TNPSC Thervupettagam

சமூக மாற்றத்துக்கு வித்திடும் நீதிமன்றம்

July 25 , 2024 8 hrs 0 min 37 0
  • தென்​ மாவட்ட மக்​களுக்கு நீதி வழங்​கிவரும்​ சென்னை உயர்​ நீதி​மன்ற மதுரைக்​கிளை நேற்​றுடன்​ 20 ஆண்​டுகளை நிறைவு செய்​து​விட்டது. 1990களில்​ முன்​மொழியப்​பட்டு, மதுரை உள்​ளிட்ட தென்​ மாவட்ட வழக்​கறிஞர்​கள்​, மக்​களின்​ தொடர்​ கோரிக்கை ஏற்றுக் ​கொள்​ளப்​பட்டதைத்​ தொடர்ந்து, சென்னை உயர்​ நீதி​மன்​றத்​தின்​ நிரந்​தரக்​ கிளை மதுரையில்​ கடந்த 2004 ஜூலை 24 ஆம்​ தேதி தொடங்​கப்​பட்டது.

தென் மாவட்டங்​களின் நீதிமன்றம்​:

  • மதுரை, தேனி, திண்டுக்​கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாத​புரம், திருச்சி, தஞ்சாவூர், புதுக்​கோட்டை, கரூர், திருநெல்​வேலி, தென்காசி, தூத்துக்​குடி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்​களைச் சேர்ந்த வழக்குகள்​ இங்கு விசாரிக்​கப்​படு​கின்றன. பொருளாதா​ரத்​தில் பின்தங்கிய, கிராமப்​புறப் பின்னணி கொண்ட முதல் தலைமுறை வழக்கறிஞர்கள்​ இந்த மாவட்டங்​களில் அதிகளவில் இருக்​கின்​றனர்.
  • 80 சதவீத இளம் வழக்கறிஞர்​களின் பயிற்​சிக் களமாக மதுரை உயர் நீதிமன்றக்​ கிளை உள்ளது. இங்கு வழக்கறிஞர்​களாகப் பணிபுரிந்த பலர் இதே நீதிமன்​றத்​தில் நீதிப​தி​களாகப் பணிபுரிந்து இளம் வழக்கறிஞர்​களுக்கு முன்னுதா​ரண​மாகத் திகழ்​கின்றனர்.
  • சென்னை​யில் மட்டுமே உயர் நீதிமன்றம்​ இயங்கிவந்த காலத்​தில் வழக்குத் தொடர்​வோர், வழக்கு​களுக்​காகச் சென்னைக்​குச் செல்ல வேண்டு​மென்​றால், முதல் நாள் இரவே புறப்​பட்டு, சென்னை​யில் தங்கித் தங்களது வழக்குகளை நடத்தும் நிலை இருந்தது. மதுரையில் கிளை தொடங்​கப்​பட்ட​தால் தென் மாவட்டங்​களைச் சேர்ந்த ஏழை எளியவர்​களும் நீதிமன்​றத்​தைச் சுலபமாக நாடக்​கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொது நலத் தீர்ப்​புகள்​:

  • சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தொடங்​கப்பட்ட நாளில் இருந்து, இப்போது வரை நாடு முழுவதும் பேசப்​படும் முக்கியத் தீர்ப்​புகளை வழங்கிவரு​கிறது. சிறு வயதிலேயே தீ விபத்​துக்​குள்​ளாகித் தனது சிறுநீரகக் கட்டுப்​பாட்டை இழந்த மாணவி ஒருவர்​ நீட் தேர்வு எழுதும்போது ‘டயபர்’ அணிந்து​ கொள்​ளலாம் என்று உத்தர​விட்டதும், அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு 7.5 சதவீதம் நீட் தேர்வில் இடஒதுக்​கீட்டை உறுதி செய்​ததும் இந்த நீதிமன்​றம்​தான்.
  • கீழடி, ஆதிச்​சநல்​லூரில் அருங்​காட்​சி​யகம் அமைத்​திட​வும், தமிழகத்​தில் அனைத்​துக் கோயில்​களி​லும் ஒரு தலித் - ஒரு பெண் உள்ளடங்கிய ஐந்து நபர்கள்​ கொண்ட அறங்காவலர்கள்​ குழு அமைத்​திட​வும் உத்தர​விட்ட இந்த நீதிமன்​றம், 14 மாவட்டங்​களில் மணல் அள்ளத்​ தடை விதித்​தும், அனைத்து மாவட்டங்​களி​லும் கருவேல மரங்களை அகற்றிட மாவட்ட அளவில் வழக்கறிஞர் குழு அமைத்​தும் பல்வேறு முக்கியமான உத்தரவுகளை வழங்கி​யுள்ளது. சுற்றுச்​சூழலுக்​குப் பாதிப்பு ஏற்படுத்​தி​ய​தால் ஸ்டெர்​லைட் ஆலையை நிரந்​தரமாக மூடுவதற்கான தமிழ்நாடு அரசு உத்தரவை ரத்து செய்ய மறுத்தது இந்த நீதிமன்​றம்.

மனித உரிமைத் தீர்ப்​புகள்​:

  • எப்போதெல்​லாம் சாமானிய மக்களின் குரல்வளை நெரிக்​கப்​படு​கிறதோ அப்போதெல்​லாம் மதுரை உயர் நீதிமன்றம்​ தலையிட்டு, சமூக நீதியை மீட்டெடுத்​து​ வரு​கிறது. உடுமலைப்​பேட்டை சங்கர்​ ஆணவக்கொலை வழக்கில் சாட்சிகளை உயர் நீதிமன்றமே மறுவிசாரணை செய்து தண்டனை வழங்கிய தீர்ப்பு நாட்டையே திரும்​பிப் பார்க்​கவைத்தது.
  • அதேபோல இலங்கை அகதிகளுக்கு கடவுச்சீட்டு வழங்கவும், சாத்தான்​குளம் காவல் நிலையத்​தில் நடந்த தந்தை - மகன் கொலை வழக்கில் உரிய தீர்வு எட்டுவதற்காக சிபிஐ விசாரணைக்​கும் உத்தர​விட்டது. காவலர் பணியில் உள்ள இஸ்லாமியர் ஒருவர்​ தாடி வைத்ததற்காக அவர் மீது எடுக்​கப்பட்ட துறைரீதியான நடவடிக்கையை ரத்துசெய்தது. கணவனை இழந்த பெண், மீனாட்சி அம்மன்​ கோயிலின் செங்கோலைப் பெறுவதற்கு எந்த​விதத் தடையுமில்லை என்று தீர்ப்பு வழங்கியது.
  • இதுபோல கூடங்​குளம், நெடுவாசல் போராட்டத்​துக்கு அனுமதி வழங்கிய உத்தரவு, அனைத்து மாவட்ட மருத்​து​வ​மனைகளி​லும் உடல் உறுப்பு தானக் கருவிகள்​ பொருத்த வேண்டும் என்கிற உத்தரவு, மதுரை மத்திய சிறையில் தாக்கப்பட்ட கைதி​களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்கிற உத்தரவு எனப் பல மனித உரிமைத் தீர்ப்​புகளை மதுரை உயர் நீதிமன்றம்​ தொடர்ந்து வழங்கிவரு​கிறது.
  • 20.07.2024 அன்று மதுரைக் கிளையின் 20ஆவது ஆண்டு நினைவுத் தூணைத் திறந்து​ வைக்க வந்த உச்ச நீதிமன்றத்​ தலைமை நீதிபதி டி.ஒய்​.சந்​திரசூட், “சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதியை மட்டும் வழங்க​வில்லை. மாற்றுத்​திறனாளிகள்​ திருமணம் செய்து ​கொள்​ளும் உரிமைகளை அங்கீகரித்தது, பணியிடத்​தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்​ (தடுப்பு, தடை, தீர்வு) சட்டம் 2013 உள்ளிட்ட பெண்கள்​ நலனை மையமாக கொண்ட சட்டங்கள்​ ஆகியவற்​றைப் பாதுகாத்தது என நேர்மையான சமூக மாற்றத்​துக்கு ஒரு ஊக்கி​யாகத் திகழ்​கிறது” எனத் தெரிவித்தது மதுரைக் கிளைக்​குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு.
  • 20 வருடக் குறுகிய காலத்​தில் நீதிப​தி​கள், வழக்கறிஞர்​கள், நீதி​மன்றப்​ பணி​யாளர்​கள், குமாஸ்தாக்​கள், வழக்​காடிகள் ஆகியோருடைய அர்ப்​பணிப்​பினால் சுமார் 12,30,000 வழக்​கு​களுக்​கும் மேல் தீர்வு கண்டு, தனது நீதிப் பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுத்​துச் செல்​கிறது மதுரை உயர் நீதி​மன்​றம்​.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories