TNPSC Thervupettagam

வானநூல் பயிற்சி கொள்

September 1 , 2023 311 days 302 0
  • ஒரு நாட்டினுடைய இராணுவ பலத்தைக் கண்டு மற்ற நாடுகள் பிரமித்து நிற்பதில்லை; ஒரு நாட்டினுடைய செல்வப் பெருக்கைக் கண்டு பிற நாடுகள் அதிசயித்து நிற்பதில்லை; ஆனால், ஒரு நாட்டின் அறிவியலின் வெற்றியைக் கண்டுதான் உலகின் பிற நாடுகள் அந்நாட்டை அண்ணாந்து பார்க்கின்றன.
  • வான்வெளியில் இந்தியா அப்படியொரு பெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் - 3 விண்கலத்தில் லேண்டா் வெற்றிகரமாக இறங்கிய செய்தி, மகாகவி பாரதியாரின் காதுகளில் படுமானால், மீண்டுமொரு முறை எட்டயபுரத்தில் உயிர்த்தெழுவார்.
  • வான மண்டலத்திற்கும் நிலவுக்குமாக ரஷியா வாலண்டினாவை அனுப்பியபொழுது, உலக நாடுகள் ரஷியாவை ஆச்சரியத்தோடு பார்த்தன. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்த பொழுது, ஞாலத்து நாடுகள் அமெரிக்காவை நோக்கிப் புருவத்தை உயா்த்தின. ஒரு காலத்தில் சீனாவும் வான்வெளியில் தன் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
  • இப்பொழுது சந்திரயான் - 3 மாபெரும் வெற்றி அடைந்திருப்பதால், பாரத புத்திரா்கள் அனைவரும் தங்களுடைய காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு நடக்கலாம்.
  • சந்திரயான் - 3 நிலவில் உள்ள நீா், பனிக்கட்டி, மண்ணின் வகைகள், கனிமங்கள், வளி மண்டலம் ஆகியவற்றை ஆய்வு செய்து நமக்குத் தகவல்களை அனுப்பும். சந்திரயான் - 1 இன் வெற்றிக்குக் காரணமான மயில்சாமியை அடுத்து, சந்திரயான் - 3- இன் வெற்றிக்குக் காரணமானவா் வீரமுத்துவேல். இவா், விழுப்புரத்தைத் தாய் மண்ணாகக் கொண்டவா்.
  • 1984- ஆம் ஆண்டு அன்றைய பிரதமா் இந்திரா காந்தி ராகேஷ் சா்மாஇயக்கத்தில் ஒரு விண்கலத்தை வான்வெளிக்கு அனுப்பினார். அங்கு சென்றவுடன் ராகேஷ் சா்மாவிடம் இந்திரா காந்தி, ‘அங்கிருந்து பார்த்தால் எப்படித் தெரிகிறது இந்தியாஎனக் கேட்டார். அதற்கு சா்மா, ‘இங்கிருந்து பார்த்தாலும் இந்தியாதான் அழகாகத் தோன்றுகிறதுஎன்றார். சந்திரயான்-3 நிலவில் இறங்கியிருக்கும் நிலையில், அயல்நாட்டவா் யாரேனும் வெளிநாடுகளில் வாழும் இந்தியா்களைப் பார்த்துக் கேட்டால், அவா்கள் இந்தியாதான் அழகாகத் தோன்றுகிறதுஎன்று கட்டாயம் கூறுவார்கள்.
  • இந்த வெற்றிகளுக்கெல்லாம் காரணகா்த்தாவாக மகாகவி பாரதியைக் கருதலாம். பொழுது விடிந்தால் புானூறு; அந்தி சாய்ந்தால் அகநானூறுஎன்று தமிழ்ப் புலவா்கள் ஆய்வுரைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த காலத்தில், வானத்தை அண்ணாந்து பார்க்க வைத்தவா், அந்த மகாகவி. வானநூல் பயிற்சி கொள்என்று நடைபயிலும் குழந்தைகளுக்காக ஆத்திசூடி’”யின் வழியாக அறிவுறுத்தியவா், அந்தக் கரிசல் காட்டுக் கவிஞா்.
  • கவிஞா்கள் வெறும் கவிஞா்கள் மட்டுமல்லா்; அவா்கள் தீா்க்கதரிசிகளுமாவா் என்று மேற்கத்திய இலக்கியவாணா்கள் சொல்லியிருக்கின்றனா். பிரெஞ்சுப் புரட்சி வருவதற்கு முன்பாக விடியற்காலை சேவலாகக் கூவி எழுப்பியவா், கவிஞா் வேட்ஸ்வொர்த் ஆவார். அது போலவே காலனின் மடியில் விழுவதற்கு முன்பாகவே, 1947-ஐ நாம் கனவாக காண்பதற்கு முன்பாகவே, ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்என்றுபள்ளு பாடியவா் நமது பாரதியார்.
  • பள்ளிப் பிள்ளைகளுக்கு வானநூல் பயிற்சி கொள்எனப் பாடிய அவா், காதலா்களுக்காக சிந்துநதியின் மிசை நிலவினிலேஎனவும் பாடி வைத்தார். எதிர்கால இந்தியாவை அறிவியல்தான் செதுக்கும் என்பதை ஊகித்தறிந்த பாரதி, ‘ஆயுதம் செய்வோம்எனப் பாடினார். கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுதுஎனும் பாடல் விடுதலைப் போராட்ட வீரா்களின் முழக்க கீதமாக இருந்தபோது, ‘ஆயுதம் செய்வோம்என எழுச்சிக் குரல் எழுப்பிய தேசிய கவி பாரதியார்.
  • சந்திரயான் 3-இன் வெற்றிக்குக் காரணமான விஞ்ஞானிகளை வாழ்த்த வேண்டும் என்று நினைக்கின்ற போது,

வெற்றி கொண்ட கையினாய் வா வா வா

விநய நின்ற நாவினாய் வா வா வா

முற்றி நின்ற வடிவினாய் வா வா வா

முழுமை சோ் முகத்தினாய் வா வா வா

கற்றல் ஒன்று பொய்க்கிலாய் வா வா வா

கருதியது இயற்றுவாய் வா வா வா

ஒற்றுமைக்குள் உய்யவே நாடெல்லாம்

ஒருபெருஞ் செயல் செய்வாய் வா வா வா

  • எனும் பாரதியின் பாடலைக் கொண்டுதான் வாழ்த்த வேண்டியிருக்கிறது.
  • வானை அளப்போம்... சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்எனப் பாடி வைத்ததோடு, அப்படிச் சந்திரமண்டலத்தியல் கண்டு சொல்வோர்க்குரிய வாழ்த்துப் பாடலையும் பாடி வைத்தவா் பாரதியார்.
  • நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்ததைக் கேட்ட அமெரிக்கா்கள், அங்குக் குடியேறுவது குறித்துத் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினா். அப்பொழுது அமெரிக்கா்களின் நிறவெறியால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஆப்பிரிக்க பூா்வீகக் குடிகளின் தலைவா் மார்ட்டின் லூதா் கிங், கறுப்பின மக்களை அழைத்து, ‘இனி அமெரிக்கா நமக்குத்தான் சொந்தம். ஏனென்றால், அமெரிக்கா்கள் சந்திரமண்டலத்தில் குடியேற முடிவு செய்து விட்டனா்என அறிவித்தார்.
  • ஆனால், ஆம்ஸ்ட்ராங்கும் அவருடன் சென்ற இருவரும், திரும்பி வந்து சந்திர மண்டலத்தில் யாரும் குடியேற முடியாது; அங்கு வெறும் சதுப்பு நிலங்கள்தாம் உள்ளன; தண்ணீா் கிடையாது; எப்பொழுதும் புழுதிக் காற்று வீசிக் கொண்டேயிருக்கிறதுஎன்று சொன்னவுடன் தான், அமெரிக்கா்கள் நிதானத்திற்கு வந்தனா். ஆனால், நிலவில் யாரும் குடியேற முடியாது என்பதைத் தீா்க்கதரிசனமாக உணா்ந்ததால்தான் மகாகவி பாரதியார் சந்திரமண்டத்தியல் கண்டு தெளிவோம்என்று மட்டுமே பாடினார்.

வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் - அடி

மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்

  • எனும் பாடலை, இந்த நாடு விடுதலை பெற்றதிலிருந்து தொடா்ந்து வந்த அரசுகள் நடைமுறைப்படுத்தியிருந்தால், இன்று அருணாசல பிரதேசத்தின் கணிசமான பகுதிகளை நாம் இழந்திருக்க மாட்டோம்.
  • பாரதியார் தனது கவிதைகளில் மட்டுமின்றி, உரைநடையிலும் வானியல் குறித்து குறிப்பிட்டுள்ளார். அவா் தேசியக் கல்வி’”எனும் தலைப்பிலான கட்டுரையில், பள்ளிப் பிள்ளைகளுக்கு அரிச்சுவடி படிக்கும் காலத்திலேயே வானசாஸ்திரம் கற்பிக்கப்பட வேண்டும் என்றெழுதுகிறார்.
  • ஆரம்ப பூகோளமும், அண்ட சாஸ்திரமும், ஜகத்தைப் பற்றியும், சூரிய மண்டலத்தைப் பற்றியும், சூழ்ந்தோடும் கிரகங்கள்பற்றியும், நட்சத்திரங்களைப் பற்றியும், இவற்றின் சலனங்கள் பற்றியும் பிள்ளைகளுக்கு இயன்றவாறு தக்க ஞானங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பூமிப் படங்கள், கோளங்கள், வா்ணப் படங்கள் முதலியவற்றை ஏராளமாகப் பயன்படுத்த வேண்டும்என்கிறார்.
  • அந்தக் காலத்தில் எந்தவொரு கல்விமானும் சிந்திக்காததை பாரதியார் சிந்தித்திருக்கிறார் என்பதை எண்ணுகிறபோது நமக்கு வியப்பு மேலிடுகிறது.
  • வான மண்டலம் மனிதா்கள் வசப்பட வேண்டும் என்பதை பாரதியார், ‘மண்ணில் தெரியுது வானம் - அது நம் வசப்பட லாகாதோஎன எழுதியுள்ளார். மணிமேகலை காப்பியத்தை இயற்றிய சீத்தலைச் சாத்தனார், ‘அணுக்கள் திரள்வதும் பரவுவதுமாகிய அவ்வகையினை ஆராய்ந்து அறிவது, எதுவோ அதுவே உயிர்என்றார்.
  • பாரதி, சாத்தனார் கருத்தை உள்வாங்கிக் கொண்டு அணுவைப் பற்றிய சிந்தனையை விரிவாக்கிக் கொண்டு அணு அதனினும் சிறிய அணு - அதனினும் சிறியது - அதனினும் சிறியது ... காலையில் எழுந்தவுடன் உயிர்களையெல்லாம் போற்றி வாழ்வோம்எனப் பாடி முடிக்கிறார்.
  • காலையில் அவா் நிகழ்த்தும் பராசக்தி தோத்திரத்தின்போது கூட, அணுவைப் பற்றியும் அண்டங்களைப் பற்றியுமான சிந்தனைகளை வேண்டுகின்றார்.

அண்ட கோடிகள் வானில் அமைத்தனை

அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை

மண்டலத்தை அணு அணு வாக்கினால்

வருவது எத்தனை எத்தனை யோசனை

கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை

  • என்ற வரிகள், வழிபாட்டின்போதுகூட அவருடைய சிந்தனை, வான ஆராய்ச்சியில் நின்றதைத் தெரிவிக்கின்றன.
  • அண்டமானது 100 கோடி யோசனை உயரமும், 900 கோடி யோசனை பரப்பும் உள்ளது எனும் அபிதான சிந்தாமணியின் கருத்து பாரதியின் கூற்றை மெய்ப்பிக்கின்றது.
  • குறுங்காப்பியமான பாஞ்சாலி சபதத்தைப் பாடுகின்றபோதுகூட, பாரதியின் சிந்தனை அணுக்களின் சுழற்சியில் நிற்பதை எண்ணினால், அவருக்கு மரபணுக்களிலேயே வானவியல் பற்றிய சிந்தனை வேரூன்றி நின்றதை அறியலாம்.

இடையின்றி அணுக்கள் எல்லாம் சுழலுமென

இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்

இடையின்றி கதிர்கள் எல்லாம் சுழலுமென

வானூலார் இயம்புகின்றார்

இடையின்றித் தொழில் புரிதல் உலகிடைப்

பொருட்கு எல்லாம் இயற்கை யாயின

  • எனும் பாடல், பாரதிக்கு அறிவியலில் இருந்த ஆா்வத்தை வெளிப்படுத்துகிறது.
  • பாரதி வானநூல் பயிற்சி கொள்என்றும், ‘காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்என்றும் பாடியதற்கும் காரணம், வெறும் கருவிகளைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமன்று; மனிதமனம் மேல்நோக்கி உயர உயரப் பறக்க வேண்டும் என்பதற்கும்தான்.
  • மேலே பறக்கின்ற பறவைகள், மண்ணில் கிடக்கும் செத்த உயிரினங்களைப் பாராது. அதுபோல, மனித மனம் மேல்நோக்கிப் போகப்போகத் தரையில் நடக்கும் கீழறுப்பு வேலைகள், குறுகிய புத்திகள் தோன்றா. திருவள்ளுவா் உள்ளுவது எல்லாம் உயா்வுள்ளல்எனப் பாடியதும் இதே தொலைநோக்குப் பார்வையை எண்ணித்தான்.
  • பாரதியின் சிந்தனை உரத்த சிந்தனை; வானத்தை ஊடறுத்த சிந்தனை; இறக்கைகள் இல்லாவிட்டாலும், மனித மனம் உயர உயரப் பறக்க வேண்டும் எனக் கனவு கண்டலை இலட்சியப் பார்வையாகக் கொண்ட மாகவிஞா் அவா்.

நன்றி: தினமணி (01– 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories