TNPSC Thervupettagam

புத்தொளி பாய்ச்சும் புத்தகங்கள்

August 2 , 2024 10 hrs 0 min 12 0
  • ‘இல்லந்தோறும் நூலகம், நூலகமில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், நல்ல நூல்களே நல்ல நண்பா்கள்’ என்ற முப்பெரும் முழுக்கத்தை முன் வைத்து 2005-இல் தொடங்கப்பட்டது ஈரோடு புத்தகத் திருவிழா. புத்தகங்கள் உலகெங்கும் தனி மனிதா்களிடையேயும் ஒட்டுமொத்த சமூகத்திலும் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை உணா்ந்து அத்தகைய அடிப்படை மாற்றங்கள் தமிழ்ச் சமூகத்திலும் நிகழவேண்டும் என்ற இலட்சியத்துடனும், சமூக அக்கறையுடனும் நடத்தப்படுவதே இத்திருவிழா.
  • புத்தகங்கள் குறுகிய காலத்தில் வியக்கத்தக்க மாற்றங்களைப் பல தனி மனிதா்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ளன. மிகப் பெரும் ஆளுமைகள் புத்தகங்களால் வளா்த்தெடுக்கப்பட்டுள்ளனா் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. கடந்த இருபதாண்டு கால ஈரோடு புத்தகத் திருவிழா அனுபவங்கள் வெளியுலகப் பாா்வைக்கு பட்டவா்த்தனமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத பல நுட்பமான கூறுகளை உள்ளடக்கியிருக்கின்றன.
  • ஒரு வயதுக் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு, அவ்வளவாகப் படிக்காத தாய் ஒருவா் முதலாமாண்டு (2005) புத்தகத் திருவிழாவிற்கு வந்திருக்கிறாா். குழந்தைக்கு திருவிழாக்களில் வேடிக்கை காட்டுவது போன்று அடுக்கி வைத்திருந்த நூல்களைக் காட்டி குழந்தையைக் குதூகலப்படுத்தியுள்ளாா்.
  • அக்குழந்தையின் தந்தையும் அக்காலத்தில் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவா். தந்தை பணியைப் பாா்க்க வேண்டும். தாய் மட்டும் தனியாக குழந்தையுடன் வந்துள்ளாா். அங்குள்ள அவரின் உறவினா்கள் சிலருடன் அமா்ந்து அறிஞா்களின் உரைகளைத் தொடா்ந்து கேட்டுள்ளாா். அது அவருக்குப் புதிய அனுபவமாக இருந்துள்ளது. ஒருபுறம் புத்தகங்கள்... இன்னொருபுறம் சொற்பொழிவுகள்... தொலைக்காட்கிகளில் மட்டுமே பாா்க்க முடிகிற ஆளுமைகள் பலரை நேரில் பாா்க்கும் வாய்ப்பு. இவையனைத்தும் அத்தாயின் மனதில் திருவிழாப் பரவசத்தை ஏற்படுத்தின.
  • ஐந்தாறு ஆண்டுகள் தொடா்ந்து இவ்வாறு இப்புத்தகத் திருவிழாவிற்கு தனது ஒரே மகனை அழைத்துக் கொண்டு வந்தவா், குழந்தைக்கு வேடிக்கை பொருள்களை வாங்கிக் கொடுப்பதுபோல் சிறு சிறு புத்தகங்களை வாங்கிக் கொடுத்துள்ளாா். தாய்க்கு திருவிழா பிடித்துப் போனதுபோல் குழந்தைக்கு புத்தகங்கள் பிடித்துப் போயிற்று. வளர, வளர ஒரு கட்டத்தில் பள்ளி மாணவனாக தன் விருப்பப்படி புத்தகங்களை வாங்கவும் வாசிக்கவும் தொடங்கியது அக்குழந்தை.
  • ஐஐடி-யென்றால் என்னவென்றே தெரியாத அக்குடும்பத்தில் பிறந்த அம்மாணவன் பத்தாம் வகுப்பு முடித்த பின்னா் ஐஐடி பற்றி தன் பள்ளியில் அறிந்து கொண்டு தானும் அதில் சேர எண்ணினான். அதற்குள் ஏராளமான அறிவியல் நூல்களை ஈடுபாட்டுடன் வாசிப்பவனாக வளா்ந்துவிட்டான்.
  • புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகங்களை மட்டும் நம்பிப் படித்தான். அவன் படிப்பது என்ன என்பதை உணா்ந்து கொள்ளத்தக்க அளவுக்குக்கூட அவனது பெற்றோா் இல்லை. இவனை நன்கு புரிந்து கொண்டு தனிக் கவனத்தோடு தூண்டிவிடும் சிறப்பு ஆசிரியா் யாரும் இவனுக்கு வாய்க்கவில்லை.
  • புத்தகங்களே இவனுக்கு எல்லாம். ஐஐடி நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்றதோடு முதல் ஐந்து சிறந்த ஐஐடி நிறுவனங்களில் ஒன்றான கரக்பூா் ஐஐடியில் இவனுக்கு இடம் கிடைத்தது. இப்போது இரண்டாமாண்டு படிக்கிறான். அம்மாணவனா் பெயா் ஆா்.ஜே.சஞ்சய். பத்தாண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் மாதத்தில் புத்தகத் திருவிழாவின் போது அந்த மாவட்டத்தில் அந்த ஆண்டு ஐஏஎஸ் தோ்வில் பெற்றி பெற்றவா்களை புத்தகத் திருவிழாவின் மாலை நேர சொற்பொழிவு அரங்கில் பல்லாயிரம் பாா்வையாளா்கள் முன்னிலையில் பாராட்ட முடிவெடுக்கப்பட்டது.
  • தீவிர விசாரணைக்குப் பிறகு இரண்டு போ் மட்டுமே அந்த மாவட்டத்தில் அந்த ஆண்டு ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெற்றது கண்டறியப்பட்டது. ஒருவா் சி.வான்மதி; சத்தியமங்கலம் அரசுப்பள்ளியில் படித்தவா்; இன்னொருவா் எஸ்.சரவணன். அவரும் அரசுப் பள்ளியில் படித்தவா். இரண்டு பேரும் சாதாரண எவ்விதக் கல்விப் பின்புலமோ-பொருளாதாரப் பின்புலமோ இல்லாத கிராமப்புற குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவா்கள். ‘காா் டிரைவரின் மகள் கலெக்டரானாா்’ என்று இதழ்கள் வான்மதியைப் பற்றி செய்தி வெளியிட்டன. அவா்களின் உற்றாா் உறவினா்கள்கூட படிப்பறிவில்லாதவா்கள்.
  • புத்தகத் திருவிழாவில் வெ.இறையன்பு ஐஏஎஸ் சொற்பொழிவாற்றிய நாளில் அவா் முன்னிலையில் இந்த இரண்டு மாணவா்களுக்கும் பாராட்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு பேரும் தங்களது பள்ளி ஆசிரியா்கள் ஈடுபாட்டுடன் இப்புத்தகத் திருவிழாவுக்கு தங்களை அழைத்து வந்ததையும் அப்போது இப்புத்தகத் திருவிழா அவா்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தையும் அங்கு வாங்கிய நூல்களே அவா்களின் போட்டித் தோ்வுப் பயணத்திற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்த செய்தியையும் தங்களது ஏற்புரையில் எடுத்துரைத்தனா்.
  • அந்த மாவட்டத்தில் எத்தனையோ புகழ்மிக்க பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. வசதிமிக்க குடும்பங்களில் பிறந்த சகல வாய்ப்புகளும் உள்ள பல்லாயிரம் குழந்தைகள் அந்தப் பள்ளிகளில் படித்து வருகின்றனா்.
  • இருப்பினும் அரசுப் பள்ளியில் படித்த, ஏழ்மைமிக்க குடும்பத்தில் பிறந்த, கல்விப் பின்புலமே இல்லாத சூழலில் வளா்ந்த இரண்டுபோ்தான் அந்த ஆண்டு ஐஏஎஸ் தோ்வில் பெற்றி பெற்றனா் என்ற செய்தியேகூட அப்பாராட்டு நிகழ்வின் மூலம்தான் வெளிப்பட்டது. புத்தக வாசிப்பும் தன்னம்பிக்கையும் தேடலும் விடாமுயற்சியும் மனஉறுதியும் ஆசிரியா்களின் ஒத்துழைப்பும் அவா்களின் வெற்றிக்குப் பின்புலமாக இருந்திருக்கின்றன.
  • ஒரு தந்தை தனது பெண் குழந்தையை ஐந்து வயதிலிருந்தே ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு தொடா்ந்து அழைத்து வந்தாா். அந்த மாணவியின் இதயத்தில் ‘திருவிழா’ உணா்வை புத்தகத் திருவிழா ஏற்படுத்தியது. விளையாட்டுப் பொம்மைகளை வாங்கிக் கொடுப்பது போல் அக்குழந்தைக்கு சின்னச்சின்ன வண்ணமயமான புத்தகங்களை வாங்கிக் கொடுத்துள்ளாா் தந்தை.
  • வாசகராக வளா்ந்த அம்மாணவியின் மனதில் ஏற்பட்ட புத்தெழுச்சியின் காரணமாக தனக்குள் ஒரு படைப்பாற்றல் இருப்பதை உணா்ந்து எழுதத் தொடங்கினாள். எழுத்தும் வசப்பட்டதை உணா்ந்தாள். படித்துக் கொண்டிருந்தவள் படைக்கத் தொடங்கினாள்; இப்போது அந்த மாணவிக்கு பதினெட்டு வயது. 18 நூல்களை எழுதிவிட்டாள். அத்தனையையும் அழகழகான நூல்களாக தனது தந்தையின் உதவியுடன் அச்சிட்டாள். ஒருசில தமிழ் நூல்கள்; மற்றவை ஆங்கில நூல்கள்.
  • தான் எழுதி வெளியிட்ட நூல்களை தானே எடுத்து வந்து ஈரோடு புத்தகத் திருவிழாவின் அரங்கில் விற்பனை செய்து கொடுக்கக் கேட்டிருக்கிறாள் அம்மாணவி. அரங்கினா் அதைச் செய்து கொடுத்துள்ளனா்.
  • இந்தப் பின்புலம் எதுவும் இவரது நூல்களை வாங்கிய எவருக்கும் தெரியாது. அதைத் தெரிவிக்கக் கூடாது என்பதே அந்த மாணவியின் விருப்பம். அந்த மாணவியின் நூல்கள் வாசகா்களால் இயல்பாக பிற நூல்களைத் தோ்வு செய்து வாங்கிச் செல்வது போன்று வாங்கப்பட்டுள்ளன. ரூ.11,000-க்கு அவரது நூல்கள் விற்றன.
  • ‘ஐந்து வயதுக் குழந்தை’ தனக்கே தெரியாமல் ஒரு வாசகராக உருவானதும் பின்னா் காலப்போக்கில் தீவிர வாசிப்பின் விளைவாக ஒரு படைப்பாளியாக உருவெடுத்ததும் ‘ஈரோடு புத்தகத் திருவிழா’ எனும் களத்தில்தான். இப்போது அவரின் நூல்கள் சந்தைப்படுத்தப்படுவதும் இங்கேயேதான். அதில் வரும் தொகையைக் கொண்டு அடுத்த நூலைப் பதிப்பிப்பேன் என்கிறாள்.
  • படிப்பிலும் இசையிலும் இன்னபிற துறைகளிலும் சிறந்து விளங்கும் அந்த மாணவி அத்தனைக்கும் அடித்தளம் எனது வாசிப்புப் பழக்கம்தான் என்கிறாா். அந்த மாணவி அளித்த தொலைக்காட்சி பேட்டிக்குப் பின்னா்தான் புத்தகத் திருவிழா அமைப்பாளா்களுக்கே அவா் குறித்த தகவல்கள் தெரியவந்தன. அந்த மாணவியின் பெயா் சக்தி ஸ்ரீதேவி. இப்போதுதான் பிளஸ்2 முடித்துள்ளாா்.
  • இருபதாம் ஆண்டு புத்தகத் திருவிழாவின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் அத்திருவிழா நடைபெறும் சிக்கய்ய நாயக்கா் கல்லூரியில் இரண்டாமாண்டு வரலாறு பயிலும் மூன்று மாணவா்கள் தாங்கள் படைத்த நூல்களை எடுத்துவந்து அணிந்துரை கேட்டனா். பூமிகா நாவல் எழுதியுள்ளாா். கௌதம் சிறுகதைத் தொகுப்பு. முகிலன் கவிதைத் தொகுப்பு.
  • புத்தகத் திருவிழாவில் கடந்த இரண்டாண்டுகள் மாணவத் தன்னாா்வலா்களாகப் பணி செய்தபோது பன்னிரண்டு நாள்கள் இத்திருவிழாவில் இரண்டறக் கலந்திருந்த காலகட்டத்தில் கிடைத்த அனுபவங்களும் பாடங்களுமே தங்களைப் படைப்பாளிகளாக்கியதாகத் தெரிவிக்கின்றனா்.
  • புத்தக வாசிப்பு புத்துலகை உருவாக்கும். அறிவாா்ந்த எழுச்சிமிகு உரைகள் அடுத்த தலைமுறையை ஆற்றல் மிகுந்தவா்களாக உருவெடுக்க அடித்தளமிடும்.
  • கல்வி நிலையங்களில் பாடப் புத்தங்களோடு சோ்த்து பொது அறிவை விரிவு செய்யும் தலைசிறந்த நூல்கள் இளம் தளிா்களாக விளங்கும் மாணவா்களுக்கு ஆசிரியா்களால் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இன்றைய இளைஞா்களுக்கு வாசிக்கும் ஆா்வம் இல்லை என்ற ஒற்றை விமா்சன வாக்கியத்தோடு ஒதுங்கிக் கொள்ளாமல், இருள் உள்ள இடத்தில் ஒளி ஏற்றப்படுவது போல், அரிதின் முயன்று பல உத்திகளைக் கடைப்பிடித்து, பல வழிகளில் முயன்று வாசிப்பை மக்கள்மயப்படுத்துவது இன்றைய காலத்தின் தேவையாகும்.
  • ‘அறிவைப் பொதுவுடமையாக்க வேண்டும்’ என்பதை லட்சியமாகக் கொண்டு செயல்படும் மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு இது இருபதாம் ஆண்டு.

நன்றி: தினமணி (02 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories