சுகாதாரத் திட்டங்கள் நிரந்தரமாக்கப்படுமா?
- 2013ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் தேசிய சுகாதாரத் திட்டத்தின் (National Health Mission) பெயரை ‘பிரதம மந்திரி சம்ங்கர சுவஸ்தயா மிஷன்’ என்று மாற்றுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அனைத்து மாநில மக்கள் இந்தப் பெயரை அழைப்பதில் சிக்கல்கள் இருப்பதாக எதிர்ப்பு அதிகரித்துவருகிறது. எனினும், பெயர் மாற்றத்தையெல்லாம் தாண்டி இதில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள், நோயாளிகளின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும்.
குறைவான ஊதியம்:
- மாநில அளவில் செயல்படுத்தப்படும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் 573 பிசியோதெரபிஸ்ட்கள் (இயன்முறை மருத்துவர்கள்) பணிபுரிந்துவருகின்றனர். மேலும் மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள், ஆய்வகத் தொழில்நுட்பர் (lab technicians) என ஆயிரக்கணக்கானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
- அதேவேளையில், மனித ஆற்றல் மீது முறையான கவனம் செலுத்தாமல் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியாது. ஒப்பந்தத்தில் ரூ.13,000 பிசியோதெரபி மருத்துவர்களுக்கு மாதச் சம்பளமாக நிர்ணயித்து, இந்த ஒப்பந்தக் காலத்தில் வேறு எங்கும் பணிபுரியக் கூடாது என்று கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள்.
- அரசுத் திட்டங்களில் பணிபுரிவதால் தங்களுக்கான தொழில் வளர்ச்சி முன்னேற்றம் காணும் என்ற நம்பிக்கையில் இவர்கள் பணியில் சேர்கின்றனர். குறைந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு அல்லல்படும் இவர்களில் யாரேனும், பகுதி நேரமாகப் பணிக்குச் செல்ல வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படும்போது, குற்ற உணர்வுக்கு ஆளாகிறார்கள். உண்மையில், தமிழ்நாட்டில் மட்டுமே பிசியோதெரபிஸ்ட்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது.
மாற்றம் அவசியம்:
- இந்நிலையில், தேசிய அளவில் ஒரே மாதிரியான மனிதவள மேலாண்மை விதிகளை உருவாக்கி, அனைத்து மாநிலங்களிலும் முறையாகப் பின்பற்ற ஆவன செய்ய வேண்டும். அதில் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்களது அடிப்படை உரிமைகள், பணிப் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு முன்வர வேண்டும்.
- அதேநேரத்தில், நோயாளிகளுக்கு மருந்து விநியோகம், இயன்முறை சிகிச்சை ஆலோசனை சரியான கால இடைவெளியில் கிடைத்திடும் வகையில் திட்டத்தின் செயல்பாடுகளை மாற்றியமைக்க வேண்டும். தற்போது ஒரு நோயாளியைச் சந்திக்கும் பிசியோதெரபி மருத்துவர் அதே நோயாளியை மீண்டும் சந்திக்கப் பல நாள்கள் ஆகின்றன.
- நோயாளி தரப்பில் இருந்து பார்த்தால் அவர்களது தீவிரப் பாதிப்புகளுக்கு ஏற்ற ‘தகுந்த சிகிச்சை’ இது எனக் கருத முடியாது. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சார்ந்து உள்ள பயனாளிகள், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சார்ந்து உள்ள பயனாளிகள் என இரு தரப்பினரும் சுகாதார வசதிகளை அணுகும் நிலையில் பல்வேறு வித்தியாசங்கள், பிரத்யேக சவால்கள் இருக்கின்றன.
- உதாரணமாக, போக்குவரத்து வசதியை எடுத்துக்கொண்டாலே இருதரப்புக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கும். எனவே, புவியியல் பகுதிகளுக்கு ஏற்ப நோயாளிகளுக்கான சிகிச்சை அணுகுமுறைகளைத் திட்டங்களில் உருவாக்க வேண்டும்.
- ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் நிரந்தர மருத்துவ சேவை வழங்கல் திட்டமாக மாறினால்தான் நன்மைகளின் வீச்சும் அதிகரிக்கும். தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சமூக நலத் திட்டங்களை மட்டும் பயன்படுத்தி, மக்களுக்குப் பொது சுகாதார சேவை சார்ந்த தேவைகளைப் பூர்த்திசெய்ய முயல்வதை அரசாங்கம் மறுஆய்வு செய்ய வேண்டும்.
- தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புதிய திட்டங்களை மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் அமல்படுத்துவதை வருங்காலங்களில் தவிர்க்கலாம். மண்டல வாரியாகத் திட்டத்தை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தும்போது, பட்ஜெட் ஒதுக்கீடு சரியான முறையில் செலவழிக்கப்படும், வெற்றிகரமாகத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டதைக் கண்காணித்து, அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளில் அத்திட்டத்தை நிரந்தரத் திட்டமாக மாற்றிவிட வேண்டும். அது நோயாளிகளுக்கும் திட்டங்களில் பணியாற்றக் கூடிய மருத்துவப் பணியாளர்களுக்கும் நம்பிக்கையையும் வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும்.
போலி மருத்துவத்தைத் தவிர்க்க...
- எந்தத் திட்டமாக இருந்தாலும் மனித வளங்களுக்குச் செலவழிக்கக்கூடிய தொகையே நிதி ஒதுக்கீடு செய்வதில் பெரும்பங்காக இருக்கும், தனியார் துறைகளில்கூட அதுதான் வழக்கம். அரசுத் திட்டங்கள் என்னும்போது மனிதவள ஆற்றலுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்துதான் ஆக வேண்டும். மனித நலன் கருதிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக உழைப்பவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களிடம் இருந்து ஆக்கபூர்வமான மருத்துவ சேவை வழங்கலைப் பெற்றாக வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உண்டு.
- பல சுகாதாரப் பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாகப் படையெடுத்துவரும் நிலையில், அத்தகைய பிரச்சினைகளுக்குப் பொது சுகாதார வசதிகளைப் பெறக் குறிப்பிட்ட காலத்துக்குள் பலன் கிடைக்காத சமூகநலத் திட்டங்களை மட்டுமே நம்பி இருக்கும் நிலையை மக்களுக்கு ஏற்படுத்திவிடக் கூடாது. நம்பிக்கையின்மையால் மக்கள் அத்திட்டங்களைச் சாராமல் மாற்று வழிகளை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதனால் போலி மருத்துவம் வளரும்.
- ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் வெற்றிகரமான திட்டம் எனத் தமிழக அரசு முன்மொழிந்து வருகிறது. அத்திட்டத்தை நிரந்தரத் திட்டமாக மாநில அரசு செயல்படுத்தும் காலம் கனிந்துள்ளதால், அதைச் செயல்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தரச் சுகாதாரத் திட்டங்களாலும், கட்டமைப்பு வசதிகளாலும் தமிழகம் சுகாதார வசதிகளில் முன்னோடி மாநிலமாகத் திகழத் தொடங்கி, தற்போதும் அதைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இது தொடர மேற்கண்ட மாற்றங்கள் செய்யப்படுவதன் தொடக்கப் புள்ளியாக நிரந்தரப் பொதுச் சுகாதாரத் திட்டங்கள் இருக்கட்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 02 – 2025)