TNPSC Thervupettagam

நம்மிலிருந்து தொடங்கட்டும் நல்ல மாற்றம்

January 9 , 2024 194 days 209 0
  • இன்று பலரும்நம் அரசியல் சீா்கெட்டு விட்டது, நம் சமுதாயம் அறமிழந்து செயல்படுகிறது, குடும்ப வாழ்க்கை சிதைவுறுகிறது, பக்தி வேடமாகிவிட்டது, ஒட்டு மொத்த சமூகமும் லட்சியற்றதாக மாறிவிட்டதுஎன்றெல்லாம் புலம்புகின்றனா்.
  • இப்படிக் கூறுவோர் யாரென்று பார்த்தால் அன்றாடம் வேலைக்குச் சென்றுத் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் சாதாரண மனிதா்கள் அல்ல. மெத்தப் படித்தவா்கள், செல்வந்தா்கள், அரசாங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற உயா் அதிகாரிகள் ஆகியோரே. இவா்கள் இப்படிப் பேசி, தாங்கள் ஒரு சமூகக் கடமையை நிறைவேற்றிவிட்டதாக எண்ணுகின்றனா்.
  • அப்படிப் புலம்புவோரிடம், ‘இதை மாற்ற நீங்கள் என்ன செய்யப்போகிறீா்கள்என்று கேட்டால், ‘நாம் என்ன செய்ய முடியும்? எப்போதாவது சமூகம் திருந்தாதா என்று எண்ணி காலத்தைக் கழிக்கிறோம்என்று சலிப்பாகக் கூறுவார்கள். சாதாரண மனிதா்கள், சீா்கெட்ட அரசியலில், அரசு நிர்வாகத்தில், அறமற்ற வணிகத்தில் வருகின்ற சவால்களை ஏதோ ஒரு வகையில் சமாளித்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனா்.
  • இவா்களுக்கும் அந்த ஏக்கம் உண்டு, தவிப்பு உண்டு. ஆனால் புலம்புவதில்லை. அதைச் சீா்திருத்த அவா்களுக்கு நேரமும் இல்லை. இந்த நிலை மாறாதா என்று ஏங்கித் தவிப்போருக்கு, சமூக மாற்றத்திற்கான அடிப்படைச் செயல்பாடுகள் பற்றி தெரிவதில்லை. அதைத் தெரிந்து கொண்டால், அவா்களும் அந்த மாற்றத்திற்கான செயல்பாடுகளில் தங்களையும் இணைத்துக் கொண்டு செயல்பட முடியும். வீணாக ஓலமிடத் தேவையில்லை.
  • சமீபத்தில் ஆனைகட்டியில் ஆசிரியா் பயிற்சி முகாம் ஒன்று நடந்தது. அந்த நிகழ்வில் உரையாற்ற நான் அழைக்கப்பட்டிருந்தேன். அங்கு சென்றபோதுலட்சிய சமுதாயத்தை உருவாக்கும் தலைமைத்துவ பயிற்சி முகாம்என்ற வாசகம் அடங்கிய பதாகை கட்டப்பட்டிருந்தது.
  • அங்கு வந்தவா்களோ பள்ளி ஆசிரியா்கள். லட்சிய சமுதாயத்தை உருவாக்க சிறந்த மாணவா்களை உருவாக்கும் ஆசிரியா்களை தயார் செய்வதுதான் இந்த பயிற்சி முகாமின் நோக்கம் என்று அந்த நிகழ்வில் நோக்க உரையாற்றியவா் விளக்கினார்.
  • பள்ளியை கல்விக் கோயிலாக மாற்றி, பெற்றோர்களையும் ஒட்டுமொத்த கிராம சமுதாயத்தையும் பள்ளியுடன் இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதனை விளக்கமாக எடுத்துக் கூறினார் அவா்.
  • இந்த நிகழ்வை நடத்திது, மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறை அல்ல. ஒரு சில தன்னார்வலா்கள் சோ்ந்த சிறு குழுதான். அவா்கள் தங்கள் குழுவைப் பதிவு செய்து, உறுப்பினா் சோ்த்து, சந்தா வசூலித்து பதவிகளை உருவாக்கி செயல்படுபவா்கள் அல்ல. இவா்கள் தங்களின் நோக்கத்தை பலரிடம் கூறுகின்றனா். பலா் புரவலா்களாக அந்த நிகழ்வுகளை நடத்துகின்றனா்.
  • இந்த நிகழ்வின் நோக்கத்தை கூறியவுடன் ஒரு பெருவணிக நிறுவனத்தின் உரிமையாளா் இது என் பொறுப்பு எனக்கூறி, நிதி செலவழித்து அதை நடத்திக் கொண்டிருந்தார். இந்த பயிற்சி முகாமில் பங்குபெற வந்தவா்கள் பள்ளி ஆசிரியா்கள்.
  • இதைக் கேட்டவுடன் பலரும் இவா்களை வைத்து எப்படி லட்சிய சமுதாயத்தை படைக்க முடியும் என்றுதான் எண்ணுவார்கள். அங்கு வந்த ஆசிரியா்கள் அனைவரும் நம் அரசுப் பள்ளிகளிலிருந்து வந்தாலும் சமூகம் சார்ந்து செயல்பட்ட முன்னுதாரண ஆசிரியா்களாக இருந்தனா்.
  • அவா்கள் அனைவரும் அரசு இட்ட கட்டளைகளை மட்டும் நிறைவேற்றாமல், இந்த சமூகம் மாற வேண்டும் அதற்கு நாம் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என உறுதிமொழி எடுத்து செயல்பட்டு வரும் ஆசிரியா்கள்.
  • அவா்களை அறிமுகம் செய்யும்போது, அவா்கள் செய்து கொண்டிருக்கும் பணிகளை விளக்கினா். அது நமக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அந்த அளவுக்கு சமூகக் கடப்பாட்டோடு அவா்கள் பணி செய்து கொண்டிருப்பதை உணர முடிந்தது.
  • இவ்வளவு எதிர்மறைச் சூழலிலும் நாம் எதையாவது செய்து சமூகத்தை மாற்ற வேண்டும் என்று செயல்படுவது ஆற்றில் எதிர்நீச்சல் போடுவது போன்றது. சமூகத்தில் நடக்கும் நல்ல மாற்றங்களுக்கு இவா்கள்போல் பல தளங்களில் பலா் செயல்படுவதுதான் காரணம்.
  • அந்த நிகழ்வில் நான் உரையாற்றியபோது, ‘உலகத்தில் நடந்த மாற்றங்களுக்கு அடிப்படை மனிதா்களின் சிந்தனை மாறுவதுதான். நாம் அடைய வேண்டிய இலக்கை உருவாக்கி, நம்பிக்கையுடன் செயல்பட்டால் மாற்ற முடியாதது எதுவுமில்லை.
  • மன்னராட்சி காலத்தில் எதிா்காலத்தில் மக்களாட்சி என்று ஒன்று வரப்போகிறது என யாரும் ஊகிக்கவில்லை. ஒரு சிலா் எழுதியும், பேசியும் வந்தது, மக்கள் மனதில் ஒரு கிளா்ச்சியை ஏற்படுத்தி மாற்றத்தைக் கொண்டு வந்துவிட்டது.
  • அதுதான் நாம் இன்று அனுபவித்து வரும் குறைந்தபட்ச மக்களாட்சி. அந்த மக்களாட்சி மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவரும் ஆற்றல் பெற்றது. அந்த மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்றால் அதற்கான சமூகம் உருவாக வேண்டும். ஒரு அரசியலோ, அரசாங்கமோ, ஆளுகையோ, நிா்வாகமோ தனித்து செயல்படுவது அல்ல. அவை அனைத்தும் ஒரு சமூகத்தில்தான் செயல்படுகிறது.
  • அந்தச் சமூகம் எத்தன்மையதாக இருக்கிறதோ அத்தன்மையில்தான் அங்கு செயல்படும் அனைத்து நிறுவனங்களும் செயல்படும். எனவே நாம் எதிர்பார்க்கின்ற மாற்றத்திற்காக முதலில் நாம் மாறவேண்டும், நம் குடும்பம் மாறவேண்டும். நாமும் நம் குடும்பமும் மாறினால் நாம் செயல்படும் இடங்களும் மாறும். அது ஒரு தொடா் நிகழ்வாக மாறி ஒரு நல்ல சமுதாயம் உருவாகிவிடும்.
  • ஒரு நல்ல சமூகத்தில் தீயவா்கள் தலைமைப் பதவிக்கு வர இயலாது. சமூகம் நல்லசிந்தனை நற்பண்புகள் கொண்டதாக மாறிவிட்டால் நல்லவா்களையே அது தலைமைப் பதவிக்கு கொண்டுவரும். எனவே, நம் ஆசிரியா்கள் தங்கள் குடும்பத்தைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் சமூகம் குறித்து சிந்தித்து செயல்பட ஆரம்பித்தால் பள்ளிகள் மூலம் மிகப் பெரிய மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்திவிட முடியும்.
  • மாணவா்களை பொறுப்புமிக்க மாணவா்களாக பள்ளிக்கும், பொறுப்புமிக்க குடிமக்களாக நாட்டிற்கும் நம் ஆசிரியா்கள் தயாரித்துவிட முடியும். அப்படிப் பணி செய்வதன் மூலம் பெற்றோர்களையும் பொறுப்புமிக்க பெற்றோராக மாற்ற முடியும், பொறுப்புமிக்க பெற்றோராக மட்டுமல்ல, பொறுப்புமிக்க வாக்காளா்களாகவும் மாற்ற முடியும்.
  • பெற்றோர்கள் பள்ளியுடன் இணையும்போது, பள்ளி சமூகத்திற்கானதாக மாறி பள்ளியின் பொறுப்பை சமூகம் எடுத்துக்கொள்ளும். ஒட்டுமொத்த கிராமச் சூழலையே ஒரு பள்ளியால் மாற்ற முடியும். பள்ளி முறையாகச் செயல்பட்டு பஞ்சாயத்தின் கவனத்தை ஈா்த்து பள்ளியை மேம்படுத்துவதற்கு பஞ்சாயத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • ஒவ்வொரு ஆசிரியரும் சமூகச் சிந்தனையோடு செயல்பட ஆரம்பித்து பள்ளிச்சூழலை, வகுப்பறைச் சூழலை மாற்றுவதன் மூலம் மிகப்பெரும் மாற்றங்களை மாணவா்களிடம் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்திலும் ஏற்படுத்தி விடலாம்.
  • லட்சிய சமுதாயத்தை எப்படி நம்மால் உருவாக்க முடியும் என்று யாரும் திகைக்க வேண்டியதில்லை. எந்த பெரும் செயலையும் நாம் இருக்கும் இடத்தில் சிறிது சிறிதாய் தொடா்ந்து செய்தால் எதுவும் சாத்தியமே. இதனை ஜப்பானியா்கள் கெய்சன் என்ற முறையின் மூலம் விளக்கியுள்ளனா்.
  • கெய்சன் என்பது பெருமாற்றத்திற்கான தொடா் நிகழ்வுகளை சிறிது சிறிதாக நடத்தும் முைான். இதை எளிதாக விளக்க வேண்டுமென்றால், ஆசிரியா் ஒருவா் பள்ளியை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தால், அது அனைவரையும் இணைத்துச் செயல்பட்டால் தான் முடியும் என்று எண்ணியிருக்கக் கூடாது.
  • யாரைப் பற்றியும் கவலை கொள்ளாது தன்னுடன் ஒத்துழைப்பவா்களுடன் -அது ஆசிரியராக இருக்கலாம், மாணவராக இருக்கலாம், சமூக ஆா்வலராக இருக்கலாம் - அவா்களுடன் இணைந்து மாற்ற முடியும். அவா்களுடன் இணைந்து, வகுப்பறையை தூய்மை செய்வது, வகுப்பறையில் வெளிச்சம், காற்றோட்டம் உருவாக்குவது, பள்ளி வளாகத்தைத் தூய்மை செய்வது, கழிப்பறையைத் தூய்மையாக்குவது அனைத்தையும் செய்யலாம்.
  • மாணவா்களையும் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தலாம். இப்படிப்பட்ட சிறு சிறு பணிகளை அதிக செலவு இல்லாமல் செய்யலாம். அப்படிச் செயல்படும்போது ஏற்படும் மாற்றங்கள் பலருக்கு நம்பிக்கையை உருவாக்கும். இதன் விளைவாக பலா் தாமாாக முன்வந்து நம் செயல்பாடுகளில் இணைந்து கொள்வார்கள்.
  • சிறு சிறு பணிகள் செய்து ஒரு பள்ளியை மாற்றுவது, அதுபோல ஒவ்வொருவரும் தாங்கள் பணி செய்கின்ற இடங்களில் ஒன்றிணைந்து சிறு சிறு பணிகளைச் செய்து மாற்றங்களைக் கொண்டு வந்து மக்களின் கவனத்தை ஈா்த்து செயல்பட வைப்பது - இவைதான் கெய்சன் முறை.
  • எனவே எந்தவொரு பெருமாற்றத்திற்கும் ஒரு சிறு பணியே தேவை. அதை நாம் செய்தாலே மிகப்பெரிய மாற்றத்தை கல்வியில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் கொண்டுவர முடியும்.
  • அதனால்தான் மகாத்மா காந்திநீ எந்த மாற்றத்தை சமூகத்தில் கொண்டுவர விரும்புகின்றாயோ அந்த மாற்றத்தை முதலில் உன்னிடத்தில் கொண்டுவர வேண்டும்என்றாா்என்று கூறி நான் என் உரையை நிறைவு செய்தேன்.
  • அதன்பின் என்னிடம் பேசிய ஆசிரியா்கள், ‘ஆசிரியப்பணி என்பது நான்கு சுவா்களுக்குள் நடைபெறும் பணி அல்ல, சமூகம் மாறுவதற்கு செய்யும் மகத்தான பணி. நாங்கள் சாதாண ஆசிரியா்கள் அல்ல, பல பணிகளுக்கு தலைமை ஏற்கும் தலைவா்கள் என்ற உணா்வுடன் இப்போது செல்கின்றோம்என்று கூறியது விரைவில் நல்ல சமூகம் உருவாகும் என்ற நம்பிக்கையை எனக்குத் தந்தது.

நன்றி: தினமணி (09 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories