​டிருப்​பதைக் காணலாம். பெட்டிக் கடைகளைப் போல் புதிய புதிய அரசியல் கட்சிகள் உருவாகுதல், சமூக முன்னேற்றம் என்கிற பெயரில் ஒவ்வொரு சாதிக்​குள்​ளேயும் காளான்​கள்போல் கணக்கற்ற சங்கங்கள் செயல்​படுதல், ஆன்மிக​மும், சமூகச் சேவையும் மறைந்து குருமார்​களுக்கும் பாதிரி​யார்​களுக்கும் பதிலாகத் தனியார் சாமியார்​களும் ஊழியக்​காரர்​களும் ஆன்மிகத்தை வியாபாரச் சரக்காக்​கியது, சமூகக் குண்டர்​களின் தோற்றம் போன்றவை அதைச் செய்வோரின் குடும்​பங்​களின் தன்னலன்​களுக்காக மக்களைப் பகடைக்​காய்​களாகப் பயன்படுத்து​கின்றன.
  • சாதித் தலைவர்கள், சாமியார்கள், ஊழியக்​காரர்கள் அறக்கட்​டளைகளை நிறுவித் தங்கள் உற்றார் உறவினர்களை உறுப்​பின​ராக்கு​வதும் கல்வி நிலையம், மருத்​துவமனை, ஊடகம் போன்ற சொத்து​களைத் தங்கள் குடும்பக் கட்டுப்​பாட்​டிலும் வைத்திருக்​கின்​றனர். இந்த அமைப்பு​களின் செயல்​பாடுகள் அரசியல் அதிகாரத்​தையும் பொருளாதார லாபத்​தையும் இலக்காகக் கொண்டிருப்​பதால் இன, மொழி, தேசம் போன்ற பொது அடையாளங்​களுக்குப் பதிலாகச் சாதி, மதம் ஆகிய குறுகிய அடையாளங்​களைத் திட்ட​மிட்டு வளர்க்​கின்​றனர்.
  • சாதி, மத அமைப்புகள் வெளிப்​படை​யாகச் செயல்​படுத்துவதை அரசியல் கட்சிகள் தங்களின் தேவைக்​கேற்பச் செய்கின்றன. அரசியல் கட்சிகளின் கொள்கைகள் அக்கட்​சிகளின் தலைவர்கள், தொண்டர்​களின் செயல்​களைத் தீர்மானிக்​கின்றன. இச்செயல்​பாடு​களின் பின்புலத்​தில்​தான், சட்டம் வழங்கி​யுள்ள உரிமைகளை மறுப்​பதும் அவற்றை அடைய முற்படு​வோரை​யும், வாழ்க்கைத்​ துணையைச் சுயமாகத் தேடுவோரையும் கொல்லுதல், பாலியல் வன்முறை போன்ற சமூகக் கேடுகள் நிகழ்​கின்றன.

சமூகமும் ஆட்சியும்:

  • மக்களின் வாக்குகள் ஆட்சி​யாளர்​களைத் தேர்ந்​தெடுப்​பதால் அரசியல் கட்சிகள் சாதி, மதம், மொழி போன்ற​வற்றை வாக்கு​களுக்கான மூலதன​மாகப் பயன்படுத்து​கின்றன. ஆட்சி​யாளர்கள் ஐந்தாண்​டு​களுக்கு ஒரு முறை மாறினாலும், சமூகக் குற்றங்கள் நிலையாக இருக்​கின்றன.
  • இன்றைய ஆளும் கட்சி நேற்றைய எதிர்க் கட்சி​யாக​வும், இன்றைய எதிர்க் கட்சி நாளைய ஆளும் கட்சி​யாகவும் இருப்​ப​தால், குறிப்​பிட்ட கட்சிதான் குற்றங்​களுக்கான காரணம் எனக் கூற இயலாது. அதேவேளை, சமூகக் குற்றங்கள் அரசியல் கட்சிகளுக்கு உட்பட்டும், அப்பாற்​பட்டும் நிகழ்​கின்றன.
  • சில குற்றங்கள் நடைபெறக்​கூடும் என்பதை அரசுகள் முன்கூட்டியே அறிந்​திருக்​கின்றன. ஆளும் கட்சிகளுக்குக் குற்றங்​களைக் களைவது மட்டுமன்றி, வருங்​காலத்தில் அவை உருவாவதைத் தடுக்கும் கூடுதல் பொறுப்பும் இருக்​கிறது. சட்டத்​துக்கு எதிரான குற்றங்​களைச் செய்யத் தூண்டும் மனநிலைக்கு வரலாற்றின் இடைக்​காலத்தில் தோன்றிய வர்க்​கத்​துடன் பிணைந்​துள்ள படிநிலைச் சாதியச் சமூகமும் ஆணாதிக்​கமும் அவற்றை நியாயப்​படுத்தும் மத நிறுவனங்​களும் அடிப்​படைக் காரணமாக இருக்​கின்றன. எனவே இவற்றை வலுவிழக்கச் செய்வதில் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து விவாதிக்​கப்பட வேண்டும்.
  • இந்த அடிப்​படைக் காரணிகளே சமூகம், அரசாங்க நிர்வாகம், அரசு எனச் சகலத்​திலும் பாதகமான தாக்கத்தைச் செலுத்துகின்றன. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்​படையில் செயல்​படும் அரசாங்கம் அதற்கு முரணாக இயங்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற அமைச்​சர்கள், உறுப்​பினர்கள், அதிகாரிகள், பணியாளர்​களையும் சமூகத்​தையும் அரசாங்கமே சீர்திருத்த வேண்டும்.
  • சமூகம், அரசு, அரசாங்கம் ஆகியன அரசமைப்புச் சட்டத்தின் அடிப்​படையில் செயல்​படுவதை உத்தர​வாதப்​படுத்த வேண்டும். இதற்குத் தொடக்கப் பள்ளி முதல் அனைத்து முதுகலைப் பட்டம் வரை அவரவருக்​குரிய சட்டங்​களையும் மனித உரிமை​களையும் பாடத்​திட்​டங்​களில் இருப்​பதைக் கட்டாய​மாக்க வேண்டும்.
  • சட்டத்​துக்கு எதிரான குற்றங்​களைச் சொந்தக் கிராமத்​தினர், பெற்றோர், ரத்த உறவினர் என நன்கு அறியப்​பட்​டோரும், கொள்ளை, கொலைகளில் அறியப்​ப​டாதோரும் ஈடுபடு​வதால் குற்றங்​களுக்கான காரணங்​களைக் குற்ற​வாளி​களும் பாதிப்​படைவோரும் ஏற்கெனவே நன்கு அறிவர். வாக்கு​களுக்​காகக் குற்ற​வாளி​களைத் தண்டிப்​பதில் சமரசம் செய்து​கொள்வது மீண்டும் குற்றங்கள் செய்வதற்கு வழிவிடுவதாக அமையும்.
  • பாதிக்​கப்​பட்​டோருக்கு அரசு கொடுக்கும் நிவாரணத் தொகையில் ஒரு குறிப்​பிட்ட தொகையைக் குற்ற​வாளி​களிடம் கண்டிப்பாக வசூலிக்க வேண்டும். குற்றங்​களின் தன்மைக்​கேற்பக் குற்ற​வாளி​களின் வாக்குரிமையைத் தடை செய்ய வேண்டும்.
  • உணவு, உடை போன்ற புழங்கு பொருள்கள் நவநாகரிகமாக மாறிய​போ​திலும் இவற்றுக்கு ஏற்ப மாறாத மனநிலையை அரசமைப்புச் சட்டம் மாற்றும். வீடுகள்​தோறும் அது இருக்​கின்ற நிலையைக் கட்டாயப்​படுத்த வேண்டும். சமூகச் சீர்திருத்​தத்தின் தொடக்கப் புள்ளி அரசமைப்புச் சட்டமே!

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories