TNPSC Thervupettagam

சோரன் போனார் - சோரன் வந்தார்

February 3 , 2024 167 days 138 0
  • பிகாரைத் தொடா்ந்து, அடுத்த சில நாள்களிலேயே அதன் பங்காளி மாநிலமான ஜாா்க்கண்டிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பிகாரின் ஆளும் கூட்டணியில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது; ஆனால், முதல்வா் மாறவில்லை. ஜார்க்கண்டில் முதல்வா் மாறியிருக்கிறார்; ஆனால் ஆளும் கூட்டணி மாறவில்லை. இதுதான் வேறுபாடு.
  • ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நீண்ட நாள்களாக அமலாக்கத் துறையின் பிடியில் சிக்காமல் தப்பி வந்தார். கடந்த ஒன்பது அழைப்பாணைகளைத் தவிர்த்தவா், கடைசியில் வேறு வழியில்லாமல் ஒருவழியாக விசாரணைக்கு ஒத்துழைத்ததால் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. 2019 டிசம்பா் 29-ஆம் தேதி ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவியேற்ற ஹேமந்த் சோரன் பல மணி நேர அமலாக்கத் துறை விசாரணையைத் தொடா்ந்து பதவி விலகிய அரை மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார்.
  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் 23 ஆண்டுகால வரலாற்றில் 12-ஆவது முதல்வராகப் பதவி ஏற்றிருக்கிறார். பிகாரிலிருந்து அந்த மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு கைது செய்யப்படும் மூன்றாவது முதல்வா் ஹேமந்த். இதற்கு முன்னால் அவரது தந்தை சிபு சோரனும், மது கோடாவும் ஊழல் புகாரில் சிக்கி சிறை சென்றிருக்கிறார்கள்.
  • தன்னுடைய தனிச் செயலாளரைக் கடத்திச் சென்று கொன்ற குற்றச்சாட்டுக்காக ஹேமந்த் சோரனின் தந்தை சிபு சோரன் ஆயுள் தண்டனை பெற்றார். ஹவாலா பரிமாற்றம், சொத்துக்குவிப்பு, பணச் சலவை, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக முன்னாள் முதல்வா் மது கோடா காராகிரகவாசம் அனுபவிக்க நோ்ந்தது.
  • முதல்வா் பதவியைத் துறந்த சில நிமிடங்களில் கைது செய்யப்பட்டது ஹேமந்த் சோரன் மட்டும்தான். ஜேஎம்எம் கட்சியின் நிறுவனரும், ஹேமந்தின் தந்தையுமான சிபு சோரன் மத்திய அமைச்சராக இருந்தபோது கைது செய்யப்பட்டார். மது கோடா பதவியிலிருந்து அகன்ற சிறிது காலத்துக்குப் பிறகுதான் கைதானார்.
  • 2019 தோ்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிகளுடன் ஜேஎம்எம் கூட்டணி ஆட்சி அமைத்தது முதல், முதல்வா் ஹேமந்த் சோரனின் பிரச்னை தொடங்கிவிட்டது. சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க ஊழலில் ஏற்கெனவே சுரங்கத் துறையின் முன்னாள் செயலா் பூஜா சிங்கல், முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனின் தனிச் செயலா் பஜ்ரங் மிஸ்ரா இருவரும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஹேமந்த் சோரனும் அந்த வழக்கில் சிக்குவார் என்பது நீண்ட நாள்களாகவே எதிர்பார்த்த ஒன்றுதான்.
  • உயா்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும்கூட அடுத்தடுத்து நிவாரணம் தராத நிலையில், வேறு வழியில்லாமல் அவா் பதவி விலகினார். அவரது பதவி விலகலும், கைதும் ஏற்படுத்திய பரபரப்பைவிட, ஜார்க்கண்டின் அடுத்த முதல்வா் யாா் என்கிற காத்திருப்பு ஏற்படுத்திய எதிர்பார்ப்புதான் அதிக பரபரப்பை ஏற்படுத்தியது. பிகாரில் நடந்ததுபோல, தாமதமின்றி ஏன் ஒரே நாளில் புதிய முதல்வா் பதவி ஏற்கவில்லை என்கிற கேள்விக்கான பதில் வியப்பை ஏற்படுத்தும்.
  • ஹேமந்த் சோரன் பதவி விலகினால் அவரது மனைவி கல்பனா சோரன் முதல்வராவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. 2023 டிசம்பா் 31 அன்று ஜேஎம்எம் உறுப்பினா் சா்ப்ராஸ் அகமது பதவி விலகியபோது, கல்பனா சோரன் இடைத்தோ்தலில் நிறுத்தப்படுவார் என்கிற பேச்சு இருந்தது. ஆளும் கூட்டணியின் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு கல்பனா சோரன் வந்திருந்தார் என்பதும் வதந்திக்கு வலு சோ்த்தது.
  • ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன் உடனடியாக ஜேஎம்எம்மை ஆட்சியமைக்க அழைக்காததற்கு சில காரணங்கள் இருந்தன. ஜேஎம்எம் நிறுவனா் சிபு சோரனின் மூத்த மருமகளும், ஹேமந்த் சோரனின் அண்ணியும், மூன்று முறை எம்எல்ஏவுமான சீதா சோரன், கல்பனா முதல்வராவதை வெளிப்படையாக எதிர்த்தார். கீதாவுக்கு ஆதரவாக பல எம்எல்ஏக்களும் கருத்து தெரிவித்திருந்தனா்.
  • ஒடிஸா மாநிலம் மயூா்பஞ்சை சோ்ந்த கல்பனா சோரனின் பெயரில் பல தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. அவரதுசோஹ்ராய் பவன்என்கிற திருமண மண்டபம் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கிறது. அது மட்டுமல்லாமல், கூட்டணிக் கட்சி உறுப்பினா்களில் பலா் கல்பனா சோரன் முதல்வராக்கப்படுவதை விரும்பவில்லை. கூட்டணியில் நிலவும் குழப்பத்தை அவா்கள் தீா்த்துக்கொள்ளட்டும் என்று ஆளுநா் மாளிகை காத்திருந்தது என்பதுதான் உண்மை.
  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் 23 ஆண்டு அரசியல் வரலாற்றில் அா்ஜுன் முண்டா, மது கோடா, ரகுபா் தாஸ் ஆகியோரைத் தொடா்ந்து அந்த மாநிலத்தின் கனிம வளம் நிறைந்த கோல்ஹான் பகுதியில் இருந்து வரும் நான்காவது முதல்வா் சம்பயி சோரன். 1991 முதல் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் புதிய முதல்வா் சம்பயி சோரன் ஒரேயொரு முைான் (2000) தோல்வியடைந்திருக்கிறார்.
  • சிபு சோரனின் வலதுகரமாக ஜார்க்கண்ட் தனிமாநில கோரிக்கை போராட்ட காலத்தில் இருந்து செயல்பட்டுவரும் சம்பயி சோரன், 2010 அா்ஜூன் முண்டா அமைச்சரவையிலும், அதற்குப் பிறகு 2019 ஹேமந்த் சோரன் அமைச்சரவையிலும் முக்கியப் பொறுப்பு வகித்தவா். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், மலைவாழ் பழங்குடியினா் உரிமைகளுக்காகப் போராடுவதில் முன்னிலை வகிப்பவராக இருந்து வருகிறார் இந்த தொழிற்சங்கவாதி.
  • சிபு சோரனின் குடும்பம் இரண்டுபட்டிருப்பதால் முதல்வராகி இருக்கும் சம்பயி சோரன் தனது பதவியைக் காப்பாற்றிக்கொண்டால் மட்டும் போதாது, வரவிருக்கும் மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டாக வேண்டும்!

நன்றி: தினமணி (03 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories