யூடியூபர் சர்ச்சைகள்: கட்டுப்பாடுகளுக்கான வாய்ப்பா?
- ‘இது எங்கள் இடம்’ என இணையப் பரப்பை (சைபர் வெளி) அறிவித்த ஜான் பெரி பார்லோவின் (John Perry Barlow) மேற்கோளோடு இந்தக் கட்டுரையைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும். “உங்களை இங்கு வரவேற்கவில்லை. நாங்கள் ஒன்றுகூடும் இடத்தில் உங்களுக்கு எந்த இறையாண்மையும் இல்லை.” கவிஞர், கட்டுரையாளர், பாடலாசிரியர் எனப் பலவித அடைமொழிகளோடு, இணையவெளியின் தாராளவாதச் செயல்பாட்டாளராகவும் கருதப்படும் பார்லோ, 1996இல், இணையப் பரப்பின் சுதந்திரத் தன்மையை வலியுறுத்தி வெளியிட்ட சைபர் வெளி சுதந்திரப் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ள வரிகள்தான் இவை.
- பார்லோ காலத்தில் இருந்து இணையம் வெகுவாக மாறிவிட்டது என்றாலும், இணைய வெளியின் ஆதாரத்தன்மை மாறிவிடவில்லை. ‘மனதின் புதிய வீடு’ என அவர் வர்ணித்த இணைய வெளி இன்னமும் கருத்துப் பரிமாற்றத்துக்கும், பயனாளிகளின் கூட்டு முயற்சிக்கும், இன்னும் பிற கட்டற்ற சுதந்திரம் சார்ந்த செயல்பாடுகளுக்கான மெய் நிகர் பரப்பாகவே தொடர்கிறது.
- ஆனால், இணையத்தின் இந்த ஆதாரத்தன்மைக்கான அச்சுறுத்தலும் சவால்களும் அதிகரித்துவருவதை உணர்த்தும் இன்னொரு உதாரணமாக, யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா தொடர்பாக வெடித்துள்ள சர்ச்சையும் விவாதங்களும் அமைந்துள்ளன. குடும்ப விழுமியங்களைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் ஆபாசமாக அவர் பேசியிருந்தார். ரன்வீரின் செயல் கண்டனத்துக்கு உரியது என்பதிலும், அதற்கான விலையை அவர் கொடுத்தாக வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.
- ஆனால், ரன்வீர் போலப் பெரும் செல்வாக்குமிக்க இணைய நட்சத்திரங்கள் சறுக்கிச் சர்ச்சைக்கு உள்ளாகும்போது, பொதுவெளியில் ஏற்படும் எதிர்வினைகள் எப்படி அமைகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதைவிட முக்கியமாக, மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் இத்தகைய சர்ச்சைகளை இணையம் - டிஜிட்டல் பரப்பின் மீதான கட்டுப்பாடுகளை மேலும் இறுக்குவதற்கான வாய்ப்பாக அரசாங்கங்கள் பயன்படுத்திக்கொள்ள முற்படுவதாக எழும் குரல்களுக்கும் செவிசாய்த்தாக வேண்டும்.
தண்டிக்கப்பட வேண்டிய குற்றமா?
- ரன்வீர், இணையத்தில் புகழின் உச்சிக்குச் சென்று சர்ச்சைக்கு உள்ளான முதல் யூடியூபர் அல்ல. உள்ளூரிலும், உலக அளவிலும் இதற்கு இன்னும் எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றனர். டிஜிட்டல் கிரியேட்டர்கள் என்று சொல்லப்படுபவர்கள் செயல்படும் விதத்தைப் பார்த்தால், இன்னும் பலர் இப்படிச் சர்ச்சை நாயகர்களாக மாறுவார்கள் என்றே தோன்றுகிறது.
- இதற்குக் காரணம் இளம் வயதில், புகழும் பெரும் பணமும் தரும் மயக்கமா அல்லது எப்போதும் கவனத்தை ஈர்க்கும் உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டிய நெருக்கடியா என்று தெரியவில்லை. டிஜிட்டல் படைப்பாளிகள் உள்ளடக்கத்தில் பின்பற்ற வேண்டிய எல்லைக் கோட்டை பல நேரங்களில் தவறவிடுகின்றனர்.
- இவர்களுக்கு நாம் பொறுப்புணர்வு தொடர்பாகப் பாடம் எடுப்பது அவசியம்தான். அவர்களைக் கண்டிப்பதும் தேவைதான். ஆனால், அவர்களைத் தண்டிக்க வேண்டுமா என்பது சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டது. ரன்வீர் தெரிவித்த பொருத்தமற்ற கருத்துகளுக்காக அவரை விமர்சிப்பதையும், கண்டிப்பதையும் புரிந்துகொள்ளலாம். ஆனால், அவரைக் கைது செய்யக் கோருவதையும், அவருக்கு எதிராகத் தேசமே திரண்டு போராடுவதுபோலத் தோற்றத்தை ஏற்படுத்துவதையும் எப்படிப் புரிந்துகொள்வது?
பயன்படுத்திக் கொள்கிறதா அரசு?
- ரன்வீருக்கு இடைக்கால நிவாரணம் தந்திருக்கும் உச்ச நீதிமன்றமே, அவரது மனம் விகாரமானது எனக் கண்டித்துள்ளது. ரன்வீர் தெரிவித்த கருத்துக்கள் ஏற்க முடியாதவை என்றாலும், சட்டத்தை மீறியவைதானா என வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆபாசம் என்பதைக் கலாச்சாரக் கண் கொண்டு அணுகுவது வேறு. சட்டம் இதை எப்படி வரையறை செய்திருக்கிறது என்பதே முக்கியம்.
- உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு ஒன்றை மேற்கோள் காட்டி, வழக்கறிஞர் அபர் குப்தா இந்த விவகாரம் தொடர்பாக எழுதிய கட்டுரையில், யூடியூபரின் கருத்து ஆபாசம் அல்ல... ஆபத்தான ஒரு நகைச்சுவை மட்டுமே எனக் குறிப்பிட்டிருப்பதை இங்கே நினைவில் கொள்வது பொருத்தமானது.
- இணைய சுதந்திரம் தொடர்பான சட்டம் சார்ந்த பார்வைக்காகவும் நுணுக்கங்களுக்காகவும் அறியப்படும் அபர் குப்தா, இந்த விவகாரத்தில் ரன்வீரும், அவரை யூடியூப் நிகழ்ச்சிக்கு அழைத்த சமய் ரெய்னாவும், பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
- டிஜிட்டல் பரப்பைக் கட்டுப்படுத்த விரும்பும் அரசாங்கம், அதற்கான வாய்ப்புகளில் ஒன்றாக இதைப் பயன்படுத்திக்கொள்கிறது. மக்களின் கோபத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஏற்கெனவே உள்ள டிஜிட்டல் நெறிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படலாம்.
- இத்தகைய கட்டுப்பாடுகள் டிஜிட்டல் தணிக்கைக்கு வித்திடும் என்னும் அச்சத்தையும் புறந்தள்ளுவதற்கு இல்லை. கருத்துச் சுதந்திரத்தின் மீதான இன்னொரு வகைத் தாக்குதலாகவும் இது அமைகிறது. கருத்துச் சுதந்திரம் என்பது சமூகப் பொறுப்பையும் உள்ளடக்கியதுதான் என்றாலும், உணர்வுவய ரீதியிலான வரம்பு மீறிய தாக்குதல், கருத்துகளைக் கட்டுப்படுத்தும் தணிக்கைப் போக்குக்கே வலுசேர்க்கும் எனக் கருதப்படுகிறது.
பக்குவம் தேவை:
- டிஜிட்டல் வெளி, சமூக ஊடகப் பரப்பில், பலரது செயல்பாடுகள் முகம் சுளிக்க வைப்பதாகவும், சில நேரம் எல்லை மீறுவதாகவும் இருக்கிறது. ஆனால், இத்தகைய சர்ச்சைகளை எதிர்கொள்வதில் சமூக நோக்கிலும் ஒரு மாற்றமும் பக்குவமும் தேவை. சமூக ஊடகம் என்பது பயனாளிகளுக்கான தகவல்தொடர்புப் பாதையாகவே கருதப்படுகிறது. பயனாளிகள் தாங்களே உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களாக மாறவும் இந்தத் தகவல்தொடர்பு வழிசெய்கிறது.
- சமூக ஊடகத்தின் இந்த ஆதாரத்தன்மையே, பல திறமையாளர்களுக்கு மேடை அமைத்து, அவர்களை இணைய நட்சத்திரங்களாகவும், செல்வாக்காளர்களாகவும் ஆக்கியிருக்கிறது. ஆனால், அதே செல்வாக்காளர்கள் தவறு செய்யும்போது, முன்பு அவர்களைக் கைதட்டி ஆதரித்து வளர்த்த அதே இணையவாசிகள் கடுமையாக விமர்சிக்கத் தலைப்படுகிறார்கள்.
- அதேபோல சாமானிய திறமையாளர்கள் சமூக ஊடகத்தால் அடையாளம் காட்டப்படும்போது, இந்த ஊடகத்தின் ஜனநாயகத்தன்மை பற்றிப் பாராட்டிப் பேசும் பலரும், பிரச்சினை அல்லது சர்ச்சை என வரும்போது சமூக ஊடகத்தின் கட்டற்றதன்மையை எதிர்மறையாகச் சித்தரிப்பதையும் பார்க்க முடிகிறது. இந்தப் போக்கு சமூக ஊடகத்தின் இயல்பான ஜனநாயகத்தன்மைக்கே அச்சுறுத்தலாக மாறலாம்.
- கலாச்சார நோக்கில் புண்படுத்தும் உள்ளடக்கத்துக்காக அல்லது ஓடிடியில் வெளியாகும் இணையத் தொடரின் எல்லை மீறிய காட்சிக்காக, நடவடிக்கை எடுக்க வாருங்கள் என வலியுறுத்துவது, அரசுத் தரப்பிலான கட்டுப்பாடுகள் இன்னும் தீவிரமடையவே வழிவகுக்கும். அரசின் செயல்பாடுகளைக் கேள்விக்கு உட்படுத்துவதற்கான மக்கள் ஊடகமாக சமூக ஊடகம் இருப்பதையும் மறந்துவிடக் கூடாது.
பொறுப்பை உணர வேண்டும்:
- பல நாடுகளில் டிஜிட்டல் பரப்பு, சமூக ஊடகப் பரப்பு ஆகியவற்றை நெறிப்படுத்துவது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இதற்கான சட்டங்களும் இயற்றப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் வலதுசாரி அரசாங்கங்களும், சர்வாதிகார ஆட்சியாளர்களும் இதைச் சாதகமாக்கிக்கொண்டு, மாற்றுக் கருத்துகளையும் நியாயமான எதிர்ப்பையும் நசுக்கச் சட்ட வழியைப் பயன்படுத்திவருகிறார்கள்.
- இந்தப் பின்னணியில் ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்பதும், ஊடகக் கல்வியறிவை வளர்த்தெடுப்பது போன்ற செயல்களும் அவசியம். அரசமைப்பு உறுதிசெய்யும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதும் முக்கியம்.
- ‘இதற்கு முன் பார்வையாளர்கள் என அறியப்பட்ட மக்கள்’ என்று அமெரிக்க இதழியல் பேராசிரியர் ஜே ரோசன் (Jay Rosen) குறிப்பிடுவார். வலைப்பதிவு என்னும் சமூக ஊடக வகையின் எழுச்சி எல்லோரையும், எழுதும் வாசகர்களாக உருவாக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டி, பாரம்பரிய ஊடகங்களுக்குப் புதிய ஊடகத்தின் வருகையை உணர்த்தும் அறைகூவலாக இந்தக் கருத்து அமைந்திருந்தது. ஆக, பார்வையாளர்களாக மட்டும் இருந்த நிலை மாறி, பங்கேற்பு யுகத்தில் இருக்கிறோம் என்பதையும் அதற்கான பொறுப்பை இணையப் பிரபலங்களும் உணர வேண்டும், மக்களும் நினைவில் கொள்ள வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (24 – 02 – 2025)