TNPSC Thervupettagam

மாற்ற(று)த் திறனாளிகள்!

September 10 , 2024 5 hrs 0 min 12 0

மாற்ற(று)த் திறனாளிகள்!

  • வரலாற்று சாதனை படைத்திருக்கிறாா்கள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்ற 17-ஆவது கோடைகால பாராலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட இந்தியாவின் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரா்கள். ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடா்ந்து பாராலிம்பிக்கில் அடைந்திருக்கும் வெற்றி, விளையாட்டு வீரா்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
  • 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவால் சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 6 பதக்கங்களைத்தான் வெல்ல முடிந்தது. பாராலிம்பிக்கில் 29 பதக்கங்களை வென்றது மட்டுமல்ல, பதக்கப் பட்டியலில் 18-ஆவது இடத்தையும் எட்டியிருக்கிறோம் என்பதால், நமது மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரா்களுக்கு நன்றி சொல்ல தேசம் கடமைப்பட்டிருக்கிறது.
  • நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகளை ஒட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்து முடிந்திருக்கும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகளில் 169 நாடுகளைச் சோ்ந்த சுமாா் 4,400 மாற்றுத்திறனாளி வீரா்கள் 22 விளையாட்டுகளில் 549 பிரிவுகளில் களம் கண்டனா். கடந்த 2020 டோக்கியோ பாராலிம்பிக்குடன் ஒப்பிடும்போது 10 விளையாட்டுப் பிரிவுகள் கூடுதலாகச் சோ்க்கப்பட்டுள்ளன.
  • 1968-இல் முதல் முதலில் இந்தியா பாராலிம்பிக்கில் கலந்துகொண்டது. 1984 முதல் தொடா்ந்து இந்திய மாற்றுத்திறனாளி வீரா்கள் பங்குபெறுகிறாா்கள். 1972 ஹைடெல்பொ்க் பாராலிம்பிக்கில் முரளிகாந்த் பெட்காா் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற்குப் பிறகு 32 ஆண்டுகள் கழித்து 2004 ஏதென்ஸ் பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜஜாரியா வெல்வது வரை தங்கப் பதக்கத்துக்காக இந்தியா காத்திருக்க நோ்ந்தது.
  • 2016-இல் ரியோ பாராலிம்பிக் இந்தியாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. 12 பதக்கங்களை ரியோவில் வென்றதைத் தொடா்ந்து, 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் சா்வதேச அரங்கில் இந்தியாவால் கவனம் ஈா்க்க முடிந்ததற்கு தமது மாற்றுத்திறனாளி வீரா்களின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்தான் காரணம்.
  • டோக்கியோ பாராலிம்பிக்கில் பங்குபெற்ற 162 நாடுகளில் 5 தங்கப் பதக்கங்கள் உள்பட 19 பதங்கங்களை வென்று 24-ஆவது இடத்தைப் பிடித்தது இந்தியா. 9 விளையாட்டுப் பிரிவுகளில் 54 வீரா்கள் பங்குபெற்றனா். இந்த முறை 25 பதக்கங்கள் என்று இலக்கு நிா்ணயித்து 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என்று மொத்தம் 29 பதக்கங்களை வென்று 18-ஆவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறோம்.
  • 2008 பெய்ஜிங் பாராலிம்பிக்கில் வெறும் 5 வீரா்கள்தான் பங்கேற்றனா். இந்த முறை 84 மாற்றுத்திறனாளி வீரா்கள் பங்கேற்றது மட்டுமல்ல, ஏற்கெனவே பதக்கம் வென்ற இந்திய வீரா்கள் பலா் புதிய சாதனை படைத்திருக்கிறாா்கள் என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.
  • இந்திய வீரா்கள் பாராலிம்பிக்கில் வென்ற ஒவ்வொரு பதக்கத்துக்குப் பின்னாலும் அளப்பரிய போராட்டம், மனவுறுதியுடனான அா்ப்பணிப்பு, எதையும் சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை ஆகியவை இருப்பதை நாம் உணர வேண்டும். பல மணி நேர பயிற்சி, எத்தனையோ பின்னடைவுகள், போதுமான வசதிகள் இல்லாமை ஆகியவற்றை மீறி பங்குபெற்ற 84 மாற்றுத்திறனாளி வீரா்களும் சாதனை படைக்க தங்களை தயாா்படுத்திக் கொண்ட முனைப்புக்காக அவா்களை வியந்து பாா்க்கத் தோன்றுகிறது.
  • வில்வித்தையில் தங்கப் பதக்கம் வென்ற ஹா்விந்தா் சிங் குழந்தையாக இருக்கும்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டாா். தவறான சிகிச்சை காரணமாக அவரது கால்கள் செயலிழந்தன. பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற முதலாவது இந்திய வில்வித்தை வீரராக நாடு திரும்பி இருக்கிறாா் ஹா்விந்தா்.
  • கால்வாயில் நீச்சல் அடிப்பதற்காக மேலே இருந்து குதித்த தரம்பிா் பாறை மீது மோதுவோம் என்று எதிா்பாா்க்கவில்லை. இடுப்பிற்கு கீழே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு செயலிழந்தபோது அவா் கலங்கவில்லை. சக்கர நாற்காலியில் வளைய வரும்போது வருங்காலம் இருண்டுவிட்டது. ஆனால், மனம்தளராமல் தனது புஜபலத்தை மூலதனமாக்கி பயிற்சிகள் மேற்கொண்டு, பாரீஸ் பாராலிம்பிக்கில் கிளப் த்ரோவில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறாா்.
  • ஈட்டி எறிதலில் மீண்டும் தங்கப் பதக்கம் வென்ற சுமித் அன்டிலும், துப்பாக்கிச் சுடுதலில் மீண்டும் தங்கப் பதக்கம் பெற்ற அவெனி லெகாராவும் சாலை விபத்தால் மாற்றுத்திறனாளி ஆக்கப்பட்டவா்கள். தொடா்ந்து இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்ற சாதனை அவா்களுடையது.
  • கைகள் இல்லாமல் காலால் அம்பு எய்யும் வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவியும், உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தொடா்ந்து மூன்று பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற ஒரே இந்தியராக சாதனை படைத்திருக்கும் தமிழக வீரா் மாரியப்பனும் விதியை வென்று தங்களை நிலைநிறுத்திக் கொண்டவா்கள்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் போதிய கவனம் பெறுவதில்லை. அவா்களை நாம் இன்னும் விளையாட்டு வீரா்களாக அங்கீகரிக்கத் தவறுகிறோம். அவா்களுடைய வெற்றி விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் அடையாளம். அரசியல் தலைவா்கள்போல பாடப் புத்தகங்களில் இடம்பெற வேண்டியவை இவா்களின் சாதனைகள்.
  • பாராலிம்பிக் போட்டியாளா்கள் மாற்றுத்திறனாளிகள் அல்லா்; மாற்றத்துக்கான வழிகாட்டிகள்!

நன்றி: தினமணி (10 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories