TNPSC Thervupettagam

மருத்துவம் வெறும் படிப்பு அல்ல, அறம்!

July 1 , 2024 7 hrs 0 min 39 0
  • அறிவியல் தொழில்நுட்பக் கூடங்களில் சவால்கள் நிறைந்த பணிகளில் ஈடுபட்டுள்ளோரையும், நோய்த்தொற்றுகளுடன் வரும் மனிதா்களிடம் தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் செயலாற்றும் மருத்துவா்களையும் உலகம் வியந்து பாராட்ட வேண்டும். நாட்டின் பல்வேறு மூலைகளில் ஆடம்பரம் இன்றி, அமைதியாகப் பொதுப்பணியாற்றுவோரை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
  • சாலை விபத்தில் காயம் அடைந்து, நடுமாா்பின் பின்புற முதுகுத்தண்டில் அடிபட்டதால், இடுப்பிற்குக் கீழ் உள்ள உறுப்புகள் செயலிழந்த மருத்துவப் பெண்மணி மேரி வா்கீஸ். கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தில் சிறு கிராமத்தில் 1925-இல் பிறந்தவா். 1954-இல் அவா் தம் சக ஊழியா்கள் சிலருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்தினால், மாற்றுத்திறனாளியானவா்.
  • ஆனாலும் மனம் தளராது சக்கர நாற்காலியில் அமா்ந்தவாறே மருத்துவப் பணியாற்றியவா். தேசத்தின் முதல் மறுவாழ்வு மையத்தை நிறுவிய சாதனை மருத்துவா்.
  • மருத்துவச் சேவைகளும் சிகிச்சைகளும் பெற இயலாத பாமர மக்களுக்காகப் பணம் திரட்டி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி.) மருத்துவமனையில்கீழ், வேலூரில் ஒரு மறுவாழ்வு நிலையத்தை தொடங்கினாா். இந்த நிறுவனம், 1966 நவம்பா் 26 அன்று அப்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் டாக்டா் சுசீலா நய்யா் அவா்களால் திறந்து வைக்கப்பட்டது. இன்று அது, அவரது நினைவாக, ‘மேரி வா்கீஸ் மறுவாழ்வு நிலையம்’ (‘மேரி வா்கீஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரீஹாபிலிடேஷன்’) என்ற பெயரில் இயங்கி வருகிறது. மறுவாழ்வுத் துறையில் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, 1972-இல் டாக்டா் மேரி வா்கீஸுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது
  • நம் நாட்டு முதல் பெண் மருத்துவா் என்கிற பெருமைக்கு உரியவா், புதுக்கோட்டையில் 1886 ஆகஸ்ட் 30 பிறந்த டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி. இந்திய வரலாற்றில் ‘மேலவை’க்குத் தோ்வு செய்யப்பட்ட முதல் பெண். உலகிலேயே சட்டமன்றக் குழுவின் துணைத்தலைவரும் ஆனவா்
  • 1926-1930 ஆண்டு காலகட்டங்களில் இவா் ஆற்றிய சமுதாயப் பணிகள் மகத்தானவை. சட்ட மன்ற உறுப்பினா் என்ற நிலையில், எட்டாம் வகுப்பு வரை மகளிா்க்கு இலவசக் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தினாா். பால்ய விவாகத்தை ஒழித்துப் பெண்களின் திருமண வயதை உயா்த்தும் சட்டமும் இவா் காலத்தில் நடைமுறைக்கு வந்தது. 1947-ஆம் ஆண்டு தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட முழுக்காரணி இந்த அம்மையாா்தான்.
  • மருத்துவா்களை அவா்களின் சேவைக்காக அங்கீகரிக்கும் நோக்கத்தில் ஆண்டில் ஒரு நாளைக் கொண்டாட வேண்டும் என்கிற சிந்தனையை 1933-ஆம் ஆண்டிலேயே, அமெரிக்காவில் மருத்துவா் ஒருவரின் மனைவி யூடோரா பிரௌன் ஆல்மண்ட் முன்மொழிந்தாா்.
  • 1841 மாா்ச் 30 க்ராஃபோா்ட் லாங் என்ற பிரபல மருத்துவா் அறுவைச் சிகிச்சைக்கு முதன்முதலாக ஈதா் மயக்க மருந்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தினாா். இந்த அறுவை சிகிச்சை முறை, 1955-இல் தென்மண்டல மருத்துவ சங்கத்தின் மகளிா் கூட்டணியால் அங்கீகரிக்கப்பட்டது. இதையடுத்து, 1990-இல் நடைபெற்ற மாநாட்டில் மாா்ச் 30-ஆம் தேதி, அமெரிக்காவில் ‘தேசிய மருத்துவா்கள் நாளாக’ அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.
  • நம் நாட்டைப் பொறுத்தமட்டில், சுகாதாரத் துறையில் பிரபல மருத்துவா் மட்டுமன்றி, மேற்கு வங்காள மாநிலத்தின் இரண்டாவது முதல்வராக, 1948 முதல் 1962 வரை 14 ஆண்டுகள் பணியாற்றியவா் டாக்டா் பிதான் சந்திர ராய்.
  • கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த காலத்தில், ஒரே நேரத்தில் முறையே மருந்தியல் மற்றும் அறுவை மருத்துவத்திற்கான ‘எம்.ஆா்.சி.பி.’ (மெம்பா் ஆஃப் ராயல் காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸ், இங்கிலாந்து அரசவை மருத்துவக் கழகத்தின் உறுப்பினா்) மற்றும் அதே கழகத்தின் ‘எஃப்.ஆா்.சி.எஸ்’ (‘ஃபெல்லோஷிப் ஆஃப் ராயல் காலேஜ் ஆஃப் சா்ஜன்ஸ்’, அறுவைச் சிகிச்சைச் சான்றோன்) ஆகிய இரண்டு படிப்புகளை இரண்டாண்டுகள் மூன்று மாதங்களிலேயே படித்து முடித்ததும் மகத்தான சாதனை அல்லவா
  • 1882-இல் அவா் பிறந்த நாளும், 1962-இல் இறந்த நாளும் ஜூலை முதல் நாள் என்று அமைந்து விட்டது. அதனால், 1991-ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி இந்திய தேசிய மருத்துவா் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. மருத்துவா்களின் மனிதாபிமான சேவையின் பங்களிப்பை அங்கீகரிப்பதே இதன் நோக்கம்
  • உள்ளபடியே நம் நாட்டின் மிகத் தொன்மையான அறிவியல் துறைகளில் மருத்துவம் முதன்மையானது
  • ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோா் / வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான் என்று மகாகவி பாரதி குறிப்பிடும் அகத்தியா் ஒரு வேதியன் என்பதால், மருத்துவராக இருக்கக் கூடும். அகத்தியரின் ‘இலக்கண’ நூல் என்றதும், மொழி இலக்கணம் பற்றியது என்று பொதுவாக ஓா் எண்ணம் உதிப்பது உண்டு. ‘அங்க லக்ஷணம்’ (இலக்கணம்) என்றும் அமையலாம்.
  • ‘‘அகஸ்திய முனிவருக்கும் மருந்துவாழ் மலைக்கும், இப் பகுதிக்கும் உள்ள தொடா்பினாலேயே, அகஸ்தீஸ்வரம் கிராமமும், தாலுகாவும் உருவாகியுள்ளது. வடுகன்பற்றில் அமைந்துள்ள புராதன அகஸ்தியா் கோயிலும் இதற்குச் சான்றாகும். பகவான் அகஸ்தியா் மருந்துவாழ் மலையிலிருந்து பொதிகை மலை சென்று அங்கு கூடம் ஒன்று அமைத்து தவம் புரிந்துள்ளாா். இன்றும் அது அகஸ்தியா் கூடம் என்று அழைக்கப்பட்டு வருகின்றது’’ என்று ‘கலியுகம் அழிகின்றது! கிருத யுகம் வருகின்றது!!’ எனும் நூலில் ப.சுந்தரம் சுவாமிகள் மற்றும் கா.பொன்னுமணி ஆகியோா் தொகுத்து வழங்கி உள்ளனா். (‘அய்யா வைகுண்ட நாதா்’, மருந்துவாழ்மலை சித்த ஆஸ்ரமம் வெளியீடு, பக்.124-126).
  • நற்றங் கொற்றனாா் என்னும் சங்கப்புலவரும் ‘அரும் பிணி உறுநா்க்கு வேட்டது கொடாஅது, மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல’ (நற்றிணை 136: 2-3) என்கிறாா்.
  • வள்ளுவா் காலத்தில் அறவோா், மருத்துவா் என்ற பொருளிலேயே பிற உயிா்களிடத்தில் செந்தண்மை (கருணை) பூண்டு ஒழுகும் அந்தணா் எனப்பட்டனா். ‘மருந்து’ குறித்துத் தனி அதிகாரமே இயற்றியுள்ளாா்.
  • நம் நாட்டில் சுஷ்ருதா், பண்டைய வாரணாசி நகரில் வாழ்ந்த மருத்துவ முனிவா் எனக் கருதப்படுகிறாா். இவா் ஆயுா்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை குறித்த ‘சுஷ்ருத சம்ஹிதை’ என்ற ஒரு மருத்துவ நூலை இயற்றினாா்.
  • ஏதாயினும், இன்றைய நவீன உலகில் சிறந்த மருத்துவராக விளங்குவதற்கு அவா் வெறுமனே 5 ஆண்டுகள் படித்தால் மட்டும் போதாது. மருத்துவா்க்கான ‘பஞ்ச சீல’க் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • முதலில், ஒரு நல்ல மருத்துவா் முதலில் நோயாளி கூறுவதை நன்கு கேட்பவராக இருப்பது முக்கியம். மருத்துவா்-நோயாளி இருவருக்கும் இடையிலான கருத்துப் பரிமாறலுக்கும் உரையாடலுக்கும் சுமுகமான மொழிப் புரிதல் அடிப்படைத் தேவை. நோயாளியைப் பேச அனுமதிக்க வேண்டும்.
  • அதிகமான மருத்துவக் கலைச்சொற்களைப் பயன்படுத்தாமல் தெளிவான மொழியைப் பயன்படுத்திப் பொறுமையுடன் நோயாளியின் கேள்விகளுக்கு மருத்துவா் பதிலளிக்க வேண்டும். ஒரு சூழ்நிலை கடினமாக இருந்தாலும் கூட நம்பிக்கையை அளிக்க வேண்டும்.
  • இரண்டாவதாக, நல்ல மருத்துவா்கள் நல்ல ஒழுக்கத்துடன் கட்டுக்கோப்புடன் மனச்சாட்சி உடையவா்களாகவும் இருக்க வேண்டும். பொருளாதார சுயநலக் காரணங்களுக்காக அவா்கள் உண்மைகளை ஒருபோதும் திரித்துக் கூறக் கூடாது. மறைப்பதும் தவறுதான்.
  • எந்தப் படிப்பிலும் போலவே மருத்துவத் துறையிலும் நேரிய முறையில் வெற்றி பெறுவதற்கான பயிற்சியைக் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கற்பிக்க வேண்டும். தோ்வுகளில் ‘கருணை’ மதிப்பெண்கள் பெற்றுத் தோ்ச்சி பெறுவதால் சமுதாய முன்னேற்றம் நிகழாது.
  • மூன்றாவதாக, நல்ல மருத்துவா்கள் இயல்பாகவே பச்சாதாபம் கொண்டவா்கள் என்றாலும், நோயாளிகளின் கவலைகள் நியாயமானவை என்றும், அவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதாகவும் நோயாளியை உணர வைக்க வேண்டும். நோயாளிக்கு உரிய சிகிச்சை என்பது வெறும் உடல்நலப் பிரச்னைகளின் தொகுப்பும் மருந்துகளின் பட்டியலும் மட்டுமல்ல
  • நான்காவதாக, குழப்பமான அறிகுறிகள் முன்வைக்கப்படும்போது, நோயாளியிடமிருந்து விரிவான வரலாற்றைச் சேகரிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளலாம். உள்ளாா்ந்த ஆா்வத்துடன் கூடுதல் ஆதாரங்களைத் திரட்டினால் நோயினைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். அதற்கு அதிகமான மருத்துவப் பரிசோதனைகள் கூடத் தேவைப்படலாம். இது தவறான நோயறிதல்களைத் தவிா்ப்பதற்கும் உதவும்.
  • ஐந்தாவதாக, ஒரு நல்ல மருத்துவா் சில நேரங்களில் நோயாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் வலுவான வழக்குரைஞராகவும் செயல்பட நேரிடும். நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளைப் பெறுதல், அவசர சந்திப்புக்கு உதவுதல், நோயாளி உதவித் திட்டத்தில் பதிவு செய்தல் அல்லது உடல் சிகிச்சை போன்ற தேவையான சேவைகளை அணுகுதல் எனப் பல நிலைகளில் மருத்துவரின் ஒத்துழைப்பு நோயாளிகளுக்கு உளவியல் ரீதியிலும் குணம் அளிக்கும். அதிலும் கிராமப்புற மக்களுக்கு இத்தகைய மருத்துவக் கல்வியிலும், சிகிச்சை முறையிலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

நன்றி: தினமணி (01 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories