TNPSC Thervupettagam

நரிக்குறவர் வாழ்க்கை முறை ஆவணம்

August 10 , 2024 5 hrs 0 min 10 0
  • முனைவர் பட்டம் பெற்றதுமே ஆய்வுப் பணிக்கு முற்றுப்​புள்ளி வைத்து​விடுகிற கல்விப்​புலச் சூழலில், இந்த ஆய்வுக்​களத்தையே தன் அடுத்​தடுத்த தேடலுக்கான திறப்​பாக்கிக் கொண்டவர் கோ.சீனிவாச வர்மா. 1962இல் தன் முனைவர் பட்டத்​திற்காக நரிக்குறவர் மக்கள் மொழியை ஆய்வுசெய்த அவர் அதை விரிவுபடுத்தி நூலாக வெளியிட்​டதுடன், தொடர்ந்து வாகிரிபோலி மொழியில் அடிப்​படைச் சொற்கோவை நூலையும் இலக்கண நூலையும் எழுதினார்​.
  • இதன் தொடர்ச்சியாக, நரிக்​குறவர் மக்களைச் சந்தித்துக் களஆய்வு நிகழ்த்தி, அவர்கள் வாழ்க்​கைமுறை, வழக்காறுகளை விளக்கும் ‘நரிக்​குறவப் பழங்குடி மக்கள்’ என்ற நூலையும் 1978இல் எழுதி வெளியிட்​டுள்​ளார்.
  • நரிக்​குறவர்கள் பற்றிய முதல் நூல் என்பதோடு 50 ஆண்டுகளுக்கு முந்தைய நரிக்​குறவர்களின் வாழ்க்​கையைத் தெரிவிக்கும் ஒரே ஆவணம் என்னும் சிறப்​பையும் பெற்றுள்ள இந்நூலின் இன்றைய தேவை உணர்ந்து இதனை மீள்ப​திப்பு செய்து வெளியிட்​டிருக்​கிறார் சென்னைப் பல்கலைக்​கழகத் தமிழ் மொழித் துறை உதவிப் பேராசிரியர் வே.நிர்​மலர்​செல்வி.
  • பழங்குடி மக்களின் மொழியையும் மரபுகளையும் பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9ஐப் பன்னாட்டு உலகப் பழங்குடிகள் நாளாக ஐ.நா. கடைப்​பிடித்து​வரு​கிறது. நரிக்​குறவர்​களைப் பழங்குடி​யினர் பட்டியலில் சேர்க்கும் சட்ட முன்வரைவு 2022ஆம் ஆண்டு மக்களவையில் நிறைவேறியது.
  • பழங்குடிகளின் மொழிகளைக் கற்கும் வகையில் அடிப்படை நூல்கள் அண்மையில் வெளியிடப்​பட்​டுள்ளன. பழங்குடிச் சமூகங்கள் மீது கவனம் குவிந்​து​வரும் இக்காலக்​கட்​டத்​தில், அவர்களின் சமூகப் பண்பாட்டு ஆய்வு நூல்களின் வரிசையில் குறிப்​பிடத்​தக்​கதாகவும் நரிக்​குறவச் சமூகத்தின் இனவரைவியல் ஆய்வுக்கான ஆதார நூலாகவும் அமைந்​துள்ள இந்நூல், மறுபதிப்பு கண்டிருப்பது வரவேற்​கத்​தக்கது.
  • நரிக்​குறவர்​களின் கால்வழிப் பிரிவு தொடங்கி ஈமச் சடங்குகள் வரையிலான எட்டுத் தலைப்பு​களில் விரியும் இந்நூல் மகாராஷ்டிரம், குஜராத் பகுதி​யி​லிருந்து இவர்கள் தென்னகம் நோக்கிப் புலம்​பெயர்ந்​ததற்கான காரணம், நரிக்​குறவர், குருவிக்​காரர்கள் என்று அழைக்​கப்​படு​வதற்கான பெயர்க்​காரணம், ஒருவன் ஒருத்தி என்கிற வாழ்க்கை முறை, நான்கு விதமான திருமண முறைகள், தந்தைவழிக் குடும்ப அமைப்பு இருந்த போதிலும் தாய்தெய்வ வழிபாட்டினை அடிப்​படை​யாகக் கொண்டு கால்வழிப் பிரிவுகளை அமைத்துக்​கொண்டுள்ளமை, ஒரே குலதெய்​வத்தை வணங்கக்​கூடிய​வர்கள் பங்காளிகள் முறையாக வருவதால் அவர்களுக்​கிடையே திருமண உறவு இல்லாத நிலை, விதவை மறுமணம், பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு பெயர்கள் வைக்கும் முறை, மொழியில் ஆண்பால், பெண்பால் என்பவற்றுடன் மூன்றாம் பாலாக இடம்பெறும் பிரிவு, சடலத்தைப் புதைக்​கின்ற பழக்கம், முதிய​வர்​களைப் பாதுகாத்தல் போன்று நரிக்​குறவச் சமூகத்தின் மிக நுட்பமான பண்பாட்டு அசைவு​களைப் பதிவுசெய்​துள்ள அரிய நூலாக இந்நூல் இருக்​கிறது.
  • பதிப்​பாசிரியர் நிர்மலர்​செல்வி இந்நூலுக்கு எழுதி​யிருக்கும் என்னுரைப் பகுதி நரிக்​குறவர்கள் பற்றிய மற்றுமொரு ஆய்வுநூல் போன்று துணைநூல் பட்டியலுடன் 40 பக்க அளவில் அமைந்​திருப்பது கூடுதல் சிறப்பு.
  • விஞ்ஞான வளர்ச்சி, தகவல் தொழில்​நுட்பப் பயன்பாடு காரணமாக ஒட்டுமொத்த மனித இனமும் பெரும் மாற்றங்​களுக்கு ஆட்பட்​டு​வரும் சூழலில், ஒரு தொன்மையான இனம் தன்னுடைய பண்பாட்டுக் கூறுகளை எவ்விதம் தக்கவைத்துக் கொண்டிருக்​கிறது அல்லது இழந்து​வரு​கிறது என்பதை அரை நூற்றாண்டுக்கு முந்தைய வாழ்க்​கைமுறையோடு அவர்தம் தற்கால வாழ்க்​கைமுறையை ஒப்பிட்டு அறிவதற்கும் ஆய்வதற்கும் இந்நூலைப் பயன்கொள்ள முடியும்.
  • இன்றும் கோயிலில் அன்னதானத்​தின்போது விரட்​டப்​படுகிற, திரையரங்​குகளில் அனுமதி மறுக்கப்​படு​கின்ற, கல்வி நிலையங்​களில் ஏளனத்​திற்கு ஆளாக்​கப்​படுகின்ற இச்சமூகத்​தினரின் அவலநிலை அண்மையில் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்​சியால் எதிர்​காலத்தில் நீங்கிப் பெரும் மாற்றத்தைக் காணும் என நம்பலாம். ஆனால், இந்நூலின் முடிவுரையில் தமிழ்நாடு அரசின் பார்வைக்கு ஆசிரியர் சில பரிந்​துரைகளையும் முன்வைத்​திருக்​கிறார்.
  • சரியான மக்கள்​தொகைக் கணக்கெடுப்பு அவர்களின் தனித்​தன்மை மாறாமல் பொருளாதா​ரத்தில் முன்னேற்றுவது, அவர்களின் தாய்மொழி​யிலேயே ஆரம்பக் கல்வியைத் தருதல், நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்​துதல், பரம்பரைத் தொழிலான பாசிமணி விற்றல், கோணி ஊசி செய்தல் போன்ற சில தொழில்​களுக்கான மூலப்​பொருள்​களைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கியும் தயாரான பொருட்களை விற்பனை செய்​தும் உதவுதல் போன்றவை. ஆசிரியர் குறிப்​பிட்​டுள்ள இப்​பரிந்​துரைகள் சார்ந்து இன்றைய தேவைகள்​ நிறைவேற்​றப்​படு​மானால், நரிக்​குறவர்​களும் எல்லா நிலைகளி​லும் தன்னிறைவு​பெறு​வர். இவ்​வகை​யிலும் இம்​மீள்​ப​திப்பு கவனம்பெற வேண்டு​வது அவசிய​மாகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories