TNPSC Thervupettagam

மன்னார் கடலில் இன்னொரு பேரிடர்?

March 12 , 2025 2 days 67 0

மன்னார் கடலில் இன்னொரு பேரிடர்?

  • பெட்ரோலிய, இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம், புதைபடிவ எரிபொருள் தொகுதிகளின் திறந்தநிலை உரிமம் வழங்குவதற்கான பத்தாவது சுற்று ஏலத்தை (OALP-BID) பிப்ரவரி 2025இல் அறிவித்துள்ளது. இந்தச் சுற்றில், மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தின் 9,990.96 சதுர கி.மீ. பரப்பு உள்ளிட்ட 25 ஆழ்கடல் தொகுதிகளின் (1,91,986 ச.கி.மீ. கடற்பரப்பு) ஆய்வு உரிமத்துக்கான ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டில் காவிரிப் படுகையை ஒட்டிய 8,108 ச.கி.மீ. பரப்பிலும், இந்தியப் பெருங்​கடலில் குமரி​முனையைச் சூழ்ந்து மூன்று பகுதி​களில் 27,154 ச.கி.மீ. பரப்பிலும் ஹைட்ரோ​கார்பன் வளங்களை ஆய்வு செய்யும் திட்டத்​துக்கு ஏலம் அறிவிக்​கப்​பட்டது.
  • மாநிலம் தழுவிய எதிர்ப்பின் காரணமாக அது நிறுத்​திவைக்​கப்​பட்​டுள்ள நிலையில், இப்போது இந்திய முற்றுரிமைக் கடற்பரப்பில் ஏறத்தாழ 10% பரப்பில் துரப்பண ஏலம் அறிவிக்​கப்​பட்​டுள்ளது. மன்னார் கடலில் எண்ணெய்த் துரப்பணக் கிணறுகளை அனுமதிப்​ப​தற்கு முன்னால், அந்தக் கடலின் சூழலியல் தன்மை, அதன் வரலாற்றுப் பயன்பாடு, அதன் அருகிலுள்ள கடல்களின் தன்மை என அனைத்தையும் புரிந்து​கொள்வது அவசியம்.

மன்னார் கடலுயிர்க் கோளம்:

  • கடலடியில் துரப்பணம் என்பது, ஊர்ப்பு​றத்தில் மனை வாங்கி வீடு கட்டிக் குடியேறுவது போன்றதல்ல. கடல் என்பது நகரும் பெருநீர்த்திரள். கடலாறுகள் என்கிற பெருங்கடல் நீரோட்​டங்​களும், கரைதழுவிய நெடுங்கரை நீரோட்​டங்​களும் கடலின் அடித்​தரை​யிலும் கடலிலும் பெரிய மாற்றங்களை நிகழ்த்​திக்​கொண்டே இருக்​கின்றன. 1989இல் மன்னார் கடலுயிர்க் கோளக் காப்பகத்தை மத்திய அரசு அறிவித்தது.
  • மன்னார் குடா 129 மீனவக் கிராமங்​களின் வாழ்வாதார நம்பிக்கை; பவளத்​திட்டுகள், கடல் புல் படுகைகள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், சேற்றுப் படுகைகள், தீவுகள், காடுகள் உள்ளிட்ட அரிய சூழலியல் பகுதி. 500 வகை மீன் இனங்கள், 103 வகை பவளத்​திட்டுகள், 100 வகை முட்தோலிகள் (echinoderms), 100 வகை மெல்லுடலிகள் (molluscs), 100க்கு மேற்பட்ட கடல்பாசி​யினங்கள் உள்ளிட்ட 3,600 உயிரின வகைகளோடு, உலகின் ஐந்தாவது பெரிய கடல்வாழ் பல்லுயிர் உய்விடமாக அங்கீகரிக்​கப்​பட்​டுள்ளது.
  • 10,500 ச.கி.மீ. பரப்பைக் கொண்ட இந்தக் காப்பகம் ராமநாத​புரம், தூத்துக்குடி மாவட்டக் கடற்கரைகளை ஒட்டிய 21 தீவுகள், பவளத்​திட்டுகளை உள்ளடக்கிய 560 ச.கி.மீ. பரப்பு பல்வேறு உயிரினங்​களைப் பாதுகாப்​ப​தற்கான மன்னார் தேசியப் பூங்கா​வுக்கு உட்பட்டது. மன்னார் கடலின் செழிப்பான மீன்வளம் இதன் தனித்துவமான நிலவியல், நீரியல் கூறுகளாலும், உயிர்ப்​பன்மைச் செழுமை​யி​னாலும் உருவான​தாகும்.
  • ஒரு காலத்தில் தூத்துக்​குடி, வேம்பார், ராமேஸ்வரம் கடல் பகுதி​களில் முத்து, சங்குக் குளித்தல் இதன் காரணமாகவே செழித்​திருந்தது. இயல்பாகவே ஆழம் குறைந்த இப்பகு​தியில் 2004 சுனாமி 40 மில்லியன் டன் டைட்டானியம் உள்ளிட்ட மணல், சேறு சகதியைக் கொணர்ந்து ஆழத்தை மேலும் குறைத்​திருந்தது. பவளத்​திட்டு​களில் 36% பரப்பை சுனாமி சிதைத்து​விட்டது.
  • ஆதம் பாலமும் பவளத்​திட்டு​களும்தான் ராமநாத​புரம், தூத்துக்​குடிக் கடற்கரைகளைச் சுனாமியி​லிருந்து பாதுகாத்தன என்கிற பெரிய உண்மையைப் புறக்​கணித்து, மன்னார் மென்சூழலியல் பரப்பின் குறுக்கே 2005இல் சேது கால்வாய்க்காகத் தோண்டப்படுவது தொடங்​கியது. 2,000 கோடி ரூபாயைக் கடலில் கொட்டிய பிறகு, திட்டம் பாதியில் கைவிடப்​பட்டது. அதனால் ஏற்பட்ட சூழலியல் காயம் இன்னும் ஆறவில்லை.

ஆவுளியா காப்பகப் பகுதி:

  • வடக்கே கோடியக்கரை தொடங்கி, தெற்கே தனுஷ்கோடி வரையுள்ள கடற்கரையை ஒட்டி, பாம்பன் கால்வாய் வழியாக மன்னார் குடாவுடன் இணைக்​கப்​பட்​டிருக்கிற பாக் குடாக்கடல் மன்னார் குடாவுக்கு இணையான மீன்வள முக்கியத்துவம் கொண்டது. இக்கடல் சதுப்புகள், கடற்புல் படுகைகள், பவளத்​திட்டுகள், அலையாத்திக் காடுகள் என்கிற நான்கு வகைச் சூழலியல் கட்டமைவு​களின் அற்புதமான கலவை. தஞ்சாவூர் - புதுக்​கோட்டை கரைக்கடல் பகுதி​களில் 12,250 ஹெக்டேர் பரப்பில் கடற்புல் படுகைகள் உள்ளன.
  • திருவாரூர், தஞ்சாவூர், புதுக்​கோட்டை, ராமநாத​புரம் கடற்கரைகளில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகள் (16 தாவர இனங்கள்), மீன்களின் இனப்பெருக்​கத்​துக்​கும், இரை தேடலுக்​குமான இடங்களாக உள்ளன. கோடியக்​கரை​யிலும் தென் விளிம்பான தனுஷ்கோடி​யிலும் 20,000க்கும் மேற்பட்ட வலசை, உள்ளூர்ப் பறவைகள் வாழ்வதாக ஒரு புள்ளி​விவரம் கூறுகிறது.
  • பாக் குடா, இந்தியாவில் டுகாங் டுகான் (Dugong dugon) எனப்படும் ஆவுளியா வாழுகிற மூன்று கடல் பகுதி​களில் ஒன்று. தமிழக அரசு 2022 செப்டம்​பரில் பாக் நீரிணையின் 448 ச.கி.மீ. பரப்பை ‘ஆவுளியா காப்பகப் பகுதி’யாக அறிவித்தது (Dugong Conservation Reserve in Palk Bay/GO MS.165/22).தமிழ்​நாட்டில் 2021இல் பொறுப்​பேற்ற திமுக அரசு ‘பசுமைக் காலநிலை’ நிறுவனத்தைத் தொடங்கி, அதன்கீழ் நெய்தல் நிலமீட்சி, காலநிலை, பசுமை, சதுப்புநில இயக்கங்களை நிறுவியது. பசுமைக் காலநிலைக் கொள்கைக்கு இசைவாக தஞ்சாவூர் - புதுக்​கோட்டை கடல் பகு​தி​களில் காற்றாலைகளை நிறுவத் திட்ட​மிட்​டுள்ளது. காற்றாலைகள் ஆவுளியா காப்பகப் பகுதிக்கு நெருக்கமாக அமைவது சூழலியலுக்கு உகந்ததல்ல.

மன்னார் கடலின் மறுகரை:

  • பாக் நீரிணையின் வாய்ப் பகுதிக்கு நேராக​வும், பாயின்ட் பீட்ரோவுக்கு (வட இலங்கை) வடக்காகவும் ஆழ்கடலில் 3,367 ச.கி.மீ. பரப்பில் ‘பீட்ரோ பேங்க்’ என்னும் மீன்வளத் திட்டு அமைந்​திருக்​கிறது. இதன் வட பகுதி இந்திய முற்றுரிமைப் பகுதிக்குள் வருகிறது. இது இந்திய சுறாப்​பாரைவிட அறுவடையில் 25% குறைவானது. இலங்கையின் 74% கடற்கரை, தமிழர்கள் வாழும் வட மாகாணப் பகுதி​யாகும். இலங்கையின் கடல் மீன்வளத்தில் 84% பீட்ரோ பேங்க் உள்ளிட்ட வட கடல் பகுதியி​லிருந்து கிடைக்​கிறது. வட மாகாணத்தின் 50% கரைக்​கடலும் கடற்கரைகளும் பெருந்​தொழில் நிறுவனங்​களால் ஆக்கிரமிக்​கப்​பட்டு​விட்டன.
  • சீன நிறுவனத்தின் மரபணு மாற்று கடலட்டை (கடல் வெள்ளரி) பண்ணை​களும், பண்ணைச் சுற்றுலா விடுதி​களும் அவற்றின் பாதுகாப்​புக்கு எனச் சுற்றிவளைக்​கப்பட்ட காணிகளும் கடற்கரை, கரைக்கடல் பகுதி​களைப் பாரம்பரிய மீனவர்​களிட​மிருந்து பறித்​துக்​கொண்டன. கடலட்டைப் பண்ணைகள் கரைக்​கடலின் கடற்புல் கட்டமைவையும் 12க்கு மேற்பட்ட உள்ளூர்க் கடலட்டை இனங்களையும் கடலாமை​களையும் அழித்து​விட்டன.
  • மன்னார் தீவின் 3,000 ஏக்கர் கரைப் பகுதி​களைக் கையகப்​படுத்தி, மணல்வள ஆய்வில் இறங்கிய ஆஸ்திரேலி​யாவின் ‘டைட்​டானியம் சாண்ட்ஸ்’ நிறுவனம், தீவைச் சுற்றி​யுள்ள பகுதி​களில் கண்டறிந்த 265 மில்லியன் டன் அரிய வகைத் தனிமங்களை அகழ்ந்​தெடுக்க இருப்பது புதிய சிக்கல். மன்னார் தீவின் 63% நிலப் பகுதி ஏற்கெனவே மூழ்கிப்போன நிலையில், மணல் அகழ்வினால் உப்பு நீர்க் கசிவு, குடிநீர் மாசுபாடு, கரைக்கடல் மாசுபாட்டுடன் பல்லா​யிரக்​கணக்கான பாரம்பரிய மீனவர்​களின் வாழ்வா​தா​ரமும் சீர்குலை​யும்.

துரப்பண வெடிய​திர்​வுகள்:

  • ஆழ்கடல் தரைக்கு அடியில் எண்ணெய்வள இருப்புகளை அடையாளம் காணும் ‘ஷேல்’ தொழில்​நுட்​ப​மானது, அதிர்​வு-ஒலி அடிப்​படையில் வேலை செய்கிறது. அதன் இயக்கம் டைனமைட் வெடிய​திர்​வுக்கு நிகரான, (காதைச் செவிடாக்​கும்) பேரொலியை எழுப்​பக்​கூடியது. கடலடித் தரைக்குக் கீழே, வாரக்​கணக்​கில், நிகழும் அந்த வெடிய​திர்வைக் கடலுயிர்​களால் தாங்க இயலாமல் நாளடைவில் துரப்பணப் பகுதி​களி​லுள்ள கடலுயிர் உய்விடம் அழிந்து​விடும். பல்லுயி​ரினங்​களின் சமநிலையும் உணவுச் சங்கி​லியும் சீர்குலை​யும், அதன் தொடர்ச்சியான மீன்வள வீழ்ச்சியைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டுமா?

துரப்பண அபாயங்கள்:

  • ஆழ்கடல்கள் என்பவை மீன்கள் உள்ளிட்ட பல்வேறு கடலுயிர்​களின் வலசைப் பாதையும்கூட. நிரந்​தரமான கட்டு​மானங்​களும் தொழில் நடவடிக்கைகளும் வலசை உயிரினங்​களின் வாழ்க்கைச் சுழற்​சியைப் பாதிக்​கின்றன. எண்ணெய்த் துரப்​பணத்தால் ஏற்படும் பாதிப்பு வெறும் எண்ணெய்க் கசிவு மட்டுமல்ல; துரப்பணத் திரவங்​களாலும் நங்கூரச் சங்கி​லிகளாலும் கடல் சூழலியல் பாதிக்​கப்​படு​கிறது.
  • கைவிடப்பட்ட துரப்பணக் கிணறுகளி​லிருந்து தொடர்ந்து வெளியேறும் பெட்ரோலியக் கழிவுகள், மீத்தேன் போன்ற பலவகை மாசுகள் கடலை நஞ்சாக்​கும். உலகெங்கும் அறிமுகப்படுத்தப்படும் பெரும்பாலான வளர்ச்சித் ​திட்​டங்​கள் கடல் வழங்கும் சூழலியல் சேவையையோ கடற்​குடிகளின் ​வாழ்​வா​தா​ரத்தையோ கிஞ்​சித்தும் கணக்​கில் ​கொண்​ட​தாகத் தெரிய​வில்லை. இது​போன்ற வளர்ச்சிப் பேரிடர்​களை, ​காலநிலைப் பிறழ்​வைத் துரிதப்​படுத்​தும், தீ​விரப்​படுத்​தும்​ என்​பது அனுபவம்​ சொல்​லும்​ உண்​மை.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories