பெண்களின் ஊதியமில்லா உழைப்பு
- தினசரி வேலைச் சுமைக்கு இடையே ஓய்வு, ஊடகங்கள், விளையாட்டு போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் ஆண்களைவிடப் பெண்கள் 21 நிமிடங்கள் குறைவாகச் செலவிடுவதாகவும், பல நேரம் இந்த இடைவெளி கூடுதலாக இருப்பதாகவும் இந்தியாவின் தேசியப் புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டிருக்கும் ‘நேரப் பயன்பாட்டுக் கணக்கெடுப்பு - 2024’ அறிக்கை தெரிவித்துள்ளது.
- இவ்வாறு ஓய்வு எடுத்துக்கொள்ளாமல் ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் பெண்கள் ஈடுபடுவது, அவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
- பெண்கள், ஒவ்வொரு நாளும் குடும்ப உறுப்பினர்களுக்காகச் செய்கிற ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளுடன் ஒப்பிட்டால், செய்திகளை அறிந்துகொள்வதற்குக் குறைவான நேரத்தையே செலவிடுகிறார்கள் என்கின்றன, இந்தப் புள்ளிவிவரங்கள். வருமானம் இல்லாத வேலைகளில் பெண்கள் 289 நிமிடங்கள் செலவிட்டால், ஆண்கள் 88 நிமிடங்கள் மட்டுமே செலவிடுவதாகத் தெரியவந்திருக்கிறது.
- ஒரு நாளில், சராசரியாக 289 நிமிடங்கள் என 5 மணி நேரத்தை வீட்டு வேலைகளுக்காகப் பெண்கள் செலவிடுகிறார்கள். இந்த அளவு ஆண்களைவிடச் சுமார் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் அதிகம் என்று கணக்கெடுப்பு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அடுத்ததாகக் குழந்தைகள், முதியவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வதில், ஆண்களைவிடக் கூடுதலாக ஒரு மணி நேரத்தைப் பெண்கள் செலவிடுகிறார்கள்.
குடும்பத்தைப் பராமரிக்கப் பெண்கள் 137:
- நிமிடங்கள் செலவிட்டால், ஆண்கள் 75 நிமிடத்தை மட்டுமே செலவிடுகின்றனர். ஆண் - பெண் இடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகள் பெண்களுக்கான ஓய்வு நேரத்தை மறுப்பதுடன், ஊதியம் பெறும் வேலையில் அவர்கள் நுழைவதற்கான வாய்ப்புகளையும் தடுக்கின்றன. தொழிலாளர் பங்களிப்பு விகிதம் இந்தியாவில் வேலைவாய்ப்பு - வேலையின்மையை அளவிடும் தேசியப் புள்ளிவிவர அலுவலகம் நடத்திய காலமுறை அடிப்படையிலான தொழிலாளர் படைக் கணக்கெடுப்புகள் (PLFS), 2016 - 2017 காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது, 2023-24இல் பெண்கள் அதிக அளவில் பணி அமர்த்தப்பட்டதைக் காட்டுகின்றன. அந்த வகையில் பெண்களுக்கான தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 2017-18 இல் 22 சதவீதத்தில் இருந்து
- 2023-24இல் 40.3 சதவீதமாக இரட்டிப்பாகியுள்ளது; ஆனால் இந்த வளர்ச்சியானது, கிராமங்களில் பெண்கள் சுயதொழிலில் அதிக அளவில் ஈடுபட்டதன் மூலம் நிகழ்ந்ததாகப் பகுப்பாய்வு முடிவுகள் விளக்குகின்றன. கரோனா காலத்தில் நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பித்தபோது, பெரும்பாலான பெண்கள் குறைந்த ஊதியம் தருகின்ற வேலைகளில் சிக்கிக்கொண்டனர்.
- பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள், மன அழுத்தம் உள்ளிட்டவை பணியிலிருந்து விலகுவதற்கான சூழலை உண்டாக்குவதாகவும் பெண்ணுரிமைச் செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணத்துக்கு, தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, இந்தியாவில் 2018 முதல் ஒவ்வோர் ஆண்டும் பணியிடத்தில் 400க்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன; ஆண்டுக்குச் சராசரியாக 445 வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஊதியத்தில் பாகுபாடு:
- ஒரு நாளைக்குத் தோராயமாக 1.9 டாலர் (ரூ.165) ஊதியம் பெறுவதன் மூலம் வறுமையைத் தவிர்க்கலாம் எனச் சர்வதேச வருமானத் தர நிர்ணய அமைப்பு குறிப்பிடுகிறது. அந்த வகையில், 165 ரூபாய்க்குக் கீழே வருமானம் ஈட்டுபவர்கள் ‘வேலை செய்யும் ஏழைகள்’ என வரையறுக்கப்படுகிறார்கள். அந்த வகையில், 2017 - 2022இல் வேலை செய்யும் ஆண் - பெண் ஏழைகளின் பங்களிப்பு சதவீதத்தைக் காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு வெளியிட்டது.
- இந்த ஆறு வருடங்களில் வேலை செய்யும் ஏழைப் பெண்களின் பங்களிப்பு 56.7% முதல் 64.3% வரை உள்ளது. இது ஆண்களின் எண்ணிக்கையைவிட 14.8% முதல் 18.2% வரை அதிகம். ஆனால், வேலை செய்யும் ஏழைப் பெண்கள், ஆண்களைவிடக் குறைவான ஊதியத்தையே பெறுகிறார்கள் என்பது இதில் குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக, இக்காலக்கட்டத்தில் ஏழைப் பெண்களின் மாத வருமானம் ரூ.2,051 முதல் ரூ.2,565 வரை இருந்த நிலையில், ஏழை ஆண்களின் மாத வருமானம் ரூ.9,030 முதல் ரூ.12,916 ஆக இருந்தது.
மன அழுத்தம் - ஆய்வுகள்:
- வேலையைப் பகிர்ந்துகொள்வதில் நிலவும் பாகுபாடு, ஊதியம் இல்லாத வேலை ஆகியவற்றால் பெண்கள் மன அழுத்தத்துக்குத் தள்ளப்படுவதாக உலகளாவிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீண்ட காலத்துக்கு நீடிக்கும் மன அழுத்தமானது கார்டிசோல் ஹார்மோனின் அளவை அதிகரித்து, மனநல ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது; போதிய ஓய்வு, சுய ஆரோக்கியத்தைப் பேணாமல் இருப்பது, பதற்றம், மனச்சோர்வை அதிகரிப்பதாக அமெரிக்கா, ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
- ஊதியம் இல்லாத, குறைவான வருமானத்தைப் பெறும் இளம் பெண்கள் பலரும் ஆண்களைவிட அதிக அளவு மன அழுத்தத்துக்குத் தள்ளப்படுவதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், ஊதியம் இல்லாத வேலையானது, பெண்களின் அறிவாற்றல் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- தென் கொரியாவில் 2006 - 2018 காலக்கட்டத்தில் முழு நேர இல்லத்தரசிகள் - வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒப்பீட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இல்லத்தரசிகள் - ஊதியத்துக்கு வேலை செய்யும் பெண்களைவிட ஐந்து மடங்கு அதிக அறிவாற்றல் குறைபாட்டை எதிர்கொண்டதை அந்த ஆய்வு எடுத்துக்காட்டியது.
அதிகாரமளித்தல்:
- நாட்டின் பொருளாதாரப் பங்களிப்பில் வேலை வாய்ப்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆனால், குடும்பச் சூழல்களில் பராமரிப்புப் பணிகளை அதிக அளவில் மேற்கொள்ளும் பெண்கள், இதில் பங்குகொள்ள முடியாமல் தவிர்க்கப்படுகிறார்கள். இதனால் சமூகம் - குடும்பம் - குழந்தை பெற்றுக்கொள்வது போன்ற நெருக்கடிகளில் சிக்கிக்கொள்ளும் பெண்கள், வேலைக்கு ஏற்ற வருமானத்தையும், ஓய்வு நேரத்தையும் இழக்கிறார்கள் எனச் சமூகச் செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
- ஊதியம் இல்லாத பணிகளில் ஈடுபடும் பெண்கள் தங்களுக்கான அதிகாரத்தை இழப்பதுடன், கர்ப்பக் கால இறப்பு, குழந்தைப் பருவக் கர்ப்பம், கல்வியறிவின்மை ஆகியவற்றாலும் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் எதிர்கொள்ளும் சமூக - குடும்ப இடர்ப்பாடுகளைத் தவிர்க்கும்பட்சத்தில், வேலைவாய்ப்பில் ஆண்களுக்கு ஈடாகப் பெண்களுக்கும் வாய்ப்பளிக்கும்போது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களாலும் அதிக அளவு பங்களிப்பை அளிக்க முடியும் எனப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் மூலம், மறைக்கப்படும் பெண்களின் உழைப்பும் சமூகத்தில் புலப்படத் தொடங்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (12 – 03 – 2025)