மாவட்டப் புத்தகத் திருவிழா: உள்ளூர் எழுத்தாளருக்கான பரிவட்டம் அல்ல
- மாவட்டந்தோறும் நடக்கும் புத்தகக் காட்சிகளில் பேச அழைக்கப்படுபவர்கள் குறித்த சர்ச்சைகள் சிலரால் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. உண்மையான ஆதங்கங்கள் கவனிக்கப்பட வேண்டும், நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இந்தப் பேச்சாளர்கள் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து புத்தகக் காட்சிகளுக்கு எதிரான மனநிலையைச் சிலர் உருவாக்கி வருகின்றனர். இதன் அபாயம் அவர்களுக்குப் புரியவில்லை. அது புத்தகக் காட்சிகளை ஒழித்துக்கட்டும் இடத்தில்தான் கொண்டுபோய் நிறுத்தும்.
- சென்னை புத்தகக் காட்சிக்குப் பிறகு பெரிய அளவில் நடத்தப்பட்ட மாவட்டப் புத்தகக் காட்சி 2006இல் மதுரையில் நடந்த காட்சிதான். இப்போது நிதித்துறை செயலராக இருக்கும் உதயச் சந்திரன் அப்போது மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றினார். அவர்தான் அரசு ஆதரவுடன் மாவட்டங்களில் புத்தகக் காட்சிகளை நடத்துவதற்காக முதற்புள்ளியை வைத்தார். மதுரையில் பிரமாண்டமான புத்தகக் காட்சியை நடத்திக் காட்டினார். அவரைப் பின்பற்றி பெரம்பலூரில் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த தாரேஸ் அகமது அந்த மாவட்டத்தில் பெரிய அளவில் புத்தகக் காட்சிகளை நடத்தினார். மாவட்ட நிர்வாகம், உள்ளூர் கல்வி அமைப்புகள், பண்பாட்டு அமைப்புகள் இணைந்து ஒரு புத்தகக் காட்சியை நடத்தும் முன்மாதிரி அப்போதே உருவாக்கபட்டுவிட்டது.
- 2021இல் அமைந்த மாநில அரசு எல்லா மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் என்ற மாபெரும் திட்டத்தை அறிவித்தது. பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலில் பொது நூலகத்துறை, மாவட்ட நிர்வாகம், பபாஸி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், உள்ளூர் கலை இலக்கிய அமைப்புகள் இணைந்து இக்காட்சிகளை நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அரசு அதற்கு மானியமாக ஒரு பெரும் தொகையை ஆண்டுதோறும் ஒதுக்கிவருகிறது. மாவட்டத்தின் அளவுக்கு ஏற்ப 15 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை ஒவ்வொரு காட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- மூன்று ஆண்டுகளாக இந்தக் காட்சிகள் எல்லா மாவட்டங்களிலும் வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஒரு புத்தகக் கடைகூட இல்லாத சிறிய மாவட்டங்களில்கூட ஒரு பெரிய புத்தகக் காட்சி நடக்கும் என்று யாரும் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க மாட்டார்கள். இவ்வளவு புத்தகங்களை ஒரு சேரப் பார்ப்பது அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு புதிய அனுபவம். பல்லாயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் அந்த அனுபவத்தைப் பெற்றுவருகின்றர். ஒரு அறிவுசார் பண்பாட்டை வளர்க்கும் முயற்சியில் இது மாபெரும் முன்னெடுப்பு. பள்ளிக் கல்லூரி மாணவர்களின் திறன் வெளிப்பாட்டிற்கான நிகழ்ச்சிகள், போட்டிகள், உள்ளூர் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் என பெரும் பண்பாட்டுத்திருவிழாவாக இந்தக் காட்சிகள் நடக்கின்றன.
- இந்தியாவில் எந்த மாநில அரசும் மாவட்டம் தோறும் புத்தகக் காட்சி என்ற ஒரு மாபெரும் ஏற்பாட்டை செய்ததில்லை. தமிழ்நாடு அரசு ஒரு மிகப்பெரிய முன்னோடியாக இதை நடத்திவருகிறது.
- புத்தக விற்பனை போதுமானதாக இல்லை என்ற புகார் சிலரால் தொடர்ந்து எழுப்படுகிறது. சென்னை புத்தகக் காட்சி இன்றைய இடத்தை வந்தடைய அரை நூற்றாண்டாகி இருக்கிறது. நாம் பின் தங்கிய, வருவாய் குறைந்த மாவட்டங்களில் உடனடியாக பெரிய விற்பனையை எதிர்பார்க்கவியலாது. அங்குப் படிப்படியாக வாசிப்புப் பண்பாட்டை உருவாக்க வேண்டும். உயிர்மை, காலச்சுவடு, எதிர், பாரதி புத்தகாலயம் போன்ற சில பதிப்பகங்கள் இதை ஒரு பண்பாட்டு இயக்கமாக கருதி விற்பனைக் கணக்குகளை பொருட்படுத்தாமல் பெரும்பாலான மாவட்ட காட்சிகளில் பங்கேற்கிறார்கள். ஒட்டு மொத்தமாக ஒரு ஆண்டில் எல்லா மாவட்ட புத்தகக் காட்சிகளிலும் 60 கோடி ரூபாய்க்கு நூல்கள் விற்பதாக சொல்லப்படுகிறது. இது இந்தத் துறைக்கு ஒரு முக்கியமான பங்களிப்பு.
- ஒரு புத்தகக் காட்சி என்பது பலதரப்பட்ட பொதுமக்களுக்காக நடத்தப்படுகிறது. அதை நவீன இலக்கியத்தை மட்டும் மையமாக வைத்து நடத்த இயலாது. எந்தெந்தப் பேச்சாளர்களை அழைப்பது என்பதை அந்த மாவட்ட நிர்வாகமும் புத்தகக் காட்சியை நடத்தும் அமைப்புகளும்தான் முடிவு செய்கின்றன. இலக்கியப் பார்வை உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உள்ள இடங்களில் நவீன இலக்கியம் சார்ந்தவர்கள் சற்று கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறார்கள். மற்ற இடங்களில் அவர்களின் பார்வைகளின் எல்லைகளுக்கு ஏற்ப முடிவு செய்கிறார்கள். ஆனால், புத்தகக் காட்சிகளின் நோக்கம் புத்தகப்பண்பாட்டை பரவலாக்குவதே தவிர அது பேச்சாளர்கள் சம்பந்தப்பட்டதல்ல. அவர்கள் ஒரு பெரிய நிகழ்வின் சிறு பகுதி மட்டுமே.
- நவீன எழுத்தாளர்கள் பேச அழைக்கப்பட வேண்டும். ஆனால், எத்தனை நவீன எழுத்தாளர்கள் பொதுமக்களை ஈர்க்கக்கூடிய வகையில் பேச்சுத்திறன்கொண்டவர்கள்? அப்படி பேசக் கூடியவர்கள் பேச அழைக்கப்படுகிறார்கள். பார்வையாளர்களைத் தக்கவைப்பது அத்தனை எளிதல்ல. பொதுப்பேச்சாளர்களை ஒரு வெகுசன நிகழ்வில் தவிர்க்கவே இயலாது.
- உள்ளூர் எழுத்தாளர்களுக்கு இடம் வேண்டும் என்பது நியாயமானதுதான். அவர்கள் அழைக்கப்படவே செய்கிறார்கள். ஆனால், உள்ளூர் ஆட்களை மட்டும் வைத்து நடத்த புத்தகக் காட்சி ஒன்றும் பரிவட்டம் கட்டும் வைபவம் அன்று. ஒரு வருடத்தில் பல புத்தகக் காட்சிகள் நடக்கின்றன. ஆயிரம் உரைகளுக்கு மேல் நிகழ்த்தப்படுகின்றன. அதில் பிரபலப் பேச்சாளர்கள், நவீன இலக்கியவாதிகள், உள்ளூர் எழுத்தாளர்கள் எல்லோரும்தான் கலந்து இருக்கிறார்கள்.
- இடம் வேண்டும் என்று கேட்கலாம். ஆனால், அதற்காக ஒரு அறிவு சார் பண்பாட்டு இயக்கத்தை கொச்சைப்படுத்தக் கூடாது. மாற்றங்களும் செழுமைப்படுத்தல்களும் ஜனநாயகத்தன்மையும் தேவைப்படலாம். ஒரு இயக்கத்தை வலிமைப்படுத்தினால்தான் அதைச் செய்ய முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 02 – 2025)