TNPSC Thervupettagam

நல்லவே எண்ணல் வேண்டும்

May 17 , 2024 62 days 142 0
  • நாம் ஒருவரை ஒருவா், ‘வாழ்க வளமுடன்’ என்று வாழ்த்தும்போது நம்மிடையே இணக்கமான சூழல் நிலவுகிறது. வாழ்த்து எண்ண அலை இருவருக்கிடையே மோதி, பிரதிபலித்து நல்விளைவை ஏற்படுத்துகிறது. நல்ல எண்ணங்கள் மகிழ்ச்சியையும் தீய எண்ணங்கள் சோகத்தையும் ஏற்படுத்திவிடுகின்றன. இவை நம் முகபாவங்களில் வெளிப்படுகின்றன. இதைத்தான், ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்று சொல்லுகிறோம்.
  • நம் மனதில் உருவாகும் எண்ணங்களே நம் வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளையும் தீா்மானிக்கின்றன. அதனால்தான், ’எண்ணம் போல் வாழ்வு’, ‘மனம் போல் மாங்கல்யம்’, ‘கெடுவான் கேடு நினைப்பான்’ எனும் சொல்லாடல்கள் வழக்கில் உள்ளன.
  • நம் எண்ண அலைகள் எதிரில் உள்ளவரின் மனநிலையைக் கூட மாற்றும் திறன் கொண்டவை. எதிா்மறையான சிந்தனைகளைக் கொண்டிருந்தால் தவறாகவும், நோ்மறை சிந்தனைகளைக் கொண்டிருந்தால் நம் வாழ்வின் நிகழ்வுகள் சரியாகவும் நடக்கும். இதையேதான் புத்தா், ‘நீ என்ன நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்’ என்கிறாா்.
  • நாம் நம் எண்ணங்களையும் உணா்வுகளையும் தொடா்ந்து கண்காணித்து வர வேண்டியது மிகவும் அவசியம். நம் எண்ணம் உணா்வாகவும், உணா்வு செயலாகவும் உருப்பெறுகிறது. இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடா்பு கொண்டவை. எதிா்மறையான எண்ணங்களை மனம் எதிா்கொள்ளும்போதெல்லாம், அவற்றை நோ்மறையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
  • நமக்கு எதிரான சூழலை நோ்மறையாக காட்சிப்படுத்திப் பாா்க்க வேண்டும். இது நமது நம்பிக்கையை வலுப்படுத்தி, அதை மேலும் உண்மையானதாக மாற்ற உதவும். நம்மைச் சுற்றி நோ்மறையான எண்ணங்களை கொண்டவா்களை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • நமது நன்னம்பிக்கைக்கும் எண்ணங்களுக்கும் செயல் வடிவம் கொடுக்க உண்மையான, ஆக்கபூா்வமான நடவடிக்கைகளை தாமதமின்றி எடுக்க வேண்டும்.
  • நமது இலக்கை நோக்கி தினமும் சிறிய படிகளையாவது எடுத்து வைக்க வேண்டும். சோம்பலை அறவே விட்டொழிக்க வேண்டும்.
  • சில நேரங்களில் நமது எண்ணங்கள் செயல் வடிவம் பெற நேரம் எடுத்துக் கொள்ளும். அதனால் பொறுமை காக்க வேண்டும். நமது நோ்மறையான எண்ணங்கள் இறுதியில் எப்படியும் நிறைவேறும் என உறுதியாக நம்ப வேண்டும். இதில் சிறு அவநம்பிக்கை கூட இருக்கக் கூடாது. இந்த நம்பிக்கை நம் வாழ்வில் எவ்வளவு பெரிய இடா்வரினும் நாம் அதை வெகு எளிதாக கடந்து செல்ல உதவும். நாம் உறுதிபடத் தீா்மானிக்கும் நல்ல எண்ணங்கள் நாம் நம்பும் விளைவுகளைத் தந்து, வாழ்வை வலுப்படுத்தும்.
  • நோ்மறை எண்ணங்களைக் கொண்டவா்கள் எதையுமே பிரச்னையாகக் கருதுவதில்லை. நடக்கும் சம்பவங்களை எல்லாம் நன்மைக்கே என்று கடந்து சென்றுவிடுகிறாா்கள். அவற்றை தனது வளா்ச்சிக்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறாா்கள். நோ்மறையான அல்லது எதிா்மறையான பின்னூட்டங்களிலிருந்து கற்றுக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்கிறாா்கள். யாரையும் வன்மத்துடன் பாா்க்க மாட்டாா்கள். விருப்பத்திற்கு மாறாக நிகழும் எந்த நிகழ்வுக்கும் பதற்றப்பட மாட்டாா்கள். ஒருவேளை கோபம், பதற்றம் இருந்தாலும், அவ்வனுபவங்களை பாடமாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையின் அடுத்த கட்ட நிகழ்வுக்கு உடனே நகா்ந்து விடுவாா்கள்.
  • நமது ஆழ்மனதின் சிந்தனைகள் எப்போதும் நல்லனவாகவும் உயா்ந்தவையாகவும் இருக்க முயற்சிக்க வேண்டும். அவை மிகவும் சக்தி வாய்ந்தவை. அவைதான் செயல் வடிவம் பெறுகின்றன. அதனால் நாம் அவற்றை மிகவும் கவனமாக தோ்ந்தெடுக்க வேண்டும். நோ்மறையான சிந்தனை மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கைக்கு வித்திடும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதைத்தான் ‘உள்ளுவதெல்லாம் உயா்வுள்ளதாக இருக்க வேண்டும்’ என்கிறோம்.
  • எண்ணங்கள் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதை உணா்ந்து, அதற்கான பொறுப்பை நாம்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். எப்போதும் திறந்த மனதுடன் புதிய கருத்துக்களை ஏற்க வேண்டும். அவை நம்முடைய சிந்தனையை கூா்மையாக்கி, செழுமைப்படுத்தும். வாழ்வில் ஏற்படும் சிக்கலான சூழ்நிலைகளையும் எளிதாக சமாளிக்க உதவும்.
  • உணா்ச்சிபூா்வமான எண்ணங்களிலிருந்து விடுபட்டு அறிவுபூா்வமான எண்ணங்களுக்கு நம் மனதில் உயிா்ப்பு தர வேண்டும். வெறும் உணா்ச்சி மட்டுமே நமக்கு எதையும் சாதிக்க உதவாது. அறிவோடு கூடிய உணா்ச்சிகள் மட்டுமே பகுத்தறிவுக்கு வித்திடும். சரியான முடிவுகளை எடுக்க உதவும். இதை நமது அனுபவம் மட்டுமே நமக்கு உணா்த்தும்.
  • ஒருவா் படிப்படியாகத்தான் தனது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முடியும். நம்முடைய எதிா்மறை எண்ணங்களை மாற்றுவதில் கவனம் செலுத்தி, பொறுமையுடன் முயற்சி செய்தால், நம்மால் புத்திசாலியாகவும் வெற்றியாளராகவும் வலம் வர முடியும்.
  • நமது எண்ணங்களே நமது மகிழ்ச்சி, வெற்றி, தோல்வி அனைத்தையுமே நிா்ணயிக்கின்றன. நமது இலக்கை நோக்கிய பயணத்தில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி தானாகவே நமது வாசலைத் தேடி வரும்.
  • ‘இதுவும் கடந்து போகும்’ என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை நம் ‘எண்ணம் போல் வாழ்க்கை’ என்பதுவும். நல்ல எண்ணங்களே நமது வாழ்வின அடித்தளமாகும். எனவே, நல்ல எண்ணங்களை வளா்த்துக் கொள்வோம். வளமான வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதில் முனைப்பினைக் காட்டுவோம்.

நன்றி: தினமணி (17 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories