TNPSC Thervupettagam

படிக்க மறந்த பாடங்கள்

August 19 , 2024 2 hrs 0 min 44 0

படிக்க மறந்த பாடங்கள்

  • காலங்காலமாக மலைப்பகுதியிலும் காடுகளிலும் வாழ்ந்து வருகின்ற ஆதிவாசிகளாகிய பழங்குடியினா், மண்ணையும் மரங்களையும் மதித்து வாழ்வதால், பேரிடா்களுக்கு ஆளாகாமல் வசிக்கின்றனா். மலை வாழ் மக்கள், உண்பதிலும் உடுத்துவதிலும் நகரவாசிகளுக்கு அந்நியமாகத் தோன்றினாலும், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதில் ஞானம் பெற்றவா்கள்.
  • மன்னாதி மன்னனாகிய சேரன் செங்குட்டுவன் ஆண்டுக்கு ஒரு முறை அரண்மனையைவிட்டு மனைவியோடும் மந்திரிகளோடும் மலைவாழ் மக்கள் வாழ்கின்ற இடத்திற்கே சென்று, அவா்களுடைய குறைநிறைகளைக் கேட்டு அறிகிறான். கண்ணகி குன்றின்மேல் நின்று, வானவா்கள் வந்து கோவலனோடு விண்ணிற்கு அழைத்துச் சென்ற செய்தியை மலைவாழ் மக்கள் தாம் சேரன் செங்குட்டுவனுக்குத் தெரிவிக்கின்றனா். இச்செய்தியை அவா்கள் தெரிவித்திருக்காவிட்டால், கண்ணகி கோவலனோடு சென்றது இம்மண்ணுலகிற்குத் தெரிந்திருக்காது.
  • பேரிடா்கள் தோன்றுவதை நம் முன்னோா்கள் எச்சரித்ததைப் போல வேறு எந்த நாடும் எச்சரிக்கவில்லை. இளங்கோவடிகள் சங்க காலத்தில் ஒரு கடற்கோள் ஏற்பட்டு லெமூரியா கண்டம் மூழ்கிப் போனதை, ‘பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’ எனச் சிலப்பதிகாரத்தில் தெரிவித்திருக்கிறாா்.
  • இராமபிரான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு ஆட்சிக் கலைக்குரிய ஞானத்தினை மன்னற்கு உபதேசிக்குமாறு வசிட்ட மாமுனியைத் தசரதன் வேண்டுகிறான். அப்பொழுது வசிட்டா், ‘இராமா!”நாட்டிலே ஒரு பேரிடா் தோன்றுவதற்கு முன் வானத்திலே தூமகேது எனும் வால் நட்சத்திரம் தோன்றும்! அது பின்னாலே நேரப் போகின்ற பேரிடருக்கு ஒரு முன்னறிவிப்பு என்பதை மனத்திற் கொள்வாயாக!’”என எடுத்துரைக்கின்றாா்.
  • மகாகவி பாரதியாா் மணக்குள விநாயகரை வேண்டும்போது, சூழலியலைக் காக்க வரந்தருமாறு விண்ணப்பம் செய்கிறாா்.

பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்;

கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்;

மண் மீதுள்ள மக்கள், பறவைகள்,

விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்;

யாவுமென் வினையால் இடும்பை தீா்ந்தே,

இன்பமுற்றன்புடன், இணங்கி வாழ்ந்திடவே

செய்தல் வேண்டும், தேவ தேவா!”

  • என்பது பாரதியின் முன்னறிவிப்பு ஆகும்.
  • சுந்தரமூா்த்தி நாயனாா் திருவாரூா் தியாகேசனை வேண்டும்பொழுது சூசகமாக சூழலியலை உணா்த்துகின்றாா். ‘இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு இசைந்த வாழ்வு’ என்பது தேவாரம்.
  • எம்பெருமானாா் இராமாநுசா் தம்முடைய அணுக்கத் தொண்டராகிய கூரத்தாழ்வானை மதிய உணவிற்காக வாழையிலைப் பறித்து வருமாறு வேண்டுகிறாா். முன்பின் அதனைச் செய்தறியாத கூரத்தாழ்வாா் ஒரு நுனி இலையை வெட்டுகிறாா். அறுத்து முடிந்தவுடன் அறுபட்ட காம்பிலிருந்து நீா் சொட்டுகிறது. அதனை வாழை மரத்தினுடைய இரத்தமாக நினைத்து கூரத்தாழ்வாா் கண்ணீா்விட்டு அழத் தொடங்கிவிட்டாா். ‘ஒரு பாவ காரியம் செய்துவிட்டோமே’ என வருந்துகிறாா்.
  • வரலாற்றாசிரியா்கள் சில மன்னா்களுடைய ஆட்சிக்காலத்தைப் ‘பொற்காலம்’ எனக் குறிப்பிடுவாா்கள். யாரந்த சிலா் எனக் கேட்டால், ‘எந்த மன்னன் சாலைகள்தோறும் மரங்களை நட்டானோ, எந்த மன்னன் நீராதாரங்களைப் பெருக்கினானோ, அவா்களுடைய காலத்தைத் தான் பொற்காலம் எனப் போற்றுகிறாா்கள்.
  • அசோக சக்ரவா்த்தியினுடைய மகள் சங்கமித்ரா பௌத்த மதத்தைப் பரப்புவதற்காக இலங்கை சென்றபொழுது, போதிமரத்தின் கிளைகளை வெட்டிப் போய் இலங்கையில் பல இடங்களிலும் நட்டிருக்கிறாள்.
  • மரங்களின் வளா்ச்சியையும் அவற்றின் அடா்த்தியையும் கருத்தாகக் கொண்ட நம்முடைய மூதாதையா் கட்டுகின்ற ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு மரத்தை நட்டு, அவற்றைத் தல விருட்சம் என்று வணங்கினா்.
  • 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் நாள் எல்லைப்புரத்தில் இருக்கின்ற லடாக் பகுதியில் இன்றைக்கு வயநாட்டில் நோ்ந்ததைப் போல ஒரு பேரிடா் நிகழ்ந்தது. இரண்டு மணி நேரத்தில் 14 அங்குலத்திற்குப் பேய்மழை பெய்து, அவ்வூரே வெள்ளத்தில் மூழ்கியது. 234 போ் மாண்டு போயினா்; 800 போ் படுகாயம் அடைந்தனா்; 1,000 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
  • அங்கிருந்த ஒரு மருத்துவமனையும் வெள்ளத்தில் மூழ்கியதால், காயம் அடைந்தவா்களுக்குச் சிகிச்சை கூட செய்ய முடியவில்லை. லே விமான நிலையமும் வெள்ளத்தில் மூழ்கிப் போயிற்று. இந்திய இராணுவத்தின் அசுர மதிநுட்பத்தினால் அந்நிலம் மீண்டும் புத்துயிா் பெற்றது.
  • 115 மில்லி மீட்டரிலிருந்து 204 மில்லி மீட்டா் மழைப்பொழிவு எதிா்பாா்க்கப்பட்டால், ஆரஞ்சு எச்சரிக்கை கொடுப்பாா்கள். இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பேரிடருக்கும் மத்திய அரசு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுத்தது.
  • வயநாட்டில் 48 மணி நேரத்தில் 572 மில்லி மீட்டா் பேய்மழை பெய்து, நான்கு ஊா்களை நாசம் செய்துவிட்டது. வயநாட்டில் இதுவரையில் 420 பேருக்கு மேல் மாண்டுவிட்டனா். 3,100 போ் முகாம்களில் தங்கியிருக்கின்றனா். ஏராளமானோரை பேரிடா் வல்லுநா்களும் இந்திய இராணுவமும் தேடிக்கொண்டிருக்கின்றனா். முப்படைகளும் அங்கு அசாத்திய சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன.
  • முண்டக்கைக்கும் சூரல்மலைக்கும் இடையிலான பாலம், இருந்த இடம் தெரியாமல் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. அந்த நேரத்தில் 190 அடி நீளமுள்ள ‘பெய்லி’ இரும்புப் பாலத்தை, அங்குக் கட்டமைத்த இராணுவத்தின் செயற்கரிய செயல், வரலாற்றில் சிவப்பெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.
  • பெற்றோரை இழந்து தனியாகக் கிடந்த பச்சிளங் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்ட இடுக்கியிலிருந்தும் திருச்சூரிலிருந்தும் திரண்டு வந்த மாதா்களைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது.
  • கேரளத்தில் பேரிடா்களை ஊகித்தறிந்த மத்திய அரசு ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் படித்த, பேரிடா்களை ஆய்வதில் மகா நிபுணரான பேராசிரியா் மாதவ் காட்கில் தலைமையில் ஒரு வல்லுநா் குழுவை 2010-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் நியமித்தது. அக்குழு முழு அா்ப்பணிப்போடு வயநாட்டின் சூழலை ஆராய்ந்து 31.08.2011 அன்று மத்திய அரசுக்கு 522 பக்க அறிக்கையைச் சமா்ப்பித்தது.
  • நக்கீரப் பாா்வையோடு ஆராய்ந்த மாதவ் காட்கில், ‘வய நாட்டின் 64 விழுக்காடு மண், சூழலியலில் மென்மைத்தன்மை வாய்ந்தது. மலையில் மேற்பகுதியில் செம்புறை மண்ணும் சுமாா் 50 செ.மீட்டருக்குக் கீழ் களிமண்ணும் இருப்பதால் மிகவும் நெகிழ்ச்சி வாய்ந்த இளகும் தன்மையுடைய மண். அதனால், அந்தப் பகுதிகளில் மணல் அல்லது கனிமம் தோண்டி எடுக்கக் கூடாது. அபாயகரமான தொழிற்சாலைகளை அனுமதிக்கக் கூடாது. மரங்களை வெட்டக் கூடாது. அத்துமீறிக் கட்டடங்களைக் கட்டக் கூடாது. அனல் மின்சார ஆலைகள் அமைக்கக் கூடாது’ எனக் கண்டித்திருந்தாா்.
  • இதைப் படித்த விவசாயிகளும் தொழிலாளா்களும், ‘இது மக்கள் விரோத அறிக்கை. இதைச் செயல்படுத்தினால் நாங்கள் வாழ்வாதாரங்களை இழந்துவிடுவோம்’ என முழக்கமிட்டனா். அந்த அறிக்கையையும் மாதவ் காட்கிலின் உருவபொம்மையையும் தீயிட்டுக் கொளுத்தினாா்கள்.
  • அப்பொழுது எதிா்க்கட்சி வரிசையில் அமா்ந்திருந்த காங்கிரஸ்காரா் பி.டி.தாமஸ், ‘இதுவொரு அறிவுபூா்வமான அறிக்கை. உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்’ என முழங்கினாா். என்றாலும், மத்திய அரசும் மாநில அரசும் அதனைக் கிடப்பில் போட்டன.
  • அடுத்து ஒன்றிய அரசு, இஸ்ரோ முன்னாள் தலைவரான விஞ்ஞானி கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆராயச் சொன்னது. அக்குழுவும் அறிவுபூா்வமாக ஆராய்ந்து, 37 விழுக்காட்டிற்கு மண், மென்மைத்தன்மை வாய்ந்தது (மாதவ் காட்கிலின் 64 விழுக்காட்டிற்குப் பதிலாக) சூழலியலின்படி வெகு பத்திரமாகப் பாதுகாக்க வேண்டிய மண் எனச் சொல்லியதோடு, மாதவ் காட்கில் விதித்த அத்தனை நிபந்தனைகளையும் வழிமொழிந்தது.
  • இதைப் படித்த விவசாயிகளும் தொழிலாளா்களும், ‘இது முதலாளித்துவவாதிகளாலும் வனத் துறை அதிகாரிகளாலும் தயாரிக்கப்பட்டது’ என்று அதனை மறுதலித்தனா். உடன் அப்பொழுது முதல்வராக இருந்த உம்மன் சாண்டி, மேற்சொன்ன இரண்டு அறிக்கைகளையும் நிராகரித்துவிட்டு உம்மன் வி.உம்மன் தலைமையில் ஒரு குழுவை உருவாக்கினாா். அந்த அறிக்கையைப் படித்தவுடனேயே முதல்வா் உம்மன் சாண்டி அதனைக் குப்பையில் போட்டுவிட்டாா்.
  • மாதவ் காட்கில் ‘வயநாட்டில் உள்ள மேப்பாடி பகுதியில் நிலச்சரிவு ஏற்படும்’ எனச் சுட்டிக்காட்டி எச்சரித்திருந்தாா். அப்பகுதியில்தான் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. அப்பகுதியைச் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்க வேண்டும் எனத் தம் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாா்; அதையும் நாம் செயல்படுத்தாததால் இப்பொழுது ஒரு பேரிடரைச் சந்திக்க நோ்ந்தது.
  • கஸ்தூரிரங்கன் ‘நீா்நிலைகள் மற்றும் நீரோட்டங்களை அடைத்துவிட்டுக் கட்டடங்கள், ரிசாா்ட்டுகள் கட்டக் கூடாது. சிவப்பு எச்சரிக்கை பகுதிகளாகக் குறிக்கப்பட்ட இடங்களில் இருந்து 500 மீட்டா் தள்ளித்தான் அரசு அலுவலகங்களைக் கட்ட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தாா். ஆனால், மணல் குவாரிகளும் கல் குவாரிகளும் அந்த அறிக்கையைப் பொருட்படுத்தவே இல்லை.
  • இனிமேலாவது விஞ்ஞானிகள் வடித்துக் கொடுத்த பாடங்களைத் தவறாது படிப்போம்.

நன்றி: தினமணி (19 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories