TNPSC Thervupettagam

நான் ஏன் ஆசிரியர் ஆனேன்?

September 5 , 2024 11 hrs 0 min 21 0

நான் ஏன் ஆசிரியர் ஆனேன்?

  • நான் எழுதிய நூல்களையோ நான் பெற்ற விருதுகளையோ எனக்குக் கிடைத்த பதவிகளையோ அல்ல; நான் என்றென்றும் நினைத்து, நினைத்துப் பெருமைப்படுவது என் மாணவர்கள் குறித்துதான். நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி அவர்கள். நான் நூறு மாணவர்களை உருவாக்கி உலகுக்கு வழங்குவேன்.
  • அந்த நூறு பேரும் பதிலுக்கு ஒரு புதிய ராதாகிருஷ்ணனை உருவாக்குவார்கள். அந்த ராதாகிருஷ்ணன் உத்வேகத்தோடு மேலும் நூறு புதிய மாணவர்களைத் தயார் செய்வார். அந்தப் புதியவர்கள் தங்கள் ஆசிரியரை மேலும் வளப்படுத்துவார்கள். இந்தத் தொடர்ச்சிதான் என் வாழ்க்கை. இந்தத் தொடர்ச்சிதான் என் வாழ்வின் பொருள்.
  • ஏதோ ஒரு தத்துவப் பாடத்தை ஒரு நாள் நடத்திக்கொண்டிருந்தேன். சாக்ரடீஸ் குறித்தா, சங்கரர் குறித்தா என்று நினைவில்லை. ஒரு மாணவர் தயங்கித் தயங்கி வாசலில் வந்து நின்றார். நிறுத்திவிட்டு அவரை நிமிர்ந்து பார்த்தேன். ‘ஐயா, நான் உங்கள் வகுப்பு மாணவன் இல்லை. பொருளாதாரம் படிக்கிறேன். தத்துவத்தில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும் நீங்கள் எடுக்கும் விதம் என்னை ஈர்க்கிறது. நானும் ஓர் ஓரமாக அமர்ந்து சிறிது நேரம் கேட்கலாமா? அனுமதிப்பீர்களா?’
  • வா என்று அழைத்து அமர வைத்துவிட்டுச் சொன்னேன். இங்குள்ள எல்லாரும் தத்துவம் பயிலும் மாணவர்கள் என்றா நினைக்கிறாய்? அதோ உன் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஐந்து பேரும் கணித மாணவர்கள். இடப்பக்கம் இருக்கும் இருவரும் இலக்கியம் படிப்பவர்கள். பக்கத்து அறையிலிருந்து நீ வந்திருக்கிறாய்.
  • பத்துத் தெரு தள்ளி வேறொரு கல்லூரியில் பயிலும் மாணவர்கள்கூட இங்கே அமர்ந்திருக்கிறார்கள். தத்துவம் எல்லாருக்கும் பொதுவான துறை. என்னிடம் அனுமதி கேட்கவே வேண்டாம். தாராளமாக எப்போது வேண்டுமானாலும் வரலாம், கேட்கலாம். இன்னொரு முறை ரயிலில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, திபுதிபுவென்று ஒரு கூட்டம் என்னை நோக்கி ஓடிவந்தது. என்னவோ ஏதோ என்று நானும் பதறிவிட்டேன்.
  • ‘ஐயா, நீங்களா? இந்த வண்டியிலா வந்தீர்கள்? எங்கள் ஊருக்கு வந்துவிட்டு இப்படி நீங்களே பெட்டிப் படுக்கையோடு நடந்து போகலாமா?’ என்று ஒருவர் என் கையிலிருப்பதை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டார். இன்னொருவர் வெளியில் ஓடிச் சென்று ஒரு குதிரை வண்டியைப் பிடித்து நிறுத்தினார். மூன்றாவது நபர் பய பக்தியோடு என் கையைப் பற்றி என்னை மேலே ஏற்றிவிட்டார். நீங்கள் எல்லாம் யார் என்று தயக்கத்தோடு கேட்டேன். ஒரே குரலில் மூவரும் சொன்னார்கள். நாங்கள் உங்கள் மாணவர்கள்.
  • யார், யாரோ வருவார்கள் வீடு தேடி. இது எங்கள் தோட்டத்தில் பழுத்தது. இந்தப் பேனா விலை உயர்ந்தது. உங்களிடம் இருப்பதுதான் சரி, இந்தாருங்கள். நாளை எனக்குத் தேர்வு. சில பாடங்களில் சந்தேகம் இருக்கிறது. என்ன செய்வது? உங்களைப் போன்ற ஆசிரியர் எனக்குக் கிடைக்கவில்லை. தயவு செய்து எனக்காக அரை மணி நேரம் ஒதுக்க முடியுமா? எனக்குச் சில புத்தகங்கள் தேவைப்படுகின்றன. நூலகத்தில் இல்லாததுகூட உங்கள் வீட்டில் இருக்கும் என்று தெரியும். கொஞ்சம் பயன்படுத்திக் கொள்ளலாமா?
  • ஒருமுறை கணக்கு மாணவர் ஒருவர் என்னைத் தேடி வந்தார். ‘ஐயா, நான் மேல்படிப்புக்காக வெளிநாடு செல்கிறேன். நேற்று இரவு என் கனவில் கடவுள் தோன்றி, முதலில் ஆசிரியரிடம் ஆசி பெற்றுவிட்டு அதன்பின் கப்பல் ஏறு’ என்று கட்டளை யிட்டார். நீங்கள்தான் என்னை வாழ்த்தி அனுப்ப வேண்டும்.
  • எனக்கும் கணக்குக்கும் தொடர்பே இல்லை என்றாலும் மாணவர் என்பதால் உன் துறையில் உன் பெயர் நிலைத்து நிற்கும், கலங்காமல் சென்று வா என்று மனமார வாழ்த்தினேன். பிறகு கேட்டேன். ஆமாம், உன் பெயர் என்ன? அந்த இளைஞர் தயங்கியபடியே சொன்னார். ‘ஸ்ரீனிவாச ராமானுஜன்.’
  • நீ ஏன் ஆசிரியராக இருக்கிறாய் என்று கேட்டால், நான் ஒரு நல்ல மாணவன், அதனால் ஆசிரியராகவும் இருக்கிறேன் என்பேன். சிறு வயதிலேயே வறுமையைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அஞ்சியதில்லை. வாழை இலை வாங்கக் காசில்லாமல் வெறும் தரையைக் கழுவி அதில் சாதம் போட்டு வீட்டில் சாப்பிட்டிருக்கிறார்கள்.
  • அப்போதும்கூட நான் அரிஸ்டாட்டில் படைப்புகள் வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும் என்றுதான் கணக்கு போட்டுக்கொண்டிருப்பேன். குடியரசுத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், ஆயிரம் பிரச்சினைகளுக்கு நடுவில், ஆயிரம் விவாதங்களுக்கு நடுவில், என் மனம் என்ன யோசித்துக்கொண்டிருக்கும் தெரியுமா? பௌத்தம் குறித்து ஒரு சம்ஸ்கிருத நூல் புதிதாக வந்திருக்கிறதாமே? அதை எப்போது வாங்குவது? எப்போது படிப்பது?
  • படித்தோமோ விட்டோமா என்று ஒருபோதும் இருக்க முடியாது என்னால். நான் உள்வாங்கிய அனைத்தையும் என் மாணவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். நான் கற்ற அனைத்தையும் என் மாணவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். என்னால் எல்லாருக்கும் அளிக்க முடிந்த ஒரே செல்வம் அதுதான்.
  • இருப்பதிலேயே கொடுமையான அறிவு வறுமையோடு என் மாணவர்கள் போராடுவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அது என்னுடைய போராட்டமும்கூட. அந்தப் போராட் டத்தில் அவர்கள் வெற்றி பெறும்வரை, அறிவொளி அவர்களை முற்றாகப் பற்றிக்கொள்ளும்வரை, பல நூறு ராதாகிருஷ்ணன்கள் எல்லாத் திசைகளிலும் பெருகும்வரை, நான் ஓர் ஆசிரியனாக நீடிப்பேன். என் வகுப்பறை அனைவருக்காகவும் திறந்திருக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories