TNPSC Thervupettagam

தன்னை வருத்திக்கொள்ளும் காந்தாரி

August 4 , 2024 2 hrs 0 min 9 0
  • மகாபாரதத்தில் பீஷ்மர், திருத​ராஷ்டிரன், சுபலன், சகுனி ஆகிய நான்கு ஆண்களே காந்தா​ரியின் வாழ்க்​கையைத் திசை மாற்றிய​வர்கள்; அவளது கனவுகளைச் சிதைத்தவர்கள். “நான் குருடன் என்ற செய்தியை உனக்குத் தெரியாமல் மறைத்து, உன்னை ஏமாற்றி இங்கு கொண்டு​வந்து திருமணம் செய்து​கொண்டேன். உன்னுடைய பிறந்த வீட்டினரும் நாங்களும் உனக்குக் கோடிகோடி​யாகக் குற்றம் இழைத்​து​விட்​டோம். ஆனால் காந்தாரி, நீயும்கூட அதற்குக் கோடிகோடி​யாகப் பதிலுக்குச் செய்து​விட்​டாய். இன்னும்கூட நடந்துவிட்டதற்காக மன்னிப்பது இயலாதா என்ன?” என்று வாழ்வின் இறுதித் தருணத்தில் காந்தா​ரி​யிடம் திருத​ராஷ்டிரன் கேட்கிறார். காந்தாரி எதற்காகக் கண்களைக் கட்டிக்​கொண்டார் என்பது புனைவுத் தன்மைக்​குரிய கேள்வி. இந்தத் தொன்மத்​தைத்தான் ஜா.தீபா ‘திரை’ என்ற சிறுகதையாக எழுதியிருக்கிறார்​.
  • காந்தாரி கண்ணைக் கட்டிக்​கொண்டதற்குப் பின்புள்ள சமூக உளவியலை ‘திரை’ தீவிரமாக ஆராய்​கிறது. காந்தா​ரிக்கு இருட்டு என்றால் பயம் என்பதைக் குறியீடாக முதலிலேயே புனைவு சொல்லிவிடு​கிறது. திருத​ராஷ்டிரன் பார்வையற்றவன் என்ற குறையைப் போக்கு​வதற்காக அவனைப் பற்றி மிகையான பெருமை​களை காந்தா​ரிக்குச் சொல்கிறான் சகுனி. திருத​ராஷ்டிரன் பற்றிய கற்பனையை மனதிற்குள் வளர்த்துக்​கொள்​கிறாள் காந்தாரி. அவன் பார்வையற்றவன் என்ற செய்தியை அஸ்தினாபுரத்​திற்குச் சென்ற பிறகுதான் காந்தாரி தெரிந்து​கொள்​கிறாள். சகுனியின் மூலமாகச் சொல்லப்பட்ட திருத​ராஷ்டிரன் குறித்த மிகைச் சித்திரம் காந்தா​ரிக்குள் உடைந்து நொறுங்​கு​கிறது. ஆனாலும், அவளால் ஒன்றும் செய்வதற்கு​இல்லை. தன்னை வருத்​திக்​கொள்ள மட்டும்தான் இயலும் என்கிற முடிவுக்கு வரு​கிறார். திருத​ராஷ்டிரன் காந்தா​ரியின் இச்செயலால் புளகாங்​கிதம் அடைகிறார். தன் துயரத்தைப் புரிந்து​கொண்ட மனைவி கிடைத்​து​விட்டார் என்று மகிழ்​கிறார்.
  • காந்தாரி கண்ணைக் கட்டிக்​கொள்​ளும்போது சகுனி உடனிருக்​கிறார். ‘இதைத் தியாகமாக நினைக்​கிறாயா காந்தாரி?’ என்று கேட்கிறார். இதற்கு காந்தாரி சொல்லும் பதில் புனைவில் முக்கிய​மானது. “இல்லை அண்ணா, இது ஒரு வைராக்​கியம். சிறு வயதிலிருந்தே இருட்டைப் பார்த்து அச்சப்​படு​பவளாக இருந்​திருக்​கிறேன். எது நமது பலவீனமோ அதற்குத்தான் சோதனை வரும் என்று நீதானே சொல்லு​வாய். நான் அதை எதிர்​கொள்ளப் போகிறேன். என்னுடைய இந்தச் செயலை குரு வம்சமோ, காந்தாரமோ எதிர்​பார்த்​திருக்​காது. உயிருடன் இருக்​கும்போதே என்னை நான் பொசுக்​கிக்​கொண்டே இருப்​பேன். என்னைப் பார்க்​குந்​தோறும் மண்ணாசை​யினாலும் கௌரவத்​திற்​காகவும் எதையும் செய்யத் துணியும் கோழைகளுக்கு உறுத்த வேண்டும்” என்கிறார்.
  • இது யாரை நோக்கிக் கூறப்​பட்டது என்பதில் தெளிவில்லை. மண்ணாசை கொள்வது மன்னர்​களின் பொது இயல்பு. காந்தாரி வாழ்க்​கைப்பட்ட குடும்பத்தில் இனிமேல்தான் இதெல்லாம் நடக்க​விருக்​கிறது. சகுனியை நோக்கிக் கூறப்​பட்டதா என்பதும் காந்தா​ரிக்​குத்தான் தெரியும். புனைவில் சில இடங்களில் கால முரண்கள் உள்ளன. திருத​ராஷ்டிரனுக்கும் காந்தா​ரிக்கும் திருமணம் நடந்த பிறகே பாண்டு​வுடன் குந்திக்குத் திருமணம் நடைபெறுகிறது. புனைவின் தொடக்​கத்​தில், “அங்கு நீ மட்டும் இளவரசி அல்ல. குந்தி போஜனின் மகளும் இருக்​கிறாள். பாண்டுவின் மனைவி என்பதால் அவளுக்கும் அங்கு அதிக உரிமைகள் இருக்​கும்” என்று காந்தா​ரி​யிடம் சகுனி அறிவுரை கூறுவதாக ஜா.தீபா எழுதி​யிருக்​கிறார்.
  • காந்தா​ரியின் கதாபாத்​திரத்தைப் பெண்ணிய நோக்கில் ஜா.தீபா அணுகி​யிருக்​கிறார். பண்டைச் சமூகத்தின் அடிப்​படைக் குணங்​களுடன் காந்தா​ரியின் கதாபாத்​திரத்தைப் பொருத்தி​யிருக்​கிறார். “எனது கண்கள் என்னால் மறைக்​கப்​படாமல் போயிருந்தால் உங்கள் அனைவராலும் வலுக்​கட்​டாய​மாகப் பிடுங்​கப்​பட்​டிருக்​கும். உங்கள் கைகளின் வழியே எனது கண்கள் கட்டப்​படுவதை நான் எப்படி ஒத்துக்​கொள்​வேன்?” என்று திருத​ராஷ்டிரனிடம் கூறுகிறார் காந்தாரி.
  • புனைவின் இந்தப் பகுதிதான் ஜா.தீபாவால் நவீனப்​படுத்​தப்​பட்டு​இருக்​கிறது. ஒட்டுமொத்த ஆண் சமூகத்​தையும் உள்ளடக்​கித்தான் ‘உங்கள் அனைவராலும்’ என்கிறார் காந்தாரி. இந்தப் பார்வை முக்கிய​மானது. இதற்குப் பின்னால் ஆயிரமா​யிரம் குற்றச்​சாட்​டுகள் உள்ளன. அந்தக் குற்றச்​சாட்​டுகள் காலந்​தோறும் தன்னைப் புதுப்​பித்துக்​கொண்டே இருக்​கும். காந்தா​ரியின் சகோதரிகள் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டுக்​கொண்டே இருப்​பார்கள்.
  • காந்தாரி, நூறு குழந்தை​களைப் பெறுவதற்கான வரம் பெற்றவர் என்பதை அறிந்தே திருத​ராஷ்டிரனுக்கு அவரை மணம் முடிக்க பீஷ்மர் முடிவுசெய்​கிறார். சிவபெருமான் கொடுத்த வரமே காந்தா​ரிக்குச் சாபமாகவும் அமைந்​து​விடு​கிறது. முதல் குழந்​தையாகப் பிறந்த துரியோதனன், அடுத்துப் பிறந்த தொண்ணூற்று ஒன்பது குழந்தை​களின் அழிவுக்கும் காரணமாக அமைந்​து​விடு​கிறான். துர்சகுனத்​துடன் துரியன் பிறந்​தபோதே விதுரன் எச்​சரிக்​கிறான். காந்​தா​ரி​யின் பிள்​ளைப் பாசம், துரியனை அப்போது காப்​பாற்றி​விடு​கிறது. அதுவே தன் வம்​சத்தை ஒன்​றுமில்​லாமலும் செய்​து​விடு​கிறது. இதெல்​லாம் காந்​தா​ரிக்கு மிகத் தாமதமாகத்​தான்​ புரி​கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories