TNPSC Thervupettagam

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு மூடுவிழாவா?

February 10 , 2025 7 hrs 0 min 18 0

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு மூடுவிழாவா?

  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நேரடி நெல் கொள்முதலைச் செய்துவரும் நிலையில், அதைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவுக்கு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இதன் மூலம், விவசாயிகளுக்கான கொள்முதல் உத்தரவாதத்தையும் கைவிட்டுள்ளது. இதன் பாதிப்புகள் குறித்து உடனடியாகப் பேச வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

தமிழகத்தின் சாதனை:

  • இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தை முதன்​முதலில் தமிழ் நாடு அரசுதான் அறிமுகப்​படுத்​தியது. மக்களுக்குத் தரமான உணவு வழங்க வேண்டும் என்கிற அடிப்படை நோக்கத்​துடன் தமிழ்நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகம் என்கிற பொதுத் துறை நிறுவனத்தை 1972இல் அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி தொடங்கி​வைத்​தார். அதற்கான உணவுப் பொருள்​களைத் தமிழ்நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்குக் குறைந்த விலையில் தரமான பொருள்கள் வழங்க வேண்டும் என்கிற கொள்கை வகுக்​கப்​பட்டது.
  • தமிழ்​நாட்டில் உற்பத்தி செய்யப்​படும் நெல்லைக் கொள்முதல் செய்வதற்கு, தமிழ்நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகம் மூலம், 1975இல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கருணாநிதி கொண்டு​ வந்​தார். இந்தியா​விலேயே முதன்​முதலில் நெல் கொள்முதல் செய்வதற்கு அரசு பொதுத் துறை நிறுவனத்தை உருவாக்​கியது தமிழ்​நாடு​தான். அன்று முதல் இன்றுவரை நெல் கொள்முதலில் தமிழ்நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகம் இந்தியா​வுக்கு வழிகாட்டுகிற வகையில் செயல்​பட்டு​வரு​கிறது. அவ்வாறு கொள்முதல் செய்யும் நெல்லை அரவை செய்து தரமான அரிசி உற்பத்தி செய்வதற்கு நவீன நெல் அரவை ஆலைகளை (MRM) உருவாக்​கியதும் கருணாநிதி அரசுதான்.
  • தமிழ்​நாட்டில் இரட்டைக் கொள்முதல் நடைமுறை அமலில் உள்ளது. அரசு நிர்ணயம் செய்யும் விலையில் அரசே நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் தடையின்றிக் கொள்முதல் செய்து விவசாயிகளுக்குக் கொள்முதல் உத்தர​வாதம் அளிக்​கிறது. அரசு நிர்ண​யிக்கும் விலையுடன் கூடுதல் விலை கொடுத்துத் தனியார் கொள்முதல் செய்யும் நிலையில் விவசா​யிகள் தங்கள் விருப்​பத்​துக்குக் கூடுதல் விலை பெற்று விற்றுக்​கொள்​வதற்கு இக்கொள்கை வழிவகுக்​கிறது.

இன்றைய சூழல்:

  • குறைந்​தபட்ச ஆதரவு விலை நிர்ணயச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று விவசா​யிகள் போராடிவரும் நிலையில், அதை மத்திய அரசு ஏற்க மறுக்​கிறது. எம்.எஸ்​.சு​வாமி​நாதன் குழுவின் பரிந்​துரையை ஏற்று விவசா​யிகளுக்கான கடன் நிவாரணம் உள்ளிட்ட சந்தை குறித்த பல்வேறு கொள்கை முடிவுகளை எடுப்​ப​தற்கு அரசு காலம் தாழ்த்​திவரு​கிறது. தற்போது அதற்கான கட்டாயமும் நெருக்​கடியும் மத்திய அரசுக்கு ஏற்பட்​டுள்ளது.
  • இந்தியாவில் 60% மாநிலங்​களில் அரிசியை உணவாக உட்கொள்ளும் நிலை உருவாகி உள்ளது. உலக நாடுகளில் 40% நாடுகளில் அரிசியை உட்கொள்​பவர்​களின் எண்ணிக்கை அதிகரித்​திருக்​கிறது. உலக நாடுகளில் வாழும் மக்களிடையே தமிழகப் பாரம்பரிய அரிசி உணவை உட்கொள்ளும் ஆர்வம் ஏற்பட்​டுள்ளது. அத்துடன், தமிழ்​நாட்டில் தற்போது கொள்முதல் உத்தர​வாதம் இல்லாததால் கரும்பு உள்ளிட்ட பல்வேறு உணவுப்​பொருள் உற்பத்தி குறைந்து நெல் உற்பத்தி அதிகரிக்கும் நிலை உள்ளது. காரணம் நெல்லுக்கான கொள்முதல், விலை உத்தர​வாதம் உள்ளதால் நெல் உற்பத்​தியில் விவசா​யிகள் ஆர்வம் காட்டு​கிறார்கள். அதேநேரம் தற்போதைய நிலையில் தமிழ்​நாட்டுக்குத் தேவையான அரிசியில் 70% மட்டுமே உற்பத்தி செய்கிறோம்.

தவறான முடிவு:

  • இந்தச் சூழலில், தமிழ்​நாட்​டிலேயே வேளாண்​மைக்கான தனி நிதிநிலை அறிக்கையைக் கொண்டு​வந்து வேளாண் உற்பத்தியைப் பெருக்கு​கிறோம் என்று கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லின், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்க முயற்​சிப்​பதுதான் ஏமாற்​றமளிக்​கிறது. வேலைவாய்ப்பை உருவாக்கு​கிறோம் என்று சிப்காட் பெயரில் விளைநிலங்களை அபகரிக்க முயற்சிக்கும் தமிழ்நாடு அரசு ஆண்டொன்​றுக்கு லட்சத்​துக்கும் மேற்பட்ட இளைஞர்​களுக்கு வேலை வழங்கிவரும் கொள்முதல் நிலையங்​களுக்கு முடிவு​கட்டி, அவற்றின் பணியாளர்களை வேலை இழக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவது முரணானது.
  • உணவின் தேவையை அடிப்​படை​யாகக் கொண்டு தமிழ்​நாட்டில் நெல் உற்பத்​தியைப் பெருக்கு​வதற்கு விவசா​யிகளோடு அரசும் உதட்டளவில் ஆர்வம் காட்டு​கிறது. அதேநேரத்தில் பேரிடர் காலங்​களில் ஏற்படும் இழப்பு​களில் அரசு பங்கேற்​பதில் மிகப்​பெரிய பின்னடைவு நீடித்​துக்​கொண்​டிருக்​கிறது. குறிப்பாக நெல் உற்பத்​திக்குக் காப்பீடு செய்யும் விவசா​யிகள் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறை​களில் உள்ள விவசா​யிகளுக்கு விரோதமான வழிகாட்டு​தல்​களால் முழு இழப்பீடு பெற முடியாத நிலையும் தொடர்​கிறது.
  • இவ்வாறான பெரும் நெருக்​கடிகளுக்கு இடையில்தான் விவசா​யிகள் தங்கள் வாழ்வா​தா​ர​மாகக் கொண்டு நெல் உற்பத்​தியைத் தொடர்​கின்​றனர். குறிப்பாக, ஆறு மாதங்​களுக்கு முன்ன​தாகவே மழை பெய்வதையும் புயல் வருவதையும் தெரிந்​து​கொள்ளும் அறிவியல் தொழில்​நுட்பம் இருக்கும் நிலையில் அதனை எதிர்​கொண்டு சாகுபடி செய்யும் மனத் துணிவு விவசா​யிகளிடம் இன்றைக்கும் தொடர்​கிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு ‘தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு’ என்கிற பெயரில் கொள்முதலில் கார்ப்​பரேட்டுகளை அனுமதிக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நடப்பாண்டு நேரடி நெல் கொள்முதலுக்கு அனைத்து மாவட்​டங்​களிலும் நுகர்வோர் கூட்டமைப்பு என்கிற பெயரில் சில தனியார் நிறுவனங்​களுக்கு அனுமதி வழங்கியது. பிறகு காவிரி டெல்டாவுக்கு மட்டும் விலக்​களித்து மற்ற மாவட்​டங்கள் முழுமை​யிலும் நடைமுறைப்​படுத்து​வதற்கான அரசாணையை வழங்கி தீவிரப்​படுத்தி வருகிறது.

விவசா​யிகளுக்கு ஆபத்து:

  • கொள்முதல் செய்வதற்கான முழுத் தொகையையும் தமிழ்நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகம்தான் பொறுப்​பேற்றுத் தனியாருக்கு முன்பணமாக வழங்கு​கிறது. தராசுகள் முதல் பணியாளர்​கள்வரை அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு​களையும் தமிழ்நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகமே வழங்கிவரு​கிறது. ஆனால், கொள்முதல் மட்டும் தனியார் பெயரில் நடப்ப​தற்கு அனுமதி அளித்​துள்ளது. இது கார்ப்​பரேட்கள் கொள்ளை லாபம் அடிப்​ப​தற்கே வழிவகுக்​கிறது. இதனால் விவசா​யிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை எதிர்​காலத்தில் ஏற்படப் போகிறது. குறிப்பாக, தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்வதால் ஒரு டன்னுக்கு ரூ.100 வரையிலும் ஊக்கத்தொகை கொடுத்து கொள்முதல் செய்யப்​படு​கிறது. காலப்​போக்கில் இது நிறுத்​தப்​படும் அபாயம் ஏற்பட்​டுள்ளது.
  • தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு உண்மைக்கு முரணாக உள்ளது. குறிப்பாக, தனியார் இரட்டைக் கொள்முதல் மூலம் கொள்முதல் செய்யும் வாய்ப்பு இருக்​கிற​போது, தமிழ்நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகத்தின் பணியாளர்​களையும் அடிப்​படைக் கட்டமைப்பு​களையும் கொண்டு தனியார் கொள்முதல் செய்து​கொள்ள அனுமதிப்பது ஏன்? அவ்வாறு கொள்முதல் செய்யப்​படும் நெல்லின் தரத்துக்கு அரசு அதிகாரிகள் பொறுப்​பேற்கும் நிலை உள்ளது. தரம் குறித்த ஆய்வை நடத்து​வதற்கான கட்டமைப்புகள், பணியாளர்கள் தனியாரிடத்தில் இல்லாத நிலையில், இவ்வாறான முரண்​பாடான கொள்முதல் கொள்கை முடிவு தமிழ்நாடு விவசா​யிகளுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்​தப்​போகிறது. உரிய காலத்தில் கொள்முதல் செய்வதற்கான உத்தர​வாதம் மறுக்​கப்​படும் நிலையும் ஏற்பட்​டுள்ளது.
  • இன்றைக்கு, காலநிலை மாற்றத்தால் பேரழிவு, பெருமழை, வறட்சி போன்ற பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு​வரு​கின்றன. உற்பத்தி மிகையானால் தம்மைத் தாமே பாராட்​டிக்​கொள்ளும் அரசுகள், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பின்போது பங்கேற்க வேண்டும் என்று எதிர்​பார்ப்பு உள்ளது. ஆனால், காப்பீட்டிலும் கொள்முதலிலும் விவசா​யிகளைத் தனியாரிடம் அடிமைப்​படுத்தும் முயற்​சியில்தான் தமிழக அரசு முனைப்பு காட்டு​கிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்​களைக் கொண்டுவந்த பெருமைமிகு வரலாறு கொண்ட தமிழக அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டும்​!

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories