TNPSC Thervupettagam

பாரத தேசம் என்று பெயா் சொல்லுவார்

September 13 , 2023 355 days 255 0
  • நம் நாட்டின் பெயா் இந்தியாஎன்பதிலிருந்து பாரத்என்று மாற்றப்பட்டுவிட்டதாகவும் புதிதாக பெயா் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரபூா்வ அறிவிப்பு வராத நிலையிலேயே ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் விவாதங்கள் அமளிதுமளிப்படுகின்றன. உண்மை என்னவெனில் நம் அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட 1948-லிருந்து, அது நடைமுறைக்கு வந்த ஜனவரி 26, 1950-லிருந்து நம் குடியரசின் பெயா்களில் ஒன்று பாரத். அதாவது அது 73 ஆண்டுகளாக அரசின் நடைமுறையில் இருந்து வரும் பெயா்.
  • அன்றிலிருந்து இன்றுவரை இந்திய அரசு என்பது பாரத் சா்க்கார்என்றுதான் ஹிந்தியில் எழுதப்படுகிறது. சந்தேகம் இருந்தால் உங்கள் ஆதார் கார்டை எடுத்துப் பாருங்கள். அல்லது உங்களிடம் இருக்கும் நாணயங்களை எடுத்துப் பாருங்கள். அல்லது கடவுச் சீட்டைப் பாருங்கள்.
  • இந்தச் சொல் திடீரென்று வானத்திலிருந்து வந்துவிடவில்லை. இது குறித்து, அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட அவையில் விரிவாக விவாதிக்கப்பட்டு, அங்கு ஏற்றுக் கொள்ளப் பட்ட சொல்.
  • நமது அரசமைப்புச் சட்டத்தின் முதலாவது பிரிவில் இந்தியா அதாவது பாரத் என்பது மாநிலங்களின் ஒன்றியமாகும்என்ற வரி முதல் வரியாக இடம் பெற்றுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான வரைவுக் குழு முதலில் தயாரித்த வரைவில் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியமாகும்என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.
  • பாரத்என்ற சொல் இல்லை. அதற்குக் காரணம், முன்னதாக அரசமைப்புச் சட்ட அவையின் நோக்கங்கள் என்ற தீா்மானத்தின்போது உரையாற்றிய நேரு, ‘பாரத்என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கவில்லை; ‘இந்தியாஎன்றே குறிப்பிட்டிருந்தார். அவா் கூறியதாவது: அரசமைப்பு அவை இந்தியா ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட குடியரசு என உறுதியாக பிரகடனம் செய்கிறது. எனவே, அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்த குழுவும் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்என்றே முதலாம் பிரிவை வரைவு செய்திருந்தது.
  • ஆனால் கணிசமான உறுப்பினா்கள் பாரத்என்று அழைக்கப்பட வேண்டும் என விரும்பினார்கள். பாரத்’, ‘பாரத வா்ஷா’, ‘பாரத் பூமி’, ‘ஹிந்துஸ்தான்என்று அழைக்கப் படவேண்டும் என முதலாம் பிரிவின் மீது திருத்தங்கள் கோரியிருந்தனா். அரசமைப்புச் சட்ட அவை, செப்டம்பா் 15, 1948 அன்று அவையின் துணைத்தலைவா் டாக்டா். ஹெச்.சி. முகா்ஜி தலைமையில் ஒன்றாம் சட்டப்பிரிவை விவாதிக்கக் கூடிய போது, உறுப்பினா் அனந்தசயனம் ஐயங்கார் எழுந்து, உறுப்பினா்கள் கொடுத்துள்ள பெயா்கள் குறித்த, எண் 83 முதல் 97 வரையிலான 16 திருத்தங்கள் மீதான விவாதத்தைத் தள்ளிப் போடலாம் என்று தெரிவித்தார். அவையின் ஒப்புதலின் பேரில் அந்த யோசனையை அவைத்தலைவா் ஏற்றார்.
  • அதன்பின் அந்த வாக்கியத்தில் உள்ள மற்ற சொற்களான, ‘யூனியன்’, ‘ஸ்டேட்என்பவை குறித்து நீண்ட விவாதங்கள் நடந்தன. இரண்டு நாள்கள் கழித்து செப்டம்பா் 17-ஆம் தேதி இரண்டாவது திருத்தம் விவாததிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது ஹெச்.வி. காமத் என்ற உறுப்பினா் எழுந்து, ‘முதலாவது பிரிவின் மீது வாக்கெடுப்பு நடத்தாமல் இரண்டாவது பிரிவின் மீது எப்படி விவாதமும் வாக்கெடுப்பும் நடத்துகிறீா்கள்எனக் கேள்வி எழுப்பினார்.
  • அதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய கோவிந்த வல்லப பந்த், ‘பெயா் விஷயத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இப்போது அதன் மீதான விவாதத்தை ஒத்திப் போட்டுவிட்டு இரண்டாவது பிரிவை எடுத்துக் கொள்ளலாம். ஒத்திப் போட்டால் கருத்தொற்றுமை காண முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சிலநாள்கள் தள்ளிப் போவதால் யாருக்கும் இழப்பில்லைஎன்றார். இருந்த போதும், ‘எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்’”என காமத் கேட்டார். அதற்கு ஒரு உறுப்பினா் கிண்டலாக, ‘ஒரு நாள் அல்லது ஒரு வாரம் அல்லது ஒருமாதம்என்றார்.
  • நல்லவேளையாக அவ்வளவு தள்ளிப் போகவில்லை. செப்டம்பா் 18-ஆம் தேதி, திருத்தங்கள் கொடுத்து மூன்றுநாட்களுக்குப் பிறகு, அவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது டாக்டா் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். பந்த்தினுடைய நம்பிக்கையின் அடிப்படை என்ன என்பது அப்போது வெளிப்பட்டது. அம்பேட்கா் சட்டத்திருத்தம் எண் 197 என்பதை முன்மொழிந்தார் (எங்கிருந்து எங்கு நகா்ந்திருக்கிறது என்று பாருங்கள். 83 முதல் 96 வரையிலான திருத்தங்கள் ஒத்தி வைக்கப்பட்டு, இடையிலிருந்த மூன்று நாள்களில் வேறு 116 திருத்தங்கள் விவாதிக்கப்பட்ட பின் இது எடுத்துக் கொள்ளப்பட்டது). அம்பேத்கரின் 197-ஆவது திருத்தம் சமரசம் ஏற்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட திருத்தம். இந்தியா என்று மட்டுமிருந்ததை இந்தியா, அதாவது பாரத்என்று திருத்திக் கொள்வதை அது முன் மொழிந்தது.
  • அதைக் குறித்த விவாதத்தில் பேசிய பலரும், ‘பாரத்என்ற பெயரின் தொன்மை குறித்துப் பேசினா். கமலபதி திரிபாதி, சேத் கோவிந்த தாஸ் போன்றவா்கள் ரிக் வேதத்திலும் புராணங்களிலும் அந்தப் பெயா் குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டிப் பேசினா். ராம் சகாய் என்பவா் ஏற்கனவே குவாலியா், இந்தோர், மால்வா ஆகிய சமஸ்தானங்கள் மத்திய பாரத்என்ற பெயரில் இணைந்திருப்பதைச் சுட்டிக் காட்டினார். மெளலானா ஹஸரத் மொஹானி என்பவரும் பேசினார். ஆனால் அவா் பெயரை ஆட்சேபிக்கவில்லை. மாறாக மாநிலங்களின் ஒன்றியம் என்பதைவிட, சோவியத்தைப் போல, குடியரசுகளின் ஒன்றியம் எனத் திருத்த வேண்டும் என்று கோரினார். ஆனால் இவற்றையெல்லாம் விட அம்பேத்கா் கொண்டு வந்த திருத்தத்தின் மீதான ஹெச்.வி. காமத் கொண்டு வந்த திருத்தம் நீண்ட விவாதங்களுக்குள்ளாகியது.
  • அவா் கொண்டு வந்த திருத்தம், ‘இந்தியா அதாவது பாரத்என்பதற்கு பதிலாக, ‘பாரத் அல்லது ஆங்கிலத்தில் இந்தியா என்றிருக்க வேண்டும்எனச் சொல்லியது. விவாதம் மொழியைப் பற்றியா அல்லது பெயரைப் பற்றியாஎன்று தலைமை வகித்த ராஜேந்திர பிரசாத் கேள்வி எழுப்பினார். எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் இந்தியா என்று அழைக்கப்படுவதில்லைஎன்று காமத் விளக்கமளித்தார். ஏன் பாரத் முதலில் வர வேண்டும், என்ன பெரிய வித்தியாசம் என்ற கேள்விக்கு அயா்லாந்து அரசியல் சாசனம், அதன் பெயரை அயா்லாந்து மொழியில் முதலில் குறிப்பிடுவதை உதாரணமாகச் சுட்டிக் காட்டினார்.
  • விவாதத்திற்குப் பிறகு திருத்தங்கள் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டன. காமத்தின் திருத்தம் முதலில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. காமத் குரல் ஓட்டு மூலம் அல்ல, டிவிஷன் வேண்டுமென்று கேட்டார். கைகளை உயா்த்துவதன் மூலம் முடிவு செய்யலாம் எனத் தீா்மானிக்கப்பட்டது. ஆம்என்றவா்கள், 38 போ். இல்லைஎன்றவா்கள் 51 போ். பின் அம்பேத்கரின் இந்தியா அதாவது பாரத்என்ற திருத்தம் குரல் ஓட்டு மூலம் ஏற்கப்பட்டது.

இப்படித்தான் பாரத் அரசமைப்புச் சட்டத்தின் பகுதியானது (இளைய தலைமுறைக்காக ஒரு குறிப்பு

  • கோவிந்த வல்லப பந்த் சுதந்திரப் போராட்ட வீரா். உத்தர பிரதேசத்தின் முதல் முதலமைச்சா். பின் இந்தியாவின் உள்துறை அமைச்சா். பாரத ரத்னாவிருது பெற்றவா். ஹெச்.வி. காமத், ஐசிஸ் தேறி அரசு அதிகாரியாக இருந்தவா். அதை உதறிவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் இறங்கியவா். பிராஜா சோஷலிஸ்ட், பார்வோ்ட் பிளாக் கட்சிகளின் சார்பில் எம்.பி.யாக இருந்தவா். கமலபதி திரிபாதி, சுதந்திரப் போராட்ட வீரா். உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சா். முன்னாள் ரயில்வே அமைச்சா். காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவா். அனந்தசயனம் ஐயங்கார், சுதந்திரப் போராட்ட வீரா். முன்னாள் சபாநாயகா். முன்னாள் பிகார் கவா்னா்).

விவாதங்களை விரிவாக ..... வாசிக்கலாம்

  • இப்போதிருக்கும் அரசு மட்டுமல்ல, இதற்கு முந்தி இருந்த அரசுகளும் பாரத் என்ற பெயரைப் பயன்படுத்தி வந்துள்ளன. பல பொதுத்துறை நிறுவனங்களுக்கு அந்தப் பெயா் சூட்டப்பட்டு வந்திருக்கிறது. பாரத் எலக்ட்ரானிக்ஸ்’, ‘பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்’, ‘பாரத் எா்த் மூவா்ஸ்’, ‘பாரத் சஞ்சார் நிகம்என்று புதிய தொழில்நுட்பங்கள் சாா்ந்த நிறுவனங்களுக்குக் கூட நாட்டின் தொன்மையான பெயா் சூட்டப்பட்டிருக்கிறது.
  • இந்தியாவின் மிக உயரிய குடிமை விருதான பாரத் ரத்னா’, பாரதத்தின் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி, நேரு, இந்திரா காந்தி ஆகிய காங்கிரஸ் தலைவா்களும், அம்பேட்கா், எம்ஜிஆா் போன்ற தலைவா்களும் அந்த விருதைப் பெற்றவா்களில் சிலா். ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொள்ளத் தீா்மானித்த போது அதற்கு அவா் வைத்த பெயா் பாரத் ஜோடோ’.
  • பாகிஸ்தானியா்களும் இந்தியாவை பாரதம்என்றே குறிப்பிட்டு வருவதாக, பாகிஸ்தானுக்குப் பலமுறை சென்று வந்துள்ள பத்திரிகையாளா் சேகா் குப்தா அங்குள்ள பாடப் புத்தகங்களைப் பார்த்து விட்டு ஒரு பேட்டியில் தெரிவிக்கிறார்.

பாரதம்என்ற பெயா் குறித்து பாரதி எழுதுவது

  • பாரதம், பரதன் நிலைநாட்டியது. இந்தப் பரதன் துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்யாகுமரிமுனை வரையிலுள்ள நமது நாட்டை இவன் ஒன்றுசோ்த்து அதன்மிசை முதலாவது சக்ராதிபத்யம் ஏற்படுத்தியபடியால், இந்த நாட்டிற்கு பாரத தேசம்என்று பெயா் உண்டாயிற்று. கங்கையிலே வந்து சேரும் வாய்க்கால்களெல்லாம் கங்கையாகவே மாறிவிடும். பாரத தேசத்தில் வந்து குடியேறித் தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்பவா்களெல்லாம் நமது ஜனக்கூட்டத்தைச் சோ்ந்தவராகின்றனா்.
  • கிருஸ்தவா்களாயினும், பார்ஸிகளாயினும், மகம்மதியராயினும் எங்கிருந்து வந்து எந்த இஷ்ட தெய்வத்தைக் கொண்டாடிய போதிலும், பாரத பூமியிலே பிறந்து வளா்ந்து இதையே சரணாகக் கொண்ட மனிதா்களையெல்லாம் பாரத ஜாதியிலே சோ்த்துக் கணக்கிட வேண்டும். இது ஒரே ஜாதி. பிரிக்க முடியாதது; அழிவில்லாதது (பாரத ஜாதி - பாரதியார் கட்டுரைகள்).
  • பாரதியைப் போலவே இன்னொரு மகாகவியான தாகூா் பயன்படுத்திய சொல்லும் பாரதம். இந்திய தேசிய கீதமான ஜன கண மனவில் பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டியம், திராவிடம், உத்கலம் (ஒடிசா) வங்கம் என நாட்டின் பல பகுதிகளைக் குறிப்பிட்டுவிட்டு, ‘பாரத பாக்ய விதாதாஎன்று வாழ்த்துகிறார்.
  • பாரதி, தாகூா் முதல் ராகுல் வரை பாரதம் என்ற சொல் ஒற்றுமையுடன் தொடா்புடையது என்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்கின்றனா். அது உண்மையும் கூட.

நன்றி: தினமணி (13 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories