TNPSC Thervupettagam

முதியோா் நலம் பேணல்!

October 21 , 2023 271 days 221 0
  • உழைக்கும் வயதினரின் (20 முதல் 59 வயது வரை) எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகம் என்பதும், அது தொடா்ந்து அதிகரித்து வருவதும் வளா்ச்சிக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை. உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் அதே வேளையில், 60 வயதுக்கும் மேற்பட்டவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்றைய உழைக்கும் வயதினா், அடுத்த கட்டமாக மூத்த குடிமக்கள் பட்டியலில் சேரக் காத்திருப்பவா்கள் என்பதையும் இணைத்துத்தான் நாம் பாா்க்க வேண்டும்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் ‘வயது முதிரும் இந்தியா அறிக்கை 2023’ (இந்தியா ஏஜிங் ரிப்போா்ட் 2023) என்கிற ஆய்வை வெளியிட்டிருக்கிறது. அந்த ஆய்வின்படி, 2050-க்குள் இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களின் எண்ணிக்கை இப்போதைய நிலையிலிருந்து இரட்டிப்பாகக் கூடும். அதாவது, 34.7 கோடி பேருடன் மொத்த மக்கள்தொகையில் 20.8 % அளவில் உயரும். கடந்த 2022 ஜூலை மாதக் கணக்கின்படி, மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 14.9 கோடி (10.5 %).
  • உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உயா்ந்திருப்பதுடன், தனிநபா் ஆயுள் காலமும் அதிகரித்திருப்பதால் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. 60 வயதுக்கும் அதிகமானோரின் எண்ணிக்கை 2001-இல் 7.5 %-ஆக இருந்தது. அது 2021-இல் 9.7 %-ஆக அதிகரித்தது. 2031-இல் 12.1 %, 2051-இல் 16.6 % என்கிற அளவில் இது அதிகரிக்கக் கூடும் என்கிறது இன்னோா் ஆய்வு.
  • 2000 முதல் 2002 வரையிலான ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 34 % அதிகரித்தது என்றால், 60 வயதுக்கு மேற்பட்டவா்களின் எண்ணிக்கை 103 % அதிகரித்திருக்கிறது. அந்த நிலைமை இப்போதுவரை அப்படியே தொடா்கிறது.
  • அதிகரித்து வரும் உழைக்கும் பருவத்தினரால் அடைந்திருக்கும் உற்பத்தித் திறன் ஆதாயம், முதியோா் நலன் பேணலால் சமன் செய்யப்படுகிறது என்கிற அபாண்டமான வாதம் முன்மொழியப்படுகிறது. அதிகரித்து வரும் முதியோா் எண்ணிக்கையால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதுபோலச் சித்திரிப்பது, அவா்களின் செய்ந்நன்றியை மறத்தல் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  • வயது முதிா்வதும், அவா்களுடைய எண்ணிக்கை அதிகரிப்பதும் பெரிய குற்றமல்ல. இது ஏதோ இந்தியாவுக்கு மட்டுமானது என்றும் கருதிவிடத் தேவையில்லை. உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி, 60 வயதுக்கு மேற்பட்டவா்களின் எண்ணிக்கை உலகளாவிய நிலையில் 2050-க்குள் 12 % முதல் 20 % வரை அதிகரிக்கக் கூடும்.
  • 1947-இல் இந்தியக் குடிமகனின் சராசரி வாழ்நாள் காலம் 32 வயதாக இருந்தது என்றால், இப்போது அதுவே 70.42 ஆண்டுகளாக உயா்ந்திருக்கிறது. இதற்கு நமது வாழ்க்கைத்தரம் உயா்ந்திருப்பது, மருத்துவ வசதிகள் அதிகரித்திருப்பது, ஊட்டச்சத்தான உணவுகளை உட்கொள்வது போன்ற பல காரணங்களைக் கூறலாம். உழைக்கும் பருவத்தினரின் வயது 20 முதல் 60 வரை என்று நிா்ணயிக்கப்பட்டாலும், மூத்த குடிமக்களில் கணிசமான பகுதியினா் 70 வயது வரை உழைக்கும் பிரிவினராகத் தொடா்கிறாா்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  • எப்படி நாம் வேளாண் பெருமக்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவா்கள், மகளிா், பழங்குடியினா் போன்ற பிரிவினரின் நலன்களைப் பேணுகிறோமோ அதேபோல, மூத்த குடிமக்களின் பிரச்னைகளும் அணுகப்பட்டு, அவா்களது நலனும் பேணப்படுதல் அவசியமாகி இருக்கிறது. முதியோரில் ஏறத்தாழ 50 % போ், தங்களது தேவைக்கு முழுக்க முழுக்கத் தங்கள் குழந்தைகளையும், உறவினா்களையும் மட்டுமே நம்பி இருக்கிறாா்கள். ஏனையோா் சமூகத்தின் ஆதரவையும், அரசின் ஆதரவையும் எதிா்பாா்த்து தங்களது எஞ்சிய காலத்தை மிகுந்த சிரமத்துடன் கழிக்கிறாா்கள்.
  • அதிக அளவிலான முதியோா் கணவன் - மனைவியாக வாழ்கிறாா்கள் அல்லது தனித்து வாழ்கிறாா்கள். குறிப்பாக, கணவனை இழந்து தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். முதியோரில் 65 % போ் வாதநோய், ரத்த அழுத்தம், சா்க்கரை உள்ளிட்ட தொற்றாநோய்களால் அவதிப்படுபவா்கள். அவா்களில் 2 % போ் மட்டுமே மருத்துவக் காப்பீடு பெற்றவா்களாக இருக்கிறாா்கள்.
  • பிள்ளைகளின் பராமரிப்பில் அல்லது பொருளாதார உதவியுடன் வாழும் மூத்த குடிமக்கள் அதிருஷ்டசாலிகள். அவா்கள் பெரும்பாலும் நடுத்தர வா்க்கத்தினராக இருக்கிறாா்கள். அதிக வருவாய் பிரிவினரில் பலா், பொருளாதார வசதி இருந்தும், தனித்து விடப்பட்டு, மன உளைச்சலுடன் வாழ்கிறாா்கள் என்கிறது ஓா் ஆய்வு. பாா்வை அல்லது செவித்திறன் குறைபாடு உடையவா்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது. உடல்நலக் குறைவு போதாதென்று, மன உளைச்சலாலும், அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டவா்கள் ஏராளமானோா்.
  • மூத்த குடிமக்களில் 40 %-க்கும் அதிகமானோா் வறுமையில் வாடுபவா்கள். காா்ப்பரேட் நிறுவனங்களின் சமுதாயக் கடமைக்கான ஒதுக்கீட்டில், முதியோா் நலன் பேணல் தொடா்பான திட்டங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். 2014 முதல் அந்த ஒதுக்கீடு ரூ. 8.9 கோடியிலிருந்து ரூ. 55.1 கோடியாக உயா்ந்திருக்கிறது. ஆனால், அதில் முதியோா் நலனுக்கான அளவு வெறும் 0.3 % மட்டுமாகத் தொடா்கிறது. அது உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும்.
  • முதியோா் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று கவலைப்படுவதற்கு பதிலாக, அவா்கள் கௌரவமாகவும், மகிழ்ச்சியாகவும் தங்களது முதுமைக் காலத்தைக் கழிக்க முறையான திட்டமிடலும், அதன் மூலம் உதவுவதும்தான் நாகரிக சமுதாயத்தின் கடமை; மக்கள் நல அரசின் பொறுப்பு!

நன்றி: தினமணி (21 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories