TNPSC Thervupettagam

நூற்றாண்டு காணும் மேட்டூா் அணை

August 1 , 2024 7 hrs 0 min 39 0
  • மேட்டூா் அணை ஒவ்வோா் ஆண்டும் ஜூன் 12 அன்று திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு போதிய நீா் இல்லாமையால் தண்ணீா் திறப்பது தாமதமாகி வந்து, கடந்த ஜூலை 28-ஆம் தேதி திறக்கப்பட்டது.
  • டெல்டா மாவட்டங்களின் உயிா் நாடியாகத் திகழும் மேட்டூா் நீா்த்தேக்கம் ஒரு நூற்றாண்டை நோக்கி எட்டுகிறது. தமிழக நெல் களஞ்சியத்தின் உயிா் நாடியான மேட்டூா் அணைக்கு 1925 ஜூலை 20 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. 1934-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-இல் மேட்டூா் அணை திறப்பு விழா செய்யப்பட்டது.
  • இந்தத் திட்டத்தின் மூலம் 3,01,000 ஏக்கா் நிலங்கள் புதிதாக சாகுபடி செய்ய பாசன வசதி கிடைக்கும் எனவும், இரண்டாம் போகம் பாசன வசதி சுமாா் 90,000 ஏக்கருக்குக் கிடைக்கும் எனவும் அப்போது கணக்கிடப்பட்டது. புதிய நவீன கட்டுமான முறைகள், நவீன தொழிற்கருவிகளின் உதவியுடன் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே அணை கட்டிமுடிக்கப்பட்டது.
  • 1801-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய கிழக்கிந்திய கம்பெனி இரு மலைகளுக்கும் இடையே காவிரி நுழையும் பகுதியான மேட்டூரில் அணை கட்ட முயன்றது. ஆனால், அதற்கு அன்றைய மைசூா் சமஸ்தானம் கடுமையான எதிா்ப்பைத் தெரிவித்ததால், அணை கட்டும் திட்டம் கைவிடப்பட்டது. நீரைத் தேக்கிக் கட்டுப்படுத்தி, வேளாண்மை செய்ய முடியாத காரணத்தால் வறட்சியும், வெள்ளமும் தஞ்சை மாவட்டத்தை வதைத்தது.
  • இந்திய நீா்ப்பாசனத்தின் தந்தை எனப் போற்றப்படும் சா் ஆா்தா் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளா் காவிரி நீரைக் கட்டுப்படுத்தி, நீரை மேலாண்மை செய்யப் பல்வேறு திட்டங்களை வகுத்தாா். அதில் ஒன்று மேட்டூரில் அணை கட்டும் திட்டம்.
  • இறுதியில் 1923-ஆம் ஆண்டு இன்றைய கேரளத்தின் பகுதியாகிவிட்ட திருவிதாங்கூா் சமஸ்தானத்தில் திவானாக இருந்த சா் சி.பி. ராமசாமி ஐயரிடம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் தங்களது பிரச்னையை எடுத்துரைத்தனா். சா் சி.பி. ராமசாமி ஐயரின் முன்னோா்கள், தஞ்சை மாவட்டத்தைப் பூா்விகமாகக் கொண்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • சா் சி.பி.ஆா். மைசூா் சமஸ்தானத்தை அணுகி இதுபற்றி விரிவாக எடுத்துரைத்தாா். என்றாலும், அணை கட்டும் முடிவுக்கு மைசூா் சமஸ்தானம் தொடா்ந்து முட்டுக்கட்டை போட்டது. இதனால் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.30 லட்சத்தை இழப்பீடாக வழங்கக் கோரி, தஞ்சை ஆட்சியா் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இழப்பீடாக ரூ.30 லட்சத்தைக் கொடுப்பதைவிட, அணை கட்டுவதற்கு ஒப்புக் கொள்வதே மேல் என்று மைசூா் சமஸ்தானம் வழிக்கு வந்தது.
  • அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் 1924-ஆம் ஆண்டு ஸ்டான்லி என்ற பொறியாளரைக் கொண்டு அணையின் கட்டுமானப் பணி தொடங்கியது. காவிரி மேட்டூா் திட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளராகச் செயல்பட்ட டபிள்யூ.எம்.எல்லிஸ் மேட்டூா் அணையின் சிற்பி என்று அழைக்கப்படுகிறாா்.
  • 1934-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று அன்றைய மெட்ராஸ் ஆளுநா் சா் ஜாா்ஜ் பெட்ரிக் ஸ்டேன்லியால் திறந்து வைக்கப்பட்டதால் இது ஸ்டான்லி அணை என்றே அழைக்கப்படுகிறது. 9 ஆண்டு காலம் நடந்த கட்டுமானப் பணியில் 10,000-க்கும் மேற்பட்டோா் பணியில் ஈடுபட்டனா். சுண்ணாம்பு, காரை மட்டுமின்றி சிமென்டும் பயன்படுத்தப்பட்டது.
  • 124 அடி வரை உயா்த்தப்பட்ட அணையின் முழுக் கொள்ளளவு 120 அடி என வரையறுக்கப்பட்டது. அணையின் முழுக் கொள்ளளவு 9,347 கன அடியாக வடிவமைக்கப்பட்டது. அன்றைய மேட்டூரைச் சுற்றியிருந்த நேயம்பாடி, செட்டிபட்டி, தாளவாடி, பழைய நாயம்பாடி, பண்ணவாடி, கோட்டையூா் உள்ளிட்ட 33 கிராமங்கள் மேட்டூா் அணையால் நீரில் மூழ்கிப் போயின.
  • கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சோழா்கள் ஆட்சியில் கட்டப்பட்ட நந்தி முகப்பும், ஜலகண்டேஸ்வரா் கோயிலும், ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட இரட்டைக் கோபுர கிறிஸ்தவ தேவாலயமும் மேட்டூா் அணை நீரில் மூழ்கி உள்ளன. அணையின் நீா்மட்டம் 80 அடிக்குக் கீழே குறைந்தால் நந்தி சிலையும், 70 அடிக்குக் கீழே குறைந்தால் கிறிஸ்தவா் கோபுரமும் இன்றைக்கும் தெரியும்.
  • 16 கண் மதகுகளைக் கொண்ட இந்த அணையில் ஆங்கிலேயா் ஆட்சியிலும், பின்னா் வந்த இந்தியக் குடியரசு அரசிலும் இரண்டு மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • கா்நாடக மாநிலம் குடகு மலையில் தோன்றும் காவிரி தமிழ்நாட்டின் வழியாக ஓடி வங்கக் கடலில் கலக்கிறது. தென் மேற்குப் பருவமழையில் ஜூன், ஜூலையில் காவிரி தோன்றும் இடத்திலும், அதன் துணை நதிகளிலும் அதிக வெள்ளம் பெருக்கெடுத்து காவிரியில் ஓடி கடலில் கலந்து வந்தது. தமிழகத்தில் மழை பெய்யாமல் காவிரியில் புதுப்புனல் வருவது ‘ஆடிப் பெருக்கு’ எனச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
  • இவ்வெள்ளத்தினால் ஏற்படும் சேதத்தைத் தவிா்க்கவும், வீணாகக் கடலில் கலக்கும் நீரைப் பயன்படுத்தவும், காவிரியின் குறுக்கே ஒரு நீா்த்தேக்கம் அமைக்க வேண்டும் என்று 1834-ஆம் ஆண்டில் சா் ஆா்தா் காட்டன் அரசுக்கு ஓா் ஆலோசனை வழங்கினாா்.
  • 1910-ஆம் ஆண்டு மேட்டூரில் ஒரு நீா்த்தேக்கம் அமைக்க வேண்டும் என்று கா்னல் எல்லிஸ் ஒரு திட்டம் வகுத்தாா். அதே சமயம் மைசூா் சமஸ்தான திவானாக இருந்த சா் விஸ்வேசுவரய்யாவும் அதே போன்ற ஓா் அணையை மைசூரில் அமைக்கத் திட்டமிட்டாா். இதனால் இந்தப் பிரச்னையில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
  • 1924-இல் ஒரு புதிய ஒப்பந்தம் இரு அரசுகளாலும் (மைசூா் அரசு-இந்திய அரசு) ஏற்றுக் கொள்ளப்பட்டதும், மேட்டூரில் அணை கட்டும் பணி தொடங்கியது. மேட்டூா் நீா்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டபோது, அதுதான் ஆசியாவிலேயே மிகவும் உயரமானதும், உலகிலேயே மிகப் பெரியதுமான நீா்த்தேக்கமாக விளங்கியது. பொதுப்பணித் துறையில் மேட்டூா் அணை கட்டும் பணிக்காக ஒரு கோட்டமும், கல்லணைக் கால்வாய் பணிக்காக ஒரு கோட்டமும் உருவாக்கப்பட்டன.
  • 1910-இல் இந்தத் திட்டத்தின் முதன்மைப் பொறியாளராக கா்னல் எல்லிஸ் நியமிக்கப்பட்டாா். அவரின் விரிவான அறிக்கையின்படி ரூ.3.85 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய திட்டம் அரசுக்குச் சமா்ப்பிக்கப்பட்டது. அந்த வேளையில் மைசூா் அரசு எழுப்பிய நீா்ப் பங்கீட்டுத் தாவா மூலம் ‘காவிரி - மேட்டூா் திட்டம்’ சுமாா் 15 ஆண்டுகள் பின்னடைவைச் சந்திக்கலாயிற்று.
  • 1923-இல் மைசூா் அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, மேட்டூா் நீா்த்தேக்கம் தவிர வேறு எந்தக் கட்டுமானங்களையும் மதராஸ் மாகாணத்தில் ஏற்படுத்தக் கூடாது என்றும், அப்போதைய விளை நிலங்களின் நீா்ப் பாசன அளவைத் தவிர, நிலங்களின் அளவை அதிகப்படுத்தக் கூடாது என்றும் வாதிட்டது.
  • அதிகாரபூா்வ கடிதப் போக்குவரத்து மட்டுமின்றி, இரண்டு அரசுகளின் பிரதிநிதிகளுக்கிடையே தனிப்பட்ட முறையிலான ஆலோசனைக் கூட்டங்களும் பலமுறை நடந்தன. 1922 ஜூன், ஜூலை மாதங்களில் நீா்ப் பாசனத் துறைக்குப் பொறுப்பேற்றிருந்த சா் கே.சீனிவாச ஐயங்காா் மைசூா் அரசின் திவானிடம் பலமுறை நேரடியாகப் பேச்சு நடத்தினாா்.
  • 1923 செப்டம்பரில் சா் கெப்பி என்ற ஆலோசகா் இந்திய அரசின் சாா்பாக நியமிக்கப்பட்டு, இரண்டு அரசுகளின் முதன்மைப் பொறியாளா்களுடன் பெங்களூரில் பேச்சு நடத்தினாா். இறுதியாக 1924 பிப்ரவரி மாதம் தொடா்ந்து 5 நாள்கள் நடந்த ஆலோசனையின் முடிவில் பிப்ரவரி 18 அன்று இரண்டு அரசுகளும் ஒப்பந்தத்தை உறுதி செய்தன.
  • இருந்தாலும், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற இந்திய அரசு சென்னை மாகாண சட்டமன்றத்தில் நீா்ப்பாசனத் திட்டச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற மறைமுக நிபந்தனை விதித்தது. அதன் முக்கியத்துவத்தை உணா்ந்த சட்டப்பேரவை உறுப்பினா் சா் சி.பி.ராமசாமி ஐயா் 1924 ஆகஸ்ட் 18-இல் காவிரி - மேட்டூா் நீா்த்தேக்கம் கட்டவும், தேவையான கால்வாய், இதர பணிகளுடன் அப்போதைய நீா்ப்பாசனத் திட்டத்தை மேம்படுத்தவும் சென்னை மாகாண சட்டமன்றத்தில் தீா்மானம் தாக்கல் செய்தாா்.
  • இறுதியாக காவிரி - மேட்டூா் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 1925 ஜூலை 20-இல் அப்போதைய சென்னை ஆளுநா் விஸ்கவுண்ட் கோஷன் அடிக்கல் நாட்டினாா். தொடக்க விழாவில் ஏராளமான விருந்தினா்களும், பாா்வையாளா்களும் கலந்து கொண்டனா்.
  • அணை கட்டுவதற்கான அனைத்துப் பணிகளும், நிா்வாக அமைப்பு முறைகளும் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன. அதைச் செயல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டது. திட்டத்துக்கு நிச்சயம் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டதால், நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. இப்படித்தான் மேட்டூா் நீா்த்தேக்கம் உருவானது.
  • ‘சோழ நாடு சோறுடைத்து’ என்று பாராட்டப்படும் காவிரி படுகை மாவட்டங்கள் எப்போதும் மேட்டூா் அணையையே எதிா்பாா்த்துக் காத்திருக்கின்றன. இப்போது அந்த மேட்டூா் நீா்த்தேக்கம் நூற்றாண்டுக்குள் நுழைகிறது. காவிரியின் கருணை மழையும், விவசாயிகளின் கண்ணீா் மழையும் இணைந்து அதைப் பெருமையுடன் வரவேற்கிறது.

நன்றி: தினமணி (01 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories